girl indiaசைக்கிள் சாவி வளையத்தில்
உன் விரல் சிக்கி
சிவந்த இடம் பார்த்து
திக்கித் தவித்த
என் பார்வைக்கு ஊடே
ஏது செய்வதென்று அறியாமல் செய்த
ஒன்று போல்
இன்னும் சிலவையும்
நாம் எட்டிப் பார்க்கவே
நனைந்து கொண்டிருக்கிறது
நினைவில்....

***

நாற்றாங்கால் வரப்பிலிருந்து
ஒற்றைக் கால் இறக்கிப் பார்க்க
வராத காலுக்கு வந்த
உன் புன்னகைக்கு
இளஞ் சேற்றில்
பதித்து விட்டுப் பறந்த நாரையின்
ஒற்றைக்கால் தடத்தின் அழகு

***

ஈர மண் மேல் நின்று
புல் அறுத்து நீ
தாவணியை நிறைக்கும் போது
எனக்கு விட்ட கோரைப்புல் போல
அங்கங்கே
உன் பக்கவாட்டு பார்வையும்
துள்ளி விழுந்தது
தாழம்பூ துள்ளுக்கட்டை துளையிருந்து
துள்ளி விழுந்த குளத்து மீனாக

***

மழைக்கு ஒதுங்க நினைத்து
ஈரக் குடிசை வடியும் வரை
நிற்க வைத்த
என் கைப்பிடிக்கும்
உன் கண் பிடிக்கும்
அக்குடிசையை பிய்த்து வந்த
கிழவி ஆக்கின புகையின்
வான் கலக்கும் அவசரம்...

***

எது மாதிரியும் இல்லாமல்
புது மாதிரியா இன்னமும் இருக்கு
உன் அலங்காரத்துக்கு சொக்கி நான் வேண்டின
உன் காதுமாட்டியின் கடைசித் துணுக்கு
அடிக்கடி என்னை
வசதிக்குள்ளாக்கிவிட்டு
என் வீட்டு நகை டப்பா
அடகுச்சீட்டுக்கெல்லாம் அடியில இருக்கு.

- முருகன்.சுந்தரபாண்டியன்

Pin It