தேர்தல் ஆணையம்  தமிழகத் தேர்தலில் கெடுபிடி காட்டியதால்தான் கட்சிகளின் பண விளையாட்டு குறைந்துள்ளது. பரப்புரை என்ற பெயரில் அவர்கள் நடத்தும் அராசகங்கள் குறைந்தன.  இந்த நிலையில் நீங்கள் தேர்தல் ஆணையத்தைத் தொடர்ந்து கண்டித்து வருவது சரியா?

வாக்குப் பதிவிற்கு முன்னால் கடைசி இரு நாட்களில் பணம் கொண்டு போவதைத் தடுக்கும் சோதனைகளை நிறுத்திக் கொண்டது தேர்தல் ஆணையம். தி.மு.க. அணியும் அ.இ.அ.தி.மு.க. அணியும் பகிரங்கமாக வீடு வீடாகப் பணம் கொடுத்தார்கள். ஆணையம் தடுக்கவில்லை. அதைக் கண்டுகொள்ளவும் இல்லை.

துணிச்சலாகப் பணம் கொடுத்த தொகுதிகளில் வாக்காளர்களுக்குக் கூடுதலாகப் பணம் கிடைத் திருக்கிறது.  அஞ்சி அஞ்சிக் கொடுத்த இடங்களில் வாக்காளர்களுக்குத் தொகை குறைவாகக் கிடைத்திருக்கிறது.

திருவரங்கம் தொகுதியில் ஒரு பகுதியில் ஒரு வாக்காளர்க்கு ரூபாய் ஐநூறும் மறுபகுதியில் வாக்காளர் ஒருவர்க்கு ரூபாய் ஆயிரமும் கொடுத்துள்ளார்கள் ஆளுங்கட்சியினர்.  அ.இ. அ.தி.மு.க.வும் கொடுத்தது ஆளுங்கட்சியை விடக் குறைவாகக் கொடுத்தது.

தஞ்சாவூர், புதுக்கோட்டை போன்ற தொகுதிகளில் ஆளுங்கட்சி, வாக்குக்கு இருநூறு ரூபாயும் அண்ணா தி.மு.க. நூறு ரூபாயும் கொடுத்துள்ளன.

வாக்குப் பதிவு விழுக்காடு கூடுதலானதற்குப் பணம் பரவலாக ------------------------வழங்கப்பட்டதும் ஒரு காரணம்.

தேர்தல் ஆணையம் அசாம், மேற்கு வங்க மாநிலங்களில், தமிழ் நாட்டில் விதித்த கட்டுப்பாடுகளை விதிக்கவில்லை என்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். கல்கத்தா சுவர்களில் கட்சிகளின் தேர்தல் விளம்பரங்களைப் பார்த்ததாகவும், அசாமில் தேர்தல் சின்னங்களுடன், தொப்பி, பனியன் அணிந்து கொண்டு தொண்டர்கள் பணியாற்றி யதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

பதிவான வாக்குக் கணிப்பொறிகளை ஒரு மாதம் மூன்றடுக்குப் பாதுகாப்புப் போட்டு பாதுகாப்பதற்கும் கண்காணிப்பதற்கும் அது தொடர்பான வேலைகளைக் கவனிக்கவும் அரசு எந்திரம் தேவையில்லாமல் ஈடுபடுத்தப்பட்டு, மக்களுக்கான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. கட்சிக்காரர்களும் முறைபோட்டு வாக்குப் பதிவு கணிப்பொறிகள் உள்ள அறைகளைக் காவல் காத்து வருகிறார்கள். போட்டியிட்ட கட்சிக் காரர்களுக்கு ஒரு மாத மன உளைச்சல். இவையெல்லாம் தேர்தல் ஆணையத்தின் அராசகம்.

தமிழ்நாட்டின் மீது தேர்தல் ஆணையத்திற்குக் காழ்ப்புணர்ச்சி இல்லையென்றால் தேர்தலை மே 10 ஆம் நாள் வாக்கில் வைத்து ஒரு மாத கெடுபிடிகளையும் ஊதாரித்தனங்களையும் தவிர்த்திருக்கலாம்.

மக்கள் வரிப்பணத்தை இவ்வளவு அலட்சி யமாக அள்ளி இரைக்க, மன்னர் ஆட்சியில் கூட அச்சப்படுவார்கள்.

இலங்கை அரசின் போர்க்குற்றங்களை விசாரிக்க ஆணையம் அமைக்கக் கோரி ஐ.நா. பொதுச் செயலாளருக்கு அளிக்கும் விண்ணப்பத்தில் நாடுகடந்த தமிழீழ அரசு தமிழ்நாட்டில் கையொப்பம் வாங்குகிறது. த.தே.பொ.க. அக்கையெழுத்து இயக்கத்தில் ஈடுபடவில்லையா?

நாடு கடந்த தமிழீழ அரசு வழங்கியுள்ள விண்ணப்பத்தில் இராசபட்சேயைப் போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்ற நேரடிக் கோரிக்கை இல்லை. இலங்கையின் அரசியல் தலைமை மற்றும் படைத்தலைமை ஆகியவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுதான் உள்ளது. இது சரியன்று.

சிலி நாட்டில் போர்க்குற்ற விசாரணை கோரிய போது அந்நாட்டின் குடியரசுத் தலைவர் பினோ சே பெயரைக் குறிப்பிட்டும், போஸ்னியாவில் போர்க்குற்றவிசாரணை கோரிய போது செர்பியக் குடியரசுத் தலைவர் மிலோ சோவிச் பெயரைக் குறிப்பிட்டும் தெற்கு சூடானில் போர்க்குற்ற விசாரணை கோரிய போது சூடான் அதிபர் அல்பசீர் பெயரைக் குறிப்பிட்டும்தான் அங்கங்கே இயக்கம் நடந்தது. இலங்கையில் மட்டும் இராசபட்சே பெயரைக் குறிப்பிடக் கூடாதா? த.தே.பொ.க. அக்கையெழுத் தியக்கத்தில் கலந்து கொள்ளாததற்கு இது மட்டும் காரணமன்று.

நாடு கடந்த தமிழீழ அரசின் நாடாளுமன்றத் திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த புலிகள் ஆதரவாளர்கள் 29 பேரைப் புறக்கணித்து விட்டார்கள் அந்த “அரசின்“ தலைவர்கள். புலிகள் இயக்கத்திற்கு 2009 மே 18 வரை மக்கள் திரள் பணியாற்றியவர்கள் இந்த 29 பேரும்..

தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் தலைமையை ஏற்றுக் கொண்ட, புலம் பெயர்ந்த தமிழீழ மக்கள் மற்றும் செயல்பாட்டாளர்கள் யாரும் நாடு கடந்த தமிழீழ அரசை ஏற்கவில்லை. மேற்கண்ட காரணங்களால் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி நாடு கடந்த தமிழீழ அரசை ஆதரிக்கவில்லை. ஆகவே அதன் தலைமையின் கீழ் நடைபெறும் செயல்களில் ஈடுபடவில்லை.

மற்றபடி இராசபட்சேக் கும்பலைப் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த பல வடிவங்களில் கூட்டாகவும், தனித்தும் இயங்கி வருகிறது த.தே.பொ.க.

தன்னைப் போர்க்குற்றவாளியாக ஐ.நா. மன்றம் விசாரிக்காமல் இருக்க இந்தியா உதவ வேண்டும் என்று இராசபட்சே வேண்டுகோள் விட்டுள்ளாரே இந்தியா உதவுமா?

இந்தியா இராசபட்சேவுக்கு உதவாமல் தமிழனுக்கா உதவும்? ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்த போரில், முதல் குற்றவாளி இராசபட்சே என்றால் இரண்டாவது குற்றவாளி மன்மோகன்சிங். இராசபட்சேக்கு உதவுவது என்பது மன்மோகனும் சோனியாவும் தங்களுக்குத் தாங்களே உதவிக் கொள்வது போன்றதுதான்.

தாருஸ்மான் தலைமையிலான மூவர் குழு அறிக்கையை எந்த வகையில் முறியடிக்கலாம் என்று கலந்தாய்வு செய்வதற்காக இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ், இந்தியப் பாதுகாப்பு அறிவுரையாளர் சிவசங்கர் மேனன் (இவ்விருவரும் மலையாளிகள்) இந்தியப் பாதுகாப்புச் செயலர் பிரதீப் குமார் மூவரும் இன்னும் சில நாள்களில் கொழும்பு போய் இராசபட்சேயுடன் பேச உள்ளார்கள்.

ஈழத் தமிழர்களை இனப் படுகொலை செய்ததில் மற்றும் போர்க்குற்றம் புரிந்ததில் இந்திய அரசின் பங்கையும் அம்பலப்படுத்தி மாபெரும் மக்கள் இயக்கம் தமிழ்நாட்டில் நடந்தால்தான், இந்தியாவின் பேச்சைக் கேட்க உலக நாடுகள் மறுக்கும். ஐ.நா. மன்றம் இராசபட்சேக் கும்பலையாவது குற்றக் கூண்டில் நிறுத்த வாய்ப்பு ஏற்படும்.

அலைக்கற்றை வழக்கில் ஆ.இராசாவை தி.மு.க. கைவிட்டுவிட்டது என்று கருதலாமா?

ஆ.இராசாவையும், கலைஞர் தொ.கா. மேலாண் இயக்குநர் சரத்குமாரையும் சிக்க வைத்துவிட்டுக் கலைஞர் குடும்பத்தைக் காப்பாற்றுவது என்று உத்தி வகுத்திருப்பதாகத் தெரிகிறது. த.தே.தமிழர் கண்ணோட்டம் (மே 1-15, 2011) இதழ் ஆசிரியவுரையில், தயாளு அம்மையாரை அரசுத் தரப்பு சாட்சியாக மாற்றியுள்ளனரா என்று ஐயம் எழுப்பினோம். அது இப்பொழுது உறுதியாகிறது. கனிமொழியே      , தமது பிணை மனுவில், “எனக்கு ஒன்றும் தெரியாது. எல்லாம் இராசா வுக்கும் சரத்குமாருக்கும் தான் தெரியும்” என்று கூறிவிட்டார்.

கொள்ளைக் கூட்டத்தினர் கூட இப்படி ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுத்துக் கொள்ள மாட்டார்கள். அலைக்கற்றை ஊழல் வழக்கில் நடுவண் புலனாய்வுத்துறையுடன் தன்னையும் ஒருவாதியாக சேர்த்துக் கொள்ளச் சொல்லி சுப்பிரமணியசாமி உச்சநீதிமன்றத்தில் வாதிடுகிறாரே ஏன்?

பின்னால் பேரம் பேசத்தான்!
Pin It