இராகுல் சாங்கிருத்தியாயன் பன்முகப் பார்வை கொண்ட சமூகவியல் அறிஞர். ஏழாம் வகுப்பு வரை மட்டுமே பள்ளிக்கல்வியை உருதுமொழி வாயிலாகப் பெற்ற அவர் சமூகவியல் அறிவியலை சுயமாகவே கற்றார். மூன்று டஜன் மொழிகளைக் கற்றுக்கொண்டார். அவருடைய ஐம்பதாண்டுகால இயக்க வாழ்வில், நாற்பதாண்டுகளை நூல்களை எழுதுவதற்கென்றே ஒதுக்கினார்.

134 நூல்களை எழுதியுள்ளார். சிலவற்றை சுயமாக எழுதியுள்ளார்; சில மொழிபெயர்ப்புகள், சில தொகுக்கப்பட்டவை. பெரும்பாலும் இந்தியிலேயே எழுதினார். அயல்நாடுகளில் உள்ள ஆய்வு நிறுவனங்களில் ஆற்றிய சொற்பொழிவுகள் சில ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ளன. கருத்துக்களின் அடிப்படையில் செய்திகளை கோவையாக சேகரிக்கும் நினைவாற்றலைப் பெற்றிருந்தார்.

raghulji 350எழுதத் துவங்கும்போது தம்மைச் சுற்றி எந்த நூலையும், குறிப்புகளையும் வைத்துக் கொள்ளமாட்டார். இந்தியாவில் இருந்தபோதும், அயல்நாடுகளில் வசித்த போதும் பல நூல்கள் எழுதுவதற்கு நேரம் ஒதுக்கிக் கொண்டார். இறப்பிற்கு இரண்டரையாண்டுகளுக்கு முன்பு தம் நினைவாற்றலை இழந்ததால் அவரால் எழுத முடியவில்லை.

சோர்வடையாமல் இராகுல் ஒரு நாளைக்கு 20 மணி நேரம் உழைத்தார். அவருடைய கையெழுத்து தெளிவில்லை என்றாலும் எழுதுவதை நிறுத்தவில்லை. சில சமயம், அவர் சொல்ல பிறர் எழுதினர். ஒரு நூலை எழுதத் துவங்கிய பின் ஒரு மாதமானாலும் கூட வேலை முடிகிற வரையில் செய்தித்தாள்களைக் கூடப் படிக்கமாட்டார். வேலை முடிந்தபின், ஒரு மாதத்திய செய்தித்தாள்கள் முழுவதையும் மூன்றே நாட்களில் படித்து முடித்துவிடுவார். அச்சில் 300 பக்கங்கள் கொண்ட மஜ்ஹிமா நிகயா எனும் நூலை 28 நாட்களுக்குள் இந்தியில் மொழிபெயர்த்தார். சோவியத் ரஷ்யாவைப்பற்றி ஒரே மாதத்தில் 1000 பக்கங்களில் நூல் எழுதினார்.

ஒவ்வொரு நாளும் குறைந்தது 20 பக்கங்களுக்குக் குறையாமல் எழுதிய பின்புதான் காலை உணவிற்குச் செல்வார் என்று சொல்வதுண்டு. ஒருமுறை எழுதியதை அம் மாமனிதர் மீண்டும் ஒருமுறை பார்க்கக் கூட மாட்டாராம். அவர், எழுத்துப் பிழைகளைச் சுட்டிக்காட்டினால் அவையெல்லாம் பதிப்பாசிரியர்களின் வேலை என்று சொல்லி விடுவாராம். புதிதாக வரும் அறிவுத்துறை பற்றி எந்த அளவிற்கு இந்தியில் எழுத முடியுமோ அந்த அளவிற்கு எழுதினால்தான் இந்தியை வளப்படுத்த முடியும் என்று வலியுறுத்திச் சொல்வார். அவர் ஒரு அவசரமான மனிதர். எனவே, எழுதியவற்றை மறுபார்வையிடவும் சரி செய்யவும் நேரம் ஒதுக்க விரும்பியதில்லை.

உலகம் முழுவதும் இராகுலின் சுற்றுப்பயணம் அனைவரும் அறிந்த ஒன்றே. நான்கு முறை திபெத்திற்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். 45000-க்கு அதிகமான மரப்பட்டைச் சுவடிகளைப் பத்திரமாக எடுத்து வந்தார். அவையெல்லாம் பாட்னாவிலுள்ள Bihar Research Society எனும் ஆய்வு நிறுவனத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவை Kanjur கஞ்சூர் Tanjur  தஞ்சூர், எனும் நூல் வகைகளின் முழுத்தொகுப்பாகும். கஞ்சூர் என்பவை புத்தமத நூல்களின் சுவடிகளாகும். தஞ்சூர் என்பவை அவற்றின் மீதான உரைகளாகும். கி.பி. 10-12-ஆம் நூற்றாண்டுகளின் சமஸ்கிருதம் கலந்த ஒரு வகையான கலப்பு மொழியில் எழுதப்பட்ட 80 புத்தமத சுவடிகளைத் திபெத்திலிருந்து கொண்டு வந்தார். அவை அதிமுக்கியமானவை. அப்புத்தமத சுவடிகளில் சில சரியாகப் படிக்கப்பட்டு K . P. ஜெயஸ்வால் என்பவரால் வெளியிடப்பட்டது.

திபெத் மொழியில் 610 சுவடிகள் உள்ளன, அவற்றுள் சில சமஸ்கிருத நூல்களின் மொழிபெயர்ப்பாகும். 1936-இல் இதனை திபெத்திலிருந்து கொண்டுவந்தார். இந்நூல் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட ‘நியாய’ எனும் நூலின் அடிப்படையில் எழுதப்பட்டதாகும். 1936இல் இராகுல் திபெத்திற்குச் சென்று வந்தது ரஷ்யாவின் இந்தியவியல் ஆராய்ச்சியாளரான ஸ்ட்செர்பட்ஸ்கி (Stcherbatsky) அவர்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகப்பட்டது. உடனே K . P.ஜெயஸ்வால் அவர்களுக்கு அக்கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் உலகந்தழுவிய ஒரு மாநாடே நடத்தலாம் என்று எழுதினார். ஆனால், எதிர்பாராதவிதமாக சுதந்திர இந்தியாவில் அறிஞர்களுக்குப் பணம் தருவது போலல்லாமல் இராகுலுக்கு அன்று ரூ. 6000 மட்டுமே வழங்கப்பட்டது. அதுவும் கூட Bihar Research Society தந்தது.

இராகுலின் அறிவுத்தாகம் என்பது தீராத ஒன்றாக இருந்தது. பகுத்தறிவின் மீது அவருடைய ஈடுபாடு உறுதியாயிருந்தது. தொடர்ந்து கேள்வி கேட்பதின் மூலமே அவர் பகுத்தறிவைப் பெற்றார். வைணவத்தில் தொடங்கி, ஆர்ய சமாஜத்திற்கு மாறி, பௌத்தத்தைப் பின்பற்றி, இறுதியாக, மார்க்சியத்திற்கு வந்தார். இயல்பாக இருந்த அவருடைய அறிவாற்றலே அவருக்கு ஆழமான கேள்வி கேட்டு ஆராயும் தன்மையைத் தந்தது. உத்தரப்பிரதேசத்தின் கிழக்குப் பகுதியில் வர்ணமுறையில் சமூகங்களிடையேயான இடைவெளியை மிகவும் இறுக்கமாகக் கடைப் பிடிக்கும் பிராமண சமூகத்தில் அவர் பிறந்ததால் பழமையை வலிமையுடன் எதிர்த்திருக்கலாம்.

19-வயதில் சாப்ரா மாவட்டத்தின் வைணவ மடமொன்றில் துறவு மேற்கொண்டார். கேதார்நாத் பாண்டே என்றும், பிறகு, இரமோதார் தாஸ் என்றும்  அழைக்கப்பட்டார். உழவர் தொடர்பான ஒரு சிக்கல் காரணமாக வட்டாரத்தலைவரின் தலையீட்டினால் அம்மடத்தை விட்டு வெளியேற்றப்பட்டார். தமது 27 ஆம் வயதில் இலங்கை சென்றார். அங்கு பௌத்தரானார். அப்புதிய மதம் அவர் மேல் ஆழமான தாக்கத்தை உண்டாக்கியது. 1939-இல் பொதுவுடைமைக் கட்சியில் சேர்ந்தபோது கூட, பொதுவுடைமைக் கொள்கைகளைக் கௌதம புத்தரின் போதனைகளின் அடிப்படையிலேயே நியாயப்படுத்தினார்.

சமூகமாற்றம் பற்றிய இராகுலின் ஈடுபாடு, பௌத்தத் தத்துவத்தின் மீதான ஆழமான சிந்தனையிலிருந்து தண்டுபோல் முளைத்து, புத்தரின் அறிவுத்தேடல் பற்றிய அவரது கட்டுரையில் “உலகில் எதுவும் நிரந்தரமானதல்ல, அழியாததல்ல, அனைத்தும் மாறும் தன்மையன” எனும் புத்தத் தத்துவத்தை வலியுறுத்தி எழுதச் செய்தது. மேகங்கள் மாறிக்கொண்டே இருப்பது போல் உலகும் மாறிக்கொண்டேயுள்ளது என்று இராகுல் சொன்னார். எனவேதான், புத்தத் தத்துவத்தில் ‘அனத்தா’ எனும் கோட்பாடு, அதாவது, ஆன்மாவை நிராகரிப்பது பெருமை யுடையதாயுள்ளது. மாறுதல் என்பது மார்க்சியக் கொள்கையின் மையமாகும். ஆனால் மார்க்சியம் பருப்பொருளை முதன்மையாகவும் மனதை அதன் அதிகபட்ச வளர்ச்சியாகவும் கருதுகிறது. இது போன்றதொரு தத்துவம் புத்தத் தத்துவத்தில் சொல்லப்படவில்லை. இராகுலின் கருத்துப்படி, பௌத்தத்தின் உச்சகட்ட நிலை என்பது ஹெகலியத்தின் வளர்ச்சி நிலையை ஒத்ததாகும்.

இராகுலின் சமூகப்பார்வை புத்தத் தத்துவத்தால் மட்டுமல்ல பௌத்த சங்கங்களில் கூட்டு வாழ்க்கை முறையாலும் பாதிக்கப்பட்டது. அவரின் கூற்றுப்படி, பௌத்த சங்கங்களின் பொருளாதார, பொதுவுடைமையை அறிமுகப்படுத்தியவர் புத்தரே. சங்கத்தில் உடை, பிச்சைப் பாத்திரத்தைத் தவிர அனைத்தும் பொதுச் சொத்துக்களே. சங்கங்கள் கொடைகளைப் பெறத் துவங்கிய பிறகு அதன் வசிப்பிடங்கள், விளைநிலங்கள், கருவிகள், படுக்கை விரிப்புகள் அனைத்தும் சங்கத்தின் பொது உடைமையாயின. ஆனால், இப்பொருளாதாரப் பொதுவுடைமை கி.மு. 2ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் மாறிவிட்டது என்று வருந்தினார்.

இராகுலை சொகுசாக வாழ்ந்து வெறுமனே பேசிக்கொண்டு திரிந்த அறிவாளி என்று சொல்லமுடியாது. வாழ்க்கை நெடுக ஏதாவதொரு இயக்கத்துடன் தன்னை இணைத்துக் கொண்டிருந்தார். பழமையை பகுத்தறிவினூடாகப் பார்ப்பது என்பதைத் தம் நடைமுறையிலும் பின்பற்றினார். பழமையிலிருந்து பெற்றதாகப் பெருமைப்படுவதையும், மூடப்பழக்கங்களையும் எதிர்த்து தொடர்ந்து போராடினார். இளம் வயதில் விலங்குப் பலியை எதிர்த்துப் போராடினார்.

1920-களிலும் 1930-களிலும் விலங்குப் பலியை எதிர்த்து ஒரு இயக்கமே நடந்தது, என்றாலும் பலியிடுதல் தொடர்ந்தது. அதை எதிர்க்கும் அவருடைய பேச்சுக்காக 1924-26-இல் இருமுறை சிறையிலடைக்கப்பட்டார். அதே சமயம் ஆர்யசமாஜ இயக்கத்தில் முனைப்புடன் பங்கு பெற்றார். பிராமணியப் பழமைத்தனத்தின் கொடுந்தன்மையை வெளிப்படுத்தினார். ஆர்ய சமாஜ்யவாதிகளின் கருத்துகள் சமூக சமநிலைக்கு ஒத்துவரவில்லை என்பதை உணர்ந்தவுடன் 1930இல் பௌத்தரானார். 1930களில் மார்க்சிய சோசலிச கருத்துக்களால் மிகவும் தாக்கப்பட்டு காந்திய வழியில் தேசிய இயக்கத்தைக் கட்டியெழுப்புவதைக் கடுமையாக விமர்சித்தார். ‘ஏன் கம்யூனிசம்’ (Why Communism) என்று இந்தியில் எழுதப்பட்ட அவருடைய நூல் 1934-இல் வெளிவந்தது. அதே காலகட்டத்தில், ஜெயபிரகாஷ் நாராயணன் ‘ஏன் சோசலிசம்’ (Why Socialism) எனும் நூலை எழுதினார்.

இராகுல் பீகாரில் கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவியவர்களில் ஒருவர். 1940-இல் சரன் மாவட்டத்தின் அம்பரி உழவர் இயக்கத்தில்  (Ambari Peasant Movement) பங்குபற்றினார். நிலப் பிரபுக்களால் அபகரிக்கப்பட்ட நிலத்தை மீட்டு உழவர்களுக்குத் தரவே இப்போராட்டம் நடத்தப்பட்டது. போலீசாரால் தாக்கப்பட்டு, தலையில் கடுமையான காயமடைந்தார். 1930-களிலிருந்து இறக்கும் வரையில் இடதுசாரி இயக்கத்தின் முக்கிய ஆதரவாளராயிருந்தார். ஆனாலும், கம்யூனிஸ்ட் கட்சியின் மொழிக் கொள்கையை உறுதியுடன் விமர்சித்தார். பல்வேறு துறைகளுக்குமான இராகுலின் பங்களிப்பை விமர்சனப்பூர்வமாக அளவிடுவது மிகவும் வேலை வாங்கும் பணியாகும். அவர் பங்களிப்பு செய்த துறைகள்: வரலாறு, இலக்கியம், மதம், தத்துவம், பயண இலக்கியம், வாழ்க்கைக் குறிப்பு இலக்கியம், அகராதியியல், பௌத்த சிந்தனை, சமூகவியல் ஆய்வு, அரசியல் சிந்தனை. அவரைப்போல் வேறு எவரும் இது போல் இந்தியில் வெவ்வேறு இலக்கிய வகைகளுக்கு வளம் சேர்த்திருக்கிறார்களா என்று தெரியவில்லை.

இராகுலின் எழுத்துக்களில் சமூகமாற்றம் எனும் கருத்து ஆழமாக வேரோடியிருக்கும். தாம் ஏன் எழுத்தாளராக வேண்டும் என்று விரும்பியதைத் தம் சொற்களாலேயே கூறுகிறார். “1933-இல் நான் ஐரோப்பாவிலிருந்து திரும்பியவுடன் சோசலிசத்தைப் புரிந்து கொள்ளவும், என் நாட்டில் வரலாற்றுப்போக்கு எப்படியிருந்தது என்பதைப் புரிந்துகொள்ளவும் அவ்வுணர்வை மக்களிடம் ஊன்ற வைக்கவேண்டும் என்பதற்காகவும் என் நாட்டின் கதைகளின் வழியே அவற்றைச் சொல்வதற்கு ஒரு நூல் எழுதவேண்டும்.”

இராகுல் ஏதோ எழுதவேண்டும் என்பதற்காக எழுதவில்லை; அவருடைய நோக்கம் நிறைவேறுவதற்காகவே அதைச் செய்தார். அவர் சொன்னது: “பண்டை நாட்களில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை முன்னேற்றத்திற்காக விதந்து பேசலாம். அதன் மூலமாக எழுத்தாளர் படிப்பவரின் மனதில் ஒரு தூண்டுதலை ஏற்படுத்த முடியும். என் நாவல்களிலும், கதைகளிலும் தூண்டுதலுக்கான கூறுகளைக் கண்டுபிடிக்க பெரும் பிரயத்தனம் செய்ய வேண்டியதில்லை. ஏனென்றால், என் எழுத்துக்களின் குறிக்கோள் படிப்பவர் மனதில் சில கொள்கைகளைத் தூண்டிவிட வேண்டும் என்பதே. இக்குறிக்கோள் இல்லையென்றால் எந்த நாவலையும் கதையையும் என்னால் எழுதியிருக்க முடியாது. எனவே என் நண்பர்கள் எதை விளம்பரம் என்கிறார்களோ அதை நான் தேவை என்றே கருதுகிறேன்.”

இராகுல் தம் நாவல்களிலும் கதைகளிலும் மேட்டுக்குடித்தன்மைக்கும் ஆடம்பரத்திற்கும் எதிரான கொள்கைகளையே முன்வைத்தார். எப்போதும் குடியரசியலுக்குச் சார்பாகவும், முடியாட்சிக்கு எதிராகவுமே இருந்தார். அவர் படைப்புகளின் கதாநாயகர்களான  Simha Senapati அல்லது Jaua yaudheya போன்றோர் மேட்டுக்குடி ஆடம்பரத்தின் விழுமங்களை எதிர்ப்பவர்களாகவும் மக்களை மதிக்கும் கொள்கைகளை முன்வைப்பவர் களாகவும் இருந்தனர்; குடியரசிற்கு சார்பாகவே செயல்பட்டனர்.

இராகுல் அனைந்திந்திய முற்போக்கு எழுத்தாளர் இயக்கத்தில் தலையாய பணியினை ஆற்றியுள்ளார். இவ்வியக்கம் இந்தியா முழுவதும் ஒரு மறுமலர்ச்சி தோன்றுவதைக் கட்டியம் சொன்னது. இவ்வியக்கத்தின் தாக்கத்தால் இராகுல் இடைக்கால சித்தாந்தக் கருத்துக்களை முதன்மைப்படுத்தினார். விமர்சனங்களாலும் வரலாற்றாசிரியர்களாலும் புறக்கணிக்கப்பட்ட நிர்குன பள்ளியின் (Nirguna school) சிந்தனையில் வந்த கவிஞர்களை முக்கியப்படுத்திப் பேசினார். இச் சிந்தனைப்பள்ளியின் அறிவுரைகள் அடித்தள மக்கள் மனதில் விழிப்புணர்வைத் தூண்டிவிட்டன. இவ்வியக்கத்தில் சேர்ந்த பெரும்பாலான அடித்தள மக்கள் கைவினைச் சாதியினைச் சேர்ந்தவர்கள்.

இவருடைய படைப்புகள் அனைத்திலும் சமூகமாற்றத்தை விளக்கும் கருத்தான வரலாற்று இயங்கியல் கொள்கையான மார்க்சிய சிந்தனையின் தாக்கம் வலுகொண்டிருந்தது. தம் நூல்களில் இயங்கியல் கொள்கையின் கருத்துக்களை லாகவமாகச் சொல்லியிருப்பார். இத்தத்துவம் இந்திய வாசகர்களிடையே பரவலானது. இவ்வடிப்படையான கருத்துச் சார்பு வெவ்வேறு துறை சார்ந்த அவரின் அனைத்து வகைப் படைப்புகளிலும் (வரலாறு, வரலாற்றுக் கதைகள், தத்துவம், இலக்கியம் இன்னும் பிற) பிரதிபலித்தன.

அவரின் பிரதானமான வரலாற்றுப் படைப்பு மத்திய ஆசியாவைப் பற்றியது. மத்திய ஆசிய வரலாற்றை இரு தொகுதிகளில் எழுதினார். அரசியல் வரலாற்றின் பொதுவான பின்னணியில் இனம், சமூகம், பொருளாதாரம் மற்றும் பண்பாட்டு மாற்றங்களை விளக்குகிறார். மத்திய ஆசிய வரலாற்றை மறுகட்டமைப்புச் செய்வதில் நாட்டுப்புற மரபுகளையும் பழமைக்கு எதிரான சான்றுகளையும் பயன்படுத்தினார். பழங்கால வரலாற்றில் நிகழ்ந்த சமூகமாற்றங்களை விளக்குவதற்கு இந்தியில் அவர் எழுதிய ‘வால்கா முதல் கங்கை வரை’எனும் நூல் மிக முக்கியமானது. வால்கா நதி தீரத்தில் ஆரியர்களின் தோற்றத்தைப் பற்றி இந்நூல் பேசுகிறது.

ஆரியர்களின் இந்தியக் குடியேற்றத்தையும், மனித சமூகம் தாய்வழிச் சமூகத்திலிருந்து முதலாளித்துவ சமூகத்திற்கு வந்தது வரையான வளர்ச்சியைப் பற்றியும் இது பேசுகிறது. இந்நூலின் இந்திய வரலாறு இருபது கதைகளில் சொல்லப்பட்டுள்ளது. இந்நூல் இந்தியில் மட்டுமல்லாமல் பலமொழிகளிலும்  - குறிப்பாக, தமிழ், வங்கமொழிகளிலும் பல பதிப்புகள் பெற்றன. கடந்த நாற்பது ஐம்பது ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வுகளின் முடிவுகள் இந்தோ - ஐரோப்பியர்கள் தென் ரஷ்யாவில் வால்கா நதி தீரத்தின் ஸ்டெப்பி புல்வெளிகளில் வசித்து வந்தார்கள் எனும் கருதுகோளிற்கு வலு சேர்க்கிறது. குதிரை, சகடைத் தேர்கள் (wheeled charriots) பலியிடப் பட்ட குதிரைகளின் எச்சங்கள், ஆடு, மாடுகள்,  எரிந்த பின் புதைக்கும் வழக்கம், தீ வழிபாடு இவையெல்லாமே கி.மு. 4000 - 2000 காலகட்டத்தைச் சார்ந்தவை.

இவ்வனைத்துக் கூறுகளும் தென் ரஷ்யாவிலிருந்து மத்திய ஆசியா வரையிலான நிலப்பரப்பில் கண்டுபிடிக்கப்பட்ட வரலாற்று அடையாளங்களாகும். இவையனைத்தும் இந்தோ - ஐரோப்பியர்களுடன் தொடர்புடையன. முக்கிய மாக, சடங்குகளில் விலங்குகள்(நாய் உள்பட) கொல்லப்படுவது இந்தோ - ஈரானியரின் தனித்த பண்பாடு ஆகும். கி.மு. 4000 - 2000 காலகட்டத்தைச் சார்ந்த தென் ரஷ்யாவில் கண்டுபிடிக்கப்பட்ட புதைகுழிகள் ஆணாதிக்கக் கூறுகளை வெளிப் படுத்துவனவாயுள்ளன. ஆண்களிடமிருந்து பெண்கள் தனித்துப் புதைக்கப்பட்டுள்ளதை அது காட்டுகிறது. ஆணும், பெண்ணும் சேர்ந்து புதைக்கப்பட்டுள்ளபோது ஆண் வலப்புறமும் பெண் இடப்புறமுமாக வைக்கப்பட்டுள்ளனர்.

தாய்வழிச் சமூகம் என்பது தோட்ட வேளாண்மையில் (Horti - culture) முக்கியப் பங்காற்றுகிறது என்பதைத் தற்போது பெரும்பாலான மானிடவியலாளர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். வேளாண் விளைச்சலின் வளர்ந்த நிலையில் ஏரினை இழுக்க விலங்குகள் பயன்பாட்டிற்கு வந்தபோது பெண்ணின் உடல் வலிமை / உழைப்பு புறக்கணிக்கப்பட்டது;  சமூகத்தில் பின்னுக்குத் தள்ளப்பட்டாள். ஆநிரை கவரும் காலங்களிலும் ஆநிரைகளை உற்பத்தி  செய்யும் காலகட்டங்களிலும் பெண்ணால் எல்லா  நேரமும் சண்டையிட முடியவில்லை. தொடர்ந்து தாய்வழிச் சமூகத்தின் கூறுகள் தொடக்ககால   இந்தோ - ஆர்ய சமூகத்தில் (Early Indo - Aryan Society) மௌனமாக்கப்பட்டன. எனவே இவற்றையெல்லாம்  இராகுலின் எழுத்துக்களில் காணவியலாது.

1943-இல் பாட்னாவில் அவர் வெளியிட்ட மனவா சமாஜ் (Manasva Samaj) எனும் நூலில் மனித சமூகத்தின் வெவ்வேறு படிநிலைகள் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. இந்நூலைப் போன்றே பிற வரலாற்றுத் தொடர்பான அவருடைய எல்லா நூல்களிலும் மரபுவழிப்பட்ட மார்க்சிய பின்னணியில் சமூக பரிணாமத்தைத் திட்டமிட்டுக் காண்பார். தொல்-கம்யூனிசம் என்பது முதல் கட்டம், அடிமை நிலை இரண்டாம் கட்டம், நிலமானியம் மூன்றாம் கட்டம், முதலாளியம் நான்காம் கட்டம், சோவியத் - ரஷ்யாவின் மூலம் சோசலிசமே இறுதியான கட்டம் என்பதாக அவர் கருதினார். இந்த ஐம்பதாண்டு காலத்தில் வரலாற்றுச் சட்டவரைவில் எத்தனையோ தெளிவுகள் பிறந்துள்ளன. ஆனால், அவையெல்லாம் எந்தக் குறிப்பிட்ட வரலாற்றாய்விற்கும் பயன்படுத்தப்படவில்லை. ஆனால், மார்க்சிய சிந்தனை என்பதைப் பொருத்தவரையில் மனவா சமாஜ் என்ற நூல் 1940-களில் ஒரு முன்னோடியான எடுத்துக்காட்டாகும். இந்தியில் இது போன்ற நூல் வரிசையில் இதுவே முதலாவது.

வரலாற்று இயங்கியல் கொள்கையின் அடிப்படையில் இராகுல் இந்திய சமூகத்தின் பரிணாம வளர்ச்சிப்போக்கைப் பார்த்ததை ஒரு முக்கியமான வளர்ச்சியாகக் கொள்ளலாம். அவருடைய பொதுவான ஆய்வு முறையும், அவரது அறிவுத் தாக்கமும் இன்றும் பாராட்டுக்குரியன. பண்டைய இந்திய சமூகத்தில் அடிமைத்தனம் இருந்ததை இராகுல் பேசியுள்ளார். இதே கருத்தை புகழ்மிக்க ரஷ்ய - இந்தியவியலர்களும் கொண்டுள்ளனர். ஆனால், பண்டைய சுவடிகள் அடிமை உற்பத்தி முறை இந்தியாவில் இருந்த தற்கான போதுமான சான்றுகளைத் தரவில்லை.

பிற இந்தி எழுத்தாளர்களைப் போல் இராகுலும் நிலமானியத்தைப் புரிந்துகொள்ளப் பெரும் ஆர்வம் காட்டினார். சிந்துச் சமவெளி நாகரிகத்தில் நிலமானிய அமைப்பு இருந்ததாகக் கூறினார். வேதகாலத்தில் சமூகம் தந்தைவழிச் சமூக நிலையிலிருந்து நிலமானிய முறைக்கு மாறி வந்தது என்று பேசினார். நிலமானியம் புத்தர் காலத்திலிருந்து ஹர்ஷர் காலம் வரை வளர்ந்தது என்று கூறினார். பிற இந்தி எழுத்தாளர்களும் வேத இலக்கியத்தில் நிலமானிய முறை அமைப்பைப் பற்றிய செய்திகளைக் கண்டறிந்தனர். ஆனால் அவர்கள் நிலமானியமுறைக்கு நிலம் முக்கியமான பங்கு வகிக்கிறது என்பதை மறந்துவிட்டனர். ராஜா, சத்திரியர் என்பதே நிலமானியத்தை உணர்த்தப் போதுமான குறிப்பாகும். இவர் கருத்தின்படி, “ஹர்ஷருக்குப் பிறகு நிலமானியமுறை தேங்கிப் போனது.” வட்டாரத் தலைவர்களின் அதிகாரத்தை உடைக்க அலாவுதீன் கில்ஜி எடுத்த நடவடிக்கைகளைப் புகழ்ந்தார். இராகுலின் கருத்துப்படி “அலாவுதீனின் இந்த நடவடிக்கை  14-ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலேயே துவங்கி விட்ட நிலமானிய முறை வீழ்ச்சியின் தொடக்கம்.”

சில மேலைநாட்டு அறிஞர்கள் புத்தரின் காலத்தைப் பின்னுக்கு இழுக்க முயன்றாலும் கி.மு. நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த பாலி நூல்களின்படி பௌத்தத்தின் காலம் சற்று முன்னர்தான் என்பதைச் சொல்கிறது. எனவே, இராகுல் சொல்லும் நிலமானியம் கி.மு. 500-இல் தொடங்கி ஏழாம் நூற்றாண்டுவரை தொடர்கிறது. நிலமானியம் என்பதை, பிரபுக்கள், அவர்களுக்கு உதவும் உழைக்கும் உழவர் என்ற கருத்தாகப் புரிந்து கொண்டால் இச்சமூகநிலை புத்தர் காலத்தில் இல்லை.

சில நிலச்செல்வந்தர்கள் தங்களுடைய வேளாண் உற்பத்திக்காகச் சில அடிமைகளை வேலைக்கமர்த்தினர். சில கூலிக்காரர்களையும் வேலைக்கு அமர்த்திக் கொண்டனர் என்று தான் நமக்குத் தெரியவருகிறது. ஆனால், பெருமளவில் பாலி நூல்களிலும், சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட சட்ட நூல்களிலும் நிலச் சொந்தக்காரர்கள் தங்கள்  உற்பத்தி அலகுகளில் ( Production Unites )  தன்னிச்சையாக இருந்தார்கள் என்று சொல்லப் பட்டுள்ளது. நிலப்பிரபுகளின் உருவாக்கம் மத நிறுவனங்களுக்கு நிலங்கள் கொடையாக வழங்கப்படும் முறையிலிருந்து துவங்குகிறது. கி.பி. 400-700 காலகட்டங்களில் இம்முறை பல்கிப் பெருகியது. எனவே, ஹர்ஷர் காலத்தில் நிலமானியம் முழுமையாக வளர்ச்சியடைந்து அது அன்றாட சமூக, பொருளாதார அரசியல் நடப்பாக இருந்தது என்பதையும் அறிய முடிகிறது, அவருக்குப் பிறகு இம்முறை தேங்கிவிடவில்லை.

நானும் அடிமை முறை, சில மானியமுறை பற்றிப் பேசியுள்ளேன். முதலாவதை நாம் பண்டை இந்தியாவிற்கு சேர்க்க முடியாது, இரண்டாவதை, இடைக்காலத்தின் தொடக்கத்திற்குச் சேர்க்கலாம். ஆனால் பண்டை காலத்திற்கு இயலாது. இவற்றை  முழுமையாக மார்க்சிய அணுகுமுறையின் மதிப்பீட்டிலிருந்து விலக்கிப் பார்க்க முடியாது. இந்திய வரலாற்றின் எந்தக் காலகட்டமாய் இருந்தாலும் சரி, இந்திய சமூகத்தின் ஆளும் வர்க்கமும் அவர்களது கொள்கைகளும் உழவர்களாலும், கைவினைஞர்களாலும் தரப்பட்ட உபரி உற்பத்தியிலேயே வாழ்ந்துள்ளது. இவர்களால் தரப்பட்ட வரிகள், திறைகள், மதம் தொடர்பான கொடைகள் - இவைகளாலும் கூட.

இராகுல் சிந்தனை ஆற்றல் கொண்ட சமூக நடவடிக்கைகளில் கலந்து கொள்ளும் ஓர் அரிய அரசியல் - சமூக செயலாளி (activist). கொள்கைகளைப் பேசித்திரிவதால் மட்டுமல்ல, வெவ்வேறு வகையான மக்கள் இயக்கங்களிலும் பங்குபெறுவதன் மூலமே சமூகமாற்றத்தை உருவாக்கமுடியும் என்று சிந்தித்தார். தம்மை முழுமையாகப் பகுத்தறிவிற்காகவும், சோசலிசத் திற்காகவும் அர்ப்பணித்துக் கொண்டார்; எவ்வித விட்டுக்கொடுத்தலுக்கும் அவர் இலக்காகவில்லை.

இராகுலின் எழுத்து முழுவதும் மீட்டுருவாக்கத் திற்கு  ( Rivivalism) எதிரான தாக்குதலைக் கொண்டது. அவருடைய கருத்தின்படி, பழம் பெருமையும், அவற்றைப் போற்றுவதும் அவற்றை வளர்ப்பதும் அபாயகரமானதாகும். அவற்றைத் தவிர்த்து இன்றைய தேவையைப் பற்றியே நாம் பேசவேண்டும் என்றார். பழம் பெருமையைப் பேசுவது தவறுகளுக்கு மரியாதை தரும் சில உணர்வுகளை உருவாக்கும் என்றார். அவருடைய கருத்தின்படி இன்றைக்கு நாம் எந்தெந்த சமூக மதக் கொடுமைகளை எதிர்த்துப் பேசியிருக்கிறோமோ அவற்றின் வேர்கள் எல்லாம் நாம் மதிக்கும் பழமைக்குள்ளேயே உள்ளன. பழமையைப் போற்றுதல் எனும் கருத்தே குப்தர் காலத்தை பொற்காலம் என்று வரலாற்று ஆசிரியர்களைச் சொல்ல வைத்தது. இதே காலகட்டத்தில் நிலமானிய சுரண்டல் இருந்ததை இராகுல் வெளிப்படுத்தினார். என்றாலும் சாங்கிருத்யாய எனும் பட்டப்பெயரை வைத்துக் கொண்டது இராகுலுக்குள் இருந்த பழமை மீட்டுருவாக்கத்தின் மெல்லிய வெளிப்பாடே. சாங்கிருத்யாய என்பது ஒரு கோத்திரப் பெயராய் இருந்தாலும் அதன் மேலிருந்த நேசம் இப்பெயரை இட்டுக்கொள்ள வைத்திருக்கும்.

raghul book 450‘சோசலிச இந்தியா’ எனும் பார்வையையே அவர் எப்போதும் கொண்டிருந்தார். அதற்கான விவாதக்களத்தை 1934-இல் எழுதிய ஒரு நூலில்  அமைத்திருந்தார். சோசலிசத் தேடலின் விளைவாகவே 1924-இல் இந்தியில் எழுதிய இருபத்திரண்டாம் நூற்றாண்டு (22nd century எனும் நூலில் உடோப்பிய சமூகத்தை வடித்திருந்தார். நவ இந்தியாவின் புதிய தலைவர்கள் எனும் மற்றொரு நூலை எழுதினார். இதில் பல மக்கள் தலைவர்கள் பற்றியும் பல அரசியல் - சமூக - செயலாளிகள் பற்றியும் எழுதப்பட்டது. அவற்றுள் சகஜானந்த் சரஸ்வதி, முசாபர் அகமது, பி.சி. ஜோஷி, அஜய்கோஷ், கல்பனா தத்தா போன்றோரும் அடங்குவர். இத்தலைவர்கள் புதிய இந்தியாவைக் கட்டியெழுப்ப முடியும் என்று இராகுல் கனவு கண்டார். அந்தப் புதிய இந்தியாவில் சமூக-பொருளாதார நீதியின் அடிப்படையில் மக்கள் மறு சமூக அமைப்பை உருவாக்குவார்கள் என்று நம்பினார்.

தலித்துகள், பிற்படுத்தப்பட்டவர்களின் இயலாத நிலையைப்பற்றி இராகுல் ஆழ்ந்த கவலை கொண்டிருந்தார். 1956-இல் B.R. அம்பேத்கர் தம் ஆதரவாளர்களோடு பௌத்தத்தைத் தழுவிய போது இராகுல் அவரைத் தலித்துக்களின் மீட்பர் என்றார். வேத வியாசரோடும், சங்கரரோடும் ஒப்பிட்டார். பழம் நூல்களின் அறிவில் மூழ்கிப்போயிருந்ததனால் அவ்வாறு ஒப்பிடுவதை இவரால் தவிர்க்கமுடியவில்லை.

உற்பத்தியைப் பங்கிடுவதில் வெளிப்படையாகத் தெரியக் கூடிய வேறுபாடுகள் இருந்ததைக் கண்டு மிகவும் மனம் நொந்தார் என்றாலும் அதிக உற்பத்தியின் தேவையையும் உணர்ந்தார். அதிக உற்பத்தித் தேவை பற்றிய இவருடைய கவலை ‘இருபத்திரண்டாம் நூற்றாண்டு’ எனும் நூலில் தெரியவந்தது. அவருடைய எழுத்துக் களில் அறிவியலுக்குத் தந்த முக்கியத்துவம் நன்கு உணரப்பட்டது. அறிவியல் தொடர்பாக இந்தியில் பல வெளியீடுகளைக் கொண்டு வந்திருக்கிறார். அவருடைய பேச்சுக்களிலெல்லாம், கல்வியில் அறிவியலுக்கு உயர்ந்த இடம் தரப்பட வேண்டும் என்பதே. அறிவியல் கருத்துக்கள் பரவவேண்டு மென்பதற்காக ஆய்வகங்களும் இன்னும் பிற வசதிகளும் செய்துதரப்பட வேண்டுமென்று அரசினை அவர் கேட்டுக்கொண்டார்... படிப்பறி வுள்ளவர்கள் தாமாகவே கலையியலையும் சமூக அறிவியலையும் பயில முடிகிற அதே வேளை அறிவியலைப் படிக்க முடியாது. ஏனெனில், அறிவியல் கல்வி செலவு மிக்கது என்று எண்ணினார்.

அறிவையும், கல்வியையும் பொதுமக்களுக்கு எடுத்துச் செல்ல, இராகுல் தன்னால் இயன்றதைச் செய்தார். தம் எழுத்துக்களினூடாக மக்களின் மனதை மாற்ற முயன்றார். அவருடைய சில நூல்களின் தலைப்புகளே இக்கருத்தை விளக்குவன. அத்தலைப்புகள் 1) Your Destruction 2) Mental Slavery 3) Do not Escape, Change the World . மூன்றாம் நூல் மக்களின் பொது மொழியில் எழுதப்பட்டது. ஏனென்றால் பொதுமக்களையும் அறிவார்ந்த விவாதத்திற்கு ஈர்க்க வேண்டுமென்ற முயற்சியே இந்நூலின் நோக்கமாகும். இராகுலின் எழுதும் பாணி என்னவெனில் எந்த அளவிற்குத் தெளிவாகச் செய்திகள் பொதுமக்களைச் சேரவேண்டுமோ அந்த அளவிற்கு எளிமையாக இருக்க வேண்டும் என்பதாகும். அவருடைய சொற்பிரயோகம் பெரும்பாலும் கிராமங்களை மனதில் வைத்தே எழுதப்பட்டது. தம் கருத்துக்களை உரிமையாகச் சொல்ல வட்டார மொழி வழக்குகளிடமிருந்தே சொற்களை எடுத்தாண்டார். இதற்காக, இந்தி இலக்கணக் கோட்பாடுகளை உடைத்தார்; அதனால் இந்திக்கு அதிக சொற்களைக் கொண்டு சேர்த்தார்.

நான் இங்கு வலியுறுத்திச் சொல்ல நினைப்பது என்னவெனில் இராகுல் பொதுமக்களுடன் கொண்டிருந்த தொடர்பை ஒரு போதும் விடவில்லை. அதனால்தான் இவருடைய எழுத்துக்கள் பொது மனிதனின் நடைமுறை வாழ்க்கையில் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்திற்று. இது பல சமூக வியலாளர்கள், கள ஆய்வாளர்கள் மேற்கொண்ட பணியைவிட சிறப்பானதாகும். பொதுமக்களுக்குக் கல்வியளிக்க வேண்டும் என்பதற்காக மக்களின் பேச்சு மொழிகளான Manghi, Nhopuri, Awadhi  போன்றவற்றில் பாடங்களைப் போதிப்பதற்கு அரசு கல்வியை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

மக்கள் தத்தம் தாய்மொழிகளில் கல்வியினைப் பெறாமல் ஒருபோதும் பண்பாட்டு முன்னேற்றம் உருவாகாது என்று உணர்ந்திருந்தார். Bhojipuri - பேச்சுமொழி வழக்கில் இருக்கும் வட்டாரத்தில் இராகுல் அம்மொழியிலேயே உரை நிகழ்த்தினார். அம்மொழி யில் இரு நூல்களை எழுதினார். முதல் நூல் இரு நாடகங்களையும் இரண்டாம் நூல் மூன்று நாடகங் களையும் கொண்டுள்ளன. ஆங்கிலம் மற்றும் பல அயல்நாட்டு மொழிகளில் எழுதக்கூடிய ஆற்றல் பெற்றிருந்தும் இந்தியாவிலுள்ள பொதுமக்களை மறந்துவிட்டு அவர்களைப்பற்றிச் சொல்லிக் கொண்டு உலக அளவில் தாம் அறியப்பட வேண்டும் என்று அவர் ஒருபோதும் நினைத்ததில்லை.

அறிவாளிகளிடம் எந்த அளவிற்கு இராகுலின் எழுத்துக்கள் தாக்கத்தை எற்படுத்தின என்பதற்கு நமக்குப் போதுமான சான்றுகள் இல்லை. ஆனால் அவர் இறந்து முப்பதாண்டுகளுக்குப் பிறகும் கூட அவருடைய படைப்புகள் மறுபதிப்பு செய்யப் படுகின்றன; படிக்கப்படுகின்றன... குறிப்பாக, இந்திமொழி பேசும் பகுதிகளில். அவர் ஏற்படுத்திய தாக்கம் இன்னும் இருப்பதையே இது காட்டுகிறது. 1930-1950 காலகட்டத்தில் அவருடைய படைப்புகள் இந்தி மொழியில் வாசிக்கும் தலைமுறையினரின் மனதில் சோசலிசம், பகுத்தறிவு, பால்சம உரிமை போன்றவற்றை உருவாக்கின.

இராகுல் சாங்கிருத்யாயன் அவர்களின் நூற்றாண்டை ஒட்டி இந்திய வரலாற்றுக் கழகத்தின் 54வது கூட்டத்தில் நடந்த கருத்தரங்கில் (Sumposia: 7-8) பேரா. ஆர்.எஸ். சர்மாவினால் படிக்கப்பட்ட கட்டுரையின் தமிழாக்கம்.

தமிழில்: கி.இரா.சங்கரன்

Pin It