சிட்னி ஒரு சிறிய ரெட்டைவால் குருவி. அதனுடைய இறகுகளில் அழகிய நீலநிறம் படர்ந்திருந்தது. அதன் மார்பு வெண்மை நிறத்தில் இருந்தது. எல்லா ரெட்டைவால் குருவிகளையும் போல சிட்னியும் உயரே உயரே பறக்கவும் வட்டமடிக்கவும் விரும்பியது.

வசந்த காலத்தில் பிறந்த சிட்னி கோடைகாலம் நெருங்க, நெருங்க பறப்பதில் சிறந்து விளங்கியது. கோடைகாலம் இலையுதிர்காலமாக மாறியபோது சிட்னி மிகுந்த தைரியமும், துணிச்சலும் கொண்ட பறவையாகி விட்டது. வானத்தில் மிக அலட்சியமாக பறந்து விளையாடியது. அதனுடைய பெற்றோர்கள்.

“கவனமாயிரு சிட்னி! நீ எங்கே பறக்கிறாய் என்பதில் கவனமாயிரு.. இல்லாவிட்டால் நீ ஏதாவதொரு புகைபோக்கியினுள் விழுந்து விடலாம்..

எங்களை விட்டு வெகுதூரம் போகாதே....”என்று சிட்னியை எச்சரித்தார்கள். அதனுடைய அப்பா, “இன்று மாலை நாம் அனைவரும் நீண்ட பிரயாணம் போகிறோம். நீ எங்கும் போய்விடாதே..” என்று சொன்னார்.

“கவலைப்படாதீங்க.. நான் தூரமாய்எங்கும் போக மாட்டேன்...”என்று சிட்னி சொன்னது. தொலைபேசிக் கம்பிகளில் மற்ற ரெட்டைவால் குருவிகள் எல்லாம் ஒவ்வொன்றாய் வந்து சேர்ந்து கொண்டிருந்தன. அவர்கள் எல்லோரும் போக வேண்டிய வழியைப்பற்றி சளசளவென்று பேசிக்கொண்டிருந்தனர். அவர்களுக்கு இந்தப் பிரயாணம் மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக இருந்தது. திடீரென்று சிட்னியின் கண்களில் ஏதோ மின்னியது. அருகிலிருந்த மாடி மீது பளீரென்ற நிறத்தில் ஒரு தும்பி..

அது ஒரு புகைபோக்கியிலிருந்து மற்றொரு புகைபோக்கிக்குப் பறந்து கொண்டிருந்தது. அப்படி அது பறக்கும்போது சூரியன் தும்பியின் சிறகுகளில் வானவில்லின் அத்தனை நிறங்களையும் அள்ளித் தெளித்து விளையாடினான். -சிட்னி அதைக் கவனித்துக் கொண்டிருந்தது. பின்னர் தொலைபேசிக் கம்பியிலிருந்து கிளம்பி தும்பியை விரட்டியது. தும்பி எப்படியெல்லாம் பறக்கிறதோ அப்படியெல்லாம் சிட்னியும் பறந்து அதைப் பழிப்பு காட்ட முயற்சித்தது. ஆனால் ஒரு நொடி அதன் கண்கள் திரும்பிய போது தும்பி எங்கோ மறைந்து விட்டது.

“ஓகோ கண்ணாமூச்சி விளையாடுகிறதா?” என்று நினைத்துக் கொண்ட சிட்னி கட்டடத்தின் தாழ்வாரத்தில் அங்கும் இங்கும் பறந்து சென்றது.

“ஒரு வேளை அந்தப் புகைபோக்கிக்குள் ஒளிந்திருக்கலாம்” என்று நினைத்தது. உடனே நீண்ட மூச்சிழுத்துவிட்டு தலைகீழாக புகைபோக்கிக்குள் பாய்ந்தது. திடீரென எல்லாம் கருப்பாகி விட்டது. சிட்னியின் கண்களில் கரிப்புகை சூழ்ந்து விட்டது. வானத்தை நோக்கி புரண்டு எழுந்த வந்த மேகம் போன்ற கனமான புகை சிட்னியின் வாய்க்குள் போய் விட்டது. ஒரு நொடி அந்த ரெட்டை வால் குருவிக்கு மூச்சு விடவே முடியவில்லை. புகை போக்கியின் பக்கச் சுவர்களில் மோதி அதனுடைய சிறகுகள் காயமடைந்து விட்டன. அதற்கு தான் எந்த வழியில் போய்க் கொண்டிருக்கிறோம் என்று தெரியவில்லை. இதிலிருந்து வெளியேற வேண்டுமானால் வெளிச்சம் வரும் திசையை நோக்கிப் பறக்க வேண்டும் என்று உணர்ந்தது. ஒன்றிரெண்டு தடவை முட்டிமோதி முயற்சித்த பிறகு வேறு ஒரு புகை போக்கியின் வழியே வெளியேறியது. நீண்ட பெருமூச்சுவிட்டு சுற்றுமுற்றும் பார்த்து திடுக்கிட்டுப் போனது. மிகப்பெரிய தொழிற்சாலையின் எண்ணற்ற புகைபோக்கிகளில் ஏதோ ஒன்றின் வழியே வெளியேறிய அந்த இடத்துக்கு அதுவரை சிட்னி வந்ததே இல்லை. அதனுடைய அப்பா அம்மாவையும் நண்பர்களையும் பார்க்க முடியவில்லை. வேறு ஏதாச்சும் ரெட்டைவால் குருவிகளைப் பார்க்கலாம் என்றால் அதுவும் முடியவில்லை. சிட்னி காணமல் போய் விட்டது. சிட்னிக்கு அழுகை அழுகையாக வந்தது.

கண்ணுக்கெட்டிய தூரம் வரை அடுக்குமாடிக் கட்டடங்களும், தொலைக்காட்சி ஆண்டெனாக்களும் தான் தெரிந்தது. திடீரென ஒரு மேகத்திலிருந்து ஒரு சிட்டுக்குருவி தோன்றியது. சிட்னி அதனிடம் பறந்து,“நீ வேறு ஏதாச்சும் ரெட்டைவால் குருவிகளைப் பார்த்தாயா” என்று கேட்டது.

“நாங்கள் அனைவரும் இன்றிரவு வேறு நாட்டிற்குப் பறந்து செல்ல திட்டமிட்டிருந்தோம்...” என்று சிட்னி கூறியது. உடனே சிட்டுக்குருவி, “நீ ரெட்டைவால் குருவியில்லையே.. நீ ஒரு காகம்...” என்று ஏளனமாகச் சிரித்துக் கொண்டே சொல்லி விட்டு பறந்து போனது. சிட்னி திடுக்கிட்டுப் போய் விட்டது. அது இன்னொரு பறவையிடம் போய் அது எங்காவது ரெட்டைவால் குருவிகளைப் பார்த்ததா என்று கேட்டது. “கருப்பு பறவையான நீ ஏன் அவைகளைப் பற்றிக் கேட்கிறாய்? ” என்று அந்தப்பறவை கேட்டது. சிட்னி மிகவும் கவலைப்பட்டது. அதனுடைய பெற்றோர்கள் அது வீடு சென்று சேரும்போது கோபப்படுவார்களே. அதை விட மோசம், ஒரு வேளை அவர்கள் அனைவரும் அதை விட்டுவிட்டுப் பறந்து போயிருந்தால்.. சிட்னிக்கு நினைத்துப்பார்க்கவே முடியவில்லை. பயந்து போய் விட்டது. அது பறந்து சென்று நிலாவைப்பார்த்து ஆடிக்கொண்டிருந்த ஒரு மரக்கிளையில் இருந்த ஆந்தையின் அருகில் சென்று அமர்ந்தது. உடனே ஆந்தை,“யார் நீ ?” என்று கேட்டது. சிட்னி, “நான்.... நான்... ஒரு ரெட்டைவால் குருவி... ” என்று பதிலளித்தது. உடனே ஆந்தை, “உன்னை ஒரு தடவை நன்றாகப்பார்.. உன்னைப் பார்த்தால்.. நீ காகத்தைப் போலவே இருக்கிறாய். உன்னுடைய வெள்ளையும் நீலமும் கலந்த இறகுகளில் எல்லாம் கரிப்புகை மூடியிருக்கிறது... தெரிகிறதா...”     என்று கூச்சலிட்டது.

பெருங்குழப்பத்தில் மாட்டிக்கொண்டோமே.. தன்னுடைய குடும்பத்தாரால் கூட அடையாளம் காண முடியாது என சிட்னி நினைத்தது. துயரத்தோடு பறந்து போய்க் கொண்டேயிருந்தது. அந்தச் சிறிய ரெட்டைவால் குருவியான சிட்னி ஒரு குன்றின் உச்சியில் பறந்த போது அதற்குத்தன் பெற்றோரும் நண்பர்களும் இருக்கின்ற இடம் தெரிந்தது. எங்கே அது விட்டுவிட்டு வந்திருந்ததோ அதே இடத்திலேயே அவர்கள் பொறுமையாகக் காத்திருந்தார்கள்.

கரிப்புகை இறகுகளோடு இருந்த சிட்னியை அம்மா உடனே அடையாளம் கண்டு கொண்டது. மற்ற ரெட்டைவால் குருவிகளும் மகிழ்ச்சியில் கீச்சிட்டன. தங்களுடைய சிறகுகளை சிலுப்பிப் பிரயாணத்திற்குத் தயாராகின. கடைசியில் சிட்னி அதன் அம்மா அப்பாவோடும், நண்பர்களோடும் சேர்ந்து விட்டது. சந்தோசத்தில் துள்ளித் துள்ளிக் குதித்து கீச்சிட்டுக் கொண்டே இருந்தது.

தமிழில் - உதயசங்கர்

Pin It