உலக உள்ளூர் சினிமாவுக்குள் ஒரு பயணம் - 2

இன்றைக்கும் சிறு நகரமொன்றை ரயிலிலோ ... பேருந்திலோ ... நீங்கள் கடந்து செல்லுகையில், தன் பிரம்மாண்டத்தை இழந்துவிட்டு, முட்புதர் மண்டிக்கிடக்கும் பாழடைந்த திரையரங்குகளை எங்காவது காண நேரிடலாம். இளமையின் வசீகரம் தொலைத்து நிற்கும் கிழட்டு கணிகையைப் போல அந்தத் திரையரங்கம் உங்களை கடந்து போகையில், உங்கள் மனம் உங்களின் பால்ய காலத்துக்குத் திரும்ப நேரிடலாம்.

ஒவ்வொருவரின் பால்ய காலத்து நினைவடுக்குகளிலும் கூடப்படித்த ஒரு பெண்ணோ, நேசிப்புக்குரிய ஒரு டீச்சரோ, நிழலாய் பிரியாமல் கூடவே திரிந்த நட்போ, அழியாமல் இருப்பதைப் போலவே, அதாவது ஒரு திரையரங்கமும் உங்கள் நினைவில் அழிக்க முடியாமல் படிந்திருக்கும். அம்மாவின் முந்தானைக்குள் ஒளிந்தபடி இனம் புரியாத ஒரு மிரட்சியுடன் முதன் முதலில் பார்த்த சினிமாவும் ... முதன் முதலில் போன திரையரங்கம் மங்கலான ஏடுகளுடன் இன்னமும் நினைவிருக்கக்கூடும்.

சின்னஞ்சிறு வயதில் சினிமா தியேட்டர் குப்பைகளில் தேடிப் பொறுக்கியெடுத்த பிலிம் துண்டுகளை வைத்து, வீட்டுச் சுவரிலோ. இழுத்துக்கட்டிய அப்பாவின் பழைய வெள்ளை வேட்டியிலோ படம் காட்டிய அனுபவமும் எல்லாருக்கும் இருக்கும். அல்லது சினிமா டிக் கெட்டுக்காக ஊறுகாய் வற்ற லையோ, மல்லாட்டை காய் களையோ பண்ட மாற்று கொடுத்து, தெருப்பசங்க காட்டிய சினிமாவைப் பார்த்த அனுபவமா வது நிச்சயம் இருக்கும். இப்படி ஓவ்வொருவருக்குள்ளும் சினிமாவும், சினிமா திரையரங்கும் எதாவது ஒருவிதத்தில் பதிவாகியிருக்கும்.

ஆயிரம் பேர் ஒரேநேரத்தில் ஒன்றாக அமர்ந்து தனித்தனியாகவும், அதே சமயம் கூட்டாகவும் கனவு காண்கிற அத்தகைய திரையரங்குகள் குறித்து சொல்வதற்கு. நம் ஒவ்வொருவரிடமும் நிச்சயம் ஒரு கதை மிச்சமிருக்கும், அப்படி சொல்லப்பட்ட ஒரு கதையின் திரைவடிவம்தான் சினிமா பாரடைசோ (ஊiநேஅய ஞயசயனளைடி) என்கிற இத்தாலிய மொழித் திரைப்படம். ஒரு சிறுவனுக்கும் திரையரங்கிற்குமான உறவை உயர்ந்த அழகியலோடு சொல்கிறது இப்படம், சல்வடோர் டி விட்டா. இவர் ரோம் நகரத்தின் பிரபலமான திரைப்பட இயக்குநர். சில உறுதியான லட்சியங்களுடன் 30 வருடங்களுக்கு முன்பு தனது கிராமத்திலிருந்து வந்து ரோமில் திரைப்படத் துறையில் நிலையான இடத்தை பிடித்தவர். தனது பணிகளை முடித்துக்கொண்டு வீடு திரும்பும் அவருக்கு அவரது சொந்த ஊரில் இருந்து வந்த ஒரு செய்தி காத்திருக்கிறது,. சொந்த ஊரில் அல்ஃபிரதோ இறந்து விட்டார் என்ற அந்த செய்தி சல்வடோருக்குச் சொல்லப்பட்டதும், தனிமையில் அவரது நினைவுகள் சொந்த ஊருக்குச் செல்கிறது, பிளாஷ் பேக்கில் பயணம் தொடங்குகிறது.

சல்வடோர் அப்போது எட்டு வயது சிறுவன், டோட்டோ என்ற செல்லப் பெயருடன் பள்ளிக்குச் செல்வது, மற்ற நேரங்களில் அங்கிருக்கும் தேவாலயத்தில் பாதிரியாருக்கு உதவுவது என்று போய்க் கொண்டிருக்கும் டோட்டோவுக்கு, அந்த ஊரின் மையத்தில் இருக்கும் சினிமா பாரடைசோ ஏன்ற திரையரங்கத்தின் ஆபரேட்டரான அல்ஃபிரதோவின் நட்பு கிடைக்கிறது, 60 வயதைத் தாண்டிவிட்ட முதியவரான அல்ஃபிரதோவும் ஏட்டு வயது சிறுவன் டோட்டோவும் நண்பர்களாகிறார்கள். இந்த நட்பால் எந்நேரமும் தியேட்டரிலேயே இருக்கிற வாய்ப்பும் டோட்டோவுக்குக் கிடைக்கிறது, அந்தத் தியேட்டரில் திரையிடப்படும் எல்லாப் படங்களையும் அந்த ஊரின் பாதிரியார்தான் முதலில் பார்ப்பார். படத்தில் இருக்கும் முத்தக் காட்சிகளை தணிக்கை செய்து வெட்டிவிடுவார். அல்ஃபிரதோவும் அவ்வாறே வெட்டிவிட்டு படத்தைத் திரையிடுவார். அப்படி வெட்டப்பட்டு கிடக்கும் முத்தக்காட்சிகள் கொண்ட திரைப்படச் சுருளைத் தனக்குத் தர முடியுமா என்று டோட்டோ கேட்கிறான், நேரம் வரும்போது தருகிறேன் என்கிறார் அல்ஃபிரதோ.

டோட்டோவின் அப்பா ராணுவத்திற்கு போய்விட்டார், அவனது அம்மா எப்போதும் தனிமையில் எம்பிராய்டரி போட்டுக் கொண்டேயிருக்கிறாள், டோட்டோவுக்கு ஒரு தங்கையும் உண்டு, ஒரு நாள் பால் வாங்கி வரச்சொல்லி அம்மா கொடுத்த பணத்தில் சினிமா பார்க்கிறான் டோட்டோ. படம் முடிந்து வெளியே வரும்போது, தியேட்டர் வாசலில் காத்திருக்கும் தாயிடம் 5 ரூபாய் தொலைந்துவிட்டதாக பொய் சொல்கிறான் டோட்டோ, இதனால் ஆத்திரமடையும் தாய் அவனை அடிக்கும் போது, அங்கு வரும் அல்ஃபிரதோ, வழியில் கிடைத்ததாகச் சொல்லி தன்னிடமிருக்கும் ஐந்து ரூபாயைக் கொடுத்து டோட்டோவைக் காப்பாற்றுகிறார், நீங்கதான் இவனை கெடுக்கறீங்க என்று அல்ஃபிரதோவை டோட்டோவின் அம்மா திட்டுவதால், இனி ஆபரேட்டர் அறை பக்கம் வராதே என்று கண்டிக்கிறார் அல்ஃபிரதோ.

முதியோர் கல்வியில் பயிலும் அல்ஃபிரதோ, தேர்வு எழுதுவதற்காக டோட்டோவின் வகுப்புக்கு வருகிறார், கேள்விக்குப் பதில் தெரியாமல் தவிக்கும் அல்ஃபிரதோ, டோட்டோவிடம் உதவுமாறு கேட்கிறார், பதிலுக்கு, எனக்கு புரஜெக்டரை இயக்க சொல்லித் தருவாயா? என்று டோட்டோ நிபந்தனை வைக்கிறான். ஆல்ஃபிரதோவும் ஒப்புக்கொண்டு டோட்டோவின் உதவியுடன் தேர்வை எழுதி முடிக்கிறார். அடுத்த நாளிலிருந்து புரஜெக்டரை இயக்குவது பற்றி கற்றுத் தருகிறார் அல்ஃபிரதோ. மிகுந்த ஆர்வத்துடன் கற்றுக்கொள்கிறான் டோட்டோ.

ஒரு நாள் தியேட்டரில் கட்டுக்கடங்காத கூட்டம்.

கடைசிக் காட்சி ஓடிக் கொண்டிருக்கிறது. மறுநாள் வேறு புதிய படம் திரையிடப் போகிறார்கள். அதனால் இப்போது அந்தப் படத்தை கடைசியாக பார்த்துவிட கூட்டம் முண்டியடிக்கிறது. அப்போது அல்ஃபிரதோ புரஜெக்டரின் லென்ஸைத் திருப்பி, அருகில் இருக்கும் வீட்டுச் சுவரின் மீது படத்தைத் திரையிடுகிறார், அதைப் பார்த்து மக்கள் கூட்டம் உற்சாகம் கொள்கிறது. அப்போது திடீரென புரஜெக்டர் சூடாகி, திரைப்படச் சுருள் பற்றியெரிந்து தியேட்டரில் தீப்பற்றிக் கொள்கிறது. பற்றி எரியும் தீயில் மயங்கி விழும் அல்ஃபிரதோவை டோட்டோ காப்பாற்றுகிறான். ஆனாலும் அந்த விபத்தில் ஆல்ஃபிரதோ கண்பார்வை ஈழந்து விடுகிறார், தீக்கிரையான தியேட்டரை, லாட்டரியில் பெரும் பணம் பெற்ற புதுப்பணக்காரன் ஒருவன் வாங்கி புதுப்பிக்கிறான். புதிதாக உருவான பாரடைசோ திரையரங்கின் ஆபரேட்டர் வேலை டோட்டோவுக்கு கிடைக்கிறது. ஆனால், இது உனக்கு வேண்டாம். நீ நன்றாக படிக்க வேண்டும் என்று ஆல்ஃபிரதோ வழிப்படுத்துகிறார். டோட்டோ படித்துக்கொண்டே மாலை நேரங்களில் தியேட்டரில் வேலை பார்க்கிறான்.

இப்போது இளைஞனாகிவிட்ட டோட்டோ, தனக்குக் கிடைத்த எட்டு எம்,எம், கேமிராவை வைத்துக் கொண்டு காண்பதையெல்லாம் படம் பிடிக்கிறான். அப்படியொரு சந்தர்ப்பத்தில் எலினா என்ற பெண் அவனது காமிராவுக்குள் விழுகிறாள். அதே சமயத்தில் எலினா மீது காதலில் விழுகிறான் டோட்டோ. காமிராவில் படம் பிடிப்பது போலவே எலினா மீதான டோட்டோவின் காதலும் சுருள் சுருளாய் வளர்கிறது. ஆனால் அவனது காதல், அல்ஃபிரதோவுக்குக் கவலையளிக்கிறது, அந்த காதல் வேண்டாம் என்று சொல்கிறார். ஆனால் காதலுக்குக் காதும் கிடையாதல்லவா?எலினாவின் தந்தைக்கு பணிமாறுதல் கிடைப்பதாலும், டோட்டோ ராணுவ சேவைக்குச் செல்ல வேண்டியிருப்பதாலும் இருவரும் பிரிய நேரிடுகிறது. கடைசியாக ஒரு வியாழக்கிழமையன்று திரையரங்கில் இருவரும் சந்தித்துக் கொள்வதென்று முடிவு செய்கிறார்கள். திரைக்கதையின் முடிச்சினால் இருவரும் சந்திக்க இயலாமல் போய்விடுகிறது. ராணுவ சேவைக்கு சென்றுவிட்ட டோட்டோ அங்கிருந்து எலினாவுக்கு எழுதும் கடிதங்கள் அனைத்தும் திரும்பி வருகின்றன.

ராணுவ சேவை முடித்து திரும்பி வரும் டோட்டோவுக்கு தியேட்டரில் வேலை இல்லை. எலினாவும் ஊரில் இல்லை. பித்துப் பிடித்து அலையும் டோட்டோவை, ஊரை விட்டுப் போகச் சொல்கிறார் அல்ஃபிரதோ. ரயில் நிலையத்தில் வழியனுப்பும் போது, நீ பெரிய ஆளாக வேண்டும். பழைய காதல் நினைவுகளை மறந்துவிடு, ஊருக்குத் திரும்பி வராதே. எனக்குக் கடிதம் கூட எழுதாதே. எந்த வேலையாக இருந்தாலும் தியேட்டர் ஆபரேட்டர் வேலையை போல நேசித்து செய். மனதை அலைய விடாதே என்று சொல்லியனுப்புகிறார் அல்ஃபிரதோ.

பிளாஷ்பேக் முடிகிறது. அப்போது ஊரைவிட்டுப்போன சல்வதோர் என்கிற டோட்டோ இப்போதுதான் ... 30 வருடங்கள் கழித்து சொந்த ஊருக்கு வருகிறார். இளைஞனாக ரயிலேறியவன், வெற்றி பெற்ற திரைப்பட இயக்குநராக விமானத்தில் வந்து இறங்குகிறான். ஊரும் உறவுகளும் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போய் இருக்கிறது.

அன்று அல்ஃபிரதோவின் இறுதி ஊர்வலம் நடக்கிறது, மிகக்குறைந்தபேரே இருக்கும் அந்த ஊர்வலத்தில் தனது பால்ய காலத்து நண்பர்கள் சிலர் இருப்பதையும் காண்கிறார் சல்வடோர்,. சினிமா பாரடைசோ தியேட்டர் அருகே சவ ஊர்வலம் சிறிது நேரம் நின்று செல்கிறது. அந்த ஊர்வலத்தில் பழைய தியேட்டர் உரிமையாளரையும் பார்க்கிறார். அவர் தியேட்டரை விற்றுவிட்டதாகவும், நாளை தியேட்டரை இடித்துத் தள்ளப்போகிறார்கள் என்ற துயரச் செய்தியையும் கூறுகிறார். அந்தத் தியேட்டரை தனிமையில் சென்று பார்க்கிறார் சல்வடோர். பாழடைந்த ஆபரேட்டர் அறை, இடிந்து கிடக்கும் சுவர்கள் என எல்லாவற்றையும் ஈரம் கசியும் நினைவுகளோடு பார்க்கிறார் சல்வடோர்.

தனது காதலி எலினாவை அந்த ஊரில், முப்பது வருடங்கள் கழித்து ஒரு காருக்குள் சந்தித்துப் பேசுகிறார். அவர்களின் கடைசி சந்திப்பு நிகழாமல் போனதற்கு அல்ஃபிரதோதான் காரணம் என்றும், அன்று உன்னை சந்தித்திருந்தால் உன் வாழ்க்கை மாறியிருக்கும். இவ்வளவு பெரிய ஆளாக நீ வந்திருக்க முடியாது என எலீனா சொல்கிறாள். அல்ஃபிரதோவை நினைத்து கலங்குகிறார் சல்வடோர், அல்ஃபிரதோவின் மனைவி சல்வடோரிடம், அல்ஃபிரதோ கொடுக்கச் சொன்னதாக படச்சுருள் அடங்கிய ஒரு பெட்டியை தருகிறாள், அடுத்த நாள் சினிமா பாரடைசோ இடித்துத் தள்ளப்படுகிறது. ஊர் மக்கள் தியேட்டரின் முன் கலங்கி நிற்கிறார்கள். நொறுங்கி விழும் கட்டடத்தின் தூசி மேலெழும்ப கனமான நினைவுகளுடன் ஊருக்குத் திரும்புகிறார் சல்வடோர்.

அவரது அடுத்தப் படத்திற்குக் கிடைத்திருக்கும் விருதுக்காக பாராட்டவும், பேட்டி காணவும் காத்துக்கிடப்பவர்களை புறக்கணித்துவிட்டு, யாருமற்ற தனிமை நிறைந்த திரையரங்கில் அல்ஃபிரதோ கொடுத்தப் பெட்டியிலிருந்த படச்சுருளை திரையிட்டுப் பார்க்கிறார். சிறு வயதில் அல்ஃபிரதோவிடம் கேட்ட முத்தக் காட்சிகள் நிரம்பிய படச்சுருள் அது, திரையில் அடுத்தடுத்து முத்தக் காட்சிகள் ஓடுகிறது. விதவிதமான மனிதர்களின் விதவிதமான முத்தக் காட்சிகளுடன் கண்ணீர் வழிய அல்ஃபிரதோவை எண்ணி சல்வடோர் வியப்பதுடன் நிறைவடைகிறது படம்.

1988ல் வெளியான இப்படத்தின் இயக்குநர் கி செப்பே டொர்னாடோரே. இத்தாலியில் பிறந்த இவர் நாடக, புகைப்படக் கலைஞராக இருந்தவர். 1986ல் தி புரொபசர் படத்தை இயக்கி சினிமாவுக்கு வந்தவர். இவரது 2வது படமான சினிமா பாரடைசோ ஆஸ்கர் உள்ளிட்ட எராளமான விருதுகளை அள்ளிக் குவித்திருக்கிறது, 185 நிமிடங்கள் ஓடக்கூடியதாகத் தயாரான இப்படம் முதலில் 155 நிமிடங்கள் ஓடக்கூடியதாகத்தான் திரையிடப்பட்டது. பின்னர் மீண்டும் 185 நிமிடப் படமாகவும் திரையிடப்பட்டது. ஒரு திரையரங்கை மையப் புள்ளியாகக் கொண்டு உருவாக்கப்பட்ட அப்படம் உலகின் மிகச்சிறந்த படங்களில் ஒன்றாக கொண்டாடப்படுகிறது.

டிவிடி தொழில்நுட்பத்தின் வருகையால் இன்று திரையரங்குகள், வணிக வளாகங்களாகவும், கல்யாண மண்டபங்களாகவும் மாறிவிட்டன, நமது வீடுகளேக் கூட திரையரங்குகளாக மாறிப்போய்விட்டன. இங்கு உயரிய தொழில் நுட்பத்துடனான படத்தை நாம் காண முடியும் என்றாலும், அது கூட்டத்தோடு உட்கார்ந்து கனவு காண்கிற அனுபவத்தை தந்து விட முடியுமா?சினிமாவை நேசிப்பவர்களும், திரையரங்கை நேசிப்பவர்களும் இந்தப் படத்தை பார்த்தால், தங்கள் ஊரிலும் இடிக்கப்பட்டு தரைமட்டமாகிவிட்ட எதாவதொரு திரையரங்கின் நினைவுகளில் மூழ்கிப் போவதை தவிர்க்க இயலாது, தவிர்க்கவும் கூடாதுதானே.

பயணம் தொடரும்....

Pin It