உலக சினிமா வரலாறு மறுமலர்ச்சி யுகம் - 22

“உங்களின் சினிமாக்கள் அயோக்கியத்தனம் அது மக்களை ஒரு தந்திரவலைக்குள் வீழ்த்தும் குப்பை; அங்கு மனதைக் கட்டிப்போடும் மாய்மாலம் மட்டுமே எஞ்சுகிறது.இது கலை இல்லை... உண்மையான கலை இந்த வேலையைச் செய்யாது... அது மக்களை ஏமாற்றாது; மாறாக தனக்குள் ஒரு அழகையும் வடிவத்தையும் உருவாக்கிக்கொண்டு மக்களையும் ரசிக்க வைக்கும்” இதெல்லாம்... அக்காலத்தில் 1959 க்கு முன்பு வரையிலான உலக சினிமாக்களின் மீதான விமர்சனங்கள். விமர்சித்தவர்கள் யார்?

துடிப்பான இருபது முதல் முப்பது வயதுக்குட்பட்ட நான்கைந்து இளைஞர்கள். கையேது சினிமா என அவர்கள் நடத்திய பத்திரிகையில்தான் அவர்கள் இப்படி அக்கால திரைப்படங்களைச் சுக்கு நூறாகத் தங்களது கூர் விமர்சனங்களால் கிழித்துத் தொங்க விட்டனர். இவர்களுக்கு சினிமாவை பற்றி என்ன தெரியும் .. வெறும் எழுதிவிட்டால் போச்சா, வந்து ஒரு படத்தை எடுத்துப் பார்க்கட்டும் அப்புறம் தெரியும் .. என இயக்குனர்களும் பதிலுக்கு இவர்களை தூற்றினர். காலம் கனிந்தது .. ஒரு நாள் அவர்கள் சொன்னது போலவே அந்த விமர்சகர்கள் படைப்பாளிகளாக மாறினர். தங்களைப் புதிய அலை என அவர்களாகவே அழைத்துக்கொண்டனர். படம் எடுக்கத் துவங்கினர்.

படம் வெளியான போது அனைவரும் ஆவலுடன் அப்படங்களைப் பார்க்கக் கூடினர்... இரண்டு மணிநேரம் படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வந்த போது அவர்களது முகம் மிரட்சியில் இருந்தது. அவர்கள் அன்று எடுத்த படத்தை இன்றும் வாய்பிளந்து உலகமே பார்க்கிறது. ஆம், அந்த விமர்சகர்களின் படங்கள் அதுவரையிலான உலக சினிமாவையே புரட்டிப் போட்டன. உலகமெங்கும் அவர்களின் சினிமாக்களுக்கு அரங்கம் எழுந்து கைதட்டியது. ஒரு சாதாரண திரைப்பட சங்கத்தில் துவங்கிய அந்த இளைஞர்களின் வாழ்க்கை பத்திரிக்கையாளராக மாறி பின் படங்களை விமர்சித்து பின் உலக சினிமாக்களுக்கே வழிகாட்டியாக மாறியது தனிக்கதை. அன்று அவர்கள் தோற்றுவித்த நியூ வேவ் எனும் புதிய அலை இயக்கம் இன்று உலகசினிமா வரலாற்றின் மகத்தான திருப்பு முனையாக காலத்தால் அழுந்த பதியப்பட்டுள்ளது.

ப்ராங்கோய்ஸ் ட்ரூபோ, (Francois Truffaut) ழான் லுக் கொதார்த். (Jean-Luc Godard) கிளாத் சாப்ரோல், (Calude Chabrol) எரிக் ரோமர்ணிக் (Eric Rohmer). இவர்கள்தான் அந்த இளம் இயக்குனர்கள்... அதுவரையிலான இலக்கணங்களை உடைத்து சினிமாவுக்குப் புது இலக்கணம் எழுதிய உலகசினிமாவின் சிற்பிகள். இவர்கள் எப்படி ஒன்றிணைந்தார்கள்; இவர்களின் பிதாமகன்... இவர்கள் இதற்காகப் பட்ட சிரமங்கள்...

புதிய அலைக்கு முன் பிரான்ஸ்

இரண்டாம் உலகப்போரில் பிரான்சை நாஜிக்கள் தம் கைக்குள் வைத்திருந்த நேரம்; அதன் ஜன்னல்கள் அனைத்தும் முழுவதுமாக அடைக்கப்பட்டிருந்தன. அமெரிக்க சினிமாக்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்த காலம் அது. கலையின் மீதும் சுதந்திரத்தின் மீதும் அளவற்ற ஈடுபாடு கொண்ட பிரான்ஸ் தேசத்தவரை இந்தத் தடைகள் ரொம்பவே சங்கடப்படுத்தின. அதிலும் குறிப்பாக 1920 க்கும் 1930 க்கும் இடைப்பட்ட பிரான்சில் கலைச்செழுமை யான காலத்தில் வாழ்ந்த ஆந்த்ரே பாஸின் , அலைன் ரெனாய்சிஸ் ,ஆஸ்ட்ரெக் ஆகிய கலைஞர்களுக்கு இது பெரும் நெருக்கடியைத் தோற்றுவித்தது. இதிலிருந்து தங்களை விடுவித்து கலையின் புதிய வெளிகளுக்குத் தாவும் மனோ நிலையில் அவர்கள் உந்தித் தள்ளப்பட்டபோதும் அவர்கள் அதற்கு வழியில்லாமல் அல்லலுற்றனர். போர் முடிந்தது. நாஜிப்படைகள் பிரான்சிலிருந்து அகற்றப்பட்டன .. ஜன்னல்கள் திறக்கப்பட்டன. புதிய காற்று, புதிய வெளிச்சம், புதிய சிந்தனைகள்... பிரான்சின் அறிவுலகத்துள் பெரும் பாய்ச்சலோடு புகுந்தது. கலைகளின் பாலும் தத்துவங்களின் பாலும் அதிக ஈடுபாடு கொண்ட ஆந்த்ரே பாஸினுக்கு சினிமாவின் மீது பார்வை குவிந்தது. இடதுசாரிப் பார்வை கொண்ட பாஸின் அமெரிக்கப் படங்களின் முதலாளித்துவத்தன்மைகளையும் அதன் போலித்தனங்களையும் அவதானித்தார். இதில் உயிரோட்டம் இல்லை.. இவர்கள் சொல்வதில் பொய் இருக்கிறது... ஆழ் மனங்களின் உள்ளுணர்வுகள் படைப்பாக இல்லை. ஏற்கெனவே யாரோ ஒருவர் தீர்மானித்து எழுதப்பட்ட கதையை கேமரா மற்றும் படத்தொகுப்பினால் உருவாக்குவது மட்டுமே இயக்குனர் வேலை இல்லை என்றும் பத்திரிக்கைகளில் சாடினார். பாஸினுடன் அலெக்ஸாண்டர் ஆஸ்ட்ரெக் எனும் அறிஞரும் சேர்ந்தார். அவர்தான் பிற்பாடு எழவிருந்த புதிய அலை எனும் இயக்கத்துக்கு அடிநாதமாக இருந்த ”கேமரா ஒரு பேனாவை”ப் போல எனும் முக்கியமான கருத்தாக்கத்தை வெளியிட்டவர்.

எழுத்தாளனுக்கு எப்படி பேனாவோ அது போல இயக்குனருக்கு கேமரா செயல்படவேண்டும். தன் சுயசிந்தனையுடன் தன்னியல்பாக எழுதுவது போல கேமராவால் ஒரு இயக்குனர் யாருடைய (குறிப்பாக தயாரிப்பாளர்களின்). அதிகாரத்துக்கும் கட்டுப்படாமல் உருவாக்கும் போதுதான் சினிமாவில் அசலான படைப்புத்தன்மைகள் வெளிவரும் எனக்கூறினார். உடன் ஹாலிவுட் இயக்குனர்களில் குறிப்பிடத்தக்வர்களான பிரிட்ஸ் லாங், டி டபிள்யூ கிரிபித் , ஜான் போர்ட்.. ஆகியோர் பற்றியும் அவர்களில் ஒளிந்துகொண்டிருந்த நவீன சினிமாவுக்கான கூறுகளையும் குறிப்பிட்டு ” சினிமா தி ஆர்ட் ஆப் ஸ்பேஸ்” எனும் கட்டுரை ஒன்றை எழுதினார் .

மிகச்சிறிய வட்டத்தாரால் மட்டுமே படிக்கப்பட்ட இக்கட்டுரைகள் நாளடைவில் சினிமா ஆர்வலர்கள் மத்தியிலும் புதுமை விரும்பிகளிடத்தும் புதிய வரவேற்பைப் பெற்றது. பிரான்சில் பல இடங்களில் சினிமா சங்கங்கள் எனப்படும் சிறு சிறு குழுக்கள் உருவாக்கம் பெற்றன. ஐம்பதுக்கும் குறைவான உறுப்பினர்களைக் கொண்ட இக்குழுக்கள் வெவ்வேறு மொழிகளில் வெளியாகும் நல்ல சினிமாக்களை இங்கு திரையிட்டு அதன் தரம் குறித்து காரசாரமாக விவாதித்தனர். இப்படியான குழுக்களுள் ஒன்று சினிமாத்தொக் பிரான்ஸ் சிவீஸீமீனீணீtலீமீஹீuமீ திக்ஷீணீஸீஃணீவீsமீ, எனப்படும் குழு . ஹென்றி லாங் லோயிஸ் எனப்படுபவரால் நடத்தப்பட்டு வந்தது. இக்குழுவில் ஐம்பதுக்கும் குறைவானோர் தீவிரமான உறுப்பினர்கள் . அவர்கள் பெரும்பாலும் மவுனமொழிப் படங்களையே அதிகம் பார்த்தனர்.அதிகமான சினிமாவைப் பார்ப்பதன் மூலமாக மட்டுமே சினிமாவில் பயிற்சி பெறமுடியும் என்பதை இக்குழு உறுதியாக நம்பியது . கூடுமானவரை வெளிமொழிப் படங்களை சப் டைட்டில் எனப்படும் மொழிமாற்ற எழுத்துருக்கள் இல்லாமல் பார்த்து அதன் மூலம் இன்னும் கூடுதலாகக் காட்சி மொழிக்கு தங்களைத் தயார் படுத்திக்கொண்டனர் .

இந்தக் குழுவுக்குள் முதன்முதலாக ஒரு சிறுவன் ..16 வயதேயான சிறுவன் ஒருவன் வந்தான் . மிகவும் துறுதுறுப் பாகவும் மற்றவர்களைக்காட்டிலும் சினிமாக்களால் அதிகம் ஈர்க்கப்பட்டவனாகவும் காணப்பட்ட அவன்தான் பிற்பாடு பிரெஞ்சு சினிமாவின் முகவரியாக மாறிப்போனான் .. அவன் பெயர் பிரான்ஸ்வா த்ரூபோ ... புதிய அலை இயக்கத்தின் மிக முக்கிய முதன்மை இயக்குனராக இன்றளவும் உலகசினிமாவால் அறியப்பட்டவன். அக்காலத்தில் சிறுவயதில் தந்தையின் கொடுமைகளிலிருந்து தப்பிக்கும் விதமாக சினிமா பார்க்க வந்த த்ரூபாவுக்கு அதுவே உணவாகவும் வேதமாகவும் வாழ்க்கையாகவும் மாறிப்போனது .

த்ரூபாவைப் போலவே சினிமாத்தொக் குழுவுக்கு ஒரு நாள் இன்னொரு இளைஞனும் வந்து சேர்ந்தான் . பிற்பாடு உலகசினிமாவில் தனித்தன்மை மிகுந்த இயக்குனராகவும் பல இயக்குனர்களின் மானசிக ஆசானாகவும் உருவானவன் கோதார்த். ழான் லூக் கோதார்த் என்பது முழுப்பெயர். தனது தீவிரமான அரசியல் பார்வைகளாலும் மிகச்சிறந்த காட்சிக் கட்டமைவுகளாலும் உலகசினிமாவுக்குள் அதிர்வலைகளை நிகழ்த்திய பெயர். சினிமா என்பது ஒரு ஒருவழிப் பாதையானால் அது முடிவுறும் இடத்தில் நிற்பவர் கொதார்த். என இவரது படங்களை வேதமாகக் கருதுபவர்களும் உண்டு. ஆனால் அன்று சினிமாசங்கங்களுக்குள் நுழைந்த போதோ மிகச் சாதாரணமான இளைஞன் ..இவரும் துவக்கத்தில் தந்தையாரது கொடுமையால் பாதிப்புக்குள்ளானவர். இதன் காரணமாகவே சினிமா சங்கங்களுக்கு சென்று சினிமா பார்ப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இதைப் பற்றி பின்னாளில் குறிப்பிடும் போது அக்காலங்களில் சினிமாத் திரையானது வீட்டுப் பிரச்சனைகளிலிருந்து தப்பித்து வேறு உலகங்களுக்குச் செல்லும் சுவராக இருந்தது எனக்கூறியுள்ளார்.

இவர்களோடு அப்போது எரிக்ரோமர் (Eric Rohmer) களவுத் சாப்ரோல் (Claude Chabrol) போன்றவர்களும் தீவிரமாக இச்சங்கங்களில் ஈடுபட்டனர். இவர்கள் வெறுமனே திரைப்படங்களைப் பார்ப்பதோடு மட்டுமல்லாமல் தங்களுக்குப் பிடித்த திரைப்படத்தின் புகைப்படங்கள் மற்றும் சுவரொட்டிகளை சேகரிப்பது.. மேலும் தங்களுக்கு பிடித்த இயக்குனர்களை பட்டியலிடுவது ,அவர்கள் குறித்த தகவல்களைச் சேகரிப்பது போன்ற காரியங்களிலும் ஈடுபட்டனர்.

இவரைப் போலவே இச்சங்கங்களில் அக்காலத்தில் ஈடுபட்ட அலைன் ரெனாய்ஸ், (Alain Resnais), ழாக் ரிவெட், (Jacques Rivette,) , ரோஜர் வாதிம் (Roger Vadim) போன்றவர்களும் பிற்பாடு குறிப்பிடத்தக்க இயக்குனர்களாக அடையாளம் காணப்பட்டனர்.

ஆனாலும் இவர்களுக்கும் முன் சொன்ன நால்வருக்கும் என்ன வேறுபாடு என்றால் முன்னவர்கள் இவர்களைக் காட்டிலும் கூடுதல் திறமை கொண்டவர்கள் என்பது மட்டுமல்லாமல் அடிப்படையில் எழுத்தாளர்கள்,... அதனால் இவர்கள் அக்காலத்தில் புதிய சினிமா மற்றும் கலை இலக்கியம் குறித்து கட்டுரைகள் எழுதின ஆந்த்ரே பசினுடன் தொடர்பு கொண்டு தங்களது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். உடன் தங்களது விமர்சனங்களை அவ்வப்போது வெவ்வேறு பத்திரிக்கைகளுக்குக் கட்டுரைகளாகவும் எழுதி சிறுசிறு சலசலப்புகளை உருவாக்கினர். துவக்கத்தில் இக் கட்டுரைகளுக்கு ஆங்காங்கு வரவேற்பு கிட்டவே நமக்கென்று ஒரு இதழ் இருந்தால் இன்னும் கூடுதலாக எழுதிக்குவிக்கலாமே என்ற எண்ணம் இவர்களுக்குள் தோன்றியது... இதே சமயம் இவர்களது தத்துவ குருவான பாஸினுக்கு இதற்குமுன் அவர் தொடர்ந்து எழுதிவந்த இதழ் நிறுத்தப்பட ..அனைவரது ஒத்துழைப்புடன் பாஸின் அடுத்த சில நாட்களிலேயே ஒரு புதிய இதழைத் துவக்கினார். கையேது சினிமா. (Les Cahiers du cinema) சினிமா வரலாற்றில் சினிமா வளர்ச்சியில் ஏதேனும் ஒரு இதழுக்கு சிறுபங்களிப்பு இருக்குமானால் அது இந்த இதழுக்கு மட்டுமேயாகத்தானிருக்கும்.

1951 ல் இந்த இதழின் முதல் பிரதி வெளியான போது அடுத்த சில வருடங்களில் இந்த இதழ் மகத்தானச் சாதனைகளை செய்யப்போகிறது என யாரும் எதிர்பார்க்கவில்லை.

(பிரான்சின் புதிய அலை தொடர்ச்சி அடுத்த இதழில்)

Pin It