மானமுள்ள தமிழனா நீ? புலிவில் மீனை

                மறந்தபடி இந்தியாவுள் கிடக்கின் றாயே!

ஊனமுற்ற அகதியைப்போல் இந்தி யர்க்குள்

                உருக்குலைந்து போனாயே! தமிழா கேள்!கேள்!

தேனமுதத் தமிழமுதை ஆங்கி லத்தீ

                தினம்வாட்டிக் கருக்குதம்மா என்ன செய்தாய்?

ஈனமிலாப் பிறவியாநாம்! அடடா போடா

                இருள்கிழிக்கும் ஒளிவாளைத் தொலைத்தாய் நீதான்!

மார்வாடி குசராத்தி தெலுங்கர் எல்லாம்

                மனம்மகிழ்ந்து வாழ்கின்றார் தமிழர் நாட்டில்

தேர்வாடிச் சிதைவதுபோல் தமிழர் மட்டும்

                தினம்வாடி சரிகின்றார்! தமிழர் மண்ணில்

ஏர்பூட்டக் காவிரியில் நீரே இல்லை!

                இனும்முல்லைப் பெரியாற்றில் உரிமை இல்லை

ஊர்குடிக்கும் பாலாறும் நமதாய் இல்லை!

                உதவுதற்குத் திராவிடத்தில் பசையே இல்லை

சுடுவதெல்லாம் ஆந்திரத்தான்! செத்து செத்து

                சுருள்வதெல்லாம் தமிழினத்தான்! இந்தி யாவில்

இருளறையில் கிடக்கின்றாய் தமிழா! நீயும்

                இயம்புகின்றாய் திராவிடனாய் என்ன செய்ய?

கருவிழந்த கர்ப்பமெனத் தமிழர் வாழ்வு!

                கரிகிற்றே திராவிடத்தால்! மீட்சி எந்நாள்?

உருமாறிப் போயிற்றே தமிழர் நாடு!

                உயிர்த்தெழும்பி வாவெளியே! புகழைத் தேடு!

கங்கைவரை வென்றவனே! இந்தி யாவுள்

                காலொடிந்த புலியாக நொண்டு கின்றாய்!

மங்கைசுகம் மறந்தபடி போர்க்க ளத்தில்

                மானப்போர் புரிந்தவனே! ஆனால் இன்றோ!

செங்கரும்பு சீழ்பிடித்த கதையாய் ஆச்சே!

                சிறுத்தையது சிலந்திவலை முடங்க லாச்சே!

பொங்குஒளி தெரியுதடா! தமிழா வா!வா!

                புதுவரவு தமிழ்த்தேசம் காண்போம்! ஆமாம்.

Pin It