செம்மொழிதான் தமிழ் இதனை ஏற்க வைக்கத்

தில்லியுளார் இசைவுபெறல் மானக் கேடு !

நம்மொழியும் நம்நாடும் உயிரின் மேலாம் !

நாடுபடைத் தால்மொழியும் உயரும் தானே !

எம்மொழியும் நந்தமிழ்க்கே ஈடா காது !

இதற்கென்றே தமிழர்க்கோர் நாடு வேண்டும் !

இம்மெனுமுன் நம்நாட்டைப் படைக்க லாமே !

ஏன்தயக்கம்? தமிழரெலாம் அணிய மாவீர் !

தமிழ்மொழியே மொழிகளிலே உயர்ந்த தென்ற

தரவுலகோர் அறிந்திருப்பின் தமிழே இந்த

இமிழ்கடல்சூழ் வையமெலாம் பரந்து நிற்கும் !

இதுவுண்மை! ஆய்ந்தறிந்த உண்மை! நெல்லின்

உமியெனுமோர் வடமொழிநம் மொழியிற் சேர

உயர்நிலையைத் தமிழ்இழந்து தாழ்ந்த தன்றோ ?

அமிழ்தமிழ்து தமிழெனநாம் புகழ்ந்த போதும்

அதைவையம் அறிந்தேற்க வைத்தோ மல்லோம் !

தமிழ்தாழ்ந்து போனதொடு தமிழர் தாமும்

தரந்தாழ்ந்து போயினரே ! யார்யா ரோநம்

தமிழினத்தை அடிமைகொளத் தமிழர் முற்றாய்த்

தாழ்ந்தவர லாறுதனை விரித்தால் நீளும் !

தமிழ்தமிழென் றொருகூட்டம் சொல்லிக் கொண்டே

தமிழகத்தின் ஆட்சியிலும் அமர்ந்த நாளில்

தமிழருக்கு விடியலென நம்பி னோமே!

தமிழருக்கே அவர்கேடு சூழ்ந்து போனார் !

தமிழாலே ஆட்சிக்கு வந்தா ரேனும்

தமிழுக்கு யாதொன்றும் செய்தார் அல்லர் !

தமிழ்வளரத் தமிழருயர் வார்என் றோர்ந்து

தமிழையரே மொழியாக்கி யிருக்க வேண்டும் !

தமிழ்நாட்டை ஆள்வதற்கு வந்தோர் எல்லாம்

தம்மைத்தம் சுற்றத்தைப் பேணு வோரே !

தமிழ்தமிழர் உயர்வுக்கு வழியன் றுண்டு !

தமிழ்நாடு தனியாதல் ஒன்றே தீர்வு !

 
Pin It