அ.இ.அ.தி.மு.க.வை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்ற விருப்பத்தை விட, தி.மு.க.வைத் தோற்கடிக்க வேண்டும் என்ற வெறி தமிழக மக்களிடம் பரவலாக இருந்திருக்கிறது. தி.மு.க.வின் தோல்வி எதிர்பார்க்கப்பட்டது என்றாலும் இந்த அளவு படுதோல்வி அடையுமென்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க முடியாமல் தேர்தல் ஆணையம் தடுத்து விட்டதால் தி.மு.க.வுக்கு இந்தப் படுதோல்வி ஏற்பட்டது என்று கருதினால் அது பிழை. வாக்குப் பதிவுக்கு முந்திய இருநாள்களும், தேர்தல் ஆணையமும், காவல்துறையும் திட்டமிட்டு ஒதுங்கிக் கொண்டன. தி.மு.க. ஒரு வாக்காளர்க்கு ஓர் ஆயிரம் ரூபாயிலிருந்து இருநூறு ரூபாய் வரைத் தமிழகமெங்கும் கொடுத்தது. அ.இ.அ.தி.மு.க. நேர்மையின் நிலைக்களன் அன்று. ஆட்சி நடத்தி அடித்த கொள்ளைப்பணம் தி.மு.க. அளவிற்கு அ.இ.அ.தி.மு.க.விடம் இப்போது சேமிப்பில் இல்லை. ஆட்சியை இழந்து ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன அல்லவா! எனவே, அ.இ.அ.தி.மு.க. வாக்காளர்களுக்குக் குறைவாகப் பணம் கொடுத்தது.

தி.மு.க. திணித்த பணத்தை வாங்கிக் கொண்டு அ.இ.அ.தி.மு.க. அணிக்கு வாக்களித் தோர் விகிதம் அதிகம். இது புதிய போக்கு!

துடைத்தெறியப்பட்ட தோல்வியைத் தி.மு.க. சந்தித்ததற்கான காரணங்களை இரண்டு வகையாகக் காணலாம். ஒன்று அமைப்பு வழிப் பட்டவை. மற்றொன்று அரசியல் வழிபட்டவை.

தி.மு.க., கலைஞர் கருணாநிதியின் ஒற்றைத் தலைமையின் கீழ் செயல்படவில்லை. ஒன்றையொன்று காலைவாரிவிடும் கருணாநிதி யின் குடும்ப ஆதிக்கக் குழுக்களின் தலைமையின் கீழ் இயங்குகிறது. குடும்பக் குழுக்களின் ஆதிக்கச் சண்டையை அவ்வப்போது சமரசம் செய்து வைக்கும் வேலைதான் கருணாநிதியின் பொதுத் தலைமைக்கான அன்றாட வேலையாக இருக் கிறது. தலைமையில் இருக்கும் குடும்ப ஆதிக்கம் போலவே, மாவட்டங்களிலும், அதற்குக் கீழும் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களின் குடும்ப ஆதிக்கமும், அதனால் வீச்சுப்பெற்ற குழுச் சண்டைகளும் தி.மு.க.வை ஆட்டி அலைக்கழித்து விட்டன.

தலைமை அறிவித்த வேட்பாளர்களை எதிர்த்து, கலைஞரின் 'உயிரினும் மேலான உடன்பிறப்புகள்' பல தொகுதிகளில் போட்டி வேட்பாளர்களாக நின்றனர். இந்த விரிசலைக் கருணாநிதியால் தடுத்து நிறுத்த முடியவில்லை. அவரது நடத்தும் குடும்பக் குழுக்களின் ஆதிக்க அரசியல், அவரின் வேண்டுகோள்களையும், கட்டளைகளையும் காலில் போட்டு மிதிக்கும் அளவிற்குக் கழகக் கண்மணிகளுக்குத் துணிச்சல் தந்தன.

கழகப் போட்டி வேட்பாளர் நிற்காத தொகுதிகளில், மாவட்ட மற்றும் அதற்குக் கீழே உள்ள தி.மு.க. பிரமுகர்கள் சிலர் தங்கள் கழகத்திற்கு அல்லது கூட்டணிக் கட்சிக்கு இரண்டகம் செய்து எதிரணியினர்க்கு ஆதர வாகக் கீழறுப்பு வேலை செய்தார்கள்.

தி.மு.க.கூட்டணியில், தி.மு.க.வுக்கும் பா.ம.க. வுக்கும், தி.மு.க.வுக்கும் காங்கிரசுக்கும் இடை யேயான உறவில், மோதல்களும் முறிவுகளும் ஏற்பட்டு தேர்தல் நேரத்தில் அக்கட்சிகள் ஒட்டிக் கொண்டன. இக்கட்சிகள் கசப்பைச் சப்புக் கொட்டிக் கொண்டே கைகோத்துச் சென்றன மக்களிடம்.

காங்கிரசுக் கென்று வாக்கு வங்கி இருந்த காலம் மூப்பனாரோடு முடிந்து விட்டது. கொசுவுக்கு ராஜபிளவை நோய் வந்தது போல, சிறுத்துப் போன காங்கிரசுக்குள் பற்பல குழுப்பிளவுகள். கோயில் மாடுகளைப் போல் திரியும் அக்குழுக்களின் பிரமுகர்கள் கூட்டணி தயவில் அவ்வப்போது தமிழகத் தேர்தலில் மஞ்சள் குளிப்பார்கள்; மணம் பெறுவார்கள். தில்லி அரசியலையும், தில்லி ஆட்சியையும் சார்ந்து தமிழ்நாட்டில் பேரம் பேசி பதவி பெறும் புல்லுருவிச் செடிகள் அப்பிரமுகர்கள்.

இந்தக் காங்கிரசுப் பிரமுகர்களின் கீழறுப்பு வேலை இந்தத் தேர்தலில் மிக அதிகம்.

மேற்கண்ட கோளாறுகள், தி.மு.க.வின் படு தோல்விக்கான அமைப்பு வழிக் காரணிகள். அதன் அரசியல்வழிக் காரணங்களில் முகாமை யானவற்றைப் பின்வருமாறு கூறலாம். அரசியல் காரணங்கள் என்று இங்கு நாம் கூறுபவை, தி.மு.க. ஆட்சியில் ஏற்பட்ட குறைபாடுகள்.

கருணாநிதி - முரசொலிமாறன் குடும்பங்களின் ஆதிக்க அரசியல் மற்றும் அவை அடித்த கொள்ளைகள்.

கருணாநிதி உருவாக்கி நிலைப்படுத்தியுள்ள வாரிசு அரசியல், அவர் குடும்பத்திற்கு வெளியே உள்ள யாரும், எத்தனை தகுதிகள் பெற்றி ருந்தாலும் கழகத் தலைமைக்கு வர முடியாது என்று வேலி கட்டி வைத்து விட்டது. அடுத்து கருணாநிதியின் குடும்ப உறுப்பினர் ஒருவரை அண்டிப் பிழைக்கும் அல்லக்கையாக இருந்தால் தான் கழகத்தில் இரண்டாம் நிலைத் தலைவராக,  மாவட்டச் செயலாளராக ஆக முடியும் என்ற கட்டாயம். இந்த நிலை கழக உறுப்பினர்களை மட்டுமின்றி, பொதுமக்களையும் முகம் சுழிக்க வைத்து விட்டது.

கருணாநிதி - முரசொலிமாறன் குடும்ப உறுப்பினர்கள் அரசியல் அதிகாரத்தை வைத்து, பல்வேறு தொழில்களில் புகுந்து அரம்பத்தனம் (ரவுடித்தனம்) செய்து, அத்தொழில்களில் ஏற்கெனவே இருந்து வந்த பலரை அடித்து வீழ்த்தினார்கள்; அத்தொழில்களை விட்டே விரட்டினார்கள்.

இவர்களால் திரைப்படத்துறை, தொலைக் காட்சித்துறை, கம்பிவடத் தொலைக்காட்சி, செய்தி ஏடுகள், தாளிகைகள் போன்ற பல தொழில்கள் மிகவும் பாதிக்கப்பட்டன. திரைப் படத்துறையில் உள்ள தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் கூட அக்கட்சிக்கு வாக்களித்திருக்க மாட்டார்கள். அக்கட்சி திரும்பவும் ஆட்சிக்கு வந்தால் தங்கள் பிழைப்பில் மண் விழுந்து விடும் என்று அஞ்சினார்கள். கருணாநிதியுடன் மிக நெருக்கமாக உறவு வைத்துள்ள ரஜினிகாந்தே, அ.இ.அ.தி.மு.க.வுக்கு வாக்களித்தது தொலைக்காட்சியில் காட்டப்பட்டது.

கருணாநிதி குடும்பத்தாரின் மலைக் கொள்ளை, மணற் கொள்ளை ஆகியவை தமிழகத்தின் இயற்கை வளத்தையே சூறையாடியது.

இரண்டாம் அலைக்கற்றை ஊழல், கருணாநிதி குடும்பத்தாரின் பல்லாயிரம் கோடி பகற்கொள்ளையை ஐயத்திற்கிடமில்லாமல் அம்பலப்படுத்தி விட்டது.

விலை உயர்வு, நச்சுக்காய்ச்சல் வெப்பம்  போல் உயர்ந்து வருகிறது. நல்ல அரிசி வாங்கிச் சாப்பிட விரும்பும் நடுத்தர மக்கள் ஐந்தாண்டுகளுக்கு முன் ஒரு கிலோ பொன்னி அரிசி ரூ.18க்கு வாங்கி னார்கள். தி.மு.க. ஆட்சியில் அது கிலோ 35 முதல் 40 ரூபாய் வரை விற்கிறது. ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்குத் தருவது, அந்த மக்களுக்கு என்ன நன்மையைச் செய்தது? மற்ற அனைத்துப் பொருள்களின் விலையும் அப்படியே கிடுகிடு என உயர்ந்தது. நடுவண் ஆட்சிக்கு இந்த விலை உயர்வில் முகாமையான பொறுப்பு உண்டு. அங்கேயும் தி.மு.க. ஆளுங்கட்சி தானே!

கொழுந்துவிட்டு எரிந்த விலைவாசி உயர்வு என்ற நெருப்பு கருணாநிதி கொடுத்த தொ.கா.பெட்டி, எரிவளி அடுப்பு போன்ற இலவசங்களைப் பொசுக்கிவிட்டது.

வீட்டிற்குள் வாழ்க்கை நடத்த முடியாத அளவுக்கு மின்வெட்டால் இருட்டும் புழுக்கமும்,- வெளியில் தொழில், வணிகம், செய்ய முடியாத அளவிற்கு நிலைமை மேலும் மேலும் மோசமடைந்தது!

2009இல் முல்லைத்தீவில், முள்ளிவாய்க்காலில் ஒரு இலட்சம் தமிழர்களை குண்டுபோட்டுக் கொன்ற சிங்கள - இந்தியக் கூட்டுக் கொலைகாரர்களை, மனிதகுலப் பவைவர்களை, தமிழின அழிப்பாளர்களை ஆதரித்துக் கொண்டே, எதிர்ப்பது போல் நாடகமாடிய கருணாநிதியின் நயவஞ்சகம், இன இரண்டகம் இன உணர்வுள்ள ஒவ்வொரு தமிழன்-தமிழச்சி நெஞ்சிலும் மற்றும், மனித நேயர் நெஞ்சிலும் நெருப்பாய்க் கனன்று கொண்டிருக்கிறது.

தமிழக ஆட்சியைப் பயன்படுத்தியும், தில்லி ஆட்சிக்குத் தி.மு.க.வின் துணை தேவைப் பட்டதை நிபந்தனையாக்கியும் மெய்யாகவே கருணாநிதி போராடியிருந்தால், போர் நிறுத்தம் கொண்டு வந்திருக்க முடியும். தமிழினத்தைக் காத்திருக்க முடியும். அவ்வாறு காக்க முடியாவிட்டால் தமிழ் மக்களோடு சேர்ந்து உண்மையாகப் போராடி ஈகி ஆகியிருக்கலாம். பசப்பு நாடகங்களை நடத்தித் தமிழினத்தை ஏமாற்றினார் கருணாநிதி. ஏமாற்றியவர் இப்போது ஏமாந்தார்.

தமிழின அழிப்பில், காங்கிரசு, தி.மு.க. ஆகியவை வகித்த பங்கு தி.மு.க. அணியின் படுதோல்விக்கான காரணங்களுள் ஒன்று. அதுவே முதன்மைக் காரணி என்று நாம் பிழைபடக் கணிக்க வேண்டியதில்லை.

செயலலிதா, மாற்று அரசியல் கொள்கை, பொருளியல் கொள்கை கொண்டுள்ளார் என்பதற்காகவோ, அவர் தமிழின உரிமைகளை மீட்பார் என்ற நம்பிக்கை காரணமாகவோ, ஊழல் அற்ற நேர்மையாளர் என்பதற்காகவோ அவருக்கு மக்கள் பெருவாரியாக வாக்களித்து விடவில்லை. தி.மு.க. ஆட்சியின் கொடுமை தாங்க முடியாதவர்கள் உடனடித் துயர் நீக்கம் என்ற உளவியலில் செயலலிதாவுக்குப் பேராதரவு தந்துள்ளனர்.

செயலலிதாவின் சசிகலாக் குடும்பக் கொடுங் கோன்மை, ஊழல் கொள்ளை, உலகமயப் பொரு ளியல் கொள்கை, தமிழ்மொழி, தமிழினத்திற் கெதிரான காழ்ப்புணர்ச்சி, விடுதலைப்புலிகள் எதிர்ப்பு, இந்தியத் தேசிய வெறி, எடுத்தேன் கவிழ்த்தேன் எதேச்சாதிகாரம், அடக்குமுறை,  தொழிற் சங்க உரிமைகள் மீதான சீற்றம் போன்றவற்றில் மாற்றம் வரும் என்று நாம் நம்பவில்லை. மாற்றம் வந்தால் நல்லது..

தி.மு.க.வையும் அ.இ.அ.தி.மு.க.வையும் ஒப்பிட்டுச் சாரமாகச் சொல்வதென்றால் முன்னது வேட்டி கட்டிய செயலலிதா தலைமையில் இயங்குகிறது. பின்னது புடவை கட்டிய கருணாநிதி தலைமையில் இயங்குகிறது. இருவர்க்கும் நடைமுறை உத்திகளில் சிலவேறுபாடுகள் இருக்கின்றன. அவ்வளவே!

சரியான மாற்று சக்தி இல்லாத போது ஒன்றின் தகிப்பைத் தாங்க முடியாத மக்கள், தகித்து ஓய்ந்துள்ள இன்னொன்றைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

ஆயிரம் குற்றங்குறை இருந்தாலும், அனைவர்க்குமான அரசியல் கட்சிகளைத்தான் பெரும்பாலான மக்கள் விரும்புகிறார்கள் என்பதை இத்தேர்தல் மீண்டும் மெய்ப்பித் துள்ளது. சாதிக் கட்சிகளை ஓரங்கட்டிவிடு கிறார்கள். இது தமிழ் மக்கள் மீது நம்பிக்கை கொள்ளச் செய்யும் நல்ல அறிகுறி. ''பொதுக்கட்சி களில், சாதி, வர்க்க அழுத்தம் இருப்பது வேறு செய்தி.''

2004 மக்களவைத் தேர்தலில் ஓர் இடம் கூட அ.இ.அ.தி.மு.க. அணி பெறவில்லை. நாற்பதையும் தி.மு.க. அணி பெற்றது. கிட்டத்தட்ட அந்த நிலை இப்பொழுது நடந்துள்ள தமிழகத் தேர்தலில் தி.மு.க. அணிக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, தேர்தல் வெற்றி தோல்விகளால் தேர்தல் கட்சியின் சகாப்தம் முடிந்துவிட்டது என்று கருத முடியாது.

மேற்கு வங்கம், அசாம், கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் அந்தந்த மாநிலங்களின் தனித்தனிச் சிக்கல்கள் அடிப்படையில் வந்தவையே. இம்முடிவுகளில் அனைத்திந்தியப் பொதுத் தன்மை என்று எதுவும் இல்லை.

புரட்சிகரத் தமிழ்த் தேசியத்தைப் பொறுத்தவரை, அதன் செயற்களம் தேர்தல் அன்று! இனவிடுதலை, இனஉரிமைக்கான போராட்டக் களம்! தேர்தல் கட்சிகளின் வெற்றி தோல்விகளில் ஆரவாரம் கொண்டு, அதில் மிதந்து செல்லும் தக்கையன்று தமிழ்த் தேசியம்!
Pin It