nallakannu 361

சுப்ரபாரதிமணியன் ஆரம்பத்தில் தாமரை போன்ற முற்போக்கு இதழ்களில் தன் எழுத்துப் பணியைத் துவங்கியவர். கடந்த 35 ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி 12 நாவல்கள் உட்பட 45 நூல்களை வெளியிட்டு சாதனை புரிந்திருக்கிறார் எனலாம். திருப்பூர் போன்ற பெரும் வணிக நகரத்தின் மக்களின் வாழ்க்கையை சரியாக பிரதிபலித்து வருகிறார். உலகமயமாக்கலில் பெண்கள், குழந்தைகள் பாதிக்கப்படுவதையும் முதலாளித்துவ சுரண்டலையும் படைப்புகளில் வெளிப்படுத்தி உள்ளார். நொய்யலைப் பற்றி கவிஞர் வெள்ளியங்காட்டன் எழுதிய கவிதை எனக்குப் பிடிக்கும். அந்த ஜீவநதி இன்றைக்கு மாசுபட்ட நதியாகி விட்டது. நதியை நாம் வெகுவாக சுரண்டி விட்டோம். அதை சுப்ரபாரதிமணியனின் “சாயத்திரை” நாவல் பிரதிபலித்தது. திருப்பூர் மக்களின் இன்றைய வாழ்க் கையை அது பிரதிபலிக்கிறது. பழைய நொய்யல் சார்ந்த திருப்பூரையும் பிரதிபலிக்கிறது. அதில் பல தொன்மக் கதைகளும் உள்ளன. ராவுத்தக்கவுண்டர் பற்றிய ஒரு தொன்மக்கதை எனக்குப் பிடித்தது. பெயரில் ஒரு சாதிச்சமத்துவம் உள்ளது. பஞ்சகாலத்திலும் பலருக்கு வாரி வழங்குபவர் அவர். ஆனால் பஞ்சத்தை எதிர் கொள்ள முடியாமல் செத்துப் போகிற அவலம்.

அதில் ஏழைகளுக்கு உதவி செய்தும் முறையான நீர் மேலாண்மை செய்தும் உதாரணமாக அவர் காட்டப் பட்டிருக்கிறார். தொழிலால் சிதைந்த திருப்பூர் வாழ்க்கை அதில் உள்ளது, தொழில் இயறகையோடு இணைக்கப்பட்டிருக்கவேண்டும். அது இல்லாமல் பேராசை எண்ணத்துடன் செய்யப்படும் முயற்சிகள் காலப் போக்கில் பிரச்சினைகளை சந்திக்க நேர்வதை “சாயத் திரை” நாவலில் சொல்கிறார். அது சிறந்த நாவலுக்கான தமிழக அரசின் பரிசு பெற்ற நாவலாகும். இந்தி, கன்னடம், மலையாளம், ஹிந்தி, வங்காளம் எனப் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட சிறப்பு கொண்ட தாகும். நீடித்த வளர்ச்சி தேவை. அது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதன் மூலமே பெற முடியும். அதற்கென்று இருக்கும் அறத்தைப்பற்றி இவரின் “சூழல் அறம்” கட்டுரைத் தொகுப்பு சொல்கிறது. இன்றைய வாழ்வில் நாம் குவித்துக் கொண்டிருக்கும் பலவகைக் குப்பைகள் பற்றி அந்த நூல் எடுத்துரைக்கிறது.

இவர் சுற்றுச்சூழல் சார்ந்து பல நூல்களை எழுதியுள்ளார். அதில் ஒன்றுதான் “சூழல் அறம்”. சுற்றுச்சூழலை வைத்து எழுதும் முன்னணி படிப்பாளர்களில் ஒருவராக விளங்கி வருகிறார்.       “சமையலறைக் கலயங்கள்” நாவல் இரு பெண்களை வைத்து திருப்பூர் பனியன் கம்பனி தொழில் வாழ்க் கையைச் சொல்கிறார். ஆப் நைட், புல் நைட் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இந்நாவலில் தொழிலாளர்கள் வெடி நைட் செய்வதாக எழுதியுள்ளார். அதிசயமாக உள்ளது. எட்டு மணி நேர வேலை உரிமையை போராடிப் பெற்றோம். ஆனால் வெடி நைட் என்று தங்கள் உழைப்பை மக்கள் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் பெண்கள் உள்ளனர். பத்மா போன்ற பெண்களின் வாழ்க்கை தொடந்து கொண்டிருக்கிறது. எல்லா மாநிலங்களிலிருந்தும் தொழிலாளர்கள் இங்கு வந்து குவிந்திருக்கிறார்கள், குழந்தை உழைப்பைப் பற்றியும் நாவல்களில் பேசுகிறார். கனகு என்ற பையன் குழந்தைப் பருவத்தை இழந்து தொழிலாளியாகிற அவலம், பள்ளிப் படிப்பு இழந்து போனதைப் பற்றி “பிணங்களின் முகங்கள்” நாவலில் எழுதியுள்ளார். சமீபத்தில் தினமணி பத்திரிகை இந்நாவல் ஒவ்வொரு வரின் நூலகத்திலும் இருக்க வேண்டிய நாவல் என்று பாராட்டியிருக்கிறது. பெண்கள் மீதான வன்முறை பற்றி இந்த நாவலும் பேசுகிறது.

இவர் பல நாடுகளுக்கு பயணம் சென்றிருக்கிறார். அந்த அநுபவங்களை “மண் புதிது” நூலில் பதிவு செய்திருக்கிறார். லண்டன் போன்ற நாடுகளில் தமிழர்களின் வாழ்க்கையைச் சொல்லியிருக் கிறார். அங்கு புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர் களுக்குள் இருக்கும் பாகுபாடுகளையும் சுட்டிக்காட்டி யிருக்கிறார். நாட்டிய அரங்கேற்றம் போன்றவை நடத்தப்படுவதில் இருக்கும் ஆடம்பரம், புலம்பெயர்ந்த சூழலில் அவர்களின் வாழ்க்கையை நுணுக்கமாக எழுதியுள்ளார். உள்ளூர் எழுத்தாளர்களை ஊக்குவித்து பருத்தி நகரம் போன்ற நூல்களையும் வெளியிட்டுள்ளார். அதிலொரு கட்டுரையில் பங்களாதேஷ் சென்று அங்கு பெண்கள் குறைந்த கூலி தரப்பட்டு சுரண்டப்படு வதையும் குறிப்பிட்டுள்ளார். உள்ளுர் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் முயற்சிகளில் அக்கறை காட்டி எழுத்தாளர் களை உருவாக்கியுள்ளார். “கனவு” என்ற இலக்கிய காலாண்டிதழை 29 ஆண்டுகளாக நடத்தி பல நூறு படைப்பாளிகளின் படைப்புகளை பிரசுரித்து ஊக்கம் தந்து வருகிறார். தனிமனித படைப்பாளியாக நின்று விடாமல் எழுத்தாளர்களை ஊக்குவிப்பது, இலக்கிய இதழ் நடத்துவதன் மூலம் ஒரு இயக்கமாகவே செயல்படுகிறார். இந்த அளவில் அவரின் விரிந்த அளவிலான பணி வெகுவாகப் பாராட்டப்பட வேண்டியதாக உள்ளது.

கடந்த 25 ஆண்டுகளாக உலகமயமாக்கலின் தாக்கம் இந்திய சமூகத்தில் மிக மோசமாக இருந்து வருகிறது. முதலாளித்துவத்தின் வளர்ச்சிக்கு எல்லை இல்லை என்பது போலாகி விட்டது. சந்தைக்கு கட்டுப் பாடு இல்லை என்பதால் முன்றாம் உலக நாடுகளின் வர்த்தகங்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளன. தொழில் வளர்ச்சி என்பது இயற்கையோடு இணைந்ததாக சுற்றுச்சூழல் பிரச்சினைகளை கவனத்தில் கொண்டதாக இருக்க வேண்டும். ஆனால் முன்னேற்றம் என்று வருகிற போது சுற்றுச்சூழல் குறித்த அக்கறை புறக்கணிக்கப் படுகிறது. இது அபாயகரமான விளைவுகளை தட்ப வெப்ப சூழ்நிலைகளில் ஏற்படுத்தியிருக்கிறது.

இதன் ஒரு வடிவம்தான் இன்றைக்கு நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் அதிக சூடும், வெப்ப மாற்றமும். அய்ம்பூதங்களையும் கொள்ளையடித்துச் சுரண்டுவதன் பலனை இன்றைய வெப்பசூட்டால் உணர்கிறோம். இயற்கையை நம்மிலிருந்து பிரிக்காமல் அதன் பலனை அனுபவிக்க வேண்டும்... மனிதனின் பேராசையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. குழந்தை உழைப்பும், பெண்களின் உழைப்பு மற்றும் பாலியல் சுரண்டலும் உச்சக் கட்டத்திலிருக்கிறது. குழந்தைப் பருவத்தை அனுபவிக்காத குழந்தைகள், தங்களின் சுதந்திரத்தை அனுபவிக்காத பெண்கள் என்று அவர்கள் மாறி வருகிறார்கள். பொதுமக்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை உணர்வதற்காக எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளில் அவற்றை வெளிப்படுத்து கின்றனர். சமூக நோக்கமும், உணர்வும் கொண்டு எழுத்தாளர்கள் எழுத வேண்டும். சமூகப் பார்வை எழுத்தாளர்களுக்கு அவசியம் தேவை. நச்சு இலக்கியம் ஒழிக்கப்பட எழுத்தாளர்கள் எழுத வேண்டும். புதிய சமூகத்தை உருவாக்கும் பணியில் எழுத்தாளர்கள் ஈடுபட வேண்டும். சுப்ரபாரதிமணியனின் படைப்புகள் அந்த வகையில் திருப்பூரின் மனச்சாட்சியின் குரலாகவும், உலக மயத்திற்கு எதிரான குரலாகவும் அமைந்து வருகின்றன. அவர் தொடர்ந்து இலக்கிய உலகில் சாதனைகள் புரிய வாழ்த்துகிறேன்.

சொந்தக்கவலை, ஊர்க்கவலைகளால் கண் முன் நடக்கும் சமுதாய அவலங்களை கவனிக்க மக்கள் மறந்து விடுகின்றனர். பிரச்சினைகளின் ஆழம் அறிந்து கவிஞர் களும் சமுதாய அக்கறை உள்ள எழுத்தாளர்களும் எழுத்துக்களில் வெளிப்படுத்துகின்றனர். பிரச்சினைகள் தானாக மாறும்; யாராவது வந்து மாற்றுவார்கள் என அசந்து போன நிலையில் மக்கள் உள்ளனர். அந்நிலையை மாற்றி சமுதாயப் பிரச்சினையை திரும்பிப் பார்க்க வைக்கும் உணர்வுகளைத்தூண்டும் எழுத்துக்கள் சமுதாயத்தில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. சுற்றுச்சூழல், இயற்கை, சமுதாயப் பிரச்சினைகள் சார்ந்த நூல்கள் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அடிக்கடி வெளிவர வேண்டும். மக்களிடம் உந்துதல் ஏற்பட்டு சமுதாயம் சார்ந்த அக்கறை தானாக வெளிப்படும். எதையும் ஆழமாகப் படிக்கிற ஆழமாகப் புரிந்து கொள்கிற தன்மை அதிகரிக்க வேண்டும். இலக்கியக் கூட்டங்கள், புத்தக அறிமுகக் கூட்டங்கள் அடிக்கடி நடத்தப்படவேண்டும். இலக்கியங்கள் குடும்பத்தை நேசிக்க வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்துகின்றன. இதனால், குடும்ப உறவுகளில், நல்ல மாற்றங்கள் ஏற்படும். மனித இயற்கையைப் புரிந்து வாழ வேண்டும். இயற்கையை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். இயற்கையை அழித்தால் அது நம்மைப் பழிவாங்கும்.

(திருப்பூரில் மே, 7ந்தேதி நடைபெற்ற என்.சி.பி.எச். வெளியிட்ட சுப்ரபாரதிமணியனின் 5 நூல்கள் அறிமுக விழாவில் தோழர் ஆர்.நல்லகண்ணு அவர்கள் பேசிய உரையின் எழுத்து வடிவம்.) 

Pin It