கள்ளராய் உட்பு குந்து
கடவுளர் பொய்அ ளந்து
கொள்முதல் செய்த உச்சிக்
குடுமிகள் புரட்டு தன்னை
எள்ளிய சீலர்; ஒன்றே
இறையென்று சொன்ன தூயர்
வள்ளலார்; வெள்ளை ஆடை
வடிவத்தில் புரட்சி யாளர்
வாடிய பயிர்கள் கண்டு
வாடினார்; உயிர்கள் காத்தார்!
மூடிய வஞ்சம் தன்னை
முக்காட்டால் மறைத்தோர் தம்மைச்
சாடிய இராம லிங்கர்
சமரச சன்மார்க் கத்தை
நாடியே பசித்தோர் தம்மின்
நல்வயிறு நிறைத்து வந்தார்
சோதியில் கலந்த தாகச்
சொன்னவை எல்லாம் நம்மின்
காதிலே பூவைச் சுற்ற
கட்டிய கதைகள் தாமே!
ஆதியில் தில்லை நந்தன்
அடுத்ததாய் வடலூர் வள்ளல்
வேதியர் கபடத் தீயில்
வெந்துசெத் தார்கள் அன்றோ!
மதப்பேய்கள் பிடியா வண்ணம்
வாழ்ந்திடச் சொன்னார்; அந்தப்
புதைசேற்றில் சிக்கித் தானே
புலம்புகின் றார்கள் மக்கள்!
சதிகாரர் சுற்றி நின்று
சாதியம் வளர்க்கின் றார்கள்
இதைமுதலில் ஒழிக்க வேண்டும்
எல்லோரும் விழிக்க வேண்டும்!
- கவிஞர். தமிழேந்தி