இந்தியக் காடுகளில் புலிகள் குறைந்து வருகின்றன என்று கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக உரத்த குரலில் பேசப்பட்டு வருகிறது. தற்போது புலிகளுக்குத் தனி காப்பகங்கள் அமைப்பதுதான் புலிகளைக் காக்க சிறந்த வழி என்று அதிகாரபூர்வமாக முடிவு செய்யப்பட்டு அரசு செயல்படுத்தி வருகிறது. இந்தியா முழுவதும் 37 புலிகள் காப்பகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் முன்று தமிழ்நாட்டில் உள்ளன. களக்காடு, முண்டந்துறை, ஆனைமலை, முதுமலை ஆகியவை அவை. தவிர தற்போது சத்தியமங்கலத்தில் வனவிலங்கு சரணாலயம் அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இந்தப்புலிகள் காப்பகம் என்பது இரண்டு அடுக்கு கொண்டது. காப்பகத்தின் மையப்பகுதி கோர் ஜோன் (Core zone) எனப்படுகிறது. வெளிப்பகுதி பப்பர் ஜோன் (Buffer zone) என்றழைக்கப்படுகிறது. புலிகள் காப்பகம் செயல்படும் போது கோர் ஜோனில் மக்கள் வாழ்வது தடைசெய்யப்பட்டுவிடும். (பல புலிகள் காப்பகங்களில் மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன). வெளிப்பகுதியில் வரையறுக்கப்பட்ட அளவில் மக்கள் நடமாட்டம் அனுமதிக்கப்படும். இங்கு சாலை அமைத்தல், புதிய மின்சார இணைப்புகள் வழங்குதல் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப்பணிகளும் நிறுத்தப்படும். வனத்துறை அனுமதிக்கும் அளவில்தான் விவசாயம் செய்ய வேண்டும். கால்நடைகளை மேய்ப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டுவிடும். முதுமலை புலிகள் காப்பகத்தில் மட்டும் இரண்டு லட்சம் மக்கள் பப்பர் ஜோனில் வசிக்கிறார்கள். அவர்கள் வனத்துறையின் புதிய கட்டுப்பாடுகளூக்கு எதிராகப் போராடி வருகின்றனர். மற்ற புலிகள் காப்பகங்களிலும் மக்கள் எதிர்ப்பு வலுவடைந்து வருகிறது. இது இப்படி இருக்க புலிகள் காப்பகங்களை ஆதரிக்கும் என்.ஜி. ஓக் கள் பப்பர் ஜோன் உட்பட புலிகள் காப்பகத்தின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் மக்களை முழுமையாக வெளியேற்ற வேண்டும் என்கிறார்கள்.

புலி இயற்கை உயிரினச் சுழற்சியில் ஒரு முக்கியமான கண்ணி, அது அழிந்தால் காடுகள் அழிந்துவிடும், ஓடைகள் வற்றிவிடும் என்றெல்லாம் தன்னார்வத் தொண்டு நிறுவன ஊழியர்கள் பேசிவருகின்றனர். அடர்ந்த காடுகளின் உள்ளிருக்கும் வனத்துறைக்குச் சொந்தமான விடுதிகளில் அறிவுஜீவிகளையும், ஊடகத்துறையில் உள்ளவர்களையும் அழைத்து இந்தத் தன்னார்வத்தொண்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் கருத்தரங்குகளை நடத்திவருகின்றனர்.இது தவிர இந்தப் புலிகள் விஷயத்தை பரந்த அளவில் மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான வேலைகளும் குறைவின்றி நடந்து வருகின்றன. சேகர் தத்தாத்ரி என்பவர் எடுத்த ‘புலிகளைப் பற்றிய உண்மைகள்’ என்ற ஆவணப்படம் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு உள்ளூர் என்.ஜி.ஓக்களால் பள்ளிகல்லூரிகளில் காட்டப்படுகிறது. நீங்கள் ஒரு கார்டு போட்டால் போதும் படம் இலவசமாக உங்கள் வீடு தேடி வரும். இப்போது புலி பற்றி உல்லாஸ் கரந்த் என்ற ஒரு என்.ஜி.ஓ அறிவியலாளர் எழுதிய கானுறை வேங்கை என்ற ஒரு நூல் தமிழில் தியோடர் பாஸ்கரனால் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் திரும்பத்திரும்ப கூறுவது ஒன்றே ஒன்றைத்தான். விலங்குகளும் மனிதர்களும் ஒன்றாக வாழ்வது சாத்தியமே இல்லை. எனவே

1. புலிகள் சரணாலயங்களில் உள்ள மனிதர்கள் அனைவரும் வெளியேற்றப்பட வேண்டும்.

2. தவிர காடுகளில் வாழும் பழங்குடி மக்கள் வறுமையில் வாடுகின்றனர்.

அவர்களுக்கு எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. அவர்கள் காடுகளுக்கு உள்ளிருக்கும் வரை அதைச் செய்து கொடுப்பது சாத்தியமும் இல்லை. பழங்குடி மக்கள் காடுகளை விட்டு வெளியேறத் துடித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களை நகரங்களுக்கு அழைத்து வந்து நன்கு வாழவைப்பது கடமை. என்று அவர்கள் வலியுறுத்திக் கூறுகின்றனர்.

பழங்குடி மக்களால் புலிகளுக்கு என்ன பிரச்சினை என்ற கேள்விக்கு சேகர் தத்தாத்ரியின் படம் பதிலளிக்கிறது. அந்த ஆவணப்படத்தில் ஒருகாட்சியில் பழங்குடி மக்கள் நெல்லிக்காய் மூட்டையை விற்பதற்குக் கொண்டு செல்கிறார்கள். பழங்குடி மக்களால் புலிக்கு இரையாகக் கூடிய விலங்குகளுக்கு நெல்லிக்காய் கிடைப்பதில்லை. எனவே அவை அழிகின்றன. கூடவே புலியும் அழிகிறது. இந்த நுணுக்கமான இணைப்பை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார் தத்தாத்ரி. அதோடுபழங்குடி மனிதர் ஒருவர் புலியை வேட்டையாடி சிறையில் இருக்கிறாராம். (லட்சக்கணக்கான பழங்குடி மக்களில் ஒரே ஒருவர்). பழங்குடி மக்கள் பாவம் அவர்கள் வசதிகள் இல்லாமல் காடுகளில் வாழ்கிறார்கள் என்று கண்ணீர் வடித்த கையோடு அவர்கள் வேட்டைக்காரர்கள் விலங்குகளைக் கொன்று குவிப்பவர்கள் என்ற எண்ணத்தையும் நம்மிடையே விதைக்க முயல்கிறார் தத்தாத்ரி.

தமிழகத்தின் மலைகளில் 50% பகுதிகளை பெரும் நிறுவனங்களுக்கும் அரசுக்கும் சொந்தமான டீ, காபி, ரப்பர், தேக்கு, யூக்கலிப்டஸ் தோட்டங்கள் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன. இவற்றில் எந்த மிருகங்களும் வாழ முடியாது. இது தவிர பல பகுதிகளில் அணைகளும் அரசுக்குச் சொந்தமான சுரங்கங்களும் உள்ளன. இங்கும் புலி உட்பட எந்தமிருகமும் வாழ வழியில்லை. பழங்குடி மக்கள் வழும் பகுதிகளில் தான் வனவிலங்குகள் வாழ்கின்றன.

இப்படி இருக்கும்போது இந்த சுற்றுச் சூழல்வாதிகள் ஏன் திரும்பத்திரும்ப பழங்குடி மக்களையும் ஏழை மலையோர கிராம மக்களையுமே குறி வைக்கின்றனர்? அரசு திட்டங்களும் காடுகளுக்கு ஊறு விளைவிக்கின்றன என்று மிகமிக மென்மையாகக் கூறிவிட்டு பழங்குடி மக்களையே முக்கிய குற்றவாளிகளாகக் காட்ட இவர்கள் பெருமுயற்சி செய்கின்றனர்.

புலிகள் மீது இந்த இயற்கை ஆர்வலர்களுக்கு ஏன் இந்த திடீர்க்காதல், மனிதனும் புலிகளும் பரந்து விரிந்த காட்டில் இணைந்து வாழவே முடியாது என்று இவர்கள் கூறுவதில் உண்மை உண்டா, பழங்குடி மக்கள்தான் தங்கள் செயல்கள் மூலம் காடுகளும் விலங்குகளும் அழிவதற்கு காரணமாக இருக்கிறார்கள் என்று கூறுவதில் உண்மை உண்டா போன்ற கேள்விகளுக்கு விடைகாண மேற்குத் தொடர்ச்சி மலைகளில் காடுகள் அழிக்கப்பட்ட வரலாற்றையும், இந்த மனிதனும் விலங்கும் ஒரே இடத்தில் வாழமுடியாது என்ற கோட்பாடு தோன்றிய விதத்தையும் பார்ப்பது அவசியம்

காடுகளையும் விலங்குகளையும் அழித்தவர்கள் யார்?

மேற்குத் தொடர்ச்சி மலைகளில் குறைந்தது 7, 8 ஆயிரம் ஆண்டுகளாக பழங்குடி மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர் என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. டால்மன்கள் எனப்படும் பழங்குடி மக்களின் புதை குழிகள் நீலகிரி மலைகள் முழுவதும் காணப்பட்டதாக நீலகிரி மேனுவல் கூறுகிறது. இந்தப் பகுதிகளில் காணப்படும் குகை ஓவியங்களும் இதையே உறுதிப்படுத்துகின்றன. தவிர தமிழக, கர்னாடக, கேரள மலைப்பகுதிகள் அனைத்திலும் சிதைந்து போன பழங்கால நகரங்களையும், நடுகற்களையும் காணலாம். (இந்த நகரங்களுக்கும் நடுகற்களுக்கும் பழங்குடி மக்களுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. ஆனால் இந்த அறிவியலாளர்கள் சொல்வது போல மனிதன் கால் படாத ‘கன்னி நிலம்’ என்று எதுவும் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் இல்லை என்பதை இவை தெளிவாக நிரூபிக்கின்றன)

இந்தியாவில் தமிழகத்தில் காடுகள் வெள்ளையர் வருவதற்கு முன்பு பழங்குடி மக்களுக்குச் சொந்தமாக இருந்தன. கோவை கலெக்டர் சலீவன் பழங்குடி மக்களான தோடர்களிடமிருந்து நிலங் களைப் பறிக்கும் போது அவர்களுக்கு இழப் பீடு கொடுக்க வேண்டும் என்று கூறினார். அது புறக்கணிக்கப்பட்டது என்பது வேறு விஷயம். இன்று நீலகிரியிலுள்ள ஊட்டி, குன்னூர் போன்ற நகரங்களும் பரந்து விரிந்த தேயிலைத் தோட்டங்களும், வெலிங்டன் போன்ற ராணுவ முகாம்களும், அரவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையும் பல அணைகளும் பழங்குடி மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட பகுதிகளில் தான் அமைக்கப்பட்டன.

பழங்குடி மக்கள் 200 ஆண்டுகளாக ஆங்கிலேயர்களின் ஆட்சியில் பேரழிவிற்கு உள்ளாகினர். நீலகிரியிலும் சோட்டா நாகபுரியிலும் அஸ்ஸாமிலும் மற்றும் காடுகள் உள்ள அனைத்து பகுதிகளிலும் பழங்குடி மக்களின் நிலங்கள் வரைமுறையின்றி வெள்ளைக் குடியேறிகளால் ஆகிரமிக்கப்பட்டன. அவர்கள் வணங்கிய காடுகள் நாசமாக்கப்பட்டு தேக்கும் யூக்கலிப்டஸ¨ம் காபியும், தேயிலையும் பயிரிடப்பட்டன. இப்படி வனங்களைச் சர்வ நாசப்படுத்திய வெள்ளையர்களை அறிவுஜீவிகள், புலிகளின் நண்பர்கள் என்கின்றனர் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினர்.

‘ (சுதந்திரத்துக்கு முன்பு) பல அரசு அதிகாரிகளும் உள்நாட்டுச் சிற்றரசர்களும் வேட்டைக்கு உரிமம் பெற்றிருந்தனர். அவர்களால் உள்நாட்டுக் கள்ள வேட்டைக்காரர்களை ஓரளவு கட்டுப்பாட்டில் வைக்க முடிந்தது. காலனி ஆட்சி முடிந்ததும் இக் கட்டுப்பாடு தளர்ந்தது. உரிமம் பெற்ற வேட்டைக் காரர்களும் கள்ள வேட்டைக்காரர்களும் போட்டி போட்டுக் கொண்டு புலிகளையும் மற்ற விலங்கு களையும் தீர்த்துக் கட்டினார்கள்.’ ‘அதிலும் பிரித் தானியர்களூக்கு இயற்கை வரலாற்றில் ஈடுபாடு மிகுதி. அவர்கள் விட்டுச் சென்ற பதவிகளில் அமர்ந்த உள்நாட்டுத் தலைவர்கள் பல்வேறு விதமான சமூகப் பின்புலத்திலிருந்து வந்தவர்கள். அவர்களுக்கு இயற்கை வரலாற்றில் ஆர்வம் கிடையாது... அவர்கள் பார்வையில் புலிகள் ஒழித்துக் கட்டவேண்டிய ஒரு தொல்லை. (கானுறை வேங்கை பக்கம் 127)

ஏகாதிபத்திய வாதிகள் இயற்கையைக் காப்பவர்களாம். உள்நாட்டு அதிகாரிகளூக்கு அந்த உணர்வு கிடையாதாம். காடுகளை அழித்துச் சின்னா பின்னமாக்கியவர்கள் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகள்தான். அவர்கள் வேட்டையாடிக் கொன்ற புலிகளின் என்ணிக்கை பல்லாயிரம் இருக்கும். ஆனால் நேரடி வேட்டையைவிட இப்படி காடுகளை அழித்ததால் இரைகிடக்காமல் வாழவழியில்லாமல்தான் விலங்குகள் பெருமளவு அருகிப்போயின. ஏகாதிபத்தியவாதிகளுக்குப் பலியாகிப்போனது காடுகளும் விலங்குகளும் மட்டுமல்ல அவற்றோடு ஆத்மார்த்தமான் உறவு பூண்டிருந்த பழங்குடி மக்களும்தான்.

வரலாற்று அநீதி

அழிக்கப்பட்டவை போக மீதியிருந்த காடுகள் ஏகாதிபத்தியத்தின் பயன்பாட்டிற்காக ரிசர்வ் காடுகளாக அறிவிக்கப்பட்டன. இந்த ரிசர்வ் காடுகள் வனத்துறையின் முழுக்கட்டுப்பாட்டில் விடப்பட்டன. இந்தியக் காடுகளில் ஏகாதிபத்தியத்தின் நலன்களை காக்கவே அதற்குச் சேவை செய்யவே வனத்துறை 1865ல் உருவாக்கப்பட்டது. பின்பு இவ்வனத்துறை இந்தியாவில் மிகப்பெரிய ஜமீந்தாராக மாறியது. இன்றும் இந்தியாவின் மொத்த நிலப்பகுதியில் 11 சதவீதத்தை தனது இரும்புக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது வனத்துறை. (சுதந்திரத்தின் போது இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் 30 சதவீதம் காடுகளாக இருந்தது. வனத்துறையின் கண்காணிப்பின் கீழ் அது 11 சதவீதமாக சுருங்கிவிட்டது)

பழங்குடி மக்களின் அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டன. அதற்குப்பதில் அவர்கள் தேன் சேகரித்தல் போன்ற வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டனர். பறிக்கப்பட்ட பழங்குடி நிலங்களுக்குக் கொடுப்பதாக ஒப்புக் கொள்ளப்பட்ட அற்ப நஷ்ட ஈடும் கொடுக்கப்படவில்லை.

காப்புக் காடுகளாக அறிவிக்கப்பட்டவற்றில் மக்களின் நில உரிமைகள் அங்கீகரிக்கப்படமாட்டாது. வனத்துறை அனுமதித்தால் விவசாயம் செய்யலாம். வனத்துறை வெளியேறச்சொன்னால் வெளியேறவேண்டியது தான். தங்கள் சொந்த மண்ணில் சுதந்திரமாக நடமாடக் கூட முடியாமல் உயிர் வாழ விவசாயம் செய்ய முடியாமல் மறுநாள் என்ன நடக்கும் என்ற பீதியுடன் வாழவேண்டிய நிலைக்குப் பழங்குடி மக்கள் தள்ளப்பட்டனர். பறிக்கப்பட்ட உரிமைகளுக்கு மாற்றாக அவர்கள் தேன் சேகரித்தல், போன்ற வேலைகளில் ஈடு படுத்தப்பட்டனர்.

1947க்குப் பிறகு காப்புக் காடுகளின் பரப்பளவு பெருமளவு அதிகரிக்கப்பட்டது. எண்ணற்ற கிராமங்கள் விவசாய நிலங்கள் காப்புக் காடுகளின் எல்லைக்குள் கொண்டுவரப்பட்டன. ஆயிரமாயிரம் மக்கள் எந்த நஷ்ட ஈடும் இன்றி காட்டுக்கு வெளியே தூக்கியெறியப்பட்டனர். இன்றும் அடர்ந்த காப்புக் காடுகளுக்குள் சிதிலமான கோவில்கள், கிராமங்கள் போன்ற மக்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்களைக் காணலாம். காப்புக் காடுகளிலிருந்து வெளியேற்றப்படாத மக்களை வனத்துறை பணயக் கைதிகளாக நடத்தியது. கட்டாயப்படுத்தி வேலை வாங்கியது...அனைத்து உரிமைகளும் இழந்த மக்களுக்கு அவர்கள் அடுத்த நாள் உயிர் வழ வேண்டும் என்பதற்காக.நெல்லிக்காய் போன்ற சிறுவனப் பொருட்கள் சேகரிக்கும் உரிமை மட்டும் வழங்கப்பட்டது. இந்த உரிமையும் பறிக்கப் பட்டால் அவர்கள் காட்டை விட்டு வெளியேற வேண்டியதுதான்.

இதற்காகத்தான் என்.ஜி.ஓக்கள் நெல்லிக்காயால் புலி அழிகிறது என்கிறார்கள். இந்த உரிமையையும் பறிக்க வேண்டும் என்று வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுகிறார்கள். அப்படி சேகரிக்கப்பட்ட பொருட்களை அற்ப விலைக்கு வாங்கி வனத்துறையும் வியாபாரிகளும் மக்களை ஒட்டச் சுரண்டினர். இதைத்தான் பழங்குடி மக்களுக்கு இழைக்கப்பட்ட வரலாற்று அநீதி என்று அரசு உச்சநீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டது.

வன உரிமைச்சட்டம் 2006

ஆனால் பழங்குடி மக்கள் ஒருநாளும் அநீதிகளையும் அடக்கு முறைகளையும் அமைதியாகச் சகித்துக் கொண்டிருக்கவில்லை. இந்திய விடுதலைப்போரின் மிக உக்கிரமான ரத்தம் தோய்ந்த அத்தியாயங்கள் இந்திய வனங்களில்தான் எழுதப்பட்டன. 1850ல் தோன்றிய சந்தால் எழுச்சியிலிருந்து அண்மையில் நடைபெற்ற முத்தங்கா சம்பவங்கள் வரை பழங்குடி மக்கள் ஓய்வில்லாமல் போராடிக்கொண்டுதான் இருந்தார்கள்.

1990கள் பழங்குடிமக்களின் போராட்டங்கள் தீவிரமடைந்த ஆண்டுகள். கடுமையான போராட்டங்கள் 200 உயிர்பலிகள் எல்லவற்றுக்கும் பிறகு வன உரிமைச்சட்டம் வந்தது. இதன்படிபழங்குடி மக்கள் விவசாயம் செய்துவரும் நிலங்களுக்கு அவை காப்புக் காடுகளாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் பட்டா வழங்கப்பட வேண்டும். நிலங்களின் மீது அவர்களது உரிமை அங்கீகரிக்கப்படவேண்டும். இச் சட்டம் முற்போக்கானதாகவும் இதுவரை மக்களுக்கு இழைக்கப்பட்டு வந்த அநீதிகளுக்கு ஓரளவு தீர்வு காணக்கூடியாதாகவும் கருதப்பட்டது. இச்சட்டம் காடுகளை நிர்வகிப்பதில் பழங்குடி மக்களுக்கு உரிமை அளித்தது. வனத்துறை முக்கிய முடிவுகளை கிராம சபைகள் அங்கீகாரம் பெற்றே எடுக்க வேண்டும் என்கின்ற அளவிற்கு மக்களுக்கு உரிமை அளித்தது.

இச்சட்டத்தின் அடிப்படையில் பட்டா கோரி தமிழ்நாட்டில் இன்றுவரை பல்லாயிரம் விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டும் ஓர் அங்குல நிலத்திற்குக் கூட பட்டா வழங்கப்படவில்லை. வனத்துறையின் முன்னாள் ஊழியர்களும் என்.ஜி.ஒக்களும் வழக்கு மேல் வழக்கு போட்டு இச் சட்டம் செயல்படுத்தப்படுவதைத் தடுத்து நிறுத்தப் போராடி வருகின்றனர். காடுகளில் மனிதர்கள் வாழக்கூடது என்ற கோட்பாடு கொண்ட தன்னார்வத்தொண்டு நிறுவனங்களும் இச்சட்டத்தின் மூலம் காடுகளில் தனது பிடி தளருகிறது என்று கருதிய வனத்துறையும் பழங்குடி மக்கள் தங்களது நிலங்களின் மீது உரிமை பெறுவதை விரும்பவில்லை.

மனிதர்களற்ற காடுகள் என்ற கோட்பாடு

சமூகத்தின் பொதுச் சொத்தாகக் கருதப்பட்ட காடுகளைத் தனியுடமையாக அல்லது அரசுடைமையாக மாற்றியமைக்கும் முயற்சிகள் 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஐரோப்பாவில் தோன்றினாலும் ‘மனிதர்களற்ற காடு’ என்ற கோட்பாடு முழுவடிவம் பெற்றது அமெரிக்க ஐக்கிய நாடுகளில் தான்.

1851 ஆம் ஆண்டு மார்ச் 27 ஆம் தேதி அமெரிக்க ஐக்கிய நாடுகளைச் சேர்ந்த மேஜர் ஜேம்ஸ் சேவேஜ் என்பவர் தனது படையினருடன் அவானீசே என்ற செவ்விந்தியப் பழங்குடியினத்தின் தலைவனான டெனயா என்பவரையும் அவரது இனத்தையும் அழிப்பதற்காக இப்போது யோசெமைட் பள்ளத்தாக்கு எனப்படும் இடத்திற்குச் சென்றார். இது இந்தியர்களை ஒழித்துக் கட்டுவதற்காக கலிபோர்னியா மாநிலம் தொடுத்த போரின் ஒருபகுதியாகும். பல ஆதிகுடிகள் கொல்லப்பட மற்றவர்கள் சரணடைந்தனர். அவர்கள் காட்டின் ஒருபுறம் வாழ அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அவர்களது உரிமைகள் அடியோடு ஒழிக்கப்பட்டன. வெள்ளை விஞ்ஞானிகள் யோசெமைட் பள்ளத்தாக்கு மனித சஞ்சாரமற்றது, பழங்குடிகள் அங்கு நிரந்தரமாக வாழவில்லை, அதன் வழியாக மேலும் கீழும் சென்று வந்து கொண்டிருந்தனர் அவ்வளவுதான் என்று எழுதினர். இந்தக் காடு கன்னிநிலம், இங்கே மனிதன் காலடி படவே இல்லை என்று ஏராளமான பழங்குடிகள் அங்கே வாழ்ந்த காலத்திலேயே புகைப்பட நிபுணர்களும், மற்ற கைத்தடிகளும் கூசாமல் புளுகினர். ஓட்டல் உரிமையாளர்களும் சாலை அமைப்பவர்களும், உயிரியல் தொடர்பான வணிகத்தில் ஈடுபட்டுள்ளவர்களும் சுற்றுலாப் பயணிகளும் வந்து குவிந்தனர். யோசோமைட் அவானீ ஹோட்டல் அதன் அடையாளமாக மாறிப்போனது. அற்பமான பழங்குடி குடிசைகள் இருந்த இடத்தில் இந்த நான்கு மாடி ஓட்டல் பிரம்மாண்டமாக எழுந்தது சுற்றுச் சூழலைக் காக்க.

செவ்விந்தியர்கள் காட்டின் நிசப்தத்தைக் குலைக்கின்றனர். அசிங்கமாகவும் அழுக்காகவும் உள்ள அவர்களைப் பார்க்க அருவருப்பாக உள்ளது என்று வெள்ளையர்கள் கூறினர். காட்டைப் பாதுகாக்க அவர்களை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுப் பெற்றது. அடுத்த 80 ஆண்டுகளில் காட்டிலிருந்து பழங்குடிகள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றப்பட்டனர். 1969 ல் அவர்களது இறுதிக் குடியிருப்பும் தீயணைப்புப் பயிற்சி என்ற பெயரில் தீவைத்துக் கொளுத்தப்பட்டு காடு தூய்மைப்படுத்தப்பட்டது.

(Conservation Refugees பக்கம் 10)

 வெள்ளையர்கள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி, வனப்பாதுகாப்பு என்று என்ன கோட்பாடு பேசினாலும் யோசெமைட் பள்ளத்தாக்கில் நடந்தது இன சுத்திகரிப்பைத் தவிர (Ethnic cleansing) வேறு ஒன்றுமில்லை என்று பழங்குடி மக்கள் கூறுகின்றனர்.

இந்த யோசெமைட் தேசியப் பூங்காதான் இன்றுள்ள ஏராளமான வனவிலங்கு சரணாலயங்களுக்கு முன்னுதாரணமாக அமைந்தது. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பழங்குடி மக்கள் உள்நாட்டு அகதிகளாக்கப்படவும் இந்தப் பூங்காதான் கோட்பாட்டு அடிப்படையை அளித்தது. மனிதர்களற்ற காடு என்ற கோட்பாடுமிந்த யோசோமைட் பூங்காவிலிருந்துதான் உருப்பெற்றது.

அண்டார்டிகா தவிர அனைத்து கண்டங்களில் இருந்தும் பல்லாயிரம் மக்கள் இந்த பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி, வனப்பாதுகாப்பு என்ற கோஷங்களின் அடிப்படையில் தங்கள் வாழ்விடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர். சின்னஞ்சிறிய ஆப்பிரிக்க நாடான சாட்டில் 6 லட்சம் மக்கள் காடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்திய அரசு 1 லட்சம் மக்கள் வனப் பாதுகாப்புக்காக வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று கூறியுள்ளது. இது மிகவும் குறைக்கப்பட்ட தொகை என்பதில் சந்தேகமில்லை.

சுற்றுச் சூழல் பாதுகாப்பில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள்

Conservation international(CI), The Nature Consevancy (TNC), the Worldwide Fund for Nature (WWF), the African Wildlife Foundation(AWF), Wildlife Conservation Society(WCS) என்ற 5 மிகபெரிய உலகு தழுவிய தன்னார்வத்தொண்டு நிறுவனங்கள் ‘மனிதர்களற்ற காடுகள்’ என்ற இப்பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்கின்றன. இந்நிறுவனங்கள் மேற்குலக நாடுகளை முக்கியமாக அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகின்றன. இவை சுற்றுச் சூழலைக்காக்க செலவழிக்கும் தொகை ஒரு சிறியநாட்டின் மொத்த வருமானத்திற்கு ஈடானதாகும். உலகில் எந்த இடத்திலிருந்து மக்கள் வனப்பாதுகாப்பு என்ற பெயரில் வெளியேற்றப்பட்டாலும் இந்த நிறுவனங்களில் ஏதேனும் ஒன்றின் பங்கு அதில் கட்டாயம் இருக்கும். பழங்குடி மக்கள் தலைவர்கள் இந்த நிறுவனங்களை பிங்கோ ((Big NGOS) வெறுப்புடன் அழைக்கின்றனர். இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த நிறுவனங்களுக்கு நிதியளிப்பவர்கள் பட்டியலில் போர்டு, USAID, World bank முதல் செவ்ரான் போன்ற சுற்றுச் சூழலை நேரடியாகச் சீரழித்த நிறுவனங்களும் உண்டு.

1960ல் WWFக்கு நிதியளித்து வளர்த்துவிட்டவர்கள் பட்டியலில் இருந்த இருவர் மிகவும் முக்கியமானவர்கள். ஒருவர் ராபர்ட் மெக்னமார. வியட்னாம் போரில் இந்த ராபர்ட் மெக்னமாராவின் பங்கு உலகம் அறிந்தது. அப்போரின் போது அமெரிக்கா இந்தோசீனக் காடுகளில் நாப்பாம் போன்ற குண்டுகளை மழையெனப் பொழிந்தது. காடுகளில் போராளிகள் ஒளிந்து கொள்கிறார்கள் விமானத்தில் இருந்து அவர்கள் இயங்குவதைக் கண்டுபிடிக்க முடிவதில்லை என்று கூறி அடர்ந்த மழைக்காடுகளில் மரங்களை இலைகளை உதிர்க்கச் செய்யும் ரசாயனங்களை வீசியது.

இன்னொருவரான டேனியல் லுட்விக்கின் நிறுவனங்கள் அமேசான் காடுகளில் பேரழிவு ஏற்படுத்தியவை. வனங்களைப் பராமரிக்கச் சரியான நபர்கள்தான்.

இந்த நிறுவனங்கள் பல உள்ளூர் NGOக்களுடன் இணைந்து செயல்படுகின்றன. உலக இயற்கை நிதியம் (Worldwide Fund for Nature WWF) போன்ற நிறுவனங்களுக்கு உள்ளுரிலேயே ஊழியர்கள் உண்டு. இந்த நிறுவனங்கள் காடு வளர்ப்பு, புலிப்பாதுகாப்பு போன்றவற்றிற்காக நமது வனத்துறைக்கு நிதி ஒதுக்குகின்றன. அதேநேரம் இந்த நிறுவனங்களின் நிதியுதவியுடன் ஆராய்ச்சியாளர்கள் புலியும் மனிதனும் ஏன் இணைந்து வாழ முடியாது என்று ஆய்வு முடிவுகள் வெளியிட்டு வருகிறார்கள். கானுறை வேங்கை என்ற நூலை எழுதிய உல்லாஸ் கரந்த் நியூயார்க்கில் உள்ள காட்டுயிர்பாதுகாப்புக் (Wildlife Conservation Society, WCS) விலங்கியலாளராக உள்ளர். புலிப்பாதுகாப்பு தொடர்பாக உரைகள் நிகழ்த்திவரும் கே. விஜயகுமார் என்பவர் WWFஐச் சேர்ந்தவர்.

இவர்களது ஆய்வுகள் முன் முடிவுகளோடு செய்யப்படுவதால் அறிவியலுக்கும், எதார்த்தத்திற்கும் புறம்பாக உள்ளதோடு ஏராளமான ஓட்டைகளும் உள்ளன. அரசியல் இலக்கியத் துறைகளில் ஒருவர் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களோடு தொடர்பு வைத்திருக்கிறார் என்பது வெளியானால் அவரது நேர்மை சந்தேகிக்கப்படும். இந்தச் சூழல்வாதிகளோ தங்களது என்.ஜி.ஓ சார்பை மறைப்பதே இல்லை. அதோடு இவர்கள் தாங்கள் சார்ந்துள்ள என்.ஜி.ஓக்களுக்கு சான்றிதழ் வேறு அளிக்கிறார்கள்.

(தொடர்ச்சி அடுத்த இதழில்)

Pin It