நமது சந்திப்புகளில்
நிலவும் கடும் கோடை
எப்போதும் தகிக்கிறது.
 
எப்போதாவது பெய்யும்
சாரல் மழையில்
நாம் குதூகலிக்கிறோம் எனினும்
மழை குறித்த
சிலாகிப்புகள் ஏதுமின்றி
பெய்து போகிறது மழை.
 
கோடையை மட்டுமே
அசை போடுகிறோம்
எப்போதும்.
அதன் தகிப்பை
உஷ்ணத்தை
தந்து போன வியர்வை வீச்சை.

கோடையைப் பற்றி
பேசிப் பேசியே
வரவைத்து விடுகிறோம்
மீண்டும் அதன் உஷ்ணத்தை.

- இரா.பூபாலன்

Pin It