பெண் பார்த்தான்.
நரம்பு வெட்டிய உணர்வுகளை
பல் நுனியில் சிக்க வைத்து
கண் செதுக்கிய இதயத்தைக்
கைக்குட்டையில் அடக்கிக் கொண்டேன்
ஐம்புலனை அறிய முயன்றான்.
இமை எழுப்பிய ராகத்தால்
யாழிசையைக் கொன்றுவிட்டு
கரம் காத்த கவிதைகளை
ஒட்ட வைத்து கட்டவிழ்த்தேன்.
சதுர்குணத்தை சோதித்தான்
பூச்சிகளின் நடனத்தை,
புல்லறிவின் ஒழுக்கத்தை
நெஞ்சுக்குள் புதைத்துக் கொண்டு
நாணத்தை நறுக்கி வைத்தேன்
அழகியலைத் தேடினான்
முகில் வருடிய கேசத்தைப்
பின்னி முதுகிலிட்டு
மாலை நேர மஞ்சள் நிலவை
கொஞ்ச நேரம் மங்க வைத்தேன்.
சில நாழிகையில் மறுதலித்தான்
செந்நிலவை செதுக்கி வைத்து
மலைச்சாரலுக்குள்
சிறைபிடிக்க முயன்றேன்..
நெஞ்சுக்குள் இட்ட துளைக்கு
கண்ணீரல்ல மருந்து..
- பிச்சி