tamil scriptஇலக்கியத் திறனாய்வில் வடிவம், கட்டமைப்பு என்ற சொற்கள் நுட்பமான பொருள் வேறுபாட்டுடன் எடுத்தாளப்படுகின்றன. பாடல், உரைநடை ஆகியவற்றைக் குறிப்பிடும்போது பா வடிவம், உரைநடை வடிவம் என்ற சொற்கள் பயன்படுகின்றன. தனி நூல்களின் அமைப்பினைப் பற்றிய ஆய்வுகளில் அமைப்பு அல்லது கட்டமைப்பு என்ற சொற்கள் பயன்படுகின்றன. வடிவம், கட்டமைப்பு, அமைப்பு, உருவம் ஆகிய சொற்கள் பெரும்பான்மையான இடங்களில் எடுத்தாளப்படும் சூழல்களை வைத்துப் பார்க்கும்போது வடிவம் என்ற சொல் பொதுவான ஒரு தொகுதியைக் குறிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது. நூல்களின் தொகுதியையும் ஒரு குறிப்பிட்ட நூலின் கட்டமைப்புக் கூறுகளுடன் இலக்கிய உத்திகள் இணைந்திருக்கும் தொகுதியையும் குறிப்பிடுவதற்கு வடிவம் என்ற சொல் பயன்படுகின்றது. (ம.திருமலை:2017:175)

தமிழ்மொழி வளமான இலக்கியப் பரப்பினைக் கொண்டது. அத்துடன் செறிவான ஆராய்ச்சி மரபினையும் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மொழி, இலக்கியங்கள் மீதான ஆராய்ச்சி மரபின் தோற்றுவாயாக இலக்கண உருவாக்கத்தைக் கூறமுடியும். பின்னர்த் தோன்றிய உரைமரபுகள் மூலப் பனுவல்களை அடுத்தகட்ட நகர்விற்குக் கொண்டு சென்றன. சமூக மாற்றமானது எவ்வாறு இலக்கியப் பிரதிகளின் மீது தாக்கத்தினைச் செலுத்தியதோ அவ்வாறே ஆராய்ச்சி மரபிலும் மாற்றத்தினைக் கொண்டுவந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் அச்சுக்கருவிகள் பொதுப்புழக்கத்திற்கு வந்த பின்னர் சுவடிமரபிலிருந்து இலக்கியப் பிரதிகள் பல அச்சு நூலாக உருமாற்றம் பெற்றன. புலமைச்சமூகத்தில் அவற்றின் மீதான வாசிப்பு என்பது மேலைத்தேயக் கல்வியோடு இணைந்து தொழிற்பட்டது. பிறமொழி ஆய்வாளர்களின் கவனம் தமிழ்மொழி இலக்கியங்களின் மீது ஏற்பட்டதும் இங்குக் குறிப்பிடத்தக்கது. காலனிய காலத்திற்குப் பின்னர் இயக்கம் சார்ந்த வாசிப்பு நிலை உருவானது. பிறகு கோட்பாடுகள் சார்ந்த ஆய்வு; சமூக அரசியல் சார்ந்த ஆய்வு, வட்டார ஆய்வு என ஆய்வுப் புலமானது விரிவினைப் பெற்றது. இந்தப் பின்புலத்தில் ஓர் இலக்கியப் பிரதியானது ஆராய்ச்சி மரபில் கடந்து வந்த பாதைகளைக் கவனப்படுத்துவது அவசியமாகின்றது.

குறிப்பாகச் சங்க இலக்கியம். தமிழ்மொழியின் செவ்வியல் தன்மைக்கு அடிப்படையாக இருப்பவை பாட்டும் தொகையும். இச்சங்க இலக்கியங்கள் கடந்து வந்த ஆராய்ச்சி மரபுகள் குறித்துச் சில கட்டுரைப் பதிவுகள் காணக் கிடைக்கின்றன. அவற்றுள் சு.அமிர்தலிங்கத்தின் ‘சங்க இலக்கியம் செய்தனவும் செய்ய வேண்டியனவும்’ (2001), வீ.அரசுவின் ‘சங்க இலக்கியம் காலந்தோறும் உள்வாங்கல் மற்றும் மறு உருவாக்கம்’ (2012), ப.திருஞானசம்பந்தத்தின் ‘சங்க இலக்கிய ஆராய்ச்சி வரலாறுக் ஆகிய கட்டுரைகள் குறிப்பிடத்தக்கவை. இதுவரை சங்க இலக்கியம் மீது நிகழ்த்தப்பெற்ற ஆய்வுகளையும் இனி நிரப்ப வேண்டியுள்ள இடைவெளிகளையும் கண்டுகாட்டுவதாகச் சு.அமிர்தலிங்கத்தின் கட்டுரை அமைந்துள்ளது. சங்க இலக்கிய ஆராய்ச்சி வரலாறு (2016) என்ற ப.திருஞானசம்பந்தத்தின் கட்டுரை கால ஆராய்ச்சி, பண்பாடு/ தமிழர் - அயலவர், திணை - துறை ஆராய்ச்சி, யாப்பியல் ஆராய்ச்சி, மொழியியல், மொழிபெயர்ப்பியல் ஆராய்ச்சி, தமிழ் இயக்கங்களின் ஆராய்ச்சி, இதழியல் ஆராய்ச்சி என இதுவரை நிகழ்த்தப்பட்டுள்ள ஆய்வுகளைப் பகுத்துப் பேசுகின்றது. பேராசிரியர் வீ.அரசு அவர்களின் கட்டுரை விரிந்த நிலையில் 1940கள் தொடங்கி இன்றுவரை சங்க இலக்கியம் எப்படியெல்லாம் உள்வாங்கப்பட்டது என்பதையும் அதன் மறுஉருவாக்க அரசியலையும் பேசுகின்றது. இதுகுறித்துத் தனி ஆய்வு நூலொன்று எழுதுவதற்குரிய அனைத்துத் தரவுகளையும் கொண்டதாக இக்கட்டுரை உள்ளது.

சங்க இலக்கியம் காலம், மொழி, பண்பாடு, அமைப்பு, அரசியல், நிலவமைப்பு, அயலவர், இயக்கங்கள், கோட்பாடுகள் எனப் பரந்துபட்ட ஆய்வுப்பரப்பில் எவ்வாறெல்லாம் ஊடாடியுள்ளது என்பதனை 16 குறிப்புகளின் வழி விளக்கிச் செல்கின்றது இக்கட்டுரை. வீ.அரசு அவர்கள் கையளித்துள்ள அவர்தம் கட்டுரையின் அமைப்பினை அடிப்படையாகக் கொண்டு சங்க இலக்கியத்தின் வடிவம் சார் ஆய்வுகளை இக்கட்டுரை கவனப்படுத்த முயல்கின்றது.

சங்கப்பனுவல்களின் வடிவம் சார்ந்த ஆய்வுகளைக் கீழ்க்கண்ட நிலைகளில் தொகுக்க முடியும்.

-              குறிப்பிட்டதொரு தொகைப் பனுவலின் வடிவத்தினை முன்னிறுத்தி வெளியான கட்டுரைப்பதிவுகள் அல்லது பொதுநிலையிலான பதிவுகள்

-              தமிழ் இலக்கிய மரபினைப் பற்றிய ஆய்வுகளுக்குள் பகுதியாகச் சங்க இலக்கியத்தின் வடிவத்தினை முன்னிறுத்தும் நிலையிலானவை.

-              சங்க இலக்கிய வடிவம் குறித்து மேற்கொள்ளப்பட்ட முனைவர் பட்ட ஆய்வேடுகளும் அவற்றின் நூலாக்கங்களும்

-              பிற மொழி அறிஞர்கள் சங்கப் பனுவல்களின் வடிவம் குறித்து மேற்கொண்ட ஆய்வுகளும் கருத்து முடிவுகளும்

கட்டுரைப் பதிவுகளைப் பொறுத்தவரை இதழ்வழிப்பதிவுகள், கருத்தரங்க ஆய்வுக் கோவைகள் என இரண்டு நிலைகளில் அவற்றைத் தொகுக்க முடியும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் தொடங்கி இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலம் வரை வெளியான சில இதழ்கள் சங்க இலக்கியம் குறித்த காத்திரமான கட்டுரைகளை வெளியிட்டுள்ளன. அவற்றுள் வடிவம்சார்ந்த கருத்துகளை முன்னெடுத்த கட்டுரைகளும் அடங்கும்.

தி.வீரபத்திர முதலியார் The Light of Truth or Siddanta Deepika  என்னும் ஆங்கில இதழில் எழுதிய The Kalithokai Meters  என்னும் ஆய்வுக் கட்டுரை சங்க இலக்கிய வடிவம் சார் ஆய்வுகளுக்கு முன்னோடித்தன்மை வாய்ந்ததாக உள்ளது. கலிப்பாவின் அடிப்படை உறுப்புகள் குறித்த அறிமுகத்தை மட்டும் கூறிவிட்டுத் தொடர்ந்து கலிவெண்பாவின் வடிவநேர்த்தி குறித்து ஆராய உள்ளதாகத் தி.வீரபத்திரமுதலியார் குறிப்பிட்டுள்ளார் (1898:131). ஆனால் இக்கட்டுரை முழுமையடைய வில்லை. இக்கட்டுரைக்கு அடுத்த நிலையில் 1960 இல் தமிழ்ப்பொழிலில் மூ.இராகிருட்டினன் ‘புறநானூறும் அதன் இலக்கணமும்’ என்ற பொருண்மையில் கட்டுரை பதிவொன்றைச் செய்துள்ளார். புறநானூற்றில் பயின்று வந்துள்ள ஆசிரியத்தின் வகைகள், அகவற்பாடலின் ஈறு குறித்து இக்கட்டுரையில் விவாதிக்கப்பட்டுள்ளது.

தொல்காப்பிய உரைகாரர்களுக்கு அடுத்த நிலையில் புறநானூற்றில் பயின்றுள்ள வஞ்சிப்பாக்களின் எண்ணிக்கையை வரையறுக்கும் முயற்சியினை கட்டுரையாசிரியர் மேற்கொண்டுள்ளார். இருப்பினும் தெளிவான வரையறையினைக் கூறாமல் சில மாறுபாடுகளைக் கொண்டதாகவும் ஒரே பாடல் மூன்று நிலைகளிலும் ஊடாடுவதாகவும் குறித்திருப்பது இவ்வடிவப் பயில்வின் தெளிவின்மையைக் காட்டுகின்றது. கட்டுரைப் பதிவு என்பதால் விரிவான விளக்கங்கள் ஏதும் தரப்படாமல் பாடல் எண்கள் மட்டும் குறிக்கப்பட்டுள்ளன. பிற்காலத்தில் சங்கப் பாவியலில் வஞ்சியின் வகிபாகம் குறித்து விரிவான தனித்த நிலையிலான ஆய்வுகள் தோன்றின; புறநானூற்றில் பயின்றுவந்துள்ள வஞ்சிப்பாக்களின் எண்ணிக்கை விரிவையும் அடைந்தன. இதழ்வழிப் பதிவுகள் என்ற நிலையில் இவ்விரண்டு கட்டுரைகளும் முறையே கலித்தொகை, புறநானூறு ஆகிய பனுவல்களின் வடிவ நேர்த்தி குறித்தவையாக அமைந்துள்ளன.

மொழிநிறுவனங்கள், கல்விப்புலங்களில் நடைபெறுகின்ற சங்க இலக்கியக் கருத்தரங்குகளில் வாசிக்கப்பட்ட கட்டுரைகள் பல ஆய்வுக் கோவைகளாக வெளிவந்துள்ளன. 1998 இல் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் நடத்திய ‘சங்க இலக்கியம் கவிதையியல் நோக்கு சிந்தனைப் பின்புல மதிப்பீடு’ என்ற கருத்தரங்கம் குறிப்பிடத்தக்கது. ஆய்வுப்புலத்தில் காத்திரமாகச் செயல்பட்ட ஆளுமைகளின் கட்டுரைகள் இக்கருத்தரங்கில் இடம்பெற்றன. அவை நூலாக்கமும் பெற்றுள்ளன. அவற்றுள் ஐந்து கட்டுரைகள் சங்க இலக்கிய வடிவத்தினை ஆராய்பவை. ‘பத்துப்பாட்டின் கவிதையியல்’ குறித்து கார்த்திகேசு சிவத்தம்பியும் ‘பாடல் மரபு’ என்ற பொருண்மையில் அ.சண்முகதாஸும் கட்டுரை எழுதியுள்ளனர். தி.வே.கோபாலையர் ‘செய்யுளியலும் யாப்பும்’ சோ.ந.கந்தசாமி ‘யாப்பு’, இரா.இளங்குமரன் ‘யாப்பியல் கொடை’ ஆகிய பொருண்மைகளில் கட்டுரைகள் எழுதியுள்ளனர். கா.சிவத்தம்பி, அ.சண்முகதாஸ் ஆகியோரின் கட்டுரைகள் சங்கப் பாடல்களின் தோற்ற மரபு, வடிவத்திற்கும் பொருண்மைக்குமான தொடர்பு ஆகியவற்றை மையமிட்டு அமைகின்றன. சமூகப் பின்புல விரிவு பாடல்களுக்குள் ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தினை இவ்விரு கட்டுரைகளும் ஆழமாக விவாதிக்கின்றன. பத்துப்பாட்டு பாடல் மரபு குறித்துக் கா.சிவத்தம்பி,

கவிதையியலில் முக்கிய நெகிழ்வைக் காட்டுகின்ற முல்லைப் பாட்டு, நெடுநல்வாடை நேரிசை ஆசிரியத்திலேயே, மரபு ரீதியான யாப்பிலேயே வருகின்றன என்பது முக்கியமாகும். அதே வேளையில், நுண்ணிய புகழ்ச்சிக்கான வஞ்சியிலேயே பட்டினப்பாலையும் மதுரைக்காஞ்சியும் அமைந்துள்ளன என்பதும் முக்கியமாகும். (1999:82)

பத்துப்பாட்டுப் பாடல்களின் நீட்சி, நாளவை, வேந்தவைகளிற் புலவர்களால் பாடல்கள் எடுத்தோதப்படுகின்ற முறைமையிலும் (art of declamation)) வித்தியாசத்தைக் காட்டுகின்றன எனலாம். ஒரே புலவர் இரண்டு வெவ்வேறு நடைகளில் (Styles) பாடுகின்றனர் என்பதும் முக்கியமான ஓர் உண்மையாகும். (1999:82)

ஆகிய கருத்துகளை முன்வைத்துள்ளார். அவ்வாறே பாடல் மரபு கட்டுரையில் சண்முகதாஸ்,

சங்க காலத்திலே ஆசிரியம் பெற்ற வளர்ச்சியின் உச்ச நிலையைப் பத்துப்பாட்டிலே காண்கிறோம். பல பத்துக்களாக விரிந்த ஆசிரியப்பா பல நூறு அடிகளாக விரிவடைகின்றன. இவ்வாறு இப்பா விரைவடைவதற்குரிய தேவை ஆராயற்பாலது. நான்கு அடிகளிலே கூறப்பட்ட அகத்திணைப் பொருள் 187 அடிகள் கொண்ட நெடுநல்வாடையாக விரிவடைந்துள்ளது. அரசியல் பொருளியல் வளர்ச்சி காரணமாக தலைவனுடைய அரண்மனை வளமும் போர்ப்பறையின் பெருக்கமும் கருப்பொருளை விரித்துரைக்க நெடுநல்வாடைப் புலவனுக்கு வாய்ப்பாக இருந்தது. ஒருசில மலர்களைக் கருப்பொருளாகக் கொண்ட புலவன் எண்பதுக்கும் மேற்பட்ட மலர்களை நிரைப்படுத்திக் குறிஞ்சிப் பாட்டைப் பாடினான். (1999:118)

என்று பதிவு செய்துள்ளார். சமூகவியல் வளர்ச்சியானது பாடுபொருளில் மாற்றத்தையும் விரிவையும் கொண்டு வந்தது போலவே கவிதை வடிவிலும் வளர்ச்சியினைக் கொண்டு வந்துள்ளது என்பதனை,

சங்க இலக்கிய பா மரபு வளர்ச்சி பரிபாட்டிலே உச்சமடைகின்றது. எளிமையான இயல்பு நிலையுடைய ஆசிரியப்பாவுடன் தொடங்கிய மரபு பொருள் விரிவுக்கு ஏற்றபடி தனக்கு முன்னெழுந்த பல்வேறு வகையான பாவடிவங்களின் திரட்டாகப் பரிபாட்டு அமைகிறது. (1999:126)

என்ற கருத்தின் மூலம் உணர்த்துகிறார். இவ்விரு கட்டுரைகளின் அடிப்படையிலும் சங்கப் பாவியலை மேலும் நுணுகி ஆராய வேண்டிய தேவையுள்ளது. சமூகம், புவியியல், அரசியல் மாற்றங்கள் இலக்கிய வடிவத்திலும் மாற்றத்தை உருவாக்குகின்றன. அப்புதிய வடிவங்கள் தனக்கான வரையறைகளைத் தேடி நிற்கின்றன. சங்க பாடல்களில் குறிப்பாகப் பத்துப்பாட்டு அதற்கான களத்தை விரிவாகவே கொண்டுள்ளது. இத்தொகுப்பில் குறிப்பிடப்பட்ட பிற மூன்று கட்டுரைகளும் தொல்காப்பியத்தை அடிப்படையாகக் கொண்டு சங்கப் பாவியலைக் கட்டமைக்கின்றன.

தொல்காப்பியச் செய்யுளியல் குறிப்பிடும் உறுப்புகளோடு சங்கப் பாடல்களைப் பொறுத்திக்காட்டுவதாகத் தி.வே.கோபாலையரின் ‘செய்யுளியலும் யாப்பும்’ கட்டுரை அமைகிறது. சங்க இலக்கியத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள ஆசிரிய உரிச்சீர்கள், அடி, தொடை நலன்கள் ஆகியவற்றிற்குச் சங்க இலக்கிய சான்றுகளைக் காட்டி விளக்கிச் செல்கின்றார். அவ்வாறே சோ.ந.கந்தசாமி அவர்களும் சங்க இலக்கியப் பாவடிவங்களை நேரிசை ஆசிரியப்பா, நிலைமண்டில ஆசிரியப்பா, இணைக்குறள் ஆசிரியப்பா என வகைபடுத்தி அடையாளங் காட்டியுள்ளார். இரா.இளங்குமரனார் தனது ‘யாப்பியல் கொடை’ கட்டுரையில் சங்கப்பாவியல் எவ்வாறு பிற்கால இலக்கிய வடிவ வளர்ச்சிக்கும் இலக்கண ஆக்கங்களுக்கும் அடிப்படையாக அமைந்தது என்பதைச் சில சான்றுகளோடு விளக்கிச் செல்கின்றார். இவ்வரிசையில் முத்துக்கோவை என்ற ஆய்வுக்கோவையில் தமிழண்ணல் எழுதிய ‘சங்க இலக்கியம் பாட்டும் பொருளும் யாப்பும்’ (1981) என்ற கட்டுரையும் குறிப்பிடத்தக்கது.

இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம் வெளியிட்ட பத்தாவது கருத்தரங்க ஆய்வுக்கோவையில் (1978) அ.பிச்சை எழுதிய ‘சங்க கால ஆசிரியப்பா வகைகள்’ கட்டுரை ஆசிரியப்பாவின் வகைகள் சிலவற்றைக் குறித்துள்ளது. மேலும் பதினெட்டாவது ஆய்வுக்கோவையில் அவர் எழுதிய ‘புறநானூற்று வஞ்சிப்பாக்கள் ஒரு மதிப்பீடு’ (1986) என்ற கட்டுரையும் வெளிவந்துள்ளது. பத்தாவது ஆய்வுக்கோவையில் இடம்பெற்றுள்ள தி. செல்வம் எழுதிய ‘நற்றிணையில் எதுகையும் மோனையும்’ என்ற கட்டுரையும் நற்றிணையின் தொடைநலன்கள் சிலவற்றைக் கண்டு காட்டியுள்ளது.

பொதுவாகத் தமிழ்மொழி, இலக்கியங்கள் குறித்த ஆய்வு நூல்களின் ஒரு பகுதியாகச் சங்கப் பாவியல் பற்றிய கட்டுரைகள் இடம் பெற்றிருக்கின்றன.1972இல் இரா.சாரங்கபாணி எழுதிய ‘பரிபாடல் திறன்’ என்ற நூல் இந்நிலையில் குறிப்பிடத்தக்கது. பரிபாடலை முழுவதுமாக ஆராய்கின்ற இந்நூலானது பரிபாடலின் யாப்பு குறித்தும் பேசுகின்றது. பரிபாடலின் வடிவம் பற்றிய தொல்காப்பிய கருத்துகள், பொருண்மை மாற்றம், உரையாசிரியர்களின் கருத்துகள் ஆகிய செய்திகள் பேசப்பட்டுள்ளன. பரிபாடலின் வடிவம் குறித்து இக்கட்டுரை தொகுத்துள்ள கருத்துகள் வருமாறு,

-              பரிபாடல் என்பது இசைப்பாட்டு. அது இசைக்கருவிகளினுதவியால் பாடுதற்கேற்றது.

-              பல்வேறு வகைப்பட்ட பாக்களையும் தழுவி நிற்கும் நெடும்பாடலாகும்.

-              அகத்திணை பாடுதற்கே உரியதாக இருந்த அப்பாடல் பிற்காலத்துப் புறத்திணையையும் ஏற்றுக் கொண்டது; சமயநெறியும் அதற்கு விலக்கன்று.

-              பாண்டிநாட்டில் மட்டும் இப்பாடல் வழக்காற்றில் இருந்தது. பாண்டியர்கள் பரிபாடற் புலவர்களை இனிது புரந்தனர்.(1972:36)

பரிபாடல் குறித்த பிற்கால ஆய்வுகளனைத்திற்கும் இக்கருத்துகளே அடிப்படைகளாக அமைந்திருக்கின்றன. 1985இல் வெளியான மு.வரதராசனாரின் ‘காலந்தோறும் தமிழ்’ என்ற நூலில் இடம்பெற்ற ‘சங்க இலக்கிய யாப்பு’ கட்டுரை கவனத்திற்குரியது. இக்கட்டுரை சங்கப் பாவியலுள் கலி, பரிபாட்டு, அகவலோசை, தொடைநலன்கள் ஆகியவை பயின்றுள்ள முறை குறித்த சில குறிப்புகளைத் தருகின்றது. நாட்டார் பாடல்களின் சாயல் சங்கப் பாடல்களில் இருக்கின்ற முறைமையையும் எடுத்துரைக்கின்றது. 1989 இல் வெளிவந்த சோ.ந.கந்தசாமியின் தமிழ் யாப்பியல் தோற்றமும் வளர்ச்சியும் என்ற நூலின் முதல்பாகத்தின் முதல் பகுதி சங்க இலக்கியப் பாவியலை விரிந்த நிலையில் ஆராய்ந்துள்ளது. தொல்காப்பியச் செய்யுள் உறுப்புகளையும் அவற்றின் பொருத்தப் பாடுகளையும் விளக்கியுள்ளது. தனித்தனியாகத் தொகை நூல்கள் ஒவ்வொன்றிலும் இடம்பெற்றிருக்கும் ஆசிரியப்பா வகைகளை நிரல்படுத்தித் தருகின்றது. மேலும் புறநானூறு, பதிற்றுப்பத்து, பத்துப்பாட்டு ஆகிய தொகுதிகளில் பயின்றிருக்கும் வஞ்சியடிகள், வஞ்சிப்பா குறித்தும் விரிவாக விவாதிக்கின்றது. சங்க இலக்கியத்தின் வடிவம் சார் ஆய்வுகளுள் மொழியியல் அறிஞர்களின் பங்களிப்பும் கவனத்திற்குரியன. செ.வை.சண்முகத்தின் கவிதைக் கட்டமைப்பு(2003), யாப்பும் நோக்கும் (தொல்காப்பியரின் இலக்கியக் கோட்பாடுகள்) (2006) ஆகிய நூல்கள் பகுதிநிலையில் சங்கப் பாவியலை மொழியியல் அணுகுமுறையில் ஆராய்ந்துள்ளன. கவிதைக் கட்டமைப்பில் இடம்பெற்றுள்ள ‘ஔவையாரின் கவிதை மொழி’ கட்டுரை மிகவும் குறிப்பிடத்தக்கது. தொல்காப்பிய உரைகாரர்கள், சங்க இலக்கிய பதிப்பாசிரியர்கள், ஆய்வாளர்கள் பலரால் ஆய்வு செய்யப்பட்டுள்ள புறநானூற்றின் ஔவையார் பாடிய ‘சிறியகட் பெறினே எமக்கீயும் மன்னே’ என்று தொடங்கும் பாடலின் வடிவமைப்பினை மொழியியல் அடிப்படையில் அடியும் வாக்கியமுமாகப் பகுத்தாராய்ந்துள்ளார். அப்பகுதி வருமாறு,

235ஆம் புறப்பாடலைச் சாமிநாதையர் 20 அடியாகவும் யாப்பருங்கல விருத்தியார் 21 அடியாகவும் யாப்பருங்கலக்காரிகை உரையாசிரியர் 26 அடியாகவும் கொண்டுள்ளார்... இங்குச் சாமிநாதையர் 20 அடி பாடலாகக் கொண்ட வடிவத்தை அடிப்படையாகக் கொண்டு அதன் அமைப்பு ஒழுங்கை அறிவதற்கு முயலுவோம்...

சிறியகட் பெறினே எமக்கீயு மன்னே

பெரியகட் பெறினே

யாம்பாடத் தான்மகிழ்ந் துண்ணு மன்னே

சிறுசோற்றானு நனிபல கலத்தன் மன்னே

பெருஞ் சோற்றானு நனிபல கலத்தன் மன்னே (5)

என்பொடு துடிபடு வழியெல்லா மெமக்கீயு மன்னே

அம்பொடு வேனுழை வழியெல்லாந் தானிற்கு மன்னே

நரந்த நாறு தன்கையாற்

புலவு நாறு மென்றலை தைவரு மன்னே

அருந்தலை யிரும்பாண ரகன்மண்டைத் துளையுரீஇ (10)

இரப்போர் கையுளும் போகி

புரப்போர் புன்கண் பாவை சோர

அஞ்சொனுண் டேர்ச்சிப் புலவர் நாவிற்

சென்றுவீழ்ந் தன்றவன்

அருநிறத் தியங்கிய வேலே (15)

ஆசா கெந்தை யாண்டுளன் கொல்லோ

இனிப் பாடுநரு மில்லைப் பாடுநர்க்கென் றீகுநரு                                                                              யில்லை

பனித்துறை பகன்றை நறைக்கொண் மாமலர்

சூடாது வைகியாங்கு பிறாக்கொன்

றீயாது வீயு முயிர்த்தவப் பலவே (20)

பாட்டின் அடியின் பண்பை (சீர் எண்ணிக்கை) அறிந்து கொள்ள முதலில் பாட்டின் தொடரமைப்பையும் சீரமைப்பையும் பொருளையும் தெரிந்து கொள்வது அவசியம். இதில் 11 வாக்கியங்கள் (எளிய வாக்கியங்களும், கலவை வாக்கியங்களும், கூட்டு வாக்கியங்களும்)உள்ளன. எனவே அடிக்கும் வாக்கியத்துக்கும் உள்ள தொடர்பைப் பார்ப்போம்.

முதல் கலவை வாக்கியம் -           1அடி

2வது கலவை வா.   -              2 அடி (2-3 அடிகள்)

3-6 வது எளிய வா.   -              ஒவ்வொரு அடி (4-7)

7வது எளிய வா.       -              2அடி (8-9வது)

8வது கலவை வா.   -              6 அடி

                                                            (10-15) 3வி.எ.தொ

                                                            - 3அடி, ஏ.வே.தொ

9வது எளிய வா.       -              1(16)

10வது கூட்டுவா.      -              1(17)2 வாக்.

11வது கலவைவா.  -              3(18-20)செ.பொ.தொ

                                                            -1,விஎதொ (42-45)

யாப்பு அடிப்படையில் அடிக்கும் சீருக்கும் மொழியியல் அடிப்படையில் வாக்கியத்துக்கும் உள்ள தொடர்பினை இனங்காட்டுவதாக இக்கட்டுரை அமைந்துள்ளது. இப்பின்புலத்தில் இதுகுறித்து மேலும் ஆராய்வதற்கான தேவையுள்ளது.

தமிழ் யாப்பியல் குறித்த ஆய்வுகளுள் முனைவர் பட்டத்திற்காக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் கணிசமான இடத்தினைப் பெறுகின்றன. தமிழ் யாப்பியல் குறித்து முதன்முதல் மேற்கொள்ளப்பட்ட முனைவர் பட்ட ஆய்வு அ.சிதம்பரநாத செட்டியாரின் ‘Advanced Studies in Tamil Prosody’ (1943) இவ்வாய்வு தமிழில் ‘தமிழ் யாப்பியல் உயராய்வு’ என்று மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு நூலாக வெளிவந்துள்ளது. இந்நூலின் ஒருபகுதியாகச் சங்க இலக்கிய வடிவம் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.

சங்க மரபு குறித்து மேற்கொள்ளப்பட்ட தமிழண்ணலின் ஆய்வேடு Tradition and Talent in Cankam Poetry  (1969) என்பதாகும். இவ்வாய்வேடு தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு 2009இல் நூலாக்கம் பெற்றுள்ளது. இவ்வாய்வேட்டின் ஒரு பகுதி ‘தொல்காப்பியமும் சங்கச் செய்யுள் மரபுகளும்’ என்பது. இப்பகுதியில் தொல்காப்பிய செய்யுள் வடிவ மரபுகளோடு சங்கச் செய்யுள் வடிவ மரபுகளை ஒப்பிட்டு ஆராயப்பட்டுள்ளது. அன்னிதாமசின் Tamil prosody through the ages  (1974) என்னும் பொருண்மையிலான முனைவர் பட்ட ஆய்வேடும் பகுதி நிலையில் சங்கயாப்பியலைப் பேசுகின்றது. இவ்வாய்வேடு நூலாக்கம் பெறவில்லை.

1980இல் சமர்ப்பிக்கப்பட்ட அ.பிச்சை அவர்களின் ‘சங்க இலக்கிய யாப்பியல்’ என்ற முனைவர் பட்ட ஆய்வேடானது முதன்முதல் சங்க இலக்கிய வடிவத்தினை முழுமைநிலையில் ஆராய்ந்துள்ளது. இவ்வாய்வேடு 2011இல் நூலாக்கம் பெற்றது. இவ்வாய்வு யாப்பியல், சங்கப் பாவடிவங்களின் தோற்றம், விளக்கவியல் நோக்கில் சங்கயாப்பு, வரலாற்று நோக்கில் சங்க யாப்பு, ஒப்பியல் நோக்கில் சங்க யாப்பு என ஆய்வியல் அணுகுமுறைகளின் அடிப்படையில் சங்க இலக்கியப் பாவியலைப் பகுத்து ஆராய்ந்துள்ளது. அகவலே தொல் தமிழ்யாப்பு என்ற கருத்தினை இவ்வாய்வு ஆழமாக முன்னெடுக்கின்றது.

சமுதாயப் பின்னணி - பா ஆக்கமுறை - பாடுபொருள் ஆகியவற்றின் அடிப்படையில் பாவடிவங்களை நோக்குவோமானால் முதலில் ஆசிரியமும் இரண்டாவதாக வஞ்சியும் மூன்றாவதாகக் கலிப்பாவும் நான்காவதாக வெண்பாவும் தோன்றியிருக்க வேண்டும். சமய உணர்வும், குழுத்தலைவனை வாழ்த்தும் தன்மையும் கொண்ட இனக்குழுச் சமுதாயத்தில் அகவல்தான் தோன்றியிருக்கக்கூடும். இதுவே பா ஆக்கத்தில் எளிமையானது. எந்தவிதமான அதிகமான கட்டுப்பாடுகள் இல்லாத பா அகவற்பாவாகும். (2011:66)

மேலும் அகவலே தொல் திராவிட யாப்பாக இருப்பதற்கும் வாய்ப்புள்ளது (2011:67) என்கிறார். இக்கருத்து மேலாய்விற்குரியது. 1989 இல் வெளியான பா.வீரப்பனின் ‘சங்க இலக்கிய நடை’ என்னும் முனைவர் பட்ட ஆய்வேட்டின் நூலாக்கமும் குறிப்பிடத்தக்க முயற்சியாக உள்ளது. இந்நூலில் இவர் மேலைநாட்டுப் பின்புலத்தில் வடமொழி நடையியல் கருத்துகளைக் கவனத்தில் கொண்டு தொல்காப்பியர் குறிப்பிடும் உறுப்புகளுடன் பொருத்தி சங்கப் பாவியலின் நடையியலை மூன்றாகக் கட்டமைக்கிறார். அவற்றுள் முதலில் அமைவது ஒலிக்கூறுகள்: யாப்பும் ஒலியும், தொடைக்கூறுகள்: ஓசை, வண்ணம், ஒலிக்குறிப்புச் செய்திகள் என்பதாகும். பத்துப்பாட்டின் தொடைக்கூறுகளை முழுமை நிலையில் ஆராய்ந்துள்ளார். மேலும் பத்துப்பாட்டு, தோல் என்ற தொல்காப்பிய வனப்போடு பொருந்துவதையும் விவரிப்பு நடையில் (Descriptive Style) அமைந்துள்ளதையும் விவாதிக்கிறார்.(1989:42)

2014ஆம் ஆண்டு வெளியான கன்னியம் அ.சதீஷின் ‘தமிழ் யாப்பு மரபுகள் புறநானூற்று யாப்பியல்’என்ற அவர்தம் முனைவர் பட்ட ஆய்வேட்டின் நூல் வடிவம், சங்க இலக்கிய வடிவம் குறித்த ஆய்வுகளில் புதிய வகைமாதிரியை உருவாக்குவதாக அமைந்துள்ளது. முதலில் தமிழ் யாப்பியலின் பண்டைய, பிந்தைய மரபுகளின் வளர்ச்சிகளை ஆராய்ந்து விட்டுப் புறநானூற்று யாப்பியல் பண்டைய இலக்கியத்திற்குச் சான்றாகவும் பிந்தைய வளர்ச்சிக்கான மூலக்கூறாகவும் விளங்குவதனை இவ்வாய்வு எடுத்துக்காட்டுகின்றது. புறநானூற்றுப் பாவியல்: ஆசிரியம், புறநானூற்றுப் பாவியல்: வஞ்சி ஆகிய பதிவுகள் இதுவரை புறநானூற்றுப் பாடல் வடிவங்கள் குறித்து அறிஞர்கள் கூறியுள்ள கருத்துகளையெல்லாம் தொகுத்து அவற்றுள் பொருந்துவனவற்றையும் பொருந்தாதனவற்றையும் சான்றாதாரங்களோடு நிறுவுகின்றது. புறநானூற்றுத் தொடைநலன்கள்: எதுகை, புறநானூற்றுத் தொடைநலன்கள்: மோனை ஆகிய இரண்டு இயல்களும் தொடை இலக்கண வளர்ச்சியில் புறநானூற்றின் இடம் குறித்து விவாதிக்கின்றன. இவ்வாய்வானது இதே அணுகுமுறையில் பிற தொகுப்புப் பனுவல்களை ஆராய்வதற்கு வழிவகை செய்துள்ளது.

புறநானூற்று யாப்பியலைத் தொடர்ந்து 2016ஆம் ஆண்டு வெளியான மு.கஸ்தூரியின் ‘பத்துப்பாட்டு யாப்பியல்’ என்ற அவருடைய முனைவர் பட்ட ஆய்வேட்டின் நூலாக்கமும் குறிப்பிடத்தக்கதொன்று. புறநானூற்று யாப்பியல் ஆய்வினைப் பின்பற்றி பத்துப்பாட்டின் யாப்பியலை மு.கஸ்தூரி ஆய்வுக்குட்படுத்தியுள்ளார். ஆய்வின் தொடக்கம் பண்டைய மரபுகள் என்றில்லாமல் தொல்காப்பிய செய்யுளியலை மையப்படுத்தி ‘தொல்காப்பியச் செய்யுளியலும் பிந்தைய யாப்பு மரபுகளும்’ என்றவாறு அமைக்கப்பட்டுள்ளது. பத்துப்பாட்டின் அசை, சீர், தளை, அடி, தொடை, பா, தூக்கு என அனைத்துக் கூறுகளும் தொல்காப்பிய விதிகளுக்கிணங்க அமைவதனைச் சான்றுகளோடு நிறுவுகின்றார்.

சீர்பிரித்தல் முறையில் பொருளோடு பிரிக்கின்ற முறையே அனைத்து இலக்கணிகளாலும் கைகொள்ளப்பட்டு வந்துள்ளதனை இலக்கண உரைகளின் வழி எடுத்துக்காட்டியுள்ளார். பிற்காலத்தில் பெருவழக்காகக் கடைபிடிக்கப்படும் வகையுளி பிரிப்பினை இலக்கணங்கள் சுட்டவில்லை என்பதனை ஆய்வாளர் தனது ஆய்வு முடிவாக முன்வைத்துள்ளார். மூன்று வகை அசைபிரிப்பு முறைகளை இந்நிலையில் இவர் கைகொள்கிறார். ஒன்று தொல்காப்பியர் வகுத்த நேர், நிரை, நேர்பு, நிரைபு அசைபிரிப்பு, இரண்டாவது காக்கைபாடினிய மரபுவழி வந்த நேர், நிரை அசை பிரிப்பு, மூன்றாவது தற்போது நடைமுறையிலுள்ள வகையுளி அசை பிரிப்பு. இவற்றுள் தொல்காப்பியம் சுட்டியுள்ள அசைவகைபிரிப்பு முறையே பத்துப்பாட்டில் பொருந்துகின்றது என்கிறார் ஆய்வாளர். பொருநராற்றுப்படையில் வஞ்சியடிகளில் பயின்றுள்ள சீர் குறித்து இவர் முன்வைத்துள்ள கருத்துகள் மேற்கொண்டு ஆராயத்தக்கதாக உள்ளன. அக்கருத்துகள் வருமாறு,

பொருநராற்றுப்படையின் வஞ்சியடிகளில் இடம்பெற்றுள்ள நாலசைச்சீரைத் தொல்காப்பிய நெறிப்படி அலகிடுகையில் உகர ஈற்றில் அமைந்த நேர்பு, நிரைபிலான ஆசிரியவுரிச்சீர் வகையிலுள் அடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தொல்காப்பிய நெறிப்படி அலகிடும்போதும் நாலசைச்சீராகவே அமையும் அவ்வடிகள் வருமாறு,

நனைஞாழலொடு மரங்குழீஇய (பொருநர்.197)...

இவ்வடிகளில்இடம்பெற்றுள்ள நனைஞாழலொடு (நனை+ஞா+ழ+லொடு)...தொல்காப்பிய நெறியில் அலகிடும்போது நாலசைச்சீராக அமைந்துள்ளது. தொல்காப்பியர் நாலசைச்சீர் பற்றிக் குறிப்பிடாத நிலையில் பிற்கால மரபில் நாலசைச்சீர் பயில்வதற்கு அடிப்படை சான்றாகப் பொருநராற்றுப்படையின் வஞ்சியடிகள் விளங்குவதாகக் குறிப்பிடலாம். வஞ்சியடி முச்சீரானும் வரும் என்று தொல்காப்பியம் குறிப்பிட்டுள்ளதால் இவ்வடிகளை முச்சீராடியாகக் கொள்வதன் மூலம் நாலசைச்சீர் இடம்பெறுவதைத் தவிர்க்கலாம். எனவே இவ்வடிகளை

நனைஞா ழலொடுமரங் குழீஇய (பொருநர்.197)(2016:230-231)

...

பத்துப்பாட்டின் அனைத்துச் சீர்களிலும் பொருளோடு அசைபிரிப்பு முறை பொருந்துகின்ற போது நாலசைச்சீரினைத் தவிர்ப்பதற்காக இவ்விடத்தில் மட்டும் வகையுளி அசைபிரிப்பு முறையினை பொருத்த வேண்டியதன் அவசியம் என்ன? ‘நனைஞாழலொடு’ என்கிற சீரினை ஆய்வாளர் குறித்துள்ள பிந்தைய மரபின்படி அலகிட்டால் (நனை+ஞா+ழ+லொடு) புளிமாந்தண்ணிழல் என்ற வாய்பாட்டில் நான்கசைச் சீராகவே அமைகின்றது. நச்சினார்க்கினியர் தனது உரைப்பகுதியில் இச்சீரினை ‘நனைஞாழ லொடு மரங்குழீஇய’ என்று அசைபிரித்துள்ளமையும் இங்குக் கவனத்திற்குரியது. ஒடு என்பதனை வேற்றுமை உருபாகக் கொண்டு ‘நனைஞாழ(ல்) (ஒ)லொடுமரங் குழீஇய’ என்று அசைபிரிக்கும்போது பொருளும் சிதையாமல் சீர்பிரிக்க முடிகின்றது. எனவே ஆய்வாளர் பயன்படுத்திய வகையுளிப் பிரிப்பினைக் கொள்ளாமல் சீர்பிரித்தல் இங்குச் சாத்தியமாகின்றது. எவ்வாறிருப்பினும் தொல்காப்பிய விதிகளை உரைகாரர்கள் போன்று வலிந்து பொருத்தாமல் பனுவலை அதன் இயல்பிலேயே இயங்கவிடுவதும் அவசியம். எனவே இவ்வடியினை இரண்டு சீர்களாலான வஞ்சியடியாகவும் நனைஞாழலொடு என்பதனை நான்கசைச் சீராகவும் கொள்வதே சிறப்பு.

சங்க இலக்கியம் குறித்த பிறமொழி அறிஞர்களின் ஆய்வுகள் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தவை. 1985இல் வெளியான ஜான் மார் எழுதிய Eight Anthologies, சங்கத்தொகையாக்கம் குறித்து விரிவாகப் பதிவு செய்துள்ளது. Prosody in the Eight Anthologies  என்ற பகுதியில் எட்டுத் தொகை பனுவல்களின் வடிவத்தைச் செய்யுள் உறுப்புகளின் அடிப்படையிலும் பாக்களின் அடிப்படையிலும் ஆராய்ந்துள்ளது. அகவற்பாவின் வடிவநேர்த்தி குறித்து ஜான்மார் முன்வைக்கும் கருத்து தமிழ் யாப்பியலில் குறிப்பிடத்தக்கதாக அமைகின்றது. அக்கருத்து வருமாறு,

In Aciriyam the metre of most of the anthology - poems, it will be found that in most poems there are three feet only. This applies whatever the length of the poem, and it may be suggested that this shortened line gave, in the course of oral recitation, the sign of the approaching end of the poem (1985:446)

எத்தனை அடி பாவாக இருப்பினும் ஈற்றயலடி முச்சீராக அமைவது ஆசிரியப்பாவின் சிறப்பாக இருக்கின்றது. வாய்மொழி மரபின் தாக்கத்தில் பாடல் முடிவடைவதை உணர்த்தவதற்கு இந்த முச்சீரடிகள் உதவுகின்றன என அகவற்பாவின் வடிவ நேர்த்தியினை சிறப்பாக இனங்கண்டுள்ளார்.

1973 இல் கமில் ஸ்வலெபில் எழுதிய The Smile of Murugan on Tamil Literature of South India  நூல் தமிழ் இலக்கிய ஆராய்ச்சி வரலாற்றில் குறிப்பிடத்தகுந்த நூலாகும். இந்நூலின் ஐந்தாவது இயல் Analyzing Classical Poetry  சங்கப் பாவியல் குறித்துப் பேசுகின்றது. சத்தினாதரின் குறுந்தொகை 119ஆவது பாடலை எடுத்துக்காட்டி அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு பாவடிவம், தொடை நலன்களின் பயில்வு, ஒலிப்பு முறை குறித்துக் கமில்ஸ்வலெபில் விவாதித்துள்ள கருத்துகள் சங்க இலக்கியத்தின் மீது அவர் கொண்டிருந்த ஆழமான வாசிப்பினை உணர்த்துகின்றது. பாடலின் தமிழ் வடிவமும் கமில்ஸ்வலெபிலின் ஆய்வுப்பகுதியும் வருமாறு,

சிறுவெள் ளரவி னவ்வரிக் குருளை

கான யானை யணங்கி யாஅங்

கிளையள் முளைவா ளெயிற்றள்

வளையடைக் கையளெம் மணங்கி யோளே

In Literal translation, this means:

little - white - snake of lovely - striped young body

jungle elephant troubling like

the young girl sprouts brightness toothed female

bangle(s) possessing hand(s) female

In A.K.Ramanujan‚s charming translation:

As a little white snake

with lovely stripes on its young body

troubles the jungle elephant

this slip of a girl

her teeth like sprouts of new rice

her wrists stacked with bangles

troubles me (The Interior Landscape, 1967)

The Prosodic pattern is as follows:

= - / = - / - = / = -

- - / - - / = - / - -

= - / = - / = -

= = / - =/ = - / - -

we observe in this stanza four lines of four reet, the penultimate line has three feet; the metre contains only feet of two metical units (acai) each, of the pattern = -, - =, - - and = =; these feet are called ir acai cir “two - unit - feet”. The metre is therefore akaval or aciriyam.

as for the totai there is e.g.a etukai or consonance between the 3rd and 4th line (i/l/aiyal-/va/l/ai) and there is e.g. a monai or alliteration in the 2nd line: /y/anai /y/ ananki /y/aan(ku).

now for the phonaesthetic analysis: almost all consonants belong to the nasal (so called mellinam) or liquid (itaiyinam) series; the most favoured is the retroflex liquid l which occurs 8 times the occlusive are rare: c occurs only once, there is no t, k as a tense stop occurs only 3 times. This consonantal structure of the stanza results in a soft, mellifluous, liquid effect, like the murmur of a mountain stream.(1973:67)

மெல்லின எழுத்துகளாலும் இடையின எழுத்துகளாலும் ஆன இப்பாடல் மலைச்சாரலின் இனிமையைத் தருவதாகக் கமில்ஸ்வலெபில் குறித்திருப்பது சங்க இலக்கியத்தின் மீதான அவர்தம் ஈடுபாட்டினை உணர்த்துகின்றது. இவருடைய Classical Tamil Prosody: An Introduction  (1989) நூலானது தனித்த நிலையில் சங்கப் பாவியலை அறிமுகப்படுத்துவதாக அமைந்துள்ளது. கட்டுரைப் பதிவுகள் என்று பார்க்கும்போது ஜார்ஜ் எல் ஹார்டின் The Poems of Ancient Tamil: Their Milieu and Sanskrit Counterparts  (1975) நூலின் ஒரு பகுதியாக சங்கப் பாவியல் குறித்த கருத்துகளும் உள்ளன. சங்க இலக்கிய வடிவங்களைச் சமசுகிருத மரபுகளோடு ஒப்பிடுவதாக இவ்வாய்வு அமைந்துள்ளது. ஆங்கிலத்தில் வெளிவந்துள்ள இவ்வாய்வுகள் சங்க இலக்கியத்தின் வடிவ நேர்த்தியை பிறமொழி ஆய்வாளர்களுக்குக் கொண்டு சேர்ப்பனவாக இருக்கின்றன. 1995இல் Susumu Ohno â¿Fò Prosody of Sangam and Japanese, Tangain 5-7-5-7-7- syllable meter  என்ற கட்டுரை சங்க யாப்பிற்கும் ஜப்பானிய யாப்பிற்குமான ஒற்றுமைகளை விளக்குவதாக அமைகின்றது.

மேற்குறித்த ஆய்வுகளைத் தொகுத்து நோக்கும்போது சங்க இலக்கிய வடிவம்சார் ஆய்வுகள், வரலாற்று அடிப்படையிலானவை; குறிப்பிட்ட பனுவல் சார்ந்தவை; குறிப்பிட்ட பாவடிவங்களின் பயில்தன்மை சார்ந்தவை;தொடை நலன்களை விவரிப்பவை; ஒப்பீட்டு நோக்கில் சங்கப் பாவியலை பிற மொழி யாப்பியலோடு ஆராய்பவை என்ற நிலையில் அமைகின்றன. ய.மணிகண்டன் அவர்களின் கருத்தோடு இக்கட்டுரையினை நிறைவு செய்யலாம்.

யாப்பாய்வுக் களத்தில் முதன்மையான புள்ளிகளில் தொடர்ந்து ஆய்வுகள் நிகழ்த்தப்பெற்று வந்துள்ளன. எனினும் இசைப்புலமை, மொழியியற் புலமை, பிறமொழிப்புலமை அடிப்படையில் ஆய்வுகள் மேம்பட வேண்டிய நிலையில் யாப்பியற் களம் காட்சிதருகின்றது. இவையன்றியும் தமிழ் யாப்பியல் மேலும் பல முனைகளில் ஆழமான ஆய்வுகள் நிகழ்த்தத்தகு களமாகவே தொடர்ந்து விளங்குகின்றது. (2007:456)

சங்க இலக்கியம் - வடிவம் தொடர்பான ஆய்வுகள், ஆய்வுகளை ஒருபகுதியாகக் கொண்ட நூல்கள், கட்டுரைகள் அடைவு நூல்கள்

1972      இரா.சாரங்கபாணி, பரிபாடல் திறன், மணிவாசகர் நூலகம், சிதம்பரம்.

1973 The Smile of Murugan on Tamil Literature of South India, Leiden, E.J. Brill.

1974 Annie Mrithulakumari Thomas, Tamil prosody through the ages, Ph.D.Dissertation, Kerala University, Trivandrum  (ஆய்வேடு).

1989      சோ.ந.கந்தசாமி, தமிழ் யாப்பியலின் தோற்றமும் வளர்ச்சியும், முதற்பாகம் முதற்பகுதி, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.

1989      KamilV.Zvelebil, Classical Tamil Prosody: An Introduction, New era Publication,Madras.

1989      பா.வீரப்பன், சங்க இலக்கிய நடை, பூவழகி பதிப்பகம், சென்னை.

2003      செ.வை.சண்முகம், கவிதைக்கட்டமைப்பு, மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம்.

2006      செ.வை.சண்முகம், யாப்பும் நோக்கும் (தொல்காப்பியரின் இலக்கியக் கோட்பாடுகள்), மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம்.

2007      கார்த்திகேசு சிவத்தம்பி, தமிழின் கவிதையியல், குமரன்புத்தக இல்லம், கொழும்பு, சென்னை.

2009      அ.சிதம்பரநாதனார், தமிழ் யாப்பியல் உயராய்வு, இராம.குருநாதன் (மொ.ஆ.),விழிகள் பதிப்பகம், சென்னை.

2009      தமிழண்ணல், சங்க மரபு, மீனாட்சி புத்தக நிலையம், மதுரை

2009      கார்த்திகேசு சிவத்தம்பி, சங்க இலக்கியக் கவிதையும் கருத்தாக்கமும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,சென்னை.

2011      அ.பிச்சை, சங்க இலக்கிய யாப்பியல், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.

2012      கார்த்திகேசு சிவத்தம்பி, தொல்காப்பியமும் கவிதையும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.

2014      அ.சதீஷ், தமிழ் யாப்பியல் மரபுகள் புறநானூற்று யாப்பியல், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.

2016 மு.கஸ்தூரி, பத்துப்பாட்டு யாப்பியல், சந்தியா பதிப்பகம், சென்னை.

கட்டுரைகள்

1898      T.Virabadra Mudaliar, The Kalittokai Metres, The Light of Truth or Siddhanta Deepika, Vol.II.No.6, p.130-131

1960      மூ.இராமகிருட்டினன், புறநானூறும் அதன் இலக்கணமும், தமிழ்ப்பொழில், துணர் 36, மலர் 8.

1974      மா. இளையபெருமாள், புறநானூற்றுப் பாடல்களில் கூன், ஆய்வுத் தொகை, சுப்பிரமணியன், ச.வே., (தொ.ஆ.), கேரளப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைப் பழைய மாணவர் மன்ற ஆண்டு வெளியீடு.

1975      George L.Hart III The Poems of Ancient Tamil, University of California Press, London.

1978      தி.செல்வம், நற்றிணையில் எதுகையும் மோனை, பத்தாவது கருத்தரங்கு ஆய்வுக்கோவை, அகத்தியலிங்கம்,ச., ஞானமூர்த்தி,தா.ஏ. (ப-ர்), இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம், அண்ணாமலைநகர், சிதம்பரம்.

1981      தமிழண்ணல், சங்க இலக்கியம்: பாட்டு வடிவமும் யாப்பும், முத்துக்கோவை, இளஞ்சேரன், கோவை.(ப.ஆ.), தமிழகப் புலவர் குழு வெளியீடு, திருச்சிராப்பள்ளி.

1983      அ.பிச்சை, சங்க கால ஆசிரியப்பா வகைகள், பதினைந்தாவது கருத்தரங்கு ஆய்வுக்கோவை, அகத்தியலிங்கம்,ச., ஞானமூர்த்தி, தா.ஏ., சண்முகம், செ.வை., சுந்தரம், மெ.(ப-ர்), இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம், அண்ணாமலைநகர், சிதம்பரம்.

1985      J.R.Marr, Prosody in the Eight Anthologies, Eight Tamil Anthologies, Institute of Ancient Studies, Chennai

1986      அ.பிச்சை, புறநானூற்று வஞ்சிப்பாக்கள் ஒரு மதிப்பீடு, பதினெட்டாவது கருத்தரங்கு ஆய்வுக்கோவை, அகத்தியலிங்கம்,ச., ஞானமூர்த்தி, தா.ஏ., சண்முகம், செ.வை., சுந்தரம்,(ப-ர்), இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம், அண்ணாமலைநகர், சிதம்பரம்.

1995      Ohno,Susumu, Prosody of Sangam and Japanese Tangiain - 5-7-5-7-7 syllable meter,  உயராய்வு, சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.

1999      தி.வே.கோபாலையர், செய்யுளியலும் யாப்பும், சங்க இலக்கியம் கவிதையியல் நோக்கு - சிந்தனைப்பின்புல மதிப்பீடு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.

1999      இரா.இளங்குமரன், யாப்பியல் கொடை, சங்க இலக்கியம் கவிதையியல் நோக்கு - சிந்தனைப்பின்புல மதிப்பீடு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.

1999      சோ.ந.கந்தசாமி, யாப்பு, சங்க இலக்கியம் கவிதையியல் நோக்கு - சிந்தனைப்பின்புல மதிப்பீடு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.

1999      அ.சண்முகதாஸ், பாடல் மரபு, சங்க இலக்கியம் கவிதையியல் நோக்கு - சிந்தனைப்பின்புல மதிப்பீடு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.

2008      தி.வே.கோபாலையர், தொல்காப்பியச் செய்யுளியலும் சங்க இலக்கிய யாப்பும், பண்டித வித்துவான் தி.வே.கோபாலையர் கட்டுரைகள் - 1, தமிழ்மண் பதிப்பகம், சென்னை.

உதவிய நூல்கள்

2007      உயராய்வு (ஆய்விதழ்), வீ.அரசு, ய.மணிகண்டன், கோ.பழனி, ஆ.ஏகாம்பர் (ப-ர்), தமிழ் இலக்கியத்துறை, சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.

2012      சங்க இலக்கியம் பன்முக வாசிப்பு, பரிசல் புத்தக நிலையம், சென்னை.

2016      ப.திருஞானசம்பந்தம், ஆய்வுப் பதிவுகள், நெய்தல் பதிப்பகம், சென்னை.

2017      இரா.மோகன் (ப.ஆ.), பேராசிரியர் ம.திருமலையின் ஆய்வுகள், மீனாட்சி புத்தக நிலையம், மதுரை.

- முனைவர் அ.மோகனா

Pin It