தமிழகத்தின் மின் பற்றாக்குறை என்பது இன்றைய தேதியில் சுமார் 4000 - 4500 மெகாவாட்டாக இருக்கிறது. 2013 ஆம் ஆண்டில் இந்தப் பற்றாக்குறை 5000 - 5500 மெகாவாட்டாகவும், 2014 இல் இது 6200 மெகாவாட்டாகவும், 2015 இல் இது 7300 மெகாவாட்டாகவும் கூடியிருக்கும் என்பது மின் நிபுணர்களின் கணிப்பு[1].

இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் அரசுக்கு சொந்தமான மூன்று மின் உற்பத்தி நிலையங்கள் பழுதடைந்த நிலையில் கேட்பாரற்றுக் கிடக்கின்றன.

power_grid_450மின் உற்பத்தியைத் தொடங்கும் நிலையில் உள்ள மூன்று புதிய மின் உற்பத்தி நிலையங்களை (என்ன காரணத்திற்கோ) இன்றைய நெருக்கடியான காலகட்டத்திலும் மின்சாரத்தை உற்பத்தி செய்ய விடாமல் தமிழ்நாடு அரசு நிறுத்தி வைத்திருக்கிறது.

தமிழ்நாடு மின்வாரியத்துக்கு சொந்தமான குத்தாலம் (தஞ்சை மாவட்டம்), வழுதூர் 1 மற்றும் 2 (ராமநாதபுரம் மாவட்டம்) ஆகிய எரிவாயு மின் நிலையங்களில் அடிக்கடி எந்திரங்கள் பழுதடைவதும், பல மாதங்களுக்குப் பழுது நீக்கப்படாமல் இருப்பதும் வாடிக்கையாக இருக்கிறது.

குத்தாலம் மின் நிலையம் 101 மெகாவாட் திறனையும், வழுதூர் 1 மற்றும் 2 மின் நிலையங்கள் 95 மற்றும் 92 மெகாவாட் திறனைக் கொண்டிருகின்றன. இந்த மூன்று மின் நிலையங்களுமே முழுமையாக செயல்பட்டால் 288 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்.

இன்றைய தேதியில் இந்த மின் நிலையங்கள் பழுதடைந்துள்ளன. அவற்றின் பழுது நீக்கப்படாமல் அவற்றின் மின் உற்பத்தி முடங்கிக் கிடக்கிறது. அவற்றில் உள்ள பழுதை நீக்க பல மாதங்களாகத் தமிழக அரசு முயற்சி எடுக்க மறுத்து வருகிறது. இதனால் கிட்டத்தட்ட 288 மெகாவாட் மின்சாரத்தை நாம் இழந்து கொண்டிருக்கிறோம். இந்த மின்நிலையங்கள் அன்றாடம் உபயோகிக்க வேண்டிய இயற்கை எரிவாயுவிற்காக, மின் உற்பத்தி செய்யப்படாமல் இருக்கும் இந்தக் காலகட்டத்திலும் ஒவ்வொரு நாளும் 71 லட்ச ரூபாயை தமிழ்நாடு மின் வாரியம் GAIL நிறுவனத்திற்குக் கட்டிக்கொண்டிருக்கிறது.

2007 இல் வட சென்னை மற்றும் மேட்டூர் மின் நிலையங்களில் 2X600 மற்றும் 1X600 என்ற 1800 மெகாவாட் திறனுள்ள அனல் மின் உற்பத்தி அலகுகளை அமைக்க REC நிறுவனத்தின் உதவியுடன் தமிழ்நாடு அரசு திட்டமிட்டது.

வடசென்னை முதல் அலகிற்கான பணி 2008 பிப்ரவரியில் துவங்கியது. அதன் கட்டுமானப் பணி 2011 மே மாதத்தில் நிறைவு பெற வேண்டும். அதுபோலவே வடசென்னை இரண்டாவது அலகின் பணி 2008 ஆகஸ்டில் தொடங்கியது. 2011 நவம்பர் மாதம் அது முடிவடைய வேண்டும்.

வடசென்னை திட்டத்தைப் போலவே, மேட்டூர் மின் நிலையத்தில் திட்டமிடப்பட்ட 600 மெகாவாட்டிற்கான பணி 2008 ஜூன் மாதம் தொடங்கியது. 2011 செப்டம்பரில் அது நிறைவு பெற வேண்டும்.

இவை அனைத்தும் ஏற்கனவே உள்ள மின் நிலையங்களில் மேற்கொள்ளப்படும் விரிவாக்கத் திட்டங்கள்தாம் (expansion plans) என்பதால் இவற்றை அமைத்து, இயக்க குறைந்த காலமே போதுமானது.

சென்னையின் அருகே உள்ள வள்ளூரில் 3X500 மெகாவாட் மின் உற்பத்தி நிலையத்தினை மத்திய அரசு நிறுவனமான NTPC-யின் துணையுடன் நிறுவ 2002 ஆம் ஆண்டில் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துகொண்டது. இதன் உற்பத்தித் திறனான 1500 மெகாவாட்டில் 1041 மெகாவாட் மின்சாரம் தமிழகத்திற்குக் கிடைக்கும் என்பது உடன்படிக்கை. ஆனால் இந்தத் திட்டம் 2007 ஆம் ஆண்டு வரை கிடப்பில் போடப்பட்டது. கடைசியில், 2007 ஆகஸ்டு மாதம் அதன் கட்டுமானப் பணிகள் தொடங்கின. 2010 அக்டோபரில் முதல் அலகும், 2011 மார்ச்சில் இரண்டாவது அலகும், 2012 செப்டம்பரில் மூன்றாவது அலகும் உற்பத்தியைத் தொடங்க வேண்டும்.

இன்றைய தேதியில், மேட்டூரில் உள்ள 600 மெகாவாட் அலகும், வடசென்னையின் இரண்டாவது அலகான 600 மெகாவாட்டும், வள்ளூரில் உள்ள முதலாவது அலகான 500 மெகாவாட்டும் முடிவடைந்துள்ளன. 2012 மார்ச் – மே மாதங்களில் அவை முழுமையாக பரிசோதனை செய்யப்பட்டு மின்சாரக் கட்டமைப்பில் இணைக்கப்பட்டுள்ளன (synchronised). எனினும் என்ன காரணத்தினாலோ தமிழக அரசு அவற்றில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்வதை நிறுத்தி வைத்திருக்கிறது. இதன் காரணமாக, நாம் 1547 மெகாவாட் மின்சாரத்தை இழந்து நிற்கிறோம்.

ஆக, தமிழக அரசு நினைத்தால் இன்றே 1835 மெகாவாட் மின்சாரத்தை (1547 + 288) உடனடியாக உற்பத்தி செய்ய முடியும். இந்த மின்சாரம் அரசுக்கு சொந்தமான மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரமாதலால், தனியாரிடம் இருந்து வாங்கும் கொள்ளை விலை மின்சாரத்தைப் போலல்லாமல் குறைந்த விலையில் கிடைக்கும் மின்சாரமாகும். எனினும், தமிழக அரசு இந்த மின்சாரத்தை உற்பத்தி செய்வதைத் தட்டிக் கழித்து வருகிறது.

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனும், தமிழ்நாடு மின்சார வாரியமும் இணைந்து தூத்துக்குடியில் 2 X 500 மெகாவாட் மின் உற்பத்தி அலகுகளை நிறுவும் பணியினை 2008 மே மாதத்தில் துவக்கின. முதலாவது அலகு ஜூன் 2013 இலும், இரண்டாவது அலகு மார்ச் 2012 இலும் உற்பத்தியைத் தொடங்கியிருக்க வேண்டும். இந்தத் திட்டத்திலிருந்து தமிழகத்திற்கு சுமார் 387 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். ஆனால், இந்தப் பணியும் நிறைவேற்றப்படாமல் காலம் கடத்தப்பட்டு வருகிறது.

நெய்வேலியில் உள்ள முதலாவது மின் நிலையத்தின் விரிவாக்கமான 2 X 250 மெகாவாட் மின் உற்பத்தி அலகுகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு 225 மெகாவாட் கிடைக்க வேண்டும். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் முடிக்கப்படாமல் இருக்கும் இந்த மின் உற்பத்தி அலகுகளை துரிதமாக முடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை இன்றுவரை தமிழக அரசு வைக்காமல் இருக்கிறது.

ஆந்திர மாநிலம் சிம்மத்ரி அனல் மின் நிலையத்தின் 1000 மெகாவாட் திறனுள்ள முதல் இரண்டு அலகுகளில் இருந்து தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய 190 மெகாவாட் மின்சாரத்தை (காட்கில் ஃபார்முலா) சட்டத்திற்குப் புறம்பாக மத்திய அரசானது ஆந்திர மாநிலத்திற்கே தாரை வார்த்திருக்கிறது. எனினும் இந்த 190 மெகாவாட் மின்சாரத்திற்கான தனது உரிமையை தமிழக அரசானது மத்திய அரசிடமிருந்து கேட்டுப் பெற இன்றளவும் முயற்சி செய்யவில்லை.

ஆக, தமிழக அரசின் எதிர்மறை நடைமுறை காரணமாக, இன்று நாம் கிட்டத்தட்ட 2025 மெகாவாட் (1835 + சிம்மத்ரி 190) மின்சாரத்தை இழந்து நிற்கிறோம்.

இந்தத் திட்டங்களை சரியாக கையாண்டாலேயே இன்றைய பற்றாக்குறையான 4000 மெகாவாட்டில் பாதியை சரிசெய்துவிட முடியும். என்றாலும்கூட, இதற்கான நடவடிக்கைகளை எடுக்காமல் பிரச்சினையை முற்றவிட்டு, தமிழக மக்களைக் கடும் துயரில் ஆழ்த்தி அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

தனக்கு சொந்தமான மின் நிலையங்களில் இருந்து குறைந்த விலையில் உற்பத்தி செய்ய முடிகின்ற மின்சாரத்தை உற்பத்தி செய்யாமல், கூடுதல் விலையில் தனியாரால் விற்கப்படும் மின்சாரத்தை வாங்கினால் ஒழிய தமிழகத்தின் மின்சாரப் பற்றாக்குறையைத் தீர்க்க இயலாது என்ற வாதத்தை அது முன்வைத்து வருகிறது. இதோடு சேர்த்து, கூடங்குளம் அணு மின் நிலையம் நிறைவேற்றப்படாமல் இருப்பதுதான் தமிழகத்தின் மின்சாரப் பற்றாக்குறையைத் தீர்க்க முடியாமல் இருப்பதற்கான காரணம் என்றும் கூறி வருகிறது.

தமிழக அரசின் இந்த வாதம் தவறானது.

கூடங்குளத்தில் உள்ள வி.வி.இ.ஆர் 1000 வகை அணு உலையின் அதிகபட்ச இயங்கு திறன் 80% ஆகும். அதாவது பிரச்சினைகளின்றி அது இயங்கினால் 800 மெகாவாட் மின்சாரத்தையே அதனால் உற்பத்தி செய்ய முடியும். இவ்வாறு உற்பத்தி செய்த மின்சாரத்தில் அதன் கடல் நீர் உப்பகற்றி ஆலைகளை இயக்குவதற்கே சுமார் 100 மெகாவாட் மின்சாரம் தேவைப்படும். அணு உலையின் இயக்கத்திற்கும், அது தொடர்பான மின் இயந்திரங்களின் இயக்கத்திற்கும் (auxillary consumption) மேலும் ஒரு 100 மெகாவாட் தேவைப்படும். எனவே, அணு உலையில் இருந்து கிடைக்கப்போவது என்னவோ 600 மெகாவாட் மின்சாரம்தான். இதில் தமிழகத்திற்குக் கிடைக்கவேண்டிய பங்கு 46.25% என்பதால் இதில் இருந்து இறுதியில் கிடைக்கப்போவது 277.5 மெகாவாட்தான். மின்சாரம் கடத்தப்படும்போது ஏற்படும் கம்பி இழப்பான 22% போக, கடைசியில் வெறும் 216 மெகாவாட் மின்சாரத்தைத்தான் இந்த அணு உலையில் இருந்து தமிழகம் பெற முடியும்.

இந்த 80% உற்பத்தித் திறனை அணு உலையினால் அது இயங்கத் தொடங்கிய முதல் நாளிலேயே அடைந்துவிட முடியாது. அந்த நிலையை எட்ட இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஆகும் என்பதுதான் உலகின் பிற பகுதிகளில் இயங்கிக் கொண்டிருக்கும் அணு உலைகளின் அனுபவம். எனவே. கூடங்குளம் அணு மின் நிலையமானது முதல் இரண்டு ஆண்டுகளில், அதாவது 2015 ஆம் ஆண்டுவரை, அதன் 30-40% உற்பத்தித் திறனிலேயே இயங்க முடியும். இதன்படி, தமிழகத்தின் பங்கான 46.25% என்பதை வைத்துக் கணக்கிட்டால், ஒவ்வொரு அணு உலையில் இருந்தும் சுமார் 138 இல் இருந்து 185 மெகாவாட் மின்சாரத்தைத்தான் 2015 ஆம் ஆண்டு வரையிலுமே தமிழகத்தால் பெறமுடியும். இதில், கம்பி இழப்பான 22%ஐ கழித்து விட்டால் கிடைக்கப் போவதென்னவோ 108 இல் இருந்து 145 மெகாவாட்தான். இரண்டு அணு உலைகளும் இணைந்தே மின்சாரத்தை அளித்தாலும் கூட, தமிழகத்திற்கு வெறும் 216 இல் இருந்து 290 மெகாவாட்தான் கூடங்குளம் அணு மின் நிலையத்திலிருந்து கிடைக்கப் போகிறது[2].

எனவே, உற்பத்தி தொடங்கப்படாமல் தமிழக அரசால் (ஏதோ காரணத்தால்) நிறுத்தி வைக்கப்படப்பட்டுள்ள 2025 மெகாவாட் திறனுள்ள மின் நிலையங்களில் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கையைத் தமிழ்நாடு அரசு போர்க்கால ரீதியில் உடனடியாக எடுக்க வேண்டும்.

***

கடுமையான மின்சாரப் பற்றாக்குறைக்கான மற்றொரு காரணமாக இருப்பது, மின்சாரத்தினை சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் சமமாகப் பங்கிட்டுக் கொடுக்காமல் இருக்கும் (equitable distribution) மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் நடவடிக்கையாகும்.

“மின் பற்றாக்குறை இருக்கும் காலத்தில் மின்சாரத்தினைப் பங்கிட்டுக் கொடுக்கும் அதிகாரத்தினை” மின்சாரச் சட்டத்தின் பிரிவு 23 ஆனது மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு வழங்கியுள்ளது.

மின்வெட்டு மற்றும் மின் விடுமுறைக்கான காலம் தொடர்பான அரசின் அறிவிப்புகள் பயனீட்டாளர்களைக் கட்டுப்படுத்தாது; மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதல் இருந்தாலன்றி அந்த உத்தரவுகளை அமல் படுத்த முடியாது.

2012 மார்ச்-ஏப்ரல் மாதங்களில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட மின்விடுமுறை மற்றும் 40%-க்கு உயர்த்தப்பட்ட மின்வெட்டை எதிர்த்து உயர்நீதி மன்றத்தில் 600-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடுக்கப்பட்டன. அத்தனை வழக்குகளையும் ஒழுங்குமுறை ஆணையத்தின் விசாரணைக்கே உயர்நீதி மன்றம் திருப்பி அனுப்பிவிட்டது.

அதுபோன்றே, 2008 ஆம் ஆண்டு அக்டோபரில் தமிழக அரசு 40% மின்வெட்டை முதல்முறையாக அமல்படுத்தியபோது ஒழுங்குமுறை ஆணையம் அதற்கான அனுமதியை வழங்கவில்லை. இதன்காரணமாக ஐந்து வார காலத்திற்குத் தமிழ்நாடு மின்வாரியம் தமிழக அரசின் உத்தரவை அமல்படுத்த முடியவில்லை. இறுதியில், அரசின் உத்தரவில் பல மாற்றங்களைச் செய்து ஒழுங்குமுறை ஆணையம் மின்வெட்டிற்கான உத்தரவிற்கான அனுமதியை அளித்தது.

அரசின் தலையீடு இல்லாமலேயே மின்சாரத்தினைப் பங்கீடு செய்து கொடுப்பதற்கான அதிகாரத்தினை ஒழுங்குமுறை ஆணையம் பெற்றுள்ளது. தற்போது தமிழகத்தில் நிலவும் பாரபட்சமான மின்வழங்கு முறையில் ஒழுங்குமுறை ஆணையம் சுயமாகவே தலையிட்டுத் தன் கடமையை நிறைவேற்றியிருக்க வேண்டும். ஆனால், அது தன் கடமையை ஆற்றவில்லை.

பாரபட்சமான மின்வழங்குதல் என்பதைக் கீழ்க்கண்ட காரணங்களைக் கொண்டு புரிந்து கொள்ள முடியும்:

  1. சென்னை மாநகரம் மட்டுமே தமிழகத்தின் மொத்த மின்சாரத்தில் 25%-க்கும் மேலாக எடுத்துக் கொள்கிறது. தமிழகத்தின் பிற பகுதிகள் 14-16 மணி நேரம் மின்சாரம் இல்லாமல் தவிக்கும் பொழுது சென்னை மாநகரத்தில் மட்டும் 23 மணி நேரம் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
  2. மிக உயர் மின் அழுத்த இணைப்புக்களைப் பெற்றுள்ள (110 மற்றும் 230 கே.வி.) மின் இணைப்புகள் 800 மெகாவாட் வரை மின்சாரத்தை எடுத்துக் கொள்கின்றன. இவற்றிற்கு 24 மணி நேரமும் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
  3. 31 பன்னாட்டு நிறுவனங்களுக்கு 24 மணி நேரமும் மின்சாரம் அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக பகிர்ந்தளிக்கப்படுவது 218 மெகாவாட் மின்சாரமாகும்.
  4. பெரிய வணிக நிறுவனங்கள் விளம்பரத்திற்காகவும், அலங்காரத்திற்காகவும் அதிக அளவு மின்சாரத்தினை எவ்விதக் கட்டுப்படும் இன்றி பயன்படுத்தி வருகின்றன. அதுபோன்றே குளிர்சாதன வசதியையும் அவசியத்திற்கும் மேலாகப் பயன்படுத்தி வருகின்றன.
  5. உயர்மின் அழுத்த மின் இணைப்புகளுக்கு 40% மின் வெட்டு உள்ளது. மேலும், மாலை 6 மணியில் இருந்து 10 மணி வரை உள்ள காலத்தில் 10%க்கும் மேல் மின் பளுவை எடுக்கக் கூடாது என்பதற்கான தடையும் உள்ளது. இதன்மூலம் 2200 மெகாவாட் அளவிற்கு மாலை நேரத்தில் மின்பளு குறைந்திருக்க வேண்டும். அப்படியானால், மாலை 6 மணியில் இருந்து 10 மணி வரை தமிழகத்தில் மின்வெட்டு (load shedding) இருக்கக் கூடாது.
  6. திரைப்பட அரங்குகள், ஐஸ் ஃபேக்டரிகள் மற்றும் டீ எஸ்டேட்டுகளுக்கு மின்வெட்டில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
  7. புதிதாக வரும் மிகப்பெரிய வணிக நிறுவனங்கள் ஒவ்வொன்றும் முழுமையான குளிர் சாதன வசதிக்காக 5 மெகாவாட் அளவிற்கான மின்சாரத்திற்கான மின் இணைப்பைக் கேட்கின்றன. இது தடையின்றி வழங்கப்பட்டும் வருகிறது.

சென்னையைத் தவிர்த்த தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ள சிறு-குறு தொழில்கள் 16 மணி நேர மின்வெட்டால் முடங்கிப் போய்விட்டன. வழங்கப்படும் 8 மணி நேர மின்சாரமும் மனம்போன போக்கில் அரை மணி நேரத்திற்கும், ஒரு மணி நேர நேரத்திற்கும் வழங்கப்பட்டு வருவதால் இந்த 8 மணி நேர மின்சாரத்தையும் சிறு-குறு தொழில்களாலும், விவசாயத்தாலும் பயன்படுத்த முடியாத சூழ்நிலை உள்ளது.

இந்த நிலை, அடித்தட்டு மக்களின் வாழ்க்கையைப் பெருமளவு சீரழித்து விட்டது. இதன் பிரதிபலிப்புதான் இன்று பல்வேறு இடங்களில் மக்கள் போராட்டங்களாக வெடித்திருக்கின்றது.

அரசும், ஆணையமும் இது எதையும் இன்றுவரை பொருட்படுத்தவில்லை.

இப்பிரச்சினையைத் தீர்க்க, பாதிக்கப்பட்டுள்ள மக்கள் கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன்வைக்க வேண்டுகிறோம்:

  1. பழுதடைந்த மூன்று எரிவாயு மின் உற்பத்தி நிலையங்களையும், உற்பத்தி தொடங்கத் தயாராயுள்ள மூன்று அனல் மின் நிலையங்களையும் எந்தவித சாக்குப் போக்கும் கூறாமல் உற்பத்தி தொடங்க தமிழக அரசையும், மின்வாரியத்தையும் வலியுறுத்த வேண்டும்.
  2. இருக்கும் மின்சாரத்தைத் தமிழக மக்களிடையே நியாயமான அடிப்படையில் பிரித்தளிக்க இனி மேலாவது ஒழுங்குமுறை ஆணையம் செயல்பட்டு தன் கடமையை நிறைவேற்ற வலியுறுத்த வேண்டும்.

தமிழ்நாடு மின்துறைப் பொறியாளர்கள் அமைப்பு இப்பிரச்சினையில் தமிழக மக்களுடன் இணைந்து பணியாற்றத் தயாராயிருக்கிறது.

அன்புடன்

கோவை. சா.காந்தி,

தமிழ்நாடு மின்துறைப் பொறியாளர்கள் அமைப்பு

தொடர்புக்கு: 9443003111



[1] ஒவ்வொரு ஆண்டும் 8% மின் உபயோகம் கூடும் என்ற கணக்கில்

[2] கல்பாக்கத்தில் உள்ள இரண்டு அணு உலைகள் ஒவ்வொன்றும் 235 மெகாவாட் திறன் கொண்டவை. ஆனால் முதன்முதலில் அவை இயக்கப்பட்ட போது ஏற்பட்ட தொழில்நுட்பப் பிரச்சினைகள் காரணமாக, அவற்றால் 235 மெகாவாட் திறனை எட்டமுடியவில்லை. கூடங்குளம் அணு உலைகளிலும் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படாது என்று கூறிவிட முடியாது. எனவே, கூடங்குளம் அணு உலைகளில் இருந்து 200 மெகாவாட் மின்சாரம் கிடைக்க வாய்ப்புள்ளது என்று இங்கு கூறுவது அதிகப்பட்சக் கணக்கேயன்றி வேறில்லை.

Comments

25 comments

25
Pudhiya Dravidan
அருமையான, தெளிவான கட்டுரை. திரு.சா.காந்தி, அவர்களின் மின்சார அளுமை மிக அழகாக அமைந்திருக்கிறது. இது போன்ற கட்டுரைகளை அனைவரும் படிக்குமாறு, படிக்கும் அனைவரும் குறைந்தது இரண்டு பேருக்காவது மின்னஞ்சல் அனுப்பினாள் நன்றாக இருக்கும். வாழ்த்துக்கள்.
Guest
//"உற்பத்தி தொடங்கப்படாமல் தமிழக அரசால் (ஏதோ காரணத்தால்) நிறுத்தி வைக்கப்படப்பட்டுள்ள 2025 மெகாவாட் திறனுள்ள மின் நிலையங்களில் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கையைத் தமிழ்நாடு அரசு போர்க்கால ரீதியில் உடனடியாக எடுக்க வேண்டும்"//

சரியான புள்ளிவிவரம் இல்லாமை மற்றும் மக்கள் நலனில் அக்கறையின்மை மற்றும் சரியான மிந்துறை அமைச்சரை நியமிக்காமை இப்படி பல காரணம் இருக்கலாம் ஆனால் இவர்களின் நேரம் எதிர்கட்சிகளை குற்றம் சொல்வதிலேயே போகிறது ..

நம் மாநிலத்தை ஆளும் திராவிட கட்சிகளக்கு ஒரு தொலைநோக்கு திட்டமில்லாமல், போன போக்கில் ஆட்சி செய்வதின் பலனை நாம் அனுபவித்து வருகிறோம் ..
அனல் மற்றும் அணு மின் நிலையங்களை மட்டும் நம்பி திட்டங்களை தீட்டுவது ,சூரிய சக்தி என்றால் என்ன என்றும் கேட்க்கும் ஆட்சியாளர்களின் அறிவாளித்தனம் , 40% Transmission Lossதடுக்க எந்த முயற்சியும் எடுக்காமை ,மின்சார திருட்டை தடுக்காமல் வேடிக்கை பார்ப்பது ,ஒழுங்கற்ற மீட்டர்களை சரி செய்வது ,குறிப்பிட்ட கால அவசகத்தில் Energy Audit செய்வது ,இப்படி எல்லா அம்சங்களிலும் நம் அரசாங்கம் கோட்டை விட்டு மக்களின் வாழ்வாதரங்களை அழிக்கிறார்கள் ..
ramachandranbalasubramanian
கோரிக்கைகளில் நெய்வேலியிலிருந்து உற்பத்தியாகும் மின்னாற்றலில் குறைந்தது 1000 மெகாவாட்டை தமிழகத்திற்கு ஒதுக்கவேண்டும் என்று மககளைத் திரட்டிப் போராட வேண்டும். தன்னகங்காரத்தில் இருந்து விடுபட்டு அனைத்துக் கட்சிகளையும் கூட்டி மைய அரசின் ஒருதலைப்பட்ச நடவடிக்கையைக் கண்டித்துப் போராட வேண்டும். கம்பி இழப்புக்குக் காரணம் திருட்டே.இதைத் தடுக்க அரசுக்கு உறுதி வேண்டும்.
நெய்வேலி பாலு
vinoth
pogda niglaum unga karandum so sad tneb i have power in every time thanks to solar
Guest
ALL OF THEM MUST READ THIS INFORMATION
balasubramanian
நாங்கல் என்ன பாவம் சேய்தொம், ஒட்டு பொட்டாலும் தப்ப பொகிரது, பொடவிட்டாலும் தப்பபொகிரது, எஙகலுக்கு நல்ல தலைவன் வென்டாம், நல்ல மனிதனை குட தெர்ந்து எடுக்கமுடியவில்லை, நலைக்கு வெர ஒருவருக்கு ஒட்டு பொட்டலும் அவரும் இதைதான் செய்ய பொகிரார், எப்படி யொசிதாலும் கடைசியில் எஙகலின் முடிவிதான் கன்னுக்கு தெரிகிரது, இப்படிக்கு தமிழ்ன்....
Nallasivam
இவை அனைத்தும் நல்லவற்றிர்க்கே.
இந்த நிலை இன்னும் முற்ற வேண்டும்.
அப்போதுதான், மக்களுக்கு புத்தி வரும்.
புரட்சி வெடிக்கும்.
இல்லையெனில், மானாட, மயிலாட போன்ற நிகழ்ச்சிகளைதான் கண்டு, இலவசங்களை வாங்கி, குற்றவாளிகளுக்கே, வாக்களித்து, மறுபடியும் முதல்வர் ஆக்குவார்கள்..

ஒருபக்கம், தண்ணீர் கொடுக்க மறுக்கும் மாநிலங்க்ள்.
மறுபக்கம் இருட்டு..
புரட்சி வெடிக்கட்டும்..
இன் குலாப் ஜிந்தாபாத்...

சிவம்..
Rajiah P
very very good information. This should be known to every citizen
JAHABARSULTAN VADAKARAI
திமுக ஆட்சி காலட்தில் தொடன்கபட்ட மிந்திட்டன்கலென்னானது.2006ஆன்டுதிட்டம்600மெகாவாட்2013ஆகச்டிலும்(என்னுரனல்மின்னிலயம்)மெட்டுரனல்மிந்திட்டம்600 மெகாவாட்2011ஜுலயிலும்.வட சென்னைஅனல் மின் நிலய திட்டம் 600 மெகா வாட் 2011 செப்டம்பரிலும்.உடன் குடியில் பி எஷ் ஏ எல் 800 தமிழ் நாடு 800 மெகா வாட் 2013 மார்சிலும் செப்டம்பரிலும் வட சென்னை அனல் மின் நிலயட்திலெயெ மெலும் 600 மெகா வாட் தயாரிக்க குடிய ஒருதிட்டம் 2011 ஆகச்டிலும் உர்பட்தி ஆகயிருந்தது.அது இப்ப என்ன ஆனது?
ramesh
சரியான நேரத்தில் மிக உன்மையான தகவலுக்கு மிக்க நன்றி.
b.jegankumar
அற்புதமான கட்டுரை, தமிழனா பிறந்த ஒவ்வொருத்தரும் சிந்திக்க வேண்டிய கட்டுரை, இதை படித்த பிறகாவது ஒவ்வொரு தமிழனும் ஒண்ணு சேரனும். தங்கள் உரிமைக்காக போராடனும், கோர்ட்டர் அடிச்சிட்டு குப்புற படுத்துற கூடாது.
Rabi
இந்த தகவல்களும் விளக்கங்களும் தமிழ் நாட்டிலுள்ள அனைத்து மக்களையும் சென்று சேரும் வண்ணம் ஏதாவது செய்யுங்கள். பாடசாலைகள் மூலமாகவோ அல்லது கல்லூரிகள் மூலமாகவோ உண்மையை மக்கள் உணரச்செயுங்கள். பெரும்பாலான மக்கள் ஏதோ கூடங்குளம் அணு உலையால்தான் மின்சார தட்டுப்பாடு நிலவுவதாக நினைக்கிறார்கள். எமது மக்களின் கல்வியறிவு குறைவு. அவர்களிடம் இதை எடுத்துச்செல்வது இன்றைய தேவை.
RAMANIGANDHAN.E
உண்மையான அறிவுபூர்வமான கட்டுரை/ தமிழ்தேசிய மற்றும் மக்கள் நலனில் அக்கரை உள்ள அனைத்து செய்தி தாள்களும் ,வார இதழ்களும் இக்கட்டுரையை வெளீயீடவேண்டும்...மக்களீடம் கொண்டு சேர்க்கவேண்டும்.
subaash
அருமையான, தெளிவான கட்டுரை. திரு.சா.காந்தி, அவர்களின் மின்சார அளுமை மிக அழகாக அமைந்திருக்கிறது. இது போன்ற கட்டுரைகளை அனைவரும் படிக்குமாறு, படிக்கும் அனைவரும் குறைந்தது இரண்டு பேருக்காவது மின்னஞ்சல் அனுப்பினாள் நன்றாக இருக்கும். வாழ்த்துக்கள்.

சரியான நேரத்தில் மிக உன்மையான தகவலுக்கு மிக்க நன்றி..
mu. sakthi
சபாஸ் சரியான சவுக்கடி. தமிழா, தமிழா இது இத்தனை ஆண்டுகளாக செய்த பிழைக்கு இன்று உனக்கு கிடைத்த பரிசு.... சரியான மின்வெட்டு.. இனி உன் தலைமுறையாவது நல்லபடியா வாழ உனது கைகள் உதவட்டுமே..... ஓட்டுப்போட
Arun gounder
அருமையான படைப்பு, பிரிபவர்களுக்கு புரிந்தால் சரி
murugan
ஜெயலலிதவின் இந்த போக்கு நம் தமிழ் நாட்டை சிர்குலைத்து விடும்.முதலில் ஜெயலலிதாவை நாம் தூக்கி எரியனும்.
குறும்பன்
அருமையான கட்டுரை. **மின்சாரம் கடத்தப்படும்போது ஏற்படும் கம்பி இழப்பான 22% போக** நான் அறிந்த சில வலைதளங்களில் தமிழ்நாட்டின் இழப்பு 17% என்று தான் தெரிகிறது. 22% அதிகம் போல் தெரிகிறதே. மேலும் திருடப்படும் மின்சாரமும் இதில் தான் சேர்த்தி எனக்கு எவ்வளவு விழுக்காடு திருடப்படுகிறது என்று தெரியவில்லை. மின் திறன் செலுத்தல் மற்றும் பகிர்வு இழப்பு (T&D loss) என்பது திருட்டையும் சேர்த்துதான்.
MODI MASTHAN.DUBAI
இந்த வாசகத்தை அம்மா ஜெயலலிதா படித்தாலே எங்கலுக்கு மின்சாரம் கிடைதுவிட்டது என்ரு அர்தம்.ஆட்ஷிக்கு வந்த முதல்வர்கல் எல்லாம் பதினேலாவுது தலமுரைக்கு சொத்து சேர்பதில் தான் குரியாக இருக்கிரார்கல். மக்கலை என்ருதான் நினைபார்கலோ!!!!!!!!!!
sambo
Even after Kalaignar issued a statement containing the detailes of those projects which were not implemented even after completion,only a committee under the chairmanship of electricity minister has been appointed and power cut in Chennai city has gone up by one hour.Hail democracy
MOHAMED SALEEM
இந்த மக்கலுக்கு இதுவும் வேன்டும் இன்னமும் வென்டும்
SHARFUDEEN
எனக்கு தெரிந்த எந்த மனிதர்களிடமும் வருங்காலம் குறித்த கண்ணோட்டங்கள் இருப்பதாக தெரியவில்லை ( பணம் சம்பாதிப்பதில் இது நிறையவே இருக்கிறது ). ஒரு பரிச்சார்ந்த முறையாக இந்த தொலைக்காட்சி நிகழ்சிகளை ஒரு மாதம் நிறுத்தி விட்டால் மக்கள் ஏதேனும் செய்வார்கள்.காரணம் தற்காலிக சுகத்தில் அன்றன்றைய பொழுதுகளை ஓட்டுவதில் நமக்கு நிகர் நாமே !

இந்த கரண்டு பிரச்சனை எனக்கு உணர்த்தியது இதுதான் - ஜெனரேட்டர் உபயோகிக்கும் அளவிற்கு பணம் சம்பாதிக்காததில் உள்ள தவறை உணர்த்தியது. அம்மாவுக்கும், அய்யாவுக்கும் நன்றி
k.natarajan
மிகத்தெளிவான கட்டுரை
krish
the article has given is not absolutely correct. as for as the power crisis is concerned, every year if we could have been added hardly 100 mwfrom 2003 on wards , we could have been averted the problem. more over the existing installed capacity of tuticorin,is at the end of life timeserving (600mw) we have to renovate the system to back in to rail. it needs more funds. more over the valuthur power plant is concerned , it was back in to rail recently and power plant II in valuthur is still struggling to rated generation owing to its substandard quality material and its subsequent result of technical failures leads to generation not achieved its target of 600mwin metur as wel l. vallur plant in north chennai able to generate by march of 2013 . normally any thermal power plant requires 5 years to attains it full generation from erection to competion and commercial operation as well. the central not provides clerance to new power plant and hesitates to coal as well. transmission corridor is not adequate to get power from other state. this is the truth. tangedco is in dire financial position of debt of 53000 crores and difficult to purchase power from outsie at high cost. blaming the present govt is baseless
krish
the article is absolutely not correct. technical snags and substandard quality of materials in metur plant to generation failure to its rated target. the vallur right now tuned to full swing towards erection completion and expect by march 2013. present govt is not to be blamed for all delays and tuticorin plant is t completed life span of 25 years 600mw

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.