அக்னி வெயில் உங்கள் எண்ணெய் பசையை மேலும் அதிகரிக்கச் செய்து உங்கள் முக அழகை கெடுக்கிறதா? எண்ணெய் பசை நீங்கி அழகாக காட்சியளிக்க இதோ சில வழிமுறைகள். எண்ணெய் பசை நீங்க:  

வெள்ளரிக்காயை, தினமும் காலையில் முகத்தில் தேய்த்து வர முகத்தில் அதிகமாக எண்ணெய் வழிவதை தவிர்க்கலாம். வெள்ளரிச்சாற்றுடன், பால் பவுடர் கலந்து தடவினாலும், எண்ணெய் வழியாமல் முகம் பிரகாசமாக காணப்படும்.      

தக்காளி பழச்சாறை முகத்தில் தடவி காய்ந்த பின், கழுவினால் எண்ணெய் வழிவது கட்டுப்படும். தக்காளியுடன், வெள்ளரிப்பழம் அல்லது ஓட்ஸ் சேர்த்து அரைத்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்தும் கழுவலாம்.      

பால் மற்றும் முட்டையின் வெள்ளைக்கருவுடன், காரட் துருவலை கலந்து முகத்தில் தடவினால், அதிகமாக எண்ணெய் வழிவது குறையும்.     எண்ணெய் பசை சருமத்தினர், அடிக்கடி முகம் கழுவ வேண்டும். முகத்தை அலம்ப சோப்பிற்கு பதில் கடலைமாவை பயன்படுத்தலாம். இதனால், எண்ணெய் வழிவது குறைவதோடு, முகமும் பளபளப்பாக காட்சியளிக்கும்.

எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் மோரை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், எண்ணெய் வழிவது குறையும்.   

வெள்ளரிக்காய் சாறு, எலுமிச்சம் பழச்சாறு, சந்தன தூள், பாதாம் பவுடர், தயிர், உருளைக்கிழங்கு சாறு ஆகியவற்றை சம அளவில் எடுத்து அவற்றை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு நாட்கள் வீதம் செய்து வந்தால், எண்ணெய் வழிவது குறையும்.    

சோளமாவுடன், தயிர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவினால், முகத்தின் எண்ணெய்ப் பசை நீங்கும்.      

எண்ணெய்ப் பசை சருமத்தினர், வெயிலில் சென்றுவிட்டு வீட்டிற்கு வந்ததும், சிறிது தயிர், கடலைமாவு மற்றும் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவினால் அதிகப்படியாக எண்ணெய் வழிவது குறைந்து முகம் பளபளக்கும்.   

எலுமிச்சை சாறு, முட்டையின் வெள்ளைக்கரு, திராட்சை சாறு ஆகியவற்றை சம அளவு எடுத்துக் கொண்டு அவற்றை நன்றாக கலக்கி, முகத்தில் பூச வேண்டும். சிறிது நேரம் கழித்து முகத்தை தண்ணீரால் கழுவ வேண்டும்.    

பப்பாளி கூழ், முல்தானி மட்டி, வேப்பிலை பொடி ஆகியவற்றை நன்றாக பசை போல் குழைத்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் இரண்டு முறை செய்தால், முகத்தில் வழியும் அதிகப்படியான எண்ணெய் தன்மை குறையும்.

வெயில் காலத்தில் புரோட்டீன் சத்து குறைவான உணவுகளை சாப்பிடுவது அனைவருக்கும் மிக நல்லது. ஏனென்றால் புரோட்டீன் இறுதியில் யூரியாவாக மாறிவிடும் என்பதால் அதை தவிர்க்கவும். எரிச்சல் போன்ற தொல்லைகளில் இருந்து விடுபட நீர்ச்சத்து அதிகம் கொண்ட வாழைத் தண்டு, கீரை போன்றவற்றை உண்ணுவது உடம்புக்கு நல்லது. எக்காரணம் கொண்டும் சிறுநீரை அடக்க வேண்டாம்.

Pin It