செம்மொழிதான் தமிழ் இதனை ஏற்க வைக்கத்
தில்லியுளார் இசைவுபெறல் மானக் கேடு !
நம்மொழியும் நம்நாடும் உயிரின் மேலாம் !
நாடுபடைத் தால்மொழியும் உயரும் தானே !
எம்மொழியும் நந்தமிழ்க்கே ஈடா காது !
இதற்கென்றே தமிழர்க்கோர் நாடு வேண்டும் !
இம்மெனுமுன் நம்நாட்டைப் படைக்க லாமே !
ஏன்தயக்கம்? தமிழரெலாம் அணிய மாவீர் !
தமிழ்மொழியே மொழிகளிலே உயர்ந்த தென்ற
தரவுலகோர் அறிந்திருப்பின் தமிழே இந்த
இமிழ்கடல்சூழ் வையமெலாம் பரந்து நிற்கும் !
இதுவுண்மை! ஆய்ந்தறிந்த உண்மை! நெல்லின்
உமியெனுமோர் வடமொழிநம் மொழியிற் சேர
உயர்நிலையைத் தமிழ்இழந்து தாழ்ந்த தன்றோ ?
அமிழ்தமிழ்து தமிழெனநாம் புகழ்ந்த போதும்
அதைவையம் அறிந்தேற்க வைத்தோ மல்லோம் !
தமிழ்தாழ்ந்து போனதொடு தமிழர் தாமும்
தரந்தாழ்ந்து போயினரே ! யார்யா ரோநம்
தமிழினத்தை அடிமைகொளத் தமிழர் முற்றாய்த்
தாழ்ந்தவர லாறுதனை விரித்தால் நீளும் !
தமிழ்தமிழென் றொருகூட்டம் சொல்லிக் கொண்டே
தமிழகத்தின் ஆட்சியிலும் அமர்ந்த நாளில்
தமிழருக்கு விடியலென நம்பி னோமே!
தமிழருக்கே அவர்கேடு சூழ்ந்து போனார் !
தமிழாலே ஆட்சிக்கு வந்தா ரேனும்
தமிழுக்கு யாதொன்றும் செய்தார் அல்லர் !
தமிழ்வளரத் தமிழருயர் வார்என் றோர்ந்து
தமிழையரே மொழியாக்கி யிருக்க வேண்டும் !
தமிழ்நாட்டை ஆள்வதற்கு வந்தோர் எல்லாம்
தம்மைத்தம் சுற்றத்தைப் பேணு வோரே !
தமிழ்தமிழர் உயர்வுக்கு வழியன் றுண்டு !
தமிழ்நாடு தனியாதல் ஒன்றே தீர்வு !