வஹ்ஹாபியம் தோற்றமும் வளர்ச்சியும் - 1

வஹ்ஹாபியம் தோற்றமும் வளர்ச்சியும் - 2

வஹ்ஹாபியம் தோற்றமும் வளர்ச்சியும் - 3

பிரிட்டிஷ் உளவாளி ஹெம்பரின் வாக்குமூலத் தொடர்ச்சி...
  
என் நண்பர்கள் லண்டனுக்கு திரும்பி இருந்தார்கள். ஏற்கனவே அவர்கள் அமைச்சகத்திலிருந்து புதிய கட்டளைகளை பெற்றிருந்தார்கள். நான் கூட கட்டளைகளை பெற்றேன். ஆனால் துரதிஷ்டவசமாக எங்களில் ஆறு பேர் மட்டுமே லண்டனுக்கு திரும்பி இருந்தோம். மற்ற நான்கு பேரும் முஸ்லிம்களாக மாறி எகிப்தில் தங்கி இருந்தார்கள். மேலும் எங்களின் செயலாளர் மிக்க மகிழ்ச்சியில் இருந்தார். காரணம் அந்த நால்வரில் எவருமே இரகசியத்தை வெளிக்காட்டவில்லை. ஒருவர் எகிப்தில்; மற்றொருவர் ரஷ்யாவில். ஆனால் அவர் குறித்து செயலாளர் கவலை கொண்டார். காரணம் அவரின் காலம் முடிந்தும் அவர் இன்னும் ரஷ்யாவில் தங்கியிருந்தார். ஒருவேளை ரஷ்ய காலனிய அமைச்சகத்தை உளவு பார்க்கிறாரோ என்ற சந்தேகமும் அவருக்கு இருந்தது. மூன்றாம் நபர் ஈராக் தலைநகர் பாக்தாத் அருகேயுள்ள இமாராவில் தங்கியிருந்தார். அங்கு பிளேக் நோயால் பாதிக்கப்பட்டு இறந்து விட்டார். மேலும் ஒருவர் ஏமனில் இருந்தார். அவர் வழியாக வருடந்தோறும் அறிக்கைகளை அமைச்சகம் பெற்றுக்கொண்டது. சில ஆண்டுகளுக்குப்பின் அது நின்றது. இதனால் அந்த நான்கு மனிதர்களின் மாயம் குறித்து அமைச்சகம் பெருங்கவலை கொண்டது. அதை பெரும் இழிவாக நினைத்தது. எங்களைப் பொருறுத்தவரை சிறிய மக்கள்தொகையை கொண்ட ஒரு நாட்டில் மிகப்பெரும் பணிகள் எங்கள் முன் இருந்தன. ஆகவே நாங்கள் ஒவ்வொரு மனிதர்கள் குறித்தும் மதிப்பீடு செய்தோம்.

எங்களின் சில அறிக்கைகளுக்குப் பிறகு செயலாளர் அது பற்றி விவாதிக்க எங்கள் நால்வரையும் அழைத்திருந்தார். என் நண்பர்கள் அவர்களுடைய செயல்பாடுகள் சம்பந்தமான அறிக்கைகளை சமர்பித்தார்கள். நானும் சமர்ப்பித்தேன். அவர்கள் என்னுடைய அறிக்கையிலிருந்து சில குறிப்புகளை எடுத்துக்கொண்டார்கள். அமைச்சர், செயலாளர் மற்றும் கூட்டத்தில் கலந்து கொண்ட சிலர் என் அறிக்கையைப் புகழ்ந்தார்கள். இருந்தாலும் நான் மூன்றாவது இடத்தில் இருந்தேன். முதல் தரத்தை என் நண்பர் ஜார்ஜ் பெல்கோட், இரண்டாம் இடத்தை ஹென்ரி பேன்ஸ் ஆகியோர் பிடித்தனர்.

நான் சந்தேகத்திற்கு இடமின்றி துருக்கி மற்றும் அராபிய மொழிகளை வெற்றிகரமாக கற்றிருந்தேன். மேலும் குர் ஆன் மற்றும் ஷரியா ஆகியவற்றையும் கற்றிருந்தேன். இன்னும் உதுமானிய பேரரசின் பலவீனமான அம்சங்கள் குறித்த அறிக்கையை நான் தயாரிக்கவில்லை. இரு மணிநேர கூட்டத்திற்குப் பிறகு செயலாளர் கேட்டார். "ஏன் நீங்கள் இன்னும் அந்த விஷயங்களைப்பற்றி உங்கள் அறிக்கையில் குறிப்பிடவில்லை.?" நான் சொன்னேன் "என் முதன்மைப் பணி என்பது மொழிகள், குர் ஆன் மற்று ஷரியா ஆகியவற்றைக் கற்பது தான். ஆகவே நான் மற்ற விஷயங்களை நேரத்தை செலவழிக்கவில்லை. ஆனால் நீங்கள் என்னை நம்பினால் இந்த தருணத்திலேயே என்னால் அதனை உள்ளடக்க முடியும்." இவ்வாறாக நான் குறிப்பிட்ட பிறகு செயலாளர் சொன்னார். "நிச்சயமாக நீங்கள் வெற்றிபெறுவீர்கள். நீங்கள் முதல் இடத்தைப் பெற வேண்டும் என்பது தான் என் விருப்பம்." மேலும் தொடர்ந்தார். "ஓ ஹெம்பர்.. உங்களின் அடுத்த பணி என்பது பின்வரும் விஷயங்களை உள்ளடக்கி இருக்கிறது.

1. நீங்கள் முஸ்லிம்களின் பலவீனமான அம்சங்களை கண்டுபிடித்து அதனுள் சென்று அவர்களின் உடலில் புகுந்து உறுப்பிழக்கச் செய்ய வேண்டும். உண்மையில் இது தான் எதிரிகளை அடிக்க சிறந்த வழி.

2. இந்த தருணத்தில் நீங்கள் மேற்கண்ட அம்சங்களை கண்டுபிடித்திருக்கிறீர்கள். நான் சொன்னதை செய்திருக்கிறீர்கள். நீங்கள் சிறந்த ஏஜண்ட் மற்றும் தங்கப்பதக்கத்தை அமைச்சகத்திலிருந்து பெற வேண்டும்."

நான் லண்டனில் ஆறு மாதங்கள் இருந்தேன். அங்கு என் மாமி மகளை திருமணம் செய்து கொண்டேன். அவள் பெயர் மரியா ஷேவே. அப்போது எனக்கு வயது 22; அவளுக்கு வயது 23. அவள் மிக அழகான, சராசரி அறிவுள்ள மற்றும் சாதாரண கலாசாரப் பின்புலமுள்ள பெண். என் வாழ்நாளில் மிக மகிழ்ச்சிகரமான மற்றும் சந்தோஷ நாட்கள் என்பவை அவளோடு நாள் செலவழித்த நாட்கள் தான். நான் இராக்கிற்கு திரும்ப வேண்டும் என்று எனக்கு உத்தரவு வந்த போது என் மனைவி கருவுற்றிருந்தாள். நாங்கள் புதிய விருந்தாளியை வரவேற்கத் தயாராக இருந்தோம்.

லண்டனிலிருந்து உத்தரவு வந்த போது குழந்தை பிறப்பை காண வேண்டும் என்ற தீராத ஆவலுடன் இருந்தேன். ஆனால் என்னால் முடியவில்லை. அது மிகுந்த சோகத்தை எனக்குள் ஏற்படுத்தியது. என் நாட்டோடு நான் கொண்ட பற்றுதல் முக்கியமானதாக இருந்தும் ஒரு கணவனாக, தந்தையாக என் உணர்ச்சிகள் என் இலக்கை அடைவதிலும், என் சக பணியாளர்களை விட நான் மேம்படுவதிலுமே இருந்தது. ஆகவே நான் எவ்வித தயக்கமுமில்லாமல் அதை ஏற்றுக்கொண்டேன். நான் குழந்தை பிறப்பு வரை உங்கள் பயணத்தை தள்ளிப்போடுங்கள் என்று என் மனைவி சொன்னாள். அவள் சொன்னதை மறுத்து விட்டேன். நாங்கள் இருவரும் விடைபெறும் போது அழுதோம்.

மனைவி சொன்னாள். "எனக்கு கடிதம் எழுதுவதை நிறுத்த வேண்டாம். தங்கத்தை விட விலைமதிப்புள்ள நம் புதிய வீட்டைப்பற்றி (குழந்தை) உங்களுக்கு எழுதுகிறேன்." அவளின் இந்த வார்த்தைகள் என் இதயத்தில் மிக உறுத்தலாக இருந்தன. நான் ஏறக்குறைய பயணத்தை ரத்து செய்தே விட்டேன். இருந்தும் என்னை நானே கட்டுப்படுத்திக்கொண்டேன். அவளிடம் விடை பெற்றுக்கொண்டு, அமைச்சரகத்திற்கு இறுதி கட்டளைகளை பெற்றுக்கொள்ள சென்றேன்.

ஆறுமாதங்கள் கழித்து ஈராக்கின் பஸ்ரா நகரத்தை கண்டறிந்தேன். இந்த நகரமானது பாதி சுன்னி மற்றும் பாதி ஷியா முஸ்லிம்களால் நிரம்பியிருந்தது. மேலும் பஸ்ராவில் அரபுகள், பாரசீகர்கள் மற்றும் சிறிய அளவிலான கிறிஸ்தவர்கள் ஆகியோர் வாழ்ந்தனர். இது ஒரு கலப்பு இன மக்கள் தொகுதியைக் கொண்ட நகரமாக இருந்தது. என் வாழ்நாளில் முதன்முதலாக பாரசீகர்களை இந்த நகரத்தில் கண்டேன். இதற்கிடையில் ஷியா மற்றும் சின்னி கோட்பாடுகள் குறித்து பார்ப்போம்.

ஷியாக்கள் நபியின் மருமகனும், தந்தை வழி சகோதரனுமான அலியைப் பின்பற்றினர். அவர்கள் அலி மற்றும் பன்னிரெண்டு இமாம்களை நபி நியமித்ததாக சொல்கிறார்கள். அலியைப் பின்பற்றி தான் மற்றவர்களும் கலிபாவாக (ஆட்சியாளர்) இருந்தனர்.

என் கருத்துப்படி ஷியாக்கள் இந்த விஷயத்தில் சரியாகவே செயல்படுகின்றனர். இமாம்கள் விஷயத்தில் அவர்கள் மரபை பின் தொடர்கின்றனர். இஸ்லாமிய வரலாற்றை நான் புரிந்து கொண்ட வரை அலி கலிபாவுக்கு தேவையான தகுதியையும், திறமையையும் கொண்டவராக இருந்தார். மேலும் இவரின் இரு மகன்களான ஹசன் மற்று ஹுசைன் ஆகியோரை நபி கலிபாவாக நியமித்ததாக நான் நம்பவில்லை. முஹம்மது நபியின் மரணத்தின் போது ஹுசைன் சிறுவனாக இருந்தார். அப்படியிருக்க அவருக்கு எப்படி இவருக்கு 8 பேரப்பிள்ளைகள் உருவாவார்கள் என்பது தெரியும்? உண்மையில் அவர் நபியாக இருக்கும் பட்சத்தில் எதிர்காலத்தைக் குறித்து இறைவன் மூலம் அறிவதற்கு கண்டிப்பாக வாய்ப்பிருக்கும். மீட்பர் கண்டிப்பாக எதிர்காலம் குறித்த அறிவோடு தான் இருப்பார். எங்களைப்போன்ற கிறிஸ்தவர்களுக்கு அவரின் நபித்தனம் குறித்த சந்தேகம் இன்னும் இருக்கிறது.
 
 முஹம்மது இறைத்தூதர் என்று நம்புவதற்கு முஸ்லிம்கள் ஏராளமான ஆதாரங்களை வைத்திருக்கிறார்கள். அவற்றில் ஒன்று குர் ஆன். நான் அதை வாசித்திருக்கிறேன். உண்மையில் மிக உயர்ந்த நூல். அது தோரா மற்றும் பைபிளை விட உயர்ந்த நூல். அது பல தத்துவங்களை, வழிகாட்டுதல்களை, ஒழுக்க நெறிகளைக் கொண்டிருக்கிறது.

 எனக்கு ஆச்சரியமளிக்கிறது. எப்படி ஒரு படிக்காத நபரான முஹம்மது நபி அப்படியான உயர்ந்த புத்தகத்தை கொண்டு வந்திருக்க முடியும்? எப்படி அவர் ஒழுக்க, அறிவார்ந்த மற்றும் தனிப்பட்ட தகுதியை உடையவராக இருக்க முடியும்? சாதாரணமாக ஏராளமாக படித்த மற்றும் பயண அனுபவம் மிக்க மனிதர்களிடம் கூட இவை இல்லை. அவர்கள் கூட இப்படியான நூலைக் கொண்டு வரமுடியாது. எனக்குத் தெரியவில்லை இவை எல்லாம் அவரின் நபித்துவம் பற்றிய ஆதாரங்களா?

  முஹம்மது நபியின் நபித்துவம் பற்றிய உண்மையை வெளிக்கொண்டு வருவதற்கு நான் எப்போதும் ஆராய்ச்சி மற்றும் அவதானங்களை செய்திருக்கிறேன். இதன் மீதான என் ஆர்வத்தை லண்டனில் உள்ள ஒரு பாதிரியாரிடம் கேட்டிருக்கிறேன். ஆனால் அவரின் பதில் எப்போதும் வெறித்தனமாகவும், பிடிவாதமாகவும் இருக்கும். நான் துருக்கியில் இருந்த போது அஹ்மத் எபன்டியிடம் இது பற்றி பல முறை கேட்டிருக்கிறேன். ஆனால் அவரிடமிருந்து திருப்திகரமான பதில் வரவில்லை. உண்மையை சொல்லப்போனால் நான் அவரிடம் இதுபற்றி நேரடியாக கேட்பதைத் தவிர்த்து வந்திருக்கிறேன். காரணம் அவர் என் உளவுத்தனம் மீது சந்தேகம் கொண்டு விடக்கூடாது என்ற கவனம் தான்.

 நான் எப்போதும் நபியைப் பற்றி சிந்திக்கிறேன். சந்தேகமே இல்லை. நாம் புத்தகங்களில் படித்த மாதிரி அவர் இறைவனின் தூதர் தான். இன்னும் ஒரு கிறிஸ்தவன் என்ற முறையில் அவரின் நபித்தனத்தை நான் இன்னும் நம்பவில்லை. சந்தேகமின்றி அவர் மிகப்பெரும் ஞானி தான்.

 சுன்னிகளைப் பொருத்தவரை நபியின் மரணத்திற்குப் பிறகு முஸ்லிம்கள் அபூபக்கர், உமர், உஸ்மான், அலி போன்றவர்களை கலிபாவாக கருதினார்கள்.

 இந்த முரண்பாடுகள் எல்லா மதங்களிலும் இருக்கின்றன. கிறிஸ்தவத்தில்  மிக அதிகமாக இருக்கிறது. இன்று உமரும், அலியும் மரணித்து விட்டார்கள். இந்த முரண்பாடுகளைப் பற்றி பேசுவது பயனற்றது. என்னைப் பொருத்தவரை முஸ்லிம்கள் நியாயவான்களாக இருந்தால், அவர்கள் இன்றைய உலகம் பற்றி சிந்திக்க வேண்டும். பழைய காலத்தை நினைக்கக்கூடாது.

 ஒரு தடவை நான் காலனிய அமைச்சக கூட்டத்தில் கலந்து கொண்டு இவ்வாறு சொன்னேன். "முஸ்லிம்கள் வாழ்க்கையைப் பற்றி தெரிந்திருந்தால், அவர்கள் தங்களுக்கிடையேயான ஷியா-சுன்னி வித்தியாசங்களை மறந்து விட்டு ஒன்று சேருவார்கள்." உடனே ஒருவர் குறுக்கிட்டு அதனை மறுத்து விட்டு எனக்கு இவ்வாறு அறிவுறுத்தினார். "உங்கள் பணி என்பது இந்த வித்தியாசங்களை அதிகரிக்கச் செய்வது தான். மாறாக எப்படி ஒன்று சேர்ப்பது என்பதை குறித்து சிந்திப்பதல்ல."

 நான் ஈராக் புறப்படுவதற்கு முன்பு, என்னிடம் செயலாளர் சொன்னார் "ஹெம்பர்! உங்களுக்குத் தெரியும். மனித இனங்களின் இயல்பான வித்தியாசங்கள் என்பவை கடவுள் ஆபேல் மற்றும் காயினை படைத்த முதலே தொடங்கி விட்டன. இந்த வித்தியாசங்கள் மீட்பர் வரும் வரை தொடரும். இன்று இது நிற, இனக்குழு, வட்டார, தேசிய மற்றும் மத வித்தியாசங்களாக இருக்கிறது. இந்த நேரத்தில் உங்கள் கடமை என்பது இந்த முரண்பாடுகளை அதிகம் கண்டறிவதுடன், அமைச்சகத்திற்கு அறிக்கை அனுப்புவதுமாகும். உங்களின் பெரும் வெற்றி என்பது முஸ்லிம்களிடையே இந்த முரண்பாடுகளை அதிகரிக்கச் செய்வதாகும். இதன் மூலம் நீங்கள்  இங்கிலாந்திற்கு பெரும் சேவையை செய்தவராக மாறுவீர்கள்.

 ஆங்கில மக்களாகிய நாம், நம் எல்லா காலனிகளிலும் இந்த பிளவை அதிகரிக்கச் செய்து, விரோதங்களை ஏற்படுத்த வேண்டும். அதன் மூலம் நாம் செல்வசெழிப்போடு, ஆடம்பரமாக வாழலாம்.

 அப்படியான பிளவுகள் துருக்கிய உதுமானிய பேரரசை தகர்ப்பதன் மூலம் ஏற்படும். எப்படி சிறிய மக்கள் தொகையைக் கொண்ட நாடு, மற்றொரு அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வரமுடியும்? பிளவுகளின் வாயை உங்களின் அதிக பலத்தைக் கொண்டு திறக்கவேண்டும். அதை உடனடியாக கண்டுபிடிக்க வேண்டும்.

 உதுமானிய மற்றும் ஈரானியப் பேரரசுகள் அவர்களின் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கின்றன. ஆக உங்களின் முதல்வேலை அரசுகளுக்கு எதிராக மக்களைத் தூண்டி விட வேண்டும். எல்லாவித புரட்சிகளுமே மக்கள் புரட்சி தான். வரலாறு நமக்குக் காட்டுகிறது. முஸ்லிம்களின் ஒற்றுமை தகர வேண்டும். அவர்கள் மீதான அனுதாபம் கலைய வேண்டும். அவர்களின் படைகள் கலைக்கப்பட்டால், அதன் மூலம் நாம் அவர்களை எளிதாக அழிக்க முடியும்."

   (இன்னும் வரும்)

- எச்.பீர்முஹம்மது (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

1 comment

1
mohamed ismail
where is the rest of articles

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.