இந்திய மொழிகளில் காரல் மார்க்சு பிரெடெரிக் எங்கெல்சு எழுதிய ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ வங்க மொழியில் தான் முதன்முதலில் மொழியாக்கம் செய்யப்பட்டது.

வங்காளத்தில் கம்யூனிஸ்ட் குழுவை நிறுவிய முசாபர் அகமதுவை ஆசிரியராகக் கொண்டிருந்த கணவாணி என்னும் ஏடு, சவுமயேந்திரநாத் தாகூரால் (இரவீந்திரநாத் தாகூரின் நெருங்கிய உறவினர்) மொழியாக்கம் செய்யப்பட்ட அறிக்கை 1926இல் ஆறு இதழ்களில் வெளியிடப்பட்டது.

வங்க மொழிக்கு அடுத்ததாக உருது மொழியில் கம்யூனிஸ்ட் அறிக்கை மொழியாக்கம் செய்யப்பட்டது. காங்கிரசுக் கட்சித் தலைவர்களில் ஒருவரும், இஸ்லாமிய அறிஞருமாகிய மவுலானா அப்துல் கலாம் ஆசாத்தால் நிறுவப்பட்டதும் அவரை ஆசிரியராகக் கொண்டிருந்ததுமானஅல்-ஹிலால் எனும் வார ஏட்டின் 1927 நவம்பர் 4, 11, 18ஆம் நாளைய இதழ்களில் அறிக்கையின் முதல் இரு பிரிவுகளின் (பூர்ஷ்வாக்களும் பாட்டாளிகளும், கம்யூனிஸ்டுகளும் பாட்டாளி களும்) உருது மொழியாக்கம் நான்கு பகுதிகளாக வெளி யிடப்பட்டது.

அடுத்ததாக மராட்டி மொழியாக்கமும் தமிழாக்கமும் ஏறத்தாழ ஒரே காலக்கட்டத்தில் வெளிவந்தன. கங்காதர் மொரேஸ்வர் அதிகாரி மீரத் சதி வழக்கில் சிறையிலிருந்த போது 1930-31இல் மராத்தியில் மொழியாக்கம் செய்தார்.

இது 1931 அக்டோபரில் வெளியிடப்பட்டு ஆறணா விலைக்கு விற்கப்பட்டது. அந்த மொழியாக்கம் 160 பக்கங்களைக் கொண்டிருந்தது.

தமிழாக்கம் :

1931 அக்டோபர் மாதத்தில் அறிக்கையின் முதல் தமிழாக்கம் வெளிவந்தது. பெரியார் ஈ.வெ.ரா.வின் சுய மரியாதை இயக்க வார ஏடான குடிஅரசு 1931 அக்டோபர் 4 முதல் தொடர்ச்சியாக அய்ந்து இதழ்களில் ‘சமதர்ம அறிக்கை’ என்னும் தலைப்பில் அறிக்கையின் முதல் பிரிவின் (பூர்ஷ் வாக்களும் கம்யூனிஸ்டுகளும்) தமிழாக்கத்தை வெளியிட்டது.

மொழி பெயர்ப்பாளரின் பெயர் குறிப்பிடப்படவில்லை. ஆயினும் முதல் பகுதி பெரியாரின் அறிமுகவுரையுடன் வெளியிடப்பட்டது.

இன்றும் பொருத்தப்பாடுடைய அந்த அறிமுக உரையில் பெரியார் எழுதினார் : “உலக அரசாங்கங்களிலெல்லாம் ரஷிய ஜார் அரசாங்கமே மிக்க கொடுங்கோன்மையாக நடைபெற்று வந்திருக்கின்றது.

அதனாலேயே அங்கு சமதர்ம முறை அனுபவத்திற்குக் கொண்டுவர வேண்டியதாயிற்று. இந்த நியாயப்படி பார்த்தால், அவ்வித சமதர்ம உணர்ச்சி உலகில் ரஷியாவை விட இந்தியாவிற்கே முதன்முதலாக ஏற்பட்டிருக்க வேண்டியதாகும், இங்கு அனேகவித சூழ்ச்சிகள் நடைபெற்று வந்திருப்பதாலும் சூழ்ச்சிக்காரர்கள் இந்திய மக்களை வெகுஜாக்கிரதையாகவே கல்வி அறிவு, உலக ஞானம், சுயமரியாதை உணர்ச்சி முதலியவைகள் பெறுவ தற்கு மார்க்கம் அல்லாமல், காட்டுமிராண்டித்தன்மையில் வைத்து வந்ததோடு, கடவுள் பேராலும், மதத்தின் பேராலும் ஏற்படுத்தப்பட்ட உணர்ச்சியானது, அடிமையாக இருப்பதே கடவுள் சித்தமென்றும், மோட்ச சாதனமென்றும் புகட்டி வந்ததாலும், உலகில் சமதர்ம உணர்ச்சி முதன்முதலில் இந்தியாவிலேயே ஏற்பட்டிருக்க வேண்டியது மாறி, ரஷ்யா வுக்கு முதல் ஸ்தானம் ஏற்பட வேண்டியதாயிற்று.

“........... ஆனால் உலகில் சமதர்ம உணர்ச்சிக்கு விரோதமான தன்மையில் மற்ற தேசத்துக்கும் இந்தியாவுக் கும் ஒரு முக்கிய வித்தியாசம் இருந்து வருகின்றது. அதென்ன வென்றால், மற்ற நாடுகளில் ஒரு விஷயந்தான் முக்கியமாய்க் கருதப்படுகின்றது.

அதாவது முதலாளி (பணக்காரன்) வேலையாள் (ஏழை) என்பதுவேயாகும். ஆனால் இந்தியாவிலோ மேல்சாதியார் - கீழ்ச்சாதியார் என்பது ஒன்று அதிகமாகவும் முதன்மையானதாகவும் இருப்பதால் அது பணக்காரன்-ஏழை தத்துவத்திற்கு ஒரு கோட்டையாக இருந்து காப்பாற்றிக் கொண்டு வருகிறது” (குடிஅரசு 4.10.1931).

கம்யூனிஸ்ட் அறிக்கையின் முதல் பிரிவின் தமிழாக்கத்தின் கடைசிப் பகுதியை வெளியிட்ட குடிஅரசு 1.11.1931ஆம் நாளைய இதழ், அறிக்கையின்பிற பிரிவுகளின் மொழியாக்கமும் வெளிவரும் என்று அறிவித்தது.

ஆனால் 1931 டிசம்பர் 13ஆம் நாளன்று பெரியார் வெளிநாட்டுப் பயணத்தை மேற் கொண்டு பல மாதங்களுக்குப் பிறகே திரும்பி வந்ததால், பிற பிரிவுகளின் மொழியாக்கம் ஏதும் வரவில்லை.

சோவியத் யூனியனில் பெரியார் 14.2.1932 முதல் 17.5.1932 வரை தங்கி, அங்கு ஏற்பட்டுவந்த சமூக, பொருளாதார, பண்பாட்டு மாற்றங்களை அறிந்துவந்தார்.

கம்யூனிஸ்ட் அறிக்கையின் முழுமையான முதல் தமி ழாக்கம், எம். இஸ்மத் பாஷாவால் செய்யப்பட்டு, இந்தியக் கம்யூனிச்ட் கட்சியின் நூல் வெளியீட்டகமான ஜனசக்தி பிரசுராலயத்தால் 1948இல் வெளியிடப்பட்டது. பதினாறு பக்க அறிமுகவுரையுடன் கூடிய 91 பக்க மொழியாக்கம் கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை எனத் தலைப்பிடப்பட்டிருந்தது.

பெரியார், சோவியத் யூனியனுக்குப் பயணம் மேற் கொண்டதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்பே போல்ஷ்விக் புரட்சி குறித்த கட்டுரைகள் குடிஅரசு, ரிவோல்ட் ஆகிய சுயமரியாதை ஏடுகளில் வெளிவந்துள்ளன. சோவியத் யூனியன் பயணத்திற்குப் பிறகு, மதம் பற்றி லெனின் கார்க்கிக்கு எழுதிய கடிதம், ‘டால்ஸ்டாய்-ரஷியாவின் நிலைக்கண்ணாடி’ என்னும் லெனின் கட்டுரை ஆகியன பெரியார் ஈ.வெ.ரா., எஸ். ராமநாதன் ஆகியோரால் தமிழாக்கம் செய்யப்பட்டுப் பயன்படுத்தப்பட்டதற்கும் சான்றுகள் உள்ளன. எனவே கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் தமிழாக்கத்தை இருவரும் சேர்ந்து செய்திருப்பர் என ஊகிக்க வாய்ப்புண்டு.

(எஸ்.வி. ராஜதுரையின் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை தமிழாக்க நூலிலிருந்து)

Pin It