palastein childபதறியெழுந்த ஓர் இரவின்
நிசிப்பொழுதிலிருந்து ஆரம்பமானது
அந்த குழந்தைளின் நித்திரைகளுக்கான நிர்மூலம்
ஆராரோக்களும் ஆரிராரோக்களும்
நாவுகள் கிழிந்து தொங்கின
தொட்டிலும் கட்டிலும் கொள்ளிகளாகி
குழந்தைகளின் சதைகளை சிதையூட்டத் தொடங்கின
பீரோக்களில் அடைத்து
பரணிகளில் முடக்கி
ஆழக்குழிகளில் அமிழ்த்து
துடித்துத்தான் போனார்கள் அம்மாக்கள்
குழந்தைகளின் உயிரையேனும் சேமித்து விட
அம்புலிமாமா சொன்ன
குழந்தைகளைத் தூக்கிச் சென்ற
ராட்சஸர்களின் நிழல் கதைகளிலெல்லாம்
நிஜங்கள் தரிக்கத் தொடங்கின
அடுக்கப்பட்ட தீக்குச்சிகளாய்
குழந்தைகளின் பிணங்கள்
இல்லாத நாவுகளில் கூவிக்கிடந்தார்கள்
ஓடுங்கள்
ஓடுங்கள்
நீங்கள் நாங்களாக வேண்டாம்
உங்கள் உயிரைத் தேடுங்கள்
உங்கள் உடைமைகளைத் தேடுங்கள்
உங்கள் உணர்வுகளைத் தேடுங்கள்
நீதத்தை வேண்டாம்
பற்றியெறிந்த கனல் தீர ஒருவன்
குழந்தைகளைச் சேகரிக்கத் தொடங்கினான்
கொஞ்சம் தடித்திருந்த ஒரு குழந்தையின் உடலில்
மெலிந்ததொரு வேறு குழந்தையின் கைகள்
பொருத்தமானதாக இல்லை
தொடை வரை அறுபட்டுக்கிடந்த ஒரு பிண்டத்திற்குரிய
காலைத் தேடிக்கொண்டிருந்தான் ஒருவன்.
தலை சிதைந்த நிலையில்
யாரெனத் தெரியப்படாமல் ஒரு குழந்தை
எக்குழந்தையும் தன்னுடையதாக இருக்கக்கூடாதென
சடல வரிசைகளின் ஒவ்வொரு முகத்தையும்
திறந்து மூடிக்கொண்டிருக்கிறாள் ஒரு தாய்
குழந்தைகள் அப்பளமாகிக் கிடந்தார்கள்
மாமிசத் துண்டுகளாகிக் கிடந்தார்கள்
ஒரு கொடிய நரகின் துஷ்டர்களாகிக் கிடந்தார்கள்
எந்த இடத்திலும் அவர்கள் குழந்தைகளாக இல்லை
குழந்தைகள் சுமக்கும் பொம்மைகளாக‌க் கூட இல்லை
தான் கடந்துவிட்ட எத்தனையோ நிகழ்வுகளோடொன்றாய்
உலகம் கடந்து கொண்டிருந்தது
தத்தமது குழந்தைகளின் உச்சி முகர்ந்தபடி
சானலை மாற்றிக்கொண்டிருந்தார்கள் மற்றவர்கள்.

- எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ

More articles by எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.