சுள்ளிகள் பொறுக்கும்
காக்கையின் கனவுகளில்
கூடு.
கூட்டில் குலவும்
இணையின்
இதமான உரசலும் நெருக்கமும்,
நெருக்கத்தில் விளைச்சலில்
கூடுநிறை முட்டைகள்,
சிறகணைப்பின் சூட்டில்
சிலிர்த்துத் தலைநீட்டும்
குஞ்சுகள்,
வழியெல்லாம் தேடி
வாகாய்க் கொணர்ந்த
இரை,
இரை கேட்டு
வாய் பிளக்கும்
குஞ்சுகளின் பசிக்குரல்,
பசி தீர்க்கும் தாய்மையின்
பரிவான வாய் ஊட்டல்.
ஓயாத பகற்கனவும்
அயராத உழைப்புமாய்க்
காலம் கடக்க,
நனவானது
முதல்கனவு
கூட்டின் முழுமையில்
குதூகலித்துத்
துயில் கொண்ட
முதல்நாள் இரவு
கருத்தது மேகம்
சிறுத்தது மேனி
சுழன்றது காற்று
உழன்றது மரக்கிளை
கூடு சிதைந்தது
காடு கவிழ்ந்தது
உயிர்த்தெழுந்த காகம்
மீண்டும்
சுள்ளிகள் பொறுக்கும்.
சுள்ளிகள் பொறுக்கும்
காக்கையின் கனவுகளில்
மீண்டும் கூடு..
கீற்றில் தேட...
காக்கையின் கனவுகளில் கூடு
- விவரங்கள்
- நா.இளங்கோ
- பிரிவு: கவிதைகள்