கடைசியாக வந்த
குறுஞ்செய்தியில்
காட்சிப் பிழை
காலையில் கண்ட
இரவு வணக்கம்...
-----------------------------------
பக்கத்து வீட்டு
மரத்தில் இலைகள்
இலையுதிர் காலத்தில் என் வீடு...
--------------------------------------------------------
இணுங்கிச் செல்லும்
விரல்களில் கோட்டோவிய
ஒப்பனை...
-------------------------------------------------------
எந்த நாள் ஞாபகமும்
அந்த நாளைப் போல
இல்லை...
-------------------------------------------------------
பொம்மையோடு இருக்கும்
பழைய புகைப்படங்களில்
இன்று பொம்மைகள்
மட்டுமே
சிரிக்கின்றன...
----------------------------------------------------------
பீனிக்ஸின் சாம்பல்
இறுக்கங்களின் புனைவுகளில்
இலையாகி விழுகிறது
என் அசைவு....
தொட்டால் சிணுங்கும்
தொடாத விரல்களில்
இன்னும் சுருங்கிக்
கிடக்கிறது என் விசை...
மனப் பிறழ்வின்
மாற்றுச் சிந்தனையென
மல்யுத்தம் கடக்கிறது
மணிக்கொரு என்
மரணம்...
மயங்கிச் சரியும்
மாலை சூரியனின்
தாடி பிடித்து தொங்கும்
பீனிக்ஸின் சாம்பல்
எனை உதிர்க்கிறது....
பிழையாகி, தவிர்க்க
முடியாத ஒற்றையடி
நீண்டு, மடங்கி,
பக்கவாட்டு நேர்கோடாகி
பாதியிலேயே நானாகிறது....
அக்னி வாசம்
அற்ற அலையடிக்கும்
காட்டு மரங்களின்
தலை விரித்தலில்
மிரண்டு ஒளிகிறது
என் பகல்...
- கவிஜி