சமீபத்தில் பாடப் புத்தகத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி வந்த கார்டூன் தமிழகமெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அந்த கார்டூனில் தமிழ் மாணவர்களை ஏதோ வன்முறைக் கூட்டம் போலவும், இந்தித் திணிப்பை மத்திய அரசு கைவிட்டும் அவர்கள் ஆங்கிலத்தில் கூறுவதைப் புரிந்து கொள்ளாமல் மாணவர்கள் போராடுவது போலவும் கார்டூன் உள்ளது. அதற்கு தமிழகத்தில் எதிர்ப்பு ஏற்படுவதில் ஆச்சரியம் இல்லை. இதற்கு முன் அம்பேத்கரை அவமதித்து, உண்மைக்குப் புறம்பாக வெளியிடப்பட்ட கார்டூனால் பெரும்பான்மை மக்கள் கொதித்தெழுந்தது அனைவர் நினைவிலும் இருக்கும்.

NCERT புத்தகத்தில் உண்மையில் வந்த கார்டூன் ஒன்று; வந்திருக்க வேண்டிய கார்டூன் மற்றொன்று. கீழே உள்ள கார்டூனையும் பதிவையும் பார்த்தால் அதன் காரணம் உங்களுக்கே புரியும்.

hindhi_cartoon_640

கருத்து சுதந்திரம் மீது எப்படியெல்லாமோ தாக்குதல் நடந்தபோது அமைதியாக இருந்தவர்கள் இன்று கருத்து சுதந்திரம் மீது தாக்குதல் நடப்பதாக கூக்குரலிடுகிறார்கள். இந்த கார்டூன் தினமலரிலோ, ஞானியின் ஓ பக்கத்திலோ வந்து அதை மக்கள் எதிர்த்தால் நிச்சயம் கண்டிக்கப்பட வேண்டிய விஷயமாக இருக்கும். ஆனால் இந்த கார்டூன் பத்திரிக்கையிலேயே வரவில்லை. இது மாணவர்களின் பாடப் புத்தகத்தில் வந்துள்ளது. முதலில் பாடப் புத்தகத்தில் உண்மைக்குப் புறம்பான செய்தியே இருக்கக் கூடாது. அது மட்டுமன்றி ஒரு நிகழ்வு பற்றியோ தலைவர் பற்றியோ நக்கலாக விமர்சித்து வரும் கார்டூன் படம் பாடப் புத்தகத்தில் இருந்து, அதை மாணவர்கள் பார்த்தால் அவர்கள் அடி மனதில் பதிந்து விடும். பிற்காலத்தில் அவர்களின் எண்ண ஓட்டங்களுக்கு அதன் பாதிப்பு இருக்கும் (Inception படத்தில் வருவது போல் அடிமனதில் பதிய வாய்ப்புள்ளது) உண்மைகளைப் படிக்க வேண்டிய பாடப் புத்தகத்தில் முதலில் தரக்குறைவான கார்டூன்கள் தேவையா என்பது கேள்வி.

இந்த கார்டூன் எதாவது உண்மையை அடிப்படையாகக் கொண்டு வரையப்பட்டதா என்றும், இந்தி திணிப்பின் வரலாறு மற்றும் உண்மைகளைப் பற்றியும் பார்ப்போம். முதலில் ஆங்கிலம் இணைப்பு/பொது மொழியாக வந்த பின்னணியைப் பார்ப்போம்,

பண்டைய இந்தியாவில் கட்டமைக்கப்பட்ட கல்வியானது வருணாசிரம முறை மூலம் ஒரு சிறிய ஆதிக்க வர்க்கத்தினரின் பிடியில் இருந்தது. பெரும்பான்மை மக்களுக்கு அப்போது கல்வி என்று சொல்லி தரபட்டவை சென்றடையவில்லை. அன்றைய கல்வியின் முக்கிய பகுதி மதம் சார்ந்ததாகவே இருந்தது. எனவே பாட மொழியாக வட மொழியே இருந்தது. புத்த மதத்தினர் ஆட்சி நடத்திய காலத்தில் மட்டும் தற்போது உள்ளபடி கல்விக்கான மிகப் பெரிய கட்டமைப்பு (நாள‌ந்தா பல்கலைகழகம் போன்றவை) தொடங்கபட்டு அனைத்து மக்களுக்கும் அன்றைய கல்வி அளிக்கபட்டது. (சபிக்கப்படும் வரங்கள் - மெக்காலே கல்வித் திட்டம்)

ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்ட வரை ஆங்கிலம் பொது மொழியாக, இணைப்பு மொழியாக இருந்தது. ஆங்கிலம் அனைவருக்கும் பள்ளியில் பயிற்றுவிக்கப்பட்டதால் இந்தியர்கள் உலக அறிவைப் பெற்றனர். அன்று சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூட ஆங்கில அறிவு பெற்று அதன் மூலம் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், சோசியலிசம், அறிவியல் என் அனைத்து அறிவையும் பெற்றனர்.

இனி இந்தி திணிப்பின் அரசியலைப் பார்ப்போம்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே இந்தப் பிரச்சனை தொடங்கி விட்டது. முதன் முதலில் ராஜாஜி 1937ம் ஆண்டு இந்தியை தமிழகத்தில் கட்டாயப் பாடமாகத் திணித்தார். அப்போது பெரியார் மற்றும் நீதிக் கட்சித் தலைவர்கள் கடுமையாக எதிர்த்துப் போராடினார்கள்.

இரண்டாம் உலகப் போரில் இந்தியாவை ஈடுபடுத்தியதால், ஆட்சிப் பதவியை காங்கிரஸ் கட்சி ராஜினாமா செய்தது. அதன் பின் வந்த கவர்னர் ஆட்சியில் இந்திப் பாடம் கட்டாயப் பாடத்திலிருந்து விருப்பப் பாடமாகியது.

nehruஇந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் காங்கிரஸ் கட்சி அனைத்து மாநிலங்களிளும் இந்தியை கட்டாயப் பாடமாக்கப் பணித்தது. தமிழகத்திலும் இது நடைமுறைபடுத்தப்பட்டது. இந்தியில் பாஸ் மார்க் எடுத்தால் தான் அடுத்த வகுப்பிற்கு செல்ல முடியும் என்ற நிலை ஏற்பட்டது. மீண்டும் திராவிடக் கட்சியினர் நடத்திய போராட்டத்தை அடுத்து கட்டாயப் பாடம் என்பது கைவிடப் பட்டது.

சுதந்திரம் அடைந்தவுடன் இந்தியாவின் ஆட்சி/தேசிய மொழி பற்றிய விவாதம் தொடங்கியது. அன்றைய ஆட்சியாளர்களைப் பொருத்தவரை ஆங்கிலம் என்பது அயல்நாட்டு மொழி. அது இந்து - இந்தி - இந்தியா என்னும் ஆதிக்க வர்க்க தத்துவத்திற்கு எதிரானது. எனவே ஆங்கிலத்தை முழுமையாக நீக்கி விட்டு அந்த இடத்திற்கு இந்தியைக் கொண்டு வரவேண்டும் என்று விரும்பினர். சிறுபான்மை மொழி வளர்ச்சியையும் முடிந்த அளவு நசுக்கி விட்டு இந்தியை இந்தியா முழுதும் திணிப்பதன் மூலம் இந்தி அடிப்படையிலான இந்திய தேசியத்தை நிலைநிறுத்துவதும் அவர்களது நோக்கமாக இருந்திருக்களாம்.

உலகமயமாதல் இல்லாத அந்தக் காலத்தில் ஆங்கிலத்தின் தேவை அந்த அளவு இருந்திருக்கவில்லை. பொதுவாக கல்லூரி படிப்பவர்கள் அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் வேலைக்குச் செல்வார்கள். ஆங்கில மொழியில் இருந்த சில அடிப்படை புத்தகங்களை இந்திக்கு மொழி மாற்றம் செய்து அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளையும் இந்தி வழிப் பாடமாக மாற்றினால் ஆங்கிலம் முழுமையாக நீக்கப்பட்டு இந்தி வந்து விடும். முதலில் மத்திய, அதற்குப் பின் மாநில அரசு வேலை வாய்ப்புகளுக்கு இந்தியை கட்டாயமாக்கி, அனைத்து அரசு அலுவல்களும் இந்தியில் மட்டும் கொண்டு வந்து விட்டால் இந்தியாவில் உள்ள அனைவரும் இந்தியை கட்டாயப் பாடமாக ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். எனவே அரசு வேலைவாய்ப்பு தேர்வுகளில் இந்தியை முழுமையாகத் திணிப்பதும், பள்ளிக் கூடங்களில் இந்தியைத் திணிப்பதும் அடிப்படை திட்டமாக இருந்தது.

பிகார், உ.பி, ம.பி போன்ற இந்தி மாநிலங்களை (மற்றும் மகாராஸ்டிரா) சேர்ந்த அறிவுஜீவி அரசியல்வாதிகள் இந்தியை மட்டுமே தேசிய மொழியாக்க வேண்டும் என்று விஷம் கக்கினர். இந்தி தெரியாதவர்களுக்கு இந்தியாவில் இடம் இல்லை என்று மமதையாகப் பேசினர். இது இந்தி-இந்து- இந்தியா என்ற கோட்பாட்டின் மனப்போக்கே.. மிகப் பெரிய விவாதத்திற்குப் பிறகு 17வது இந்திய அரசியல் நிர்ணயப் பிரிவில் இந்தியை தேசிய மொழியாக அறிவிக்காமல் ஆட்சி மொழியாக அறிவித்தனர். சுதந்திரம் அடைந்த 15 வருடத்திற்கு ஆங்கிலமும் துணை மொழியாக இருக்கும் என்று முடிவு செய்யப் பட்டது. இதை முன்ஷி - அய்யங்கார் தீர்வு என்பர். இந்த முயற்சியில் தென்னகத்தைச் சேர்த்த பார்ப்பன‌ர் மற்றும் பார்ப்பன‌ரல்லாத பெரும்பான்மையான உறுப்பினர்களும் உழைத்தனர். அவர்களுடைய முயற்சியாலே இன்று ஆங்கிலமும், பிற மொழிகளும் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இல்லையென்றால் மொழிவாரி சிறுபான்மையினரின் நலன்களை முளையிலேயே கிள்ளி எறிந்து இருப்பார்கள். திராவிட இயக்கங்கள் ஆரம்பம் முதலே இந்த பாசிசவாதத்துக்கு எதிராக தொடர்ந்து போராடி வந்தனர்.

ஆனாலும் அந்த சட்டம், ஆங்கிலத்தை அடுத்த 15 வருடங்களுக்கு மட்டுமே அனுமதித்தது. 5 ஆண்டுகளுக்குள் மொழி கமிஷன் ஆரம்பிக்கப்பட்டு அதன் மூலம் இந்தியை எவ்வாறு இந்தியா முழுவதும் பரப்புவது என்றும் ஆங்கிலத்தை எவ்வாறு முழுமையாக நீக்குவது என்றும் முடிவானது.

பி.ஜி.கெர் தலைமையிலான மொழி கமிஷன் இந்தியை எப்படி முழுமையாகத் திணிப்பது என்று ஆய்வு செய்து இந்தியை முதன்மை மொழியாகவும், ஆங்கிலத்தை சில காலம் துணை மொழியாகவும் வைக்கலாம் என்று முடிவு செய்து அறிக்கையை ஜி.பி.பந்திடம் சமர்பித்து அதையும் அவர் ஒப்பு கொண்டார்.

இந்தி தாய்மொழியாக இல்லாத மாநிலங்களில் இதற்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டு ஆங்கிலத்தின் தேவையை வலியுறுத்தி நாடாளுமன்றத்திலும், வெளியிலும் போராடினர். அப்போது தான் நேரு தன் பிரசித்த பெற்ற உறுதிமொழியை நாடாளுமன்றத்தில் கொடுத்தார். அதன் படி இந்தி பேசாத மாநிலங்கள் விரும்பும் வரை ஆங்கிலம் இணைப்பு மொழியாக இருக்கும் என்றார்.

I believe also two things. As I just said, there must be no imposition. Secondly, for an indefinite period - I do not know how long - I should have, I would have English as an associate, additional language which can be used not because of facilities and all that... but because I do not wish the people of Non-Hindi areas to feel that certain doors of advance are closed to them because they are forced to correspond - the Government, I mean - in the Hindi language. They can correspond in English. So I could have it as an alternate language as long as people require it and the decision for that - I would leave not to the Hindi-knowing people, but to the non Hindi-knowing people

அதாவது அரசியல் சாசனம் நிர்ணயித்த 15 வருட வரம்பை நீக்கி உறுதி மொழி மட்டும் கொடுத்தார். ஆனால் சட்ட ரீதியான பாதுகாப்பு தரவில்லை. இன்று அனைத்து திராவிட அரசியல்வாதிகள் குறிப்பிடும் நேருவின் உறுதிமொழி இது தான். இது கொடுக்கப்பட்ட ஆண்டு 1959.

அரசியல் சாசனம் கொடுத்த 15 வருட கால கெடு நெருங்கி வர வர அப்போதைய மத்திய அரசு அனைத்து வகையிலும் இந்தியைத் திணிக்க ஆரம்பித்தது. ஒரு புறம் அரசுப் பணியாளர்கள் அனைவருக்கும் இந்திப் பயிற்சி, ஆங்கிலத்தில் உள்ளவற்றை இந்திக்கு மொழிபெயர்ப்பு செய்வது என அனைத்தும் ஜரூராக நடந்தன. மறுபுறம் தமிழகத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை திராவிட இயக்கங்கள் தீவிரப்படுத்தின.

நேருவின் முயற்சியால் ஆட்சி மொழி சட்டம் இயற்றப்பட்டது. அதில் 15 வருட கெடுவையும் தாண்டி ஆங்கிலம் ஆட்சி மொழியாக இருக்கலாம் என்று இருந்தது. அவ்வளவு தானே பிரச்ச்னை தீர்ந்தது என்கிறீர்களா? அந்த சட்ட மாதிரியில் ஆங்கில வார்த்தையில் பொடிவைத்து எழுதப்பட்டிருந்தது. அதாவது ஆங்கிலமும் ஆட்சி மொழியாக பயன்படுத்தலாம் என்றிருந்தது. சட்டத்தில் இருந்த may என்பதற்கு பதிலாக shall என்று இருக்க வேண்டும் என்று தி.மு.கவினர் குரலெழுப்பினர். mayக்கும் shallக்கும் எந்த அளவு வித்தியாசம் இருக்கும் என்பது சின்ன குழந்தைக்குக் கூட தெரியும் (may-can,shall-must)

Notwithstanding the expiration of the period of fifteen years from the commencement of the Constitution, the English language may, as from the appointed day, continue to be used, in addition to Hindi,--

திமுகவினர் கேட்ட இந்த மாற்றத்தை ஏற்று கொள்ளாமல் Official Languages Act of 1963 சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து பெரிய அளவில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் தமிழகத்தில் தொடங்கியது. இந்தி திணிப்பை எதிர்த்து அண்ணா தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டார். அவருடைய ஒரு சில உரைகள்.

"If Hindi were to become the official language of India, Hindi-speaking people will govern us. We will be treated like third rate citizens". (Anti-Hindi Imposition Rally, Chennai Marina (Madras Marina), April 29, 1963)

"Making a language (Hindi) that is the mother tongue of a region of India the official language for all the people of India is tyranny. We believe that it will give benefits and superiority to one region (the Hindi-speaking region).... This and future generations in non-Hindi areas will suffer immeasurable hardships... Making Hindi the official language of India would destroy the age old language and culture of Tamil Nadu". (Court Trial for burning the Constitution of India to show opposition to Hindi imposition, December 3, 1963)

ராஜ்ய சபாவில் அதிக மக்கள் பேசும் இந்தியை தேசிய மொழியாக அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று இந்தி பேசும் பகுதி உறுப்பினர்கள் கூறியபோது அண்ணா அதிக எண்ணிக்கை கொண்ட காகத்தை தேசிய பறவையாக்காமல் அழகிய மயிலை தேசிய பறவை ஆக்கியது ஏன் என்று நயமாக பதில் பேசினார்.

நேரு ஐரோப்பிய நாடுகளில் படித்தவர். அவர் ஓரளவு பர‌ந்த மனப்பான்மையும், தனி மனித விருப்பம் போன்றவற்றிற்கு மதிப்பளிப்பவராகவும் இருந்தார். நேரு உயிரோடு இருக்கும்வரை அவரது உறுதி மொழியும் ஓரளவு காக்கப்பட்டது.

நேரு 1964ம் ஆண்டு இறந்த பின் மீண்டும் பிரச்ச்னை தொடங்கியது. லால் பகதூர் சாஸ்திரி, மொராஜி தேசாய் போன்ற குறுகிய மனபான்மை கொண்ட இந்தி வெறியர்கள் கையில் அதிகாரம் கை மாறியது. அவர்களுக்கு இந்தியை முழுமையாக திணித்து ஆங்கிலத்தை வெளியேற்றுவதே கொள்கையாக ஆனது.

1964ம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் பக்தவச்சலம் மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தியைத் திணித்தார். 1965ம் ஆண்டு சனவரி 26ம் தேதியுடன் அரசியல் அமைப்பு சட்டம் ஆங்கிலம் தொடர்வதற்கு கொடுத்த 15 வருட கால கெடு முடிவடைந்தது. நேருவின் உறுதிமொழி சிறிது சிறிதாக காற்றில் பறக்க விடப்பட்டது. உள்துறை மற்றும் தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகங்கள் தங்கள் தகவல் பரிமாற்றங்களை ஜனவரி 26 முதல் இந்தியில் மட்டுமே நடைமுறைப்படுத்தும் என்று அறிவித்தன‌. இந்தியை திணிக்க முடிவெடுத்த சனவரி 26ம் தேதியை அண்ணா துக்க தினமாக அறிவித்தார். திமுகவினர் மிகப் பெரிய அளவிற்கு போராடத் தயாரானார்கள். மிகப் பெரிய அளவில் திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை முன்னின்று நடத்தினர். கீழபழுவூர் சின்னசாமி, கோடம்பாக்கம் சிவலிங்கம், விருகம்பாக்கம் அரங்கநாதன், அய்யம்பாளயம் வீரப்பன், சத்யமங்களம் முத்து, மாயவரம் சாரங்கபாணி, கீரனூர் முத்து போன்றோர் இந்தியை எதிர்த்து தீக்குளித்து மாண்டனர். மாயவரம் சாரங்கபாணி மாயவரம் A.V.C கல்லூரியில் இரண்டாம் ஆண்டு B.COM படித்துக் கொண்டிருந்த மாணவர் 'தமிழ்த் தாய்க்காக நான் உயிர் விடுகிறேன்' என்று கூறியபடியே உயிர் நீத்தார். மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்தது. லால் பகதூர் சாஸ்திரி, நந்தா மற்றும் மொராஜி தேசாய் போன்ற இந்தி வெறியர்கள், இந்திய ராணுவம், CRPF,பிற மாநில போலிஸ் என அனைவரையும் தமிழகத்துக்கு அனுப்பி போராட்டக்காரர்களை கண்மூடித்தனமாக கொன்று குவித்து, போராட்டத்தை அடக்க ஆணையிட்டனர். தமிழகமெங்கும் தமிழ் இளைஞர்களின் ரத்த ஆறு ஓடியது. ஆனால் அவர்களின் துணிவும், போராட்டமும் குறையவில்லை. அண்ணாமலை பல்கலைகழக மாணவர் ராஜேந்திரன் போலிசாரின் குண்டுக்குப் பலியானார். அதன் பின் தமிழகமெங்கும் போலிசார் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டனர். தமிழகத்தில் போலிசாரின் வன்முறைக்குப் பலியான மாணவர்களின் எண்ணிக்கை 70 லிருந்து 500 வரை இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.

Annaduraiஹிட்லர் ஆரிய தேசியவாதம் என்ற பெயரில் மக்களைக் கொன்று குவித்தான். லால்பகதூர் சாஸ்திரி, மொராஜி தேசாய் மற்றும் பக்தவச்சலம் ஆகியோர் "இந்தி"ய தேசியம் என்ற பெயரில் மக்களைக் கொன்று குவித்தனர்.

காங்கிரசிலேயே காமராஜர் போன்றோர் இந்தி திணிப்பை எதிர்த்தனர். அவருடன் மாறுபட்ட கருத்து கொண்ட சி.சுப்ரமணியம் மற்றும் ஒவி.அளகேசன் போன்றோர் கூட இந்தி திணிப்பை எதிர்த்து தங்களது மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தனர்.

நிலைமை தீவிரமாவதைக் கண்டு, லால்பகதூர் சாஸ்திரி ஆங்கில மொழி சில காலம் தொடரும் என வாய்வழி உறுதிமொழி அளித்தார். நேருவின் வாய் வழி உறுதிமொழியை காற்றில் பறக்க விட்டு இந்தியைத் திணித்த லால்பகதூர் சாஸ்திரி சட்ட திருத்தத்தை ஏற்படுத்தாமல் பெயருக்கு வாய்வழி உறுதிமொழியை அள்ளி வீசினார்.

இது நடந்து கொண்டிருந்த காலத்தில், பால் தாக்கரேயுடன் மும்பை பத்திரிக்கையில் வேலை பார்த்துக் கொண்டிருத்த R.K.லக்ஷ்மணன் என்ற கார்ட்டூனிஸ்ட், டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையில் சேர்ந்திருந்தார். ஆங்கிலத்தை ஏற்றுக் கொள்ளும் சட்ட திருத்தம் வெளிவராத நிலையில், அதற்காக போராடிக் கொண்டிருத்த மாணவர்களை கிண்டல் செய்து உண்மைக்குப் புறம்பான பொய்யான செய்தியைக் கொண்டு தற்போது விமர்சனத்திற்கு உள்ளான கார்டூனை போட்டார். இவ்வாறு உண்மைக்கு புறம்பான அவதூறு செய்திகளைப் பரப்புவது வட இந்தியப் பத்திரிக்கைகளின் வாடிக்கை. இதை பத்திரிக்கை சுதந்திரம் என்ற பெயரில் ஏற்றுக் கொண்டாலும், இந்த அவதூறு கார்டூனை பாடப் புத்தகத்தில் சேர்த்தது கண்டு தான் ஒட்டு மொத்த தமிழகமே கொதித்து எழுந்து உள்ளது.

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் மரணமடைந்த இளைஞர்களின் உடல்கள் புதைக்கப்படவில்லை. மாறாக விதைக்கப்பட்டார்கள். உண்மையில் புதைக்கப்பட்டது தமிழக காங்கிரசாரின் ஆணவமும், மக்கள் விரோதப் போக்கும், இந்தியை திணிக்க முயன்ற மொழி வெறியும் தான். 1967ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது. 1967ல் காங்கிரசுக்கு கட்டபட்ட சமாதி இன்றுவரை தமிழகத்தில் உறுதியாக உள்ளது!

1966ல் லால் பகதூர் சாஸ்திரி மரணமடையும் வரை, ஆங்கிலத்தை ஏற்றுக் கொள்ளும் சட்ட சீர்திருத்தம் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. சாஸ்திரி மரணமடைந்தவுடன் மொராஜி தேசாய் போன்ற இந்தி வெறியர்களிடம் மீண்டும் பிரதமர் பதவி சென்றடையும் அபாயம் இருந்தது. மொராஜி தேசாய் போன்ற குறுகிய நோக்கம் உடைய பாசிச மொழி வெறியர்கள் ஆட்சிக்கு வந்தால் இந்தியா சுக்குநூறாக உடைந்துவிடும் என்று உணர்ந்த காமராஜர், தன் மதிநுட்பத்தின் மூலம் மொழிப் பிரச்சனையில் ஓரளவு நடுநிலையான இந்திரா காந்தியை பிரதமராகக் கொண்டுவந்தார்.

1967ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி, 1963ம் ஆண்டு சட்டத்தில் "virtual indefinite policy of bilingualism" என்ற ஷரத்து சேர்க்கப்பட்டு சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டது. ஜனவரி 8, 1968ம் ஆண்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டு சட்டம் நடைமுறைப்படுத்தபட்டது. கடைசியாக ஒட்டுமொத்த தமிழக மக்களின் கனவு நினைவேறியது

ஆனால் மும்மொழி கொள்கை என்ற பெயரில் இந்தியை தமிழகத்தில் திணிப்பதை கைவிடவில்லை. அதை எதிர்த்து 1967 டிசம்பரில் மீண்டும் போராட்டம் தொடங்கியது. பேச்சுவார்த்தைக்குப் பின் அன்றைய முதல்வர் அண்ணா, மும்மொழிக் கொள்கையை ரத்து செய்தார். கல்லூரிகளில் தமிழ் ஒரு பாடமாக அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டது. 5 ஆண்டுகளில் தமிழகத்தில் தமிழை முழுமையான ஆட்சி மொழியாக கொண்டு வர முடிவு செய்யபட்டது. இந்தி எதிர்ப்புப் போராட்டம் முழுமையாக முடிவுக்கு வந்தது.

ஆங்கிலத்தை சட்டப்பூர்வமாக ஏற்றுக் கொண்ட ஆண்டு 1968. இந்தி எதிர்ப்பு போராட்டக்காரர்களை கிண்டல் செய்து கார்டூன் வெளிவந்த ஆண்டு 1965. உண்மை இப்படி இருக்க NCERT கோயபல்ஸுக்கள் இந்த கார்டூனை பாடப் புத்தகத்தில் போடுகிறார்கள்.

அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மை

இந்தியை ஒரு பாடமாக அறிமுகப்படுத்தியதை எதிர்த்து மட்டும் தான் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்றதாக இன்று பெரும்பான்மையானவர்களால் நம்பப்படுகிறது. உண்மை அதுவல்ல. சுதந்திரம் அடைந்தபின் இந்தியை மட்டும் தேசிய மொழியாக்க முயன்றதன் நோக்கமே அன்னியர்களின் அடையாளமாக கருதப்பட்ட ஆங்கிலத்தை இந்தியாவிலிருந்து முழுமையாக நீக்கவேண்டும் என்பதே. ஆங்கிலத்தை நீக்கி விட்டு இந்தியை அடிப்படையாக கொண்ட தேசியத்தை நிறுவ முயன்றனர். ஏற்கனவே பல்வேறு மொழி மற்றும் கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்ட சோவியத் யூனியனில் பெரும்பான்மை மக்கள் பேசிய ரசிய மொழியை தேசிய மொழியாக அறிவித்து, அதனை பிற மொழிவாரி சிறுபான்மையினரின் மேல் திணித்து, ரசிய மொழியை மட்டும் ஆட்சி மற்றும் தேசிய மொழியாக வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியிருந்தனர். சோவியத் சோசியலிசத்திலிருந்து நிறைய கருத்துகளை எடுத்த போது இந்தி-இந்து-இந்தியா என்ற தாரக மந்தரத்தைக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சியினர் இந்தி அடிப்படையிலான தேசிய மொழிக் கொள்கையை எடுத்ததில் வியப்பேதும் இல்ல.

அன்று இந்தி எதிர்ப்புப் போராட்டம் வெற்றி அடைந்து இருக்காவிட்டால் கீழ் காண்பவை தான் நடந்து இருக்கும்.

1.ஆங்கிலம் இந்தியாவிலிருந்து முழுமையாக வெளியேற்றப்பட்டிருக்கும். கல்வி சாலைகளில் இந்தி வழிப் பாடம் முழுமையாக அறிமுகபடுத்தப்பட்டிருக்கும். தமிழர்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து இந்தியர்களுக்கும் உலக அறிவு இந்தளவிற்குக் கிடைத்து இருக்காது.

2.இன்று உலகமயமாதல் காரணமாக தமிழர்களுக்கும், இந்தியர்களுக்கும் கிடைத்திருக்கும் உலகளாவிய வேலைவாய்ப்புகள் கிடைத்திருக்காது. (இந்தி மட்டும் படித்து உ.பி., பீகார் கொள்ளைக் கூட்டங்களுக்கு வேண்டுமானால் கடுமையான போட்டிக்குப் பின் சென்றிருக்கலாம்.)

3.இந்தியை தாய் மொழியாகக் கொண்ட மாணவர்கள் தங்கள் தாய் மொழியில் பள்ளி, கல்லூரி படித்தும் அரசு வேலைவாய்ப்புகளுக்கு தங்கள் தாய் மொழியில் பரிட்சை எழுதி அரசு வேலைவாய்ப்புகள் மற்றும் படிப்பில் முன்னணியில் இருப்பார்கள். தமிழ் மாணவர்கள் இந்தி படித்து, இந்தியை தாய் மொழியாகக் கொண்ட மாணவர்களுடன் எதற்கும் போட்டி போட்டிருக்க வேண்டும்.

4.இந்தியாவில் இந்தியை தாய் மொழியாகக் கொண்டிருக்காத அனைத்து மக்களும் இரண்டாம் தர மக்களாகி இருப்பார்கள்.

5.அன்னிய மொழியான ஆங்கில மொழி தற்போது பெரும்பான்மையாக இருப்பதால், ஆங்கிலத்தை ஆதரித்து அதை திணிக்க யாருக்கும் அவசியம் இல்லாததால் மொழிவாரி சிறுபான்மையினர் தங்களது தாய் மொழி மற்றும் கலாசாரத்தை ஓரளவு பாதுகாக்க முடிந்தது. இந்தி மட்டும் தேசிய மொழியாக முழுமையாக நடைமுறைபடுத்தப்பட்டிருந்தால் சிறுபான்மையினரின் மொழியும் அவர்களது கலாச்சாரமும் முழுமையாக நசுக்கப்பட்டிருக்கும்.

இந்தி படிக்காததால் வட நாட்டில் தமிழர்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்ற பொய் பிரச்சாரம் செய்தவர்களால் இந்தி எதிர்ப்புப் போராட்டம் என்பது சூழ்நிலை கைதியாக‌ வைக்கப்பட்டிருந்தது. ஆனால் ஆங்கிலத்தை படித்து தற்போது தமிழர்கள் உலக அறிவு மற்றும் உலகளாவிய வேலைவாய்ப்பு கிடைத்ததன் மூலம் சரித்திரம் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை விடுதலை செய்து விட்டது. ஆங்கிலத்தை மறுத்து பெரும்பான்மையாக இந்தியை ஏற்றுக் கொண்ட உபி, பிகார், மபி போன்ற இந்தி மாநில மக்களை இன்று பசி, பட்டினி, சமத்துவமின்மை, வேலைவாய்ப்பின்மை போன்றவற்றின் மூலம் வரலாறு தண்டித்துவிட்டது.

இந்த உண்மையைப் புரிந்து கொண்டும் இன்னும் இந்தியைத் திணிக்க இந்திய கோயபல்சுக்கள் பொய்ப் பிரச்சாரம் செய்து கொண்டுதான் உள்ளனர்.

- சதுக்கபூதம்

Pin It