தமிழ்நாட்டில் இந்தி மொழியைத் திணிக்கும் முயற்சியைக் கண்டித்து, 1938இலும், 1965இலும் நடைபெற்ற மொழிப் போரில் உயிரீகம் செய்த ஈகியரின் நினைவு நாள் ஒவ்வொரு ஆண்டும் சனவரி 25 அன்று கடைபிடிக்கப்படுகின்றது. அந்நாளை, மொழி – இனம் காக்க சூளுரைக்கும் நாளாக தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி ஒவ்வொரு ஆண்டும் நினைவு கூர்கிறது.

 சென்னைவீரவணக்கப் பேரணி

 சென்னை வள்ளலார் நகர் – மூலக்கொத்தளம் இடுகாட்டில் அமைந்துள்ள மொழிப் போர் ஈகிகள் தாளமுத்து, நடராசன், தருமாம்பாள் ஆகியோரது நினைவிடங்களில், வீரவணக்கம் செலுத்தும் வகையில், காலை 9.30 மணியளவில், வள்ளலார் நகர் பேருந்து நிலையம் அருகிலிருந்து, மூலக்கொத்தளம் இடுகாடு வரை, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் தலைமையில் வீரவணக்கப் பேரணி நடைபெற்றது. மூலக்கொத்தளம் இடுகாட்டில், மொழிப் போர் ஈகிகள் நடராசன், தாளமுத்து, மருத்துவர் தருமாமம்பாள் ஆகியோரது நினைவிடங்களில் மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.  தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் உதயன், பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல்.ஆறுமுகம், தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் க.அருணபாரதி, புலவர் இரத்தினவேலவர், தாம்பரம் த.இ.மு. செயலாளர் தோழர் வெற்றித்தமிழன், சென்னை நகர த.இ.மு. தலைவர் தோழர் சரவணன் உள்ளிட்ட த.தே.பொ.க. – த.இ.மு. முன்னணியாளர்களும், தோழர்களும் இதில் பங்கேற்றனர்.

சிதம்பரம்

மொழிப்போர் நாளன்று, சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள மாணவ ஈகி இராசேந்திரன் சிலைக்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச்செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் மாலை அணிவித்தார். 1938-1965 மொழிப் போராட்ட வரலாற்றை தமிழக அரசு பாடத்திட்டத்தில் சேர்க்க வலியுறுத்தியும், மொழிப்போர் ஈகியருக்கு ஊர் தோரும் நினைவுச் சின்னம் எழுப்பக் கோரியும், ஒருமொழிக் கொள்கையை வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. நிகழ்வில், த.தே.பொ.க பொதுக்குழு உறுப்பினர் தோழர் மா.கோ.தேவராசன், த.இ.மு. துணைப் பொதுச் செயலாளர் தோழர் ஆ.குபேரன், தமிழக மாணவர் முன்னணி நகர அமைப்பாளர் தோழர் வே.சுப்பிரமணிய சிவா, தமிழக உழவர் முன்னணி, நடுவண் குழு உறுப்பினர் திரு. எ.மதிவாணன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

திருச்சி

திருச்சி மாவட்டம், தென்னூர் - உய்யக்கொண்டான் ஆற்றங்கரையில் அமைந்துள்ள மொழிப்போர்  ஈகியர்கள் கீழப்பழூர் சின்னச்சாமி, விராலிமலை சண்முகம் ஆகியோரது  நினைவிடங்களில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.  தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி திருச்சி செயலாளர் தோழர் கவித்துவன் பாவலர் மு.வ.பரணர்,(த.க.இ.பே) தமிழக இளைஞர் முன்னணி துணைத் தலைவர் தோழர் கெ.செந்தில்குமரன், த.இ.மு. அமைப்பாளர் தோழர் தியாகராசன், தமிழ்க் கலை இலக்கியப் பேரவை செயலாளர் கவிஞர் இராசாரகுநாதன், மக்கள் உரிமைப் பேரவை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் த.பானுமதி, மற்றும், திருச்சி மாவட்ட தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்புகளின்  சார்பில்  திரு.வீ.ந.சோ., திருமாறன், முருகானந்தம், ஈகவரசன் ஆகியோரும், தோழர்கள் இனியன், தி.மா.சரவணன் உள்ளிட்டோரும் இதில் பங்கேற்றனர்.

மதுரை - ஆர்ப்பாட்டம் 

மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகில் திருவள்ளுவர் சிலை முன்பு, காலை 11 மணியளவில், மதுரை அரசு முதன்மை இடங்களில் இந்தி மொழியில் பெயர் பலகை வைப்பதை கண்டித்து தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அ.ஆனந்தன் தலையேற்றார். எம்.ஆர். மாணிக்கம்(தமிழர் தேசிய இயக்கம்), தோழர் மீ.த.பாண்டியன் (இ.பொ.க.(மா-லெ) மக்கள் விடுதலை), தோழர் ஐ.வெற்றிச் செல்வன் (புரட்சி கவிஞர் பேரவை), தோழர் கதிர்நிலவன் (தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்), தோழர் பரிதி (தமிழ் தமிழர் இயக்கம்), தோழர் பொன்மாறன் (தமிழிய வரலாற்று பேரவை), தோழர் மேரி (மகளிர் ஆயம்), வழக்கறிஞர் இராசேந்திரன் (சமநீதி வழக்கறிஞர் சங்கம்), வழக்கற்ஞர் சு.அருணாச்சலம் (மக்கள் உரிமை பேரவை), வழக்கறிஞர் கு.பகத்சிங், வழக்கறிஞர் அகவன், தோழர் இராசேந்திரன் (சித்திரை வீதி தானி ஓட்டுனர் நலச் சங்கம்), தோழர் பேரரிவாளன் (தமிழ்ப் புலிகள் இயக்கம்), பொற்கை பாண்டியன் (தமிழ் மீட்சி இயக்கம்) ஆகியோர் கண்டன உரை ஆற்றினர். நிறைவில், த.தே.பொ.க. மதுரை செயலாளர் தோழர் ரெ.இராசு நிறை வுரையாற்றினார்.

குடந்தை

தஞ்சை மாவட்டம், குடந்தை காந்தி பூங்கா அருகில், மாலை 6 மணியளவில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், மொழிப் போர் ஈகியர்களுக்கு வீரவணக்கத் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. நிகழ்வுக்கு த.தே.பொ.க. குடந்தை நகரச் செயலாளர் தோழர் விடுதலைசுடர் தலைமையேற்றார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா.வைகறை, விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி நிறுவனர் தோழர் குடந்தை அரசன், நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை அமைப்பாளர் வழக்கறிஞர் மணி.செந்தில், தோழர்கள் வளவன், ஈகவரசன் ஆகியோர் வீரவணக்கவுரை நிகழ்த்தினார். கூட்டத்தில், மொழிப் போர் வரலாற்றைப் பாடப்புத்தகத்தில் இணைக்க வேண்டும், குடந்தையைச் சேர்ந்த மொழிப்போர் ஈகி தாளமுத்து அவர்களுக்கு குடந்தையிலேயே நினைவுச் சின்னம் எழுப்ப வேண்டும், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் நிலத்தை அபகரிக்கும் முயற்சியைத் தமிழக அரசு கைவிட்டு,  தமிழ் வளர்ச்சிக்கு அப்பல்கலைக்கழகத்தை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிறைவில், த.இ.மு. நடுவண் குழு உறுப்பினர் தோழர் ச.செந்தமிழன் நன்றியுரையாற்றினார்.

தஞ்சை நகரம்

தஞ்சை பழையப் பேருந்து நிலையம் அருகில் காலை 10 மணியளவில் நடைபெற்ற மொழிப்போர் ஈகியர் வீரவணக்க நிகழ்வுக்கு த.தே.பொ.க. தஞ்சை நகரச் செயலாளர் தோழர் இரா.சு.முனியாண்டி தலைமையேற்றார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தஞ்சை மாவட்ட செயலாளர் தோழர் குழ.பால்ராசு சிறப்புரை நிகழ்த்தினார். த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் பழ.இராசேந்திரன், நகரத் துணைச் செயலாளர் தமிழ்ச் செல்வன், தமிழக இளைஞர் முன்னணி தோழர் சி.குணசேகரன், தமிழக உழவர் முன்னணி தோழர் காசிநாதன் உள்ளிட்ட முன்னணியாளர்களும், தோழர்களும் இதில் திரளாகப் பங்கேற்கின்றனர்.

செங்கிப்பட்டி

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில், காலை 10 மணியளவில், மொழிப் போர் ஈகியருக்கு, வீரவணக்கம் செலுத்தப்பட்டது. நிகழ்வுக்கு, தமிழக இளைஞர் முன்னணி துணைத் தலைவர் தோழர் கெ.செந்தில்குமரன் தலைமையேற்றார். த.இ.மு. பூதலூர் ஒன்றியத் தலைவர் தோழர் அ.தேவதாசு, புதுக்கோட்டை த.இ.மு. செயலாளர் தோழர் மணிகண்டன் உள்ளிட்ட தோழர்கள் இதில் பங்கேற்றனர்.

Pin It