மறைந்தவரை குறித்து மோசம் பேசுதல் முறையல்லதான் எனினும்...

கடந்த ஏப்ரல் 24 அன்று திரு. சத்ய சாய் பாபா அவர்கள் இயற்கை எய்தினார். சாய்பாபா இருக்கிறாரா... இல்லையா? என கேள்வி கேட்டு நீதிமன்ற படியேறியப் பின் தான் சாய்பாபா இறந்ததாக அறிவிப்பு வெளியானது. உள்ள படியே அவர் இறந்தது என்பது மர்மம் தான். அவரது லட்சம் கோடி சொத்து எங்கிருந்து வந்தது என்பது போலவே அவரது மரணமும் பல கேள்விகளை எழுப்புகின்றது. தன்னையே கடவுளாகவும், கடவுளின் அவதாரமாகவும் சித்தரித்துக் கொள்ளும் சாய்பாபா, அதற்கு முன் சில வாரங்களாக மருத்துவ உபகரணங்களின் துணையோடு படுத்த படுக்கையாக உயிர் வாழ்ந்து கொண்டிருந்தார் என்பது தான் வேடிக்கை. அவரது கை பட்டு மற்றவரின் நோய் தீர்க்க தெரிந்த அவருக்கு அவரது உடல்நலம் பேண நவீன மருத்துவ வசதி தான் வேண்டியிருந்தது. பல வார காலம் கடும் நோய்வாய்பட்ட அவர் தீவிர சிகிச்சை பலனளிக்காமல் மடிந்தார். எண்ணற்ற பக்தர்கள் அவரது பிரிவால் துயரம் கொண்டுள்ளனர். அவரது மறைவினால் துக்கம் தாளாது வருத்தத்தில் ஆழ்ந்துள்ளனர். அவரை நேசிக்கும் மக்களை புண்படுத்துவது நம் நோக்கம் அல்ல எனினும் திரு. சத்ய சாய் பாபா மறைவை ஒட்டி சில செய்திகளை நாம் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. சில கேள்விகளை எழுப்ப வேண்டியுள்ளது.

85 வயதில் திரு. சத்ய சாய் பாபா இயற்கை எய்தியபோது அவர் தாம் ஒன்றும் அதிசய அற்புதங்களை நிகழ்த்தும் கடவுள் பிறவியல்ல என்பதை நிறுவி தாமும் ஒரு மனிதப் பிறவி தான் என்பதை உரத்துக் கூறியுள்ளார் என்று தான் கூற வேண்டும். 2000 ஆம் ஆண்டில் புட்டபர்த்தியில் நடந்த ஒரு கூட்டத்தில் சாய் பாபா நான் 96 வயதில்தான் இந்த அவதாரத்தை முடித்துக் கொள்வேன் என்று உறுதிபட ஆருடம் கூறினார். அதன் பின் பலமுறை அவர் ஆருடம் கூறி வந்துள்ளார். ஆயினும் அவரும் வெறும் மனிதப் பிறவிதான் என்பதை குறிக்கும் வகையில் 85 வயதிலேயே இயற்கை எய்தினார். கடவுள் அவதாரம் எடுத்தவருக்கே 85 வயதில் ஆயுள் முடியும் போது பக்தர்கள் தங்களது ஆயுளை நீடிக்க சாமியார்களை நாடிப்போவது தான் ஆச்சரியமாய் இருக்கிறது. கடவுளின் அவதாரம் என சந்தேகத்திற்கு இடமின்றி நம்பிய அவர் ஏன் இந்த உலகை விட்டு மறையப்போகிறோம் என்பதை முன் கூட்டியே சரியாக கூற முடியவில்லை?

கடவுளின் அவதாரம் என அவர் கூறியதும், இதுகாறும் பற்பல பகுத்தறிவுவாதிகள் அவர் செய்வது எல்லாம் கண்கட்டு, செப்படி வித்தை என கூறியது மெய்ப்படும்படியாகத் தான் அவரது மரணமும் அமைந்துள்ளது என்றால் மிகையல்ல. சிறிய கிராமத்தில் தந்திரங்கள் செய்து பிழைத்து வந்த ஒருவருக்கு மகனாகப் பிறந்த இவர் சிறுவயதிலேயே கண்கட்டு வித்தையை கற்றுக்கொண்டார். மந்திரத்தால் மாங்காய் அல்ல தங்க நகை வர வைப்பதாக கூறி பலரை நம்பச்செய்தார். மாஜிக் நிபுணர்கள் செய்யும் வெகு சாதாரண கண்கட்டு வித்தைகள் தாம்; ஆயினும் மதத்தின் பெயரால் செய்யப்படும் போது இவை பயபக்தியுடன் கடவுளின் அற்புதமாக நம்பப்படுகிறது.

வேலையின்மை, வறுமை, பெண்களுக்கு திருமணம் செய்துவைக்க கஷ்டம் போன்ற பல சிக்கல்களில் சிக்குன்று கவலையில் ஆழ்ந்திருப்பவர்களுக்கு போலி நம்பிக்கையாக திகழ்ந்து திரு. சத்ய சாய் பாபா தனது செல்வாக்கை உயர்த்திக் கொண்டார். இவரது செப்படி வித்தைகள் தாம் வறுமையில் தள்ளாடும் வெகு வறட்சி பகுதியான அனந்தபூர் மக்களை இவர் பால் கவர்ந்திழுத்தது. வெறும் கையினால் முழம் போட முடியும் என்கிற அதீத நம்பிக்கை உடைய பக்தர்களை இந்த வித்தைகள் உடனடியாகக் கவர்ந்தது. இதன் தொடர்ச்சியாக சத்ய சாய் பாபா அவர்களை கடவுள் அல்லது கடவுள் அவதாரம் என்று நம்பத்துவங்கினர். படிப்பறிவு அற்ற ஏழை எளிய மக்கள் மட்டுமல்ல நீதிபதிகள், மந்திரிகள் ஏன் சில விஞ்ஞானிகளும் இவரது பக்த கோடிகளில் அடக்கம். சாய் பாபா காற்றிலிருந்து மாஜிக் போல தங்க மோதிரம் மற்றும் நகைகளை வரவழைத்து பலருக்கு கொடுத்திருக்கிறார்.

முன்னாள் ஜனாதிபதி உட்பட திராவிட பாரம்பரியத்தில் ஊறிய பல துரைகளுக்கும், மாறன்களுக்கும் கூட தங்க மோதிரம் அருளியதாக சொல்லப்படுகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் செல்வம் கொழித்து சீமான்களாக திகழும் அதிகாரம் படைத்தவர்களுக்கு மட்டும் தான் கடவுளின் அவதாரம் சாய் பாபா தங்க மோதிரம் அருளுவார். இவர்கள் தானே லட்சம் லட்சமாக காணிக்கை செலுத்துபவர்கள். விவசாயம் படுத்துவிட்டதால் தற்கொலை செய்யும் ஏழை எவருக்கும் சாய் பாபா தங்க மோதிரமோ, நகையோ வரவழைத்து கொடுத்ததில்லை. ஏழை பக்தர்களுக்கு வெறும் கையால் கொட்டப்படும் திருநீறு மட்டுமே கிடைக்கும். ஆசிரமத்திற்கு பெரும் தொகை நன்கொடை தருபவர்களுக்கும், அரசியல் ரீதியில் செல்வாக்கு படைத்தவர்களுக்கும் மட்டுமே தங்க மோதிரம், தங்க செயின் வழங்கப்படும். ஆந்திர பிரதேசத்திலும், மகாராஷ்டிரத்திலும் வறுமையில் வாடும் விவசாயிகளின் துயர் துடைப்பேன் என எல்லோருக்கும் தங்க மோதிரம் வரவழைத்து தரவில்லை? ஆன்மீகத்தின் பெயரால் நடத்தப்படும் அசிங்கமான வியாபாரம் தான் திரு. சாய் பாபா செய்தது. சிலர் மறைமுக கேமரா வைத்து அவர் நகை வரவழைப்பதை படமெடுத்து அம்பலப்படுத்தினர். எனினும் அவரின் அற்புத சக்தி மீது நம்பிக்கை வைத்தவர்கள் அசருவதாக இல்லை.

பி.சி. சர்க்கார் எனும் உலகப் புகழ் மிக்க மந்திரவாதி அவரது அற்புத செயல்களை எல்லாம் தாம் செய்து காட்டினார். சாய் பாபா செய்யும் எந்த ஒரு செயலும் அற்புதமில்லை வெறும் மாஜிக் தான் என சர்க்கார் நிறுவினார். சாய் பாபாவின் கண்கட்டு வித்தைகள் ஒவ்வொன்றாக அம்பலப்படும்போது தான் வயது முதிர்ந்த காலத்தில் ஊருக்கு நல்லது செய்யும் பணியில் ஈடுபடத் துவங்கினார். சரிந்து விழும் தமது செல்வாக்கை நிலைநிறுத்த இறுதி முயற்சி தான் ஊருக்கு உதவி எனும் புதிய வேடம் என பலரும் கருதுகின்றனர். அதேபோல் கல்வி, மருத்துவ சேவை என்று இறங்கினால் தான் மதிப்பும், பலகோடி நன்கொடையும் பெறமுடியும் என்பது சாமான்யனும் அறிந்ததுதானே.

தவித்த சென்னை நகருக்கு தண்ணீர் கொண்டுவருதல், மருத்துவமனை ஏற்படுத்துதல், பள்ளிக்கூடம் கட்டுதல் என பல சமூக செயல்களில் ஈடுபடத் துவங்கியது இந்த கால கட்டத்தில் தான். இதே கால கட்டத்தில் தான் இவரது மடத்தில் ஒருவரை ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட மர்ம நிகழ்வு என பல்வேறு சந்தேகத்திற்கு இடமான செய்திகள் வெளிவரத் துவங்கியது என்பதும் கவனத்திற் கொள்ளத்தக்கது. ஆசிரமத்தில் யார் அடுத்த தலைவர் என்ற போட்டி அதில் ஒருவரை ஒருவர் கொலை செய்யும் அளவிற்கு வெறி. அன்பும் ஆன்மிகமும் பரப்பும் சாய் ஆசிரமத்தின் உள் நிலை இது தான். பார்ப்பதற்கு தான் ஒய்யாரக் கொண்டை; உள்ளே ஈரும் பேணும் என்பது போல சற்றே நெருங்கி சென்று உற்று நோக்கினால் அருவெறுப்பு தான் மிஞ்சும். ஏதோ வித்தை செய்து ஏமாற்றி பிழைப்பை நடத்தினார் இவர் என்றால் கூட பரவாயில்லை, பற்பல சட்ட விரோத செயல்களுக்கு இவர் உடந்தை என்கின்றனர் பகுத்தறிவுவாதிகள். இவரது பக்த கோடிகள் பலர் உள்ளபடியே மெய் நம்பிக்கையில் இவரை சுற்றிவந்தாலும், சில செல்வாக்கு படைத்த நபர்கள் தேனை வட்டமிடும் எறும்பு போல தமது சுய லாபத்திற்கு தான் இவரிடம் கூடினர். வீதியில் அமர்ந்து கை ரேகை பார்க்கக் கூடியவன் ரஜினிகாந்த் உடன் தான் (போலியாக) எடுத்த போட்டோவை வைத்து மக்களை ஏமாற்றுவது போல திரு. சாய் பாபா அவர்களின் கால்களில் விழும் மந்திரிகளின் போட்டோவும், விஞ்ஞானிகளின் போட்டோவும் அவருக்கு உதவியது. பெரும் பதவியிலும் அந்தஸ்திலும் உள்ள இவர்கள் உள்ளபடியே ஒருவருக்கு ஒருவர் முதுகு சொரிந்து கொண்டு தமது சுய நலத்தை போற்றுவதில் கண்ணும் கருத்துமாயினர். உயர் பதவி பிடிக்க, தமது வேலையை செய்துகொள்ள இது ஒரு எளிய முறையாக மாறியது.

கட்டைப் பஞ்சாயத்து கணக்காக திரு. சத்ய சாய் பாபா செல்வாக்கு தேடி அலையும் இவர்களுக்கு தீனி போட்டு தமது செல்வாக்கை உயர்த்திக் கொண்டார். திரு சத்ய சாய் பாபாவின் புகழ் உச்சத்தில் இருந்தபோது அவரோடு சேர்ந்து அவரின் மகத்துவத்தை உருவாக்கியவர்களும் லாபம் சம்பாதித்தார்கள். பலர் அவர் மீதும் அவரது ஆஸ்ரம நிர்வாகிகள் மீதும் பாலியல் வன்முறை உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கியிருந்தும் அதிகார பலம் கொண்ட இவரது பக்தர்கள் இந்த குற்றச்சாட்டுகளை முறையாக விசாரிக்காமல் மூடி மறைத்துவிட்டனர் என புகார் இருக்கிறது. அவரது ஆசிரமத்தில் ஏற்பட்ட துப்பாக்கி சூடு குறித்து முறையான விசாரணை இல்லை. எதோ இரண்டு பள்ளிக்கூடங்கள், சில மருத்துவமனை துவங்கி விட்டதாலேயே அவரது சட்டவிரோத செயல்கள் எல்லாம் மறந்துவிட வேண்டுமா என கேள்வி எழுப்புபவர் பலர்.

நானே கடவுள் என தங்களை போற்றிக்கொள்ளும் சத்ய சாய், பிரேமானந்தா, நித்தியானந்தா, கல்கி, பங்காரு அடிகளார் போன்ற எல்லோரும் தாங்கள் மட்டுமே உண்மையில் கடவுளின் அவதாரம் என்கின்றனர். இவர்களில் ஒருவர் அவதாரம் என்றால் மற்றவர்களெல்லாம் போலி. இவர்களில் ஒருவர் மற்றவரை ஏறெடுத்தும் பார்ப்பது கிடையாது. நாத்திகவாதிகளின் விமர்சனமே வேண்டாம், இவர்கள் ஒருவரை ஒருவர் தூற்றுவதே போதும் அவர்களின் முகத்திரை கிழிய. இந்த சாமியார்கள் உண்மையிலேயே கடவுளின் அவதாரம் என்றால் முறைகேடாக சம்பாதிப்பவர் எவரும் எங்களுக்கு நன்கொடை அளிக்கத் தேவை இல்லை என்று வெளிப்படையாக அறிவிக்க வேண்டுமே; ஆனால் அப்படி நடப்பதில்லையே. சொந்தங்களை அடித்து ஏமாற்றி செல்வந்தரானவர்களிலிருந்து சட்டத்தை ஏமாற்றி செல்வம் குவித்தவர் வரை எல்லோரும் இந்த சாமியார்களின் அடிவருடிகள் தாமே. மக்களை சுரண்டி கொள்ளையடித்த செல்வந்தர்களிடமிருந்து கொள்ளையடிக்கும் நயவஞ்சகக் கூட்டம். தாம் கடவுளின் அவதாரம் என கூறிக் கொள்ளும் சாமியார்கள்.

வெறும் வேடிக்கை காட்டி விளையாட்டாக இருந்துவிட்டார் என்று நாம் சாய் பாபாவை குறைத்து மதிப்பிட முடியாது. அவருக்கு பின் உருவான பற்பல மோசடி சாமியார்களுக்கு முன்னுதாரணம் அவர் தான். அண்மையில் இறந்த போலி சாமியார் பிரேமானந்தாவிற்கும் முன் மாதிரியாக திகழ்ந்தவர் சத்ய சாய் பாபா தான். தலைக்கு மேல் அடர்ந்த காட்டைபோன்ற முடி வளர்த்து தமக்கு ஒரு சிறப்பு தோற்றத்தை கொண்டிருந்தார் சாய் பாபா. அவரது இயல்புக்கு மீறிய வித்தியாச தோற்றமே கூட அவரது ஆன்மிக வியாபாரத்திற்கு உதவியது எனலாம். இதே யுக்தியைத்தான் போலி சாமியார் பிரேமானந்தா பயன்படுத்தினார். நித்தியானந்தாவும் பெண் போல நீண்ட முடி வளர்த்து அதை தலைப்பாகையில் மறைத்து வியாபாரம் செய்கிறார். இவர்களைப் போன்று தான் இன்று உள்ள எல்லா போலி சாமியார்களும் நடை உடை பாவனைகளை கொண்டுள்ளனர். கபட வேடதாரி சாமியார்களுக்கு எல்லாம் முன்னோடி திரு சத்ய சாய் பாபா தான். படத்தில் இருந்து விபூதி கொட்டுவது, கனவில் ஊடுறுவது, மோதிரம் வரவழைப்பது, வாந்தி எடுத்து வயிற்றிலிருந்து லிங்கம் வரவழைப்பது உள்ளிட்ட மேஜிக் மந்திர ஜால விளையாட்டுகள் தான் திரு சத்ய சாய் பாபாவை பிரபலமாக்கியது. இதையே தான் பிரேமானந்தாவும் செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தலைமுறை போலி சாமியார்களின் ஆத்மார்த்தமான குரு வழிகாட்டி திரு சாய் பாபா தான். விஞ்ஞான அறிவும் தொழில் நுட்பமும் வளரும் இந்த சூழலில் பத்தாம் பசலி மூட நம்பிக்கையை கங்கணம் கட்டிக்கொண்டு வளர்த்து வருபவர்களில் (வந்தவர்களில்) தலையாயவர் திரு சாய் பாபா தான்.

பிரேமானந்தா, நித்யானந்தா, ஜெயேந்திரர் என போலி சாமியார்களின் வரிசையில் ஒருவர் தான் திரு சாய் பாபா. மறைந்தவரை குறித்து மோசம் பேசுதல் முறையல்ல தான் எனினும்....

Pin It