தொலைக் காட்சியில் ஒரு செய்தியைப் பார்க்க வியப்பாக இருந்தது. ராமநாதபுரம் தொகுதி நிலவரம் பற்றிக் கூறும் போது, கமுதி அதன் சுற்று வட்டாரங்களில் கருவேல மரங்கள் அடர்ந்து, பரந்து இருப்பதால் அதனை அழித்து நிலங்களைக் காக்க வேண்டும் என்று தொகுதி மக்கள் கோரிக்கை வைப்பதாக அச்செய்தி சொல்லியது.
கருவேல மரங்களின் வேர்கள் நிலத்தின் ஆழத்தில் பரந்து சென்று, நீரை உறிஞ்சி விடுவதால் பிற செடிகொடி வகைகள் அங்கு வளர முடியாமல் அழிந்து விடுகின்றன். முட்கள் நிறைந்த இந்த மரங்களால் பறவைகளுக்குக் கூட எந்தப் பயனும் இல்லை! வேடந்தாங்கலில் இதன் முட்களால் உடல் கிழிந்து இறந்த பறவைகள் ஏராளம். மேலும், இம்மரங்கள் சுற்றுச்சூழலில் வெப்பநிலையை அதிகரிக்கிறது. இவை வெளியிடும் கதிர்வீச்சினால் சுற்றியுள்ள உயிரினங்களுக்குப் பலவிதப் பாதிப்புகள் ஏற்படுகின்றன. உதாரணமாக கால்நடைகள் இம்மரங்களின் கீழே தொடர்ந்து கட்டப்படும்போது, மலட்டுத் தன்மை ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.பா.ஜ.கவின் மோடி ஆட்சியில் அதன் வேர்கள் பொருளாதாரத்தின் ஆழச் சென்றதன் விளைவு ஒன்றியத்தின் பொருளாதாரம் சீர்குலைந்து விட்டது. பணமதிப்பிழப்பு, தேர்தல் பத்திர ஊழல், பி.எம்-கேர் போன்றவையும் கணக்கில் வைத்துப் பார்க்கப்பட வேண்டும்.
அமலாக்கக் துறை, வருமான வரித்துறை உள்ளிட்டவைகளின் மூலம் தனக்கு வேண்டாத எதிர்கட்சியினரை, எதிர்த்துப் பேசுவோரை மிரட்டுவது, கைது செய்து சிறையில் அடைப்பது என்பது கருவேல மரங்களின் கூர்மையான முள்களில் சிக்கி இருப்பது போல இருக்கிறது.
இம்மரங்களால் இயற்கைச் சுற்றுச்சூழல் கெட்டு, கால்நடைகள் மலட்டுத் தன்மை அடைவதாகச் சொல்லும் ஆய்வைப் போல, கடந்த பத்து ஆண்டுகளில் நாட்டின் சூழல் கெட்டு, மக்களின் வாழ்வும் மலடாகத் தோற்றம் தருவதை மறுக்க முடியாது.
ராமநாதபுரம் தொகுதி மக்களின் கோரிக்கையான உருப்படாத கருவேல மரங்கள் எப்படி அகற்றப்பட வேண்டுமோ, அப்படியே காவி பா.ஜ.க மோடியின் ஆட்சியும் அகற்றப்பட வேண்டும் என்பதும் மிக மிக அவசியம்.
எனவே, வாக்காளப் பெருமக்களே! தி.மு. தலைமையிலான ‘இந்தியா கூட்டணி’க்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள்!