இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் இரா. நல்லகண்ணு கட்சியில் உறுப்பினராக சேரும் பொழுது கட்சிக்கு வயது 17. இது கட்சிக்கும் நூற்றாண்டு. அவருக்கும் நூற்றாண்டு.
15 வயதிலேயே நெல்லை மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தெருக்களிலே இந்திய விடுதலைக்கு முழக்கமிட்ட சின்னஞ்சிறு இளைஞர். அடிமைப்பட்டு கிடக்கும் இந்தியாவிற்கு என்று விடுதலை வரும் என்ற தாகம் நெஞ்சிலே தேங்கிக் கிடந்த நேரம்... தன் வயதொத்த இளைஞர்களுடன் வீதிகளிலே மகாகவி பாரதியின் 'என்று தணியும் இந்த சுதந்திர தாகம் என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்' கவிதையை பாடிக்கொண்டே செல்வாராம்.
கம்யூனிஸ்ட் கட்சி நெல்லை மாவட்டத்தில் முளைவிடத் தொடங்கும் போதே சதி வழக்குகள் பாய்ந்தன. மலையாள மண்ணிலிருந்து அமைப்பாளராக இராமச்சந்திர நெடுங்காடி வந்தார். அவர் மீதும் கழுகுமலை அழகிரி, முத்தையா, வஜ்ரவேல் போன்ற கம்யூனிஸ்ட் தோழர்கள் மீதும் நெல்லைச் சதி வழக்கு பிரிட்டிஷ் அரசாங்கத்தால் 1940 ஆம் ஆண்டு போடப்பட்டது.
பாலதண்டாயுதம், ப.மாணிக்கம், மீனாட்சிநாதன், பேராசிரியர் வானமாமலை, வழக்கறிஞர் என்.டி. வானமாமலை, வி.எஸ்.காந்தி, வேலுச்சாமி தேவர் போன்றவர்களால் ஈர்க்கப்பட்ட நல்லகண்ணு 1943ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார் . நாங்குநேரி, களக்காடு பகுதிகளில் கட்சியின் அமைப்பாளராகச் செயல்பட்டார். நெருக்கடியான தலைமறைவு வாழ்க்கையில் விவசாய சங்கத்தில் பணிபுரிந்தார். எண்ணற்ற போராட்டங்கள் . 1946 ஆம் ஆண்டு ஜனசக்தியின் பணி செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டார். தேச விடுதலைக்குப் பின் திரும்பி வந்து கட்சிப் பணிகளைத் தொடர்ந்தார். கட்சி மீண்டும் தடை செய்யப்பட்டது. தலைமறைவு வாழ்க்கையில் பட்ட இன்னல்கள் ஏராளம்.
1948ஆ ம் ஆண்டு நெல்லைச் சதிவழக்கு 109 தோழர்கள் மீது போடப்பட்டது. ஒன்றரையாண்டு சிறைவாசத்திற்கு பிறகு 42 தோழர்கள் விடுவிக்கப்பட்டனர். 67 தோழர்கள் மீது வழக்கு நடந்தது. நல்லகண்ணுவிற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் ஏழாண்டாக குறைக்கப்பட்டது.
விடுதலைக்குப் பின்பு 1958ஆம் ஆண்டு பேராசிரியர் நா. வானமாமலை தலைமையில் திருமணம் நடைபெற்றது. மருதன்வாழ்வு அன்னாசாமியின் மூத்த மகள் ரஞ்சிதத்தை கரம்பிடித்தார். இரண்டு பெண் குழந்தைகள். அன்னை ரஞ்சிதம் ஆசிரியரானதால் குடும்பம் நடைபெற்றது. அப்போது ஆர்என்கே வின் அலவன்ஸ் ரூ 30- இன்றும் தென் மாவட்டங்களில் பல தோழர்களின் வீடுகளில் நல்லகண்ணுதான் குடும்பத் தலைவர். ஆர்என்கேவுடன் கார்களில் பயணம் செல்லும் பொழுது ஒவ்வொரு கிராமத்தையும் நினைவில் கொண்டு சம்பவங்களைக் கூறுவது கண்டு வியப்படைந்துள்ளோம்.
1948 ஆம் ஆண்டிலேயே இளைஞர் ஆர். நல்லகண்ணு எதிர்காலத்தில் சிறந்த தலைவராக வருவார் என்று விவசாயிகள் இயக்கத்தின் ஒப்பற்ற தலைவர் பி.சீனிவாசராவ் எழுதியுள்ளார்.
எளிமை, அன்பு, தீர்க்கமான பார்வை, 99 வயது நிரம்பிய நல்லகண்ணு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முகமாக இருக்கிறார். தனது பொது வாழ்க்கை அனுபவங்களை தோழர்களிடமும் பகிர்ந்து கொள்ளக் கூடியவர்.
1972 ஆம் ஆண்டு, விவசாயிகளின் போராட்டம் முழு வீச்சுடன் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான விவசாயிகள் கைது செய்யப்பட்டார்கள். காரக்கிரகத்தில் அடைத்து வைக்கப்பட்டார்கள். எமது மூத்த சகோதரர் தோழர் எஸ்.எஸ்.தியாகராஜன் சிறையில் உள்ள தோழர்களுக்கு மார்க்சிய வகுப்பு எடுப்பதற்காக கட்சியால் சிறைக்கு அனுப்பப்பட்டார். அன்றைய மறியல் போராட்டம் முடிந்த பின்பு தோழர் நல்லகண்ணு, நெல்லை மாவட்டச் செயலாளர் வி.எஸ்.காந்தியுடன் எட்டயபுரத்தில் உள்ள நமது இல்லத்திற்கு வந்தார். அப்பொழுதுதான் தலைவரை முதல் முறையாக நேரில் பார்க்கிறோம்.
அம்மாவிடம் எஸ்.எஸ்.டி கைது செய்யப்பட்டு சிறைக்குச் சென்றுவந்த தகவலைச் சொல்லிவிட்டு சாப்பிடுவதற்கு இருப்பதைக் கொடுங்கள் என்று கேட்டார்கள். அம்மா அன்போடு இருவரையும் தரையில் அமர வைத்து பரிமாறிய பழைய சோறு நினைவில் இருந்து அகலவில்லை. மிகவும் மகிழ்ச்சியுடன் உணவு சாப்பிட்டது அம்மாவிற்கு மிகுந்த பெருமை.
அம்மா மீது எப்போதும் பாசம் கொண்ட ஆர்.என்.கே வின் அன்பை மறக்க முடியாது.
1990களின் நடுவில் சாதிக் கலவரம் தென் மாவட்டங்களில் தலைவிரித்து ஆடியது. நல்லகண்ணு வின் மாமனார் தோழர் அன்னசாமித் தேவர் மருதன் வாழ்வு கிராமத்தில் படுகொலை செய்யப்படுகிறார். இடியென விழுந்த செய்தியை கேள்விப்பட்டு இறுதி நிகழ்வுகளை கண்ணீரோடு மற்றவர்களை நடத்தச் சொல்லிவிட்டு நெல்லை நகருக்கு சாதி மோதல் எதிர்ப்புப் பேரணிக்கு தலைமை தாங்க தோழர் நல்லகண்ணு வந்தார். தன் சொந்த நலன்களை விட பொதுநலன் முக்கியம் என்பதை நிரூபித்த தருணமது. அதுவரை அவருடைய சாதிய அடையாளம் யாருக்கும் தெரியாது.
அதே சமயம் சாதி மோதல்கள் நடைபெற்ற இடங்களுக்கெல்லாம் கட்சியின் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கன்னியாகுமரியில் இருந்து மதுரைக்கு பிரச்சார இயக்கத்தை கட்சி மேற்கொண்டது. தலைமையேற்ற மாநிலச் செயலாளர் நல்லகண்ணு அவர்களுக்கு உதவியாகப் பணியாற்றக்கூடிய வாய்ப்புக் கிடைத்தது. ஆர்என்கே, சட்டமன்ற குழுத் தலைவர் தோழர் ஜி.பழனிச்சாமி, நாம் ஆகிய மூவரும் ஒரே காரிலேயே பயணம் செய்தோம்.
சாதி மோதல்களுக்கு அடிப்படையான காரணம் எது என்பதைப் பற்றி டிஜிபியுடன் விவாதித்து போக்குவரத்துக் கழகங்களுக்கும், மாவட்டங்களுக்கும் வைக்கப்பட்டுள்ள பெயர்களே காரணம் என்பதைத் தலைவர் வெளிப்படுத்தினார். இந்தப் பெயர்களை எடுத்துவிட்டால் சண்டைகள் முடிவுக்கு வரும். ஆனால் எப்படிச் சொல்லுவது.. சொன்னால் ஏற்றுக் கொள்வார்களா.. ஒரு நாள் முழுவதும் ஆலோசனை செய்தார். பழனிச்சாமி பெயர்களை எடுத்து விடலாம்... சொல்லுங்கள் என்று சொன்னதிற்குப் பிறகும் தீவிரமான ஆலோசனையில் இருந்தார்.
முதல் நாள் பயணம் குமரியில் புறப்பட்டு வள்ளியூரில் நிறைவடைந்தது. அன்று இரவு முழுவதும் அதே சிந்தனை தான்.
மறுநாள் காலை திருநெல்வேலியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தின் போதுதான் இந்தக் கருத்தை வலியுறுத்திப் பேசினார்.
சங்கர் நகரை அடுத்துள்ள துறையூருக்கு சென்றோம். சாதி வெறியால் பாதிக்கப்பட்ட கிராமம். அப்பொழுது தான் பிறந்த கைக்குழந்தையுடன் இளம் தாய் கதறி அழுதார். அவருடைய கணவன் சாதிய வெறியர்களால் கொல்லப்பட்டான். கண்களில் கண்ணீருடன் ஆறுதல் கூறினார்.
பயணம் தொடர்ந்தது. பல ஊர்களில் கலவரங்கள்.. கொல்லப்பட்ட சம்பவங்கள். ராஜபாளையம் துயரங்களை பார்வையிட்ட பிறகு மம்சாபுரத்திற்குச் சென்றோம். தந்தை கொல்லப்பட்டதால் இரண்டு சிறுவர்கள் மொட்டை அடித்திருந்த காட்சியைப் பார்த்தார். கண்ணீருடன் ஆறுதல் கூறினார். இந்தக் காட்சிகள் கல்லுக்குள் ஈரம் இருப்பதை உணர்த்தியது . எப்பொழுதும் உணர்ச்சிகளை அடக்கி தனக்குள்ளேயே வைத்துக் கொள்ளும் நல்லகண்ணு தன்னை அறியாமல் வெளிப்படுத்திய கண்ணீர் நம்மை கலங்கச் செய்தது.
மாமனார் கொல்லப்பட்ட போது வெளிப்படுத்தப்படாத துக்கம் சாதிக் கலவரத்தின் போது பொதுமக்கள் கொல்லப்பட்டதைப் பார்த்த பொழுது பொங்கிய கண்ணீரைக் கண்டதை நம்மால் இன்றும் மறக்க இயலாது.
அன்றைய முதலமைச்சர் கலைஞர் கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத்திலும் பெயர்களை எடுத்து விடுங்கள் என்ற கருத்தைச் சொன்னார். அரசும் ஏற்றுக் கொண்டது. பெயர்கள் நீக்கப்பட்டன. அமைதி திரும்பியது.
தாமிரபரணி ஆற்றில் மணல் கொள்ளையடிப்பதை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தார். மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தானே ஆஜராகி வாதங்களை எடுத்துரைத்தார். 2010 ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆம் நாள் மணல் அள்ளக் கூடாது என தீர்ப்பு வந்தது. ஆனாலும் கொள்ளையர்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்ட மணலைக் கூட விட்டு விடவில்லை. இந்தக் குற்றச் சம்பவங்கள் நடைபெற்ற போது மனம் வெதும்பிப் பேசிய தலைவரின் வேதனையான முகம் நினைவுக்கு வருகிறது.
சிறையில் இருந்த காலத்தில் புலவர் பட்டம் பெற்றார். இலக்கியத்தில் ஆழ்ந்த இரசனை உண்டு. கவிஞர் நல்லகண்ணு கவிதைகளை எழுதி உள்ளார். பிறரின் கட்டுரைகள் சிறப்பாக இருந்தது என்றால் மனம் விட்டு பாராட்டத் தயங்க மாட்டார். அதே நேரம் தவறுகளைக் கண்டால் மென்மையாகச் சுட்டிக் காட்டுவார். நெல்லை ஆய்வுக் குழுக் கூட்டங்களில் கலந்துகொண்டு கருத்துக்களை எடுத்துச் சொல்லியுள்ளார்.
இலக்கிய ஆளுமைகள் நா.வா., தொ.மு.சி.ரகுநாதன், தி.க.சி உட்பட பலருடன் நெருங்கிய நட்பைப் பேணி இருந்தார். இவர்கள் நடத்துகின்ற இலக்கிய விவாதங்களைக் கேட்பதற்கு மிகவும் ஆர்வமாக இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் பாரதி முற்போக்கு வாலிபர் சங்கம் எட்டயபுரத்தில் நடத்துகின்ற பாரதி விழாவில் அழைத்தாலும் அழைக்காவிட்டாலும் இரண்டு நாட்களும் முழுமையாக இருந்து விழாவைக் கண்டு ரசிக்கின்ற பண்புடையவர்.
ஜீவாவால் ஆணையிடப்பட்டு சோ. அழகர்சாமியால் தொடங்கப்பட்ட மகாகவி பாரதி விழா நின்று விடக்கூடாது என்பதில் மிகுந்த அக்கறையும் கவனமும் கொண்டவர். அனேகமாக ஜூலை மாதமே செப்டம்பர் மாத விழாவிற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள அன்பான ஆணையிடுவார். பாரதியின் தீராத காதலன் மட்டுமல்ல, கவிஞர் தமிழ்ஒளியை மக்களுக்கு அறிமுகம் செய்ய ஒரு நூலையே எழுதியவர். சிறந்த நூலாசிரியர். கட்டுரையாளர் .
தொ.மு.சி ரகுநாதன் மறைந்தவுடன் இறுதி நிகழ்வு நடத்தி முடித்த பிறகு நெல்லை கட்சி அலுவலகத்தில் பொன்னீலன் தொமுசியைப் பற்றிய பேட்டி இவரிடம் எடுக்கும் போது பிரிவுத் துயர் தாங்காமல் குலுங்கிக் குலுங்கி அழுத காட்சிகளை நம்மால் மறக்க இயலவில்லை…
தோழர் நல்லகண்ணு பொது வாழ்வுக்கு எடுத்துக்காட்டு... இன்றைக்கு நம்மோடு வாழ்கின்ற மகத்தான தலைவர்.
கட்டுரையாளர்: தலைவர், தமிழ்நாடு ஏஐடியுசி.