Fukushima

வருடந்தோறும் பனிப்பொழிவின் முதல் வாசனையை திருவிழாவாக கொண்டாடும் அழகிய, சிறுநகரம்தான் “இதாதே”. இதாதே நகரத்தைப் பொருத்தவரையில் பனிப்பொழிவு எப்போதும் புன்னகைகளை பரிசளிக்கும். பனிப்பொழிவு, வசந்தகாலத்தின் வரவேற்பு! மரப்பலகைகளில் சாக்பீஸ்களால் வரையப்பட்ட கோடுகள் சொல்கின்றன, ஒவ்வொரு வருடமும் பனிப்பொழிவு தரும் மகிழ்ச்சியை. “பனிப்பொழிவு தொடங்கும் நாளை இப்படி கோடு வரைந்து குறித்துக்கொள்வோம், பல விஷயங்களைத் திட்டமிட உதவும்” என்கிறார் கெனிச்சி ஹசேகவா.

தலைமுறை தலைமுறையாக பால் பண்ணை நடத்தி வருபவர் ஹசேகவா. இது பனிப்பொழிவு காலம். ஆனால் ஹசேகவாவிடம் வழக்கமான உற்சாகம் இல்லை. இப்போதெல்லாம் பனிப்பொழிவு அந்த மகிழ்ச்சி பற்றிய நினைவாக மட்டுமே எஞ்சியிருக்கிறது.

ஹசேகவாவின் சாக்பீஸ் குறிப்புகள் 2011ஆம் ஆண்டோடு முடிகிறது. அந்த வருடம் மார்ச் மாதம் தான் ஃபுகுஷிமா அணு உலைகளில் ஏற்பட்ட விபத்து காரணமாக சுமார் 160,000 பேர் இடம்பெயர்க்கப் பட்டார்கள். அந்த வருடத்திலிருந்து பனிப்பொழிவு உற்சாகத்தைக் கொண்டு வரவில்லை. அப்போதிலிருந்து இதாதேவில் விவசாயப் பணிகள் எதுவும் நடைபெறுவதில்லை. ஹசேகவாவின் பால் பண்ணை வியாபாரமும் முடங்கிவிட்டது. தனது அழகிய சிறுநகரத்தில் வாழும் மற்றவர்களைப் போலவே இதையெல்லாம் மீண்டும் தொடங்குவது சாத்தியமா என்று மலைத்துப் போய் முடங்கியிருக்கிறார் ஹசேகவா.

 ஃபுகுஷிமாவில் பாதிக்கப்பட்ட பிறரைப் போலவே ஹசேகவாவின் வாழ்க்கையும் சிதறிப் போயிருக்கிறது. பால் பண்ணை அவருக்கு தொழில் மட்டுமல்ல. தலை முறை தலைமுறையாக அது அவரது குடும்பத்தை ஒன்றிணைத்த பந்தம். ஃபுகுஷிமா விபத்திற்குப் பிறகு அது அப்படித் தொடராது என்று அவருக்குத் தெரியும். பல வருடங்களாக அவர் ஆசை ஆசையாய் வளர்த்து வந்த 50 மாடுகளை அவர் தனது கைகளால் விஷம் வைத்துக் கொன்றார். “அவை எனக்குக் குடும்பம் போல, ஆனால் வேறு வழியில்லை. கதிரியக்கத்தால் அவை பாதிக்கப்பட்டிருந்தன. அவற்றால் மற்றவருக்கும் ஆபத்து” சொல்லிக்கொண்டிருக்கும்போதே கண்ணீர் வெடிக்கிறது அவரிடம்.

ஃபுகுஷிமா விபத்து அவருக்கு ஒரு புதிய தொழிலைச் சொல்லித் தந்திருக்கிறது. இதுவரை அவர் அறிந்திராத தொழில் அது. ஓர் ஒளிப்படக்கருவியை கையில் ஏந்திய படி அவர் பதிவுசெய்யும் ஒவ்வொரு ஒளிப்படமும் அவருக்கும் அவருடைய அழகிய இதாதே நகருக்கும் இடையே இருந்த பந்தத்தை உயிர்க்கச் செய்யும் என்று அவர் நம்புகிறார். “என்னுடைய நகரத்துடன் எனக்கு இருக்கும் கடைசிப் பிணைப்பு இது. இந்த நகரில்தான் எனது தந்தையரும் மூதாதையரும் வாழ்ந்தார்கள். இங்குதான் நான் படித்தேன், விளையாடினேன், வாழ்ந் தேன். இங்குதான் இறப்பேன் என்று நம்பினேன்.” அவர் பதிவு செய்த ஒளிப்படங்கள் சாக்பீஸ் குறிப்புகள் போல தெளிவானவையாக இல்லை. இதாதே நகரின் மனநிலையைப் பிரதிபலிப்பது போல ஒரு வலியை அவை வெளிப்படுத்துகின்றன. இருந்தாலும் அது மட்டுமே இதாதே நகருடனான தனது தொடர்பைப் பேணும் வழி என்று நம்புகிறார் ஹசேகவா. “நான் ஒரு விவசாயி, எனது நிலத்தைத் தொலைத்திருக்கிறேன். இந்த அழகிய நகரத்தைத் தொலைத்திருக்கிறேன். இந்த வலியை சொல்ல எந்த வார்த்தைகளும் இல்லை.” ஒளிப்படக்கருவியை மார்போடு அணைத்தபடி கண்ணீரில் நனைகிறார் ஹசேகவா. கடந்த மூன்று வருடங்களாக இதாதே நகரத்தில் தற்காலிகக் குடியிருப் பில் வாழ்கிறார் அவர். விபத்தில் அவரது குடும்பம் சிதறடிக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் உண்மை.

தொழில் மாறுவது என்பது, ஹசேகவாவிற்கு மட்டும் நடக்கவில்லை. முப்பது ஆண்டுகளாக இயற்கை விவசாயியாக இருந்தவர் டாட்சுகோ ஒகவரா. இப்போது கதிரியக்கவீச்சின் அளவுக்குறிப்புகளைக் கொண்ட விவசாயப் பொருட்களை விற்கும் கடையை வைத்திருக்கிறார். மாதம் ஒரு முறை ஷியாடகே* காளான் கதையை வளர்ந்தவர்களுக்குச் சொல்லும் பொம்மலாட்டத்தை நடத்துகிறார். சுமார் 35 வருடங்களாக ஷியாடகே காளான் விவசாயிகளாக இருந்த அவரது நண்பர்களின் கண்ணீர்க் கதையைச் சொல்லும் பொம்மலாட்டம் அது. “ஃபுகுஷிமாவால் அவர்கள் நான்கு டன் ஷியாடகே காளான்களை வீணடிக்க வேண்டியிருந்தது. கதிரியக்கக் குப்பை என்று குறிக்கப்பட்ட 60,000 காளான்கள்தான் இப்போது அவர்களிடம் எஞ்சியிருக்கின்றன. அவர்களின் கதையைச் சொல்லித்தான் நான் இந்தப் பொம்மலாட்டத்தை உருவாக்கினேன். என்னுடைய இந்தப் பொம்மலாட்டம் இன்னமும் நிறைவுபெறவில்லை, இது தொடர வேண்டும், முடிந்தவரை எல்லோருக்கும் இந்தச் செய்தி போய் சேர வேண்டும் என்றுதான் நான் தினமும் பிரார்த்தனை செய்துகொண்டிருக்கிறேன்.” ஒகவராவைப் பொறுத்தவரையில் மறப்பது என்பது அவரை மிகவும் அச்சுறுத்துகிறது. “அவர்கள் எல்லா வற்றையும் மறந்துவிடுவார்கள் என்று எனக்குக் கவலை யாக இருக்கிறது. அது மிகவும் அச்சுறுத்தக்கூடியது. அவர்கள் மறந்துவிட்டால், அந்த விபத்து மீண்டும் நிகழ் வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றுதானே பொருள்” என்று கேட்கிறார், கண்ணீர்த்துளியை துடைத்தபடி.

fukishima vicktims“கடந்து போனவற்றை மறக்கிறவர்கள், அதை மீண்டும் மீண்டும் நிகழ்த்துமாறு தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள்” என்று அமெரிக்க தத்துவவியலாளார் ஜார்ஜ் சண்டியானா சொன்னது எனக்கு அப்போது நினைவு வந்தது. ஒகவரா பயப்படுவது போல ஃபுகுஷிமாவில் மட்டுமல்ல, எங்கு வேண்டுமானாலும் அது நிகழலாம் என்பதுதான் உண்மை.

 ஃபுகுஷிமா விபத்தில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்கும் வாய்ப்போடு க்ரீன் பீஸ் இந்தியா அமைப்பு என்னைத் தொடர்புகொண்ட போது, அந்த வாய்ப்பைத் தவறவிடக்கூடாது என்பதுதான் எனது முக்கியமான எண்ணமாக இருந்தது. இடிந்தகரை மக்களுக்கு ஃபுகுஷிமாவில் நடந்த விபத்துதான் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. ஃபுகுஷிமாவில் விபத்து நடக்கும் வரை, அவர்களது ஊரில் இருக்கும் அணு உலைகளால் எந்த பிரச்னையும் வரும் என்று அவர்கள் நம்பவில்லை. தொலைக்காட்சியில் ஃபுகுஷிமா விபத்தின் கோரக் காட்சிகளைப் பார்த்துப் போராட வெளியேறியவர்கள் இன்றுவரை வீடு திரும்பவில்லை. சாதாரணப் பெண் களையும் மீனவர்களையும் ஒரு தீவிரமான வீரியமான போராட்டத்திற்கு தலைமையேற்க வைத்ததன் பின்னணியில் ஃபுகுஷிமா விபத்து இருந்திருக்கிறது. ஃபுகுஷிமா விபத்தின் காரணமாகவே, மிகப்பெரிய அதிகாரத்தை எதிர்க்கும் உறுதி அவர்களுக்கு வந்தது.

எனது ஜப்பான் பயணம் ஒரு நல்லெண்ண அடிப் படையிலேயே தொடங்கியது. விபத்தால் பாதிக்கப்பட்ட ஒரு பகுதிக்குச் செல்வதால் விசாத் தொகையை செலுத்த வேண்டாம் என்று சொன்னது ஜப்பான் தூதரகம். அப்போது ஜப்பானிற்கு அதன் மக்கள் மீதிருந்த கரிச னம் என்னை வியப்பில் ஆழ்த்தியது. ஆனால் அந்த வியப்பு ஜப்பான் சென்றவுடன் காணாமல் போனது. தங்களை அரசாங்கம் எப்படி கைவிட்டதென்று ஃபுகு ஷிமாவைச் சேர்ந்த ஒவ்வொரு ஜப்பானியக் குடிகளும் சொன்னபோது அரசாங்கங்கள் மக்களுக்கானவை அல்ல என்பது மீண்டும் உறுதியானது. ஃபுகுஷிமா அணு உலை தொடங்கப்படவிருந்த காலகட்டத்திலிருந்தே அதைக் குறித்த அவநம்பிக்கைகளோடு இருந்தவர் அணு உலை இருக்கும் பகுதியான ஃபுதாபா நகரத்தின் நகரத்தந்தை காத்சுதகா இடோகாவா.

அணு உலை தொடங்கப்படுவதற்கு முன்பிருந்தே அவர் ஜப்பான் மத்திய அரசிடமும் டோக்கியோ மின்சார நிறுவனத்திடமும் (டெப்கோ) ஒரே ஒரு கேள்வியைத் தான் மீண்டும் மீண்டும் கேட்டார். “இந்த அணு உலை களில் விபத்து ஏற்படாது என்று நீங்கள் உறுதியாக உத்திரவாதம் தர முடியுமா?” ஒரே பதிலைத் தான் அவர்கள் மீண்டும் மீண்டும் சொன்னார்கள். “நிச்சயமாக.” ஃபுகுஷிமா மாநிலம், ஃபுதாபா நகரம் மற்றும் டெப்கோவிற்கு இடையில் அணு உலைகளில் விபத்து நிகழாது என்று ஒப்பந்தமே கையெழுத்தானதாக இடோகாவா சொல்கிறார்.

ஃபுகுஷிமா விபத்து நடப்பதற்கு முன்பே அரசாங்க மும் டெப்கோவும் எங்களிடம் பொய்தான் சொல்கிறது என்று எனக்குத் தெரியும் என்கிறார் இடோகாவா.

தனது வாழ்க்கையையே புரட்டிப்போட்ட அந்த நாளை மிகத்துல்லியமாக நினைவுகூர்கிறார் இடோகாவா. “நகர மையத்தின் நான்காவது மாடி யிலுள்ள ஜன்னலிலிருந்து என்னால் கடலைப் பார்க்க முடிந்தது. அலைகளில் வீடுகளும் மரங்களும் மிதந்து கொண்டிருந்தன. அங்கு இருக்கக் கூடாத பொருட்கள் இருந்தன, இருக்க வேண்டிய பொருட்கள் காணாமல் போயிருந்தன. அது போல ஒரு காட்சியை நான் அதற்கு முன்பு பார்த்ததில்லை.” ஃபுகுஷிமாவில் தொடர்ந்து நிறைய பேரிடம் உரையாடும்போது அவர்களது அனுபவங்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் என்னை மிகவும் வியப்பில் ஆழ்த்தியது மினாகோ சுகனோ என் கிற பெண்ணின் வார்த்தைகள்தாம். மூன்று குழந்தை களின் தாய் அவர். இப்போது அணு உலை எதிர்ப்புப் போராளி. “எனக்கு மூன்று அழகான குழந்தைகள் இருக்கிறார்கள். செய்வதற்கு அழகான வேலைகள் இருக்கின்றன. ஆனால் அணு உலைக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறேன். தினமும் இணையத்தில் அணு உலைப் பற்றி எதையாவது வாசித்துக்கொண்டிருக்கிறேன். உலகிலுள்ள அணு உலை எதிர்ப்புப் போராளிகளைத் தொடர்புகொண்டு அவர்களோடு இணைந்து பணிசெய்ய முடியுமா என்று பார்க்கிறேன்” என்கிறார் சுகனோ. “உங்களது முதல்வர் ஒரு பெண் தானே? கதிரியக்க நிலத்தில் வாழ்வது எவ்வளவு கொடுமையானது என்பதை நிச்சயம் அவர் புரிந்துகொள்வார். நான் வேண்டுமானால் அந்த கொடுமையின் அனுபவத்தைச் சொல்லி அவருக்கு ஒரு கடிதம் எழுதட்டுமா?” என்று ஆர்வமாகக் கேட்கும் சுகனோவிடம் சொல்வதற்கு ஒரு நம்பிக்கையான வார்த்தையும் என்னிடம் இல்லை.

அவரது ஊரில் விபத்து நிகழ்ந்த காலகட்டத்திலிருந்து இப்போது வரையில் பார்க்கும் எல்லோரிடமும் கதிரியக்கம் தனது வாழ்க்கையை எப்படி மாற்றியது என்றும் அது எவ்வளவு ஆபத்தானது என்றும் அவர் சொல்லத் தயங்குவதில்லை. “எனது குழந்தைகளை அவர்கள் பிறந்து வளர்ந்த நிலத்திலிருந்து நான் பிடுங்கி வரவேண்டியிருந்தது. எனது மூத்த மகனுக்கு அந்த வீட்டிலிருந்து வர விருப்பமே இல்லை. இந்த இடமும் ஒன்றும் பிரமாதம் இல்லை. ஆனால் எனது சொந்த வீட்டைவிட இங்கு கதிரியக்க அபாயம் கொஞ்சம் குறைவு” என்று பேசிக்கொண்டே வீட்டிற்குள் துணிகளைக் காயப்போடுகிறார் சுகனோ. “வெளியே உலர்த்து வது ஆபத்து, கதிரியக்க அளவு வெளியே மிக அதிகம்.” ஃபுகுஷிமாவில் நுழைந்த முதல்நாளே கதிரியக்கம் மக்களை எவ்வளவு பயமுறுத்தி வைத்திருக்கிறது என்பதை என்னால் உணர்ந்துகொள்ள முடிந்தது. ஃபுகுஷிமாவில் நுழைந்தவுடன் கையில் இரண்டு கருவி களைத் திணிக்கிறார்கள். அவற்றை உடலில் பொருத்திக் கொள்ளும்படி அறிவுறுத்துகிறார்கள். தொடர்ந்து நமது உடலில் கதிரியக்க அளவை கண்காணிக்கும் கருவிகள் அவை. அதே போல தங்கும் விடுதியின் அறைக்குள் நுழைந்தவுடன் அறையை இரண்டாக பிரித்துவிடச் சொல்கிறார்கள் அமைப்பாளர்கள். வெளியிலிருந்து கொண்டு வந்த கதிர்வீச்சுள்ள பொருட்களை முதல் பாதியிலேயே விட்டுவிட வேண்டும், அறையின் இன்னொரு பாதியை கதிரியக்கம் குறைவாக உள்ள பகுதியாக வைத்திருக்க வேண்டும்.

சுகனோவின் வீட்டில் இது போல பல நிபந்தனைகளு டன்தான் அவர் வாழ்க்கையைக் கழிக்க வேண்டியிருக்கிறது.

சுகனோவிடம் பேசும்போது எல்லாம் எனக்கு சுந்தரி அக்காவின் நினைவு மேலோங்கிக்கொண்டேதானிருந்தது. வெறும் எட்டாவது மட்டுமே படித்த, குடும்பத் தலைவி யாக மட்டுமே இருந்த சுந்தரி அக்காவை ஃபுகுஷிமா தானே போராட்டத் தலைவியாக மாற்றியது? அவரும் சுகனோ போல ஒரு தாய். சுகனோ போலவே தனது குழந்தைகளுக்காகவும் வருங்கால தலைமுறையினருக்காக வும் போராட வீதிக்கு வந்திருக்கும் ஒரு பெண்.

ஜப்பானில் என்னை வியப்பில் ஆழ்த்திய, மன நிறைவை அளித்த ஒரு கணம் வாய்த்தது. வாரந்தோறும் ஜப்பானில் பிரதமர் அலுவலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடக்கும். வெள்ளிகிழமை தோறும் நடக்கும் அந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 3000 பேர் கலந்து கொண்டு ஆடல், பாடல், கோஷம் எழுப்புதல் என்று பல வடிவங்களில் அணு உலை எதிர்ப்பைப் பதிவுசெய்வார்கள். நான் சென்ற வாரம் நடந்த ஆர்ப் பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஏந்திய பதாகைகளில் இடிந்தகரை போராட்டப் புகைப்படங்களும் இருந்தன. ஃபுகுஷிமாவிலிருந்து பாடம் பெற்றவர்கள் நாம். இன்று நமது போராட்டத்தை அவர்கள் முன்னு தாரணமாக ஏந்தி நிற்கிறார்கள் என்பதைப் பார்க்கும் போது நெகிழ்ச்சியாக இருந்தது. இடிந்தகரையில் உள்ள தோழர்களிடம் ஃபுகுஷிமாவைப் பற்றிச் சொல்லும் போது அந்த பயணத்தில் அவர்களும் ஒரு பகுதியாக இருந்ததை பகிர்ந்துகொண்டேன். அதனாலேயே எப்போதும் மறக்க முடியாத பயணம் அது.

சுந்தரி அக்காவிலிருந்து சுகனோ வரையில், பெண்கள் தான் உலகம் முழுவதும் அணு உலைக்கு எதிரான போராட்டத்தில் முன்னணியில் நிற்கிறார்கள் என்று எனக்கு உணர்த்திய பயணம். வேறு எதற்காக இல்லா விட்டாலும் எனது குழந்தைகளின் அமைதியான எதிர்காலத்திற்காக இந்தப் போராட்டத்தை தொடர வேண்டும் என்று நினைவுறுத்திய பயணம் அது.

 குறிப்பு: ஷியாடகே காளான் என்பது ஜப்பானில் மிகவும் பாரம்பரியமான ஒரு காளான் வகை பூவுலகின் நண்பர்களின் சுற்றுச்சூழல் நூலங்காடி.

Pin It