கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: சுற்றுச்சூழல்
மரங்கள் நமக்கு எண்ணற்ற விதத்தில் பயன்படுகின்றன. நாகரிக மோகத்தில் சிக்கிச் சீரழிந்துகொண்டிருக்கும் மனிதகுலம் வளிமண்டலத்தை தொடர்ந்து மாசுபடுத்திவருகிறது. வளிமண்டல மாசை அகற்றும் பணியை மரங்கள் செய்துவருவது நாம் ஏற்கனவே அறிந்த ஒன்றுதான். ஆனால் இதுவரை அறிந்திராத அளவிற்கு மிகப்பெரிய அளவில் இந்தப்பணியை மரங்கள் ஆற்றிவருவதாக இப்போது அறிவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த ஆய்வு கொலராடோ பல்கலைக்கழக தேசிய வளிமண்டல ஆய்வு மையத்தின் துணையுடன் நிகழ்த்தப்பட்டுள்ளது. Science Express இதழில் ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன.
oVOC எனப்படும் ஆக்சிஜனேற்றம் செய்யப்பட்ட ஆவியாகக்கூடிய கரிம கூட்டுப்பொருட்கள் (oxygenated volatile organic compounds) சுற்றுச்சூழலில் நிலைத்து நின்று மனித உடலுக்கு தீங்கு செய்யக்கூடியவை. இத்தகைய மாசுகளை விழுங்கும் ஆற்றல் மரங்களுக்கு இருப்பதாக ஆய்வுக்குழுவின் முடிவுகள் தெரிவிக்கின்றன. புவிப்பரப்பில் தாவரங்களின் இயற்கைச்சிதவு, வாகனப்புகை, கட்டுமானப் பணிகள் இவற்றால் ஹைட்ரோ கார்பன்களும், வேதிப்பொருட்களும் பெருமளவில் வெளியாகின்றன. சில oVOC க்கள் மிகச்சிறிய துகள்களாக காற்றில் பரவக்கூடியவை. இவற்றிற்கு aerosols என்று பெயர்.
இவை மேகக்கூட்டங்களின் மீதும், மனிதர்களின் உடல்நலத்தின்மீது ஆதிக்கம் செலுத்தக்கூடியவை. அமெரிக்க ஐக்கியநாடுகளிலும் பிற நாடுகளிலும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி, நெடிதுயர்ந்த இலையுதிர் காடுகளின் கொண்டைப்பகுதிகள் இந்த oVOCக்களை 97 சதவீதம் அதிகமான வேகத்தில் உறிஞ்சிக்கொள்வதாக கண்டுபிடித்துள்ளனர். அதாவது இதுவரை அறியப்பட்ட வேகத்தைக்காட்டிலும் நான்குமடங்கு வேகத்தில் aerosols உறிஞ்சப்பட்டன. இவ்வளவு அதிகமான வேதிப்பொருட்களை மரங்களின் கொண்டைப்பகுதி விரைவாக உறிஞ்சி எடுப்பது எப்படி என்பது ஆய்வுகூடங்களில் அலசி ஆராயப்பட்டது.
மனிதஉடல் நோய்த்தொற்றுக்கு ஆளாகும்போது பாதுகாப்பு கவசமாக நோய் எதிர்ப்பு ஆற்றலை அளிக்கக்கூடிய வெள்ளை அணுக்கள் இயல்பாகவே நமது உடலில் உற்பத்தியாகின்றன. இதே போன்ற நிகழ்வு மரங்களிலும் காணப்பட்டது. தாவரங்கள் பூச்சியினங்களின் தாக்குதலுக்கு ஆட்படும்போது தங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் வகையில் வேதிப்பொருட்களை சுரக்கின்றன. ஆனால் இந்த வேதிப்பொருட்கள் அதிக அளவில் சுரக்கப்படும்போது அவை தாவரத்திற்கே நஞ்சாக மாறக்கூடிய அபாயம் உள்ளது. இதைத்தவிர்க்க தாவரங்கள் அதிகமான oVOCக்களை ஈர்த்து என்சைம்களைக்கொண்டு அந்த அபாயகரமான வேதிப்பொருட்களை வளர்சிதை மாற்றத்திற்கு உட்படுத்துகின்றன.
தாவரங்களின் வளர்சிதை மாற்றத்தின் ஒருபகுதியாகவே oVOCக்களை உறிஞ்சிக்கொள்ளும் நிகழ்வு ஏற்படுவதாக ஆய்வுமுடிவுகள் தெரிவிக்கின்றன. வளிமண்டல வேதியியல் முடிவுகளின்படி இதுவரை தாவரங்கள் உறிஞ்சிக்கொள்வதாக கருதப்பட்ட அளவைக்காட்டிலும் 36 சதவீதம் அதிகமான oVOCக்கள் நெடிதுயர்ந்த மரங்களின் கொண்டைப்பகுதிகளில் ஈர்த்துக்கொள்ளப்படுவதாக தெரியவந்துள்ளது. மரங்களின் மேன்மையை மனிதனுக்கு புரியவைக்கும் ஆய்வுகள் இன்னும் தொடர்கின்றன.
தகவல்: மு.குருமூர்த்தி (
இன்னும் படிக்க: http://www.sciencedaily.com/releases/2010/10/101021152401.htm
- விவரங்கள்
- ஆதி
- பிரிவு: சுற்றுச்சூழல்
"இது மிகவும் விநோதமான ஒரு சூழ்நிலைதான். பெருங்கடலில்தான் முதல் உயிரினம் தோன்றியது. அதிலிருந்து கிளைவிட்ட ஒரு உயிரினமான மனித இனத்தின் செயல்பாடுகள் காரணமாக கடல்கள் இன்று ஆபத்துக்குத் தள்ளப்பட்டுள்ளன. மிகக் கொடுமையான வகையில் மாற்றப்பட்டுவிட்ட நிலையில், பெருங்கடல்கள் முற்றிலும் அழிந்து போய்விடாது என்று தோன்றுகிறது. மாறாக, அந்த ஆபத்து ஒட்டுமொத்த உயிரினங்களுக்குமானது"
- ரேச்சல் கார்சன், 1951ஆம் ஆண்டு வெளியிட்ட "தி சீ அரௌண்ட் அஸ்" புத்தகத்தில்.
நாம் ஒவ்வொருவரும் கடைக்குச் சென்று எந்தப் பொருளை வாங்கிய பின்னரும் கடைசியில் கடைக்காரர் கொடுக்கும் அல்லது நாமே கேட்டு வாங்கும் பிளாஸ்டிக் பை, ஒவ்வொரு முறை பயணத்துக்குச் செல்லும்போதும் அல்லது நிகழ்ச்சி நடத்தும் போதும் வாங்கும் பிளாஸ்டிக் தண்ணீர் குடுவைகள், பெரிய கடைகளில் வாங்கும் அனைத்துப் பொருள்களையும் சுற்றி வரும் பிளாஸ்டிக் தாள், பெரும்பாலான மளிகை பொருள்கள் அடைக்கப்பட்டு வரும் பிளாஸ்டிக் பை, அன்றாட பயன்பாட்டுப் பொருள்களை பயன்படுத்திய பின்னர் நாம் தூக்கி எறியும் கழிவு பிளாஸ்டிக் பெட்டிகள் (சிறிய கண்டெய்னர்) என்று எங்கும், எப்பொழுதும் நம்மைச் சூழ்ந்து நிறைந்து கிடப்பது பிளாஸ்டிக், பிளாஸ்டிக், பிளாஸ்டிக்தான்.
இப்படி பல வகைகளில் நாம் பெறும் ஞெகிழி (பிளாஸ்டிக்) பொருள்களை குறைந்த கால பயன்பாட்டிலேயே விட்டெறிந்து விடுகிறோம். இப்படி நாம் ஒவ்வொருவரும் விட்டெறியும் ஞெகிழி என்ன ஆகிறது, எங்கே செல்கிறது, பிறகு என்ன நடக்கிறது என்று ஒரு கணம் சிந்தித்துப் பார்த்திருப்போமா?
நமது சுற்றுச்சூழலுக்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது. நமது சாதாரண செயல்பாடுகள் அதை எப்படி மோசமாக பாதிக்கின்றன, பின்னர் எப்படி நம்மை திரும்பத் தாக்குகின்றன என்பதை புரிந்து கொள்ளாமல் போவதால், பல பேராபத்துகள் நமக்கு புரியாமலே போகின்றன. அது சார்ந்த அக்கறைகளும் குறைவாக இருக்கின்றன. மேற்கத்திய நாடுகளில் 80களிலும் இந்தியாவில் 90களிலும் ஞெகிழிப் பைகள் பயன்பாடு அதிகரித்தது. இன்று அது எல்லை கடந்து சென்றுவிட்டது. உங்களைச் சுற்றிலும் சற்று கண்ணை ஓட்டுங்கள். புதர்களிலும் மரக்கிளைகளிலும் சிக்கிக் கொண்டும், காற்றடிக்கும் நேரங்களில் குப்பைகளோடு குப்பைகளாகவும், நதிகளிலும் அவை மிதந்து கொண்டிருப்பதைப் பார்க்கலாம்.
ஒரு காலத்தில் சென்னையில் செழிப்பான ஆறாக ஓடி வளம் சேர்த்து, இன்று வெறும் சாக்கடையாகக் குறுகிவிட்ட அடையாறை, பாலம் வழியாக ஒவ்வொரு முறை கடக்கும்போதும், சுவாசிக்க முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுவதை நான் அனுபவித்து வருகிறேன். எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரிக்கு எதிரேயுள்ள அடையாறு கரையில் பெரும் பிளாஸ்டிக் கழிவு இதற்கு ஒதுங்கியிருப்பதே காரணம். இப்படி ஞெகிழிக் கழிவுகள் சாக்கடைகளையும், நீர் போக்குவரத்தையும் அடைத்துக் கொள்வதால் கொசு, நுண்ணுயிரிகள், பாக்டீரியா போன்றவை அதிகரித்து தொற்றுநோய்கள் பெருகுகின்றன.
ஒரு தனி நபர் எத்தனை ஞெகிழிப் பொருள்களை பயன்படுத்தி விடப் போகிறார் என்று நினைப்பவர்களுக்காக ஒரு தகவல், உலகில் ஒவ்வொரு நிமிடமும் 10 லட்சம் பிளாஸ்டிக் பைகள் கைமாறிக் கொண்டிருக்கின்றன. இந்தியாவில் ஓராண்டில் 10,000 கோடி ஞெகிழிப் பைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில் ஒரு சதவீதம் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது. ஒருவர் வாரத்துக்கு குறைந்தபட்சம் 6 ஞெகிழிப் பைகள் பயன்படுத்துவதாகக் கொண்டால் ஆண்டுக்கு கிட்டத்தட்ட 300 ஞெகிழிப் பைகள் ஆகிவிடும். அதுவே அவரது வாழ்நாளில் 25,000 பைகள் ஆகிவிடும். உலகெங்கும் ஓராண்டில் 500,000,000,000 ஞெகிழிப் பைகள் பயன்படுத்தப்படுகின்றன.
அப்படி பயன்படுத்திவிட்டு நாம் அன்றாடம் விட்டெறியும் ஞெகிழி பை உள்ளிட்ட ஞெகிழி கழிவுகள் குப்பை மூலமாகவும், சாக்கடைகள் வழியாகவும் ஆறுகள், நீர்நிலைகளைச் சென்றடைந்து அங்கிருந்து நேரடியாக கடலில் சென்று கலக்கின்றன. உலகம் தோன்றியது முதல் கடல்தான் மிகப் பெரிய உயிர் இயந்திரம். உலகின் முதல் உயிரினம் தோன்றக் காரணமாக இருந்த கடல்தான் உயிர்வளத்தை தொடர்ந்து உற்பத்தி செய்து வருகிறது. இன்றும் கடலில் வாழும் மீன்கள், இதர உயிரினங்களே உலகின் மற்ற உயிரினங்களுக்கு முக்கிய உணவு ஆதாரமாக இருக்கின்றன. ஆனால் மீன்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கடந்த 50 ஆண்டுகளில் பல பெரிய வகை மீன்கள் 90 சதவீதம் அழிந்துவிட்டன. 2050ஆம் ஆண்டுக்குள் வணிக மீன்கள் அனைத்தும் குறைந்துபோய்விடும் என்கின்றன கணிப்புகள். இந்த மீன்களின் அழிவுக்கு ஒரு முக்கிய காரணம் ஞெகிழிக் கழிவு. 1960களில் இருந்ததைவிட கடலில் மிதக்கும் ஞெகிழிக் கழிவின் அளவு தற்போது மும்மடங்கு அதிகரித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. உலகக் கடல்களில் ஒவ்வோர் ஆண்டும் 640 கோடி கிலோ ஞெகிழிக் கழிவு கொட்டப்படுகிறது.
கடலில் மிதந்து கொண்டிருக்கும் ஞெகிழிக் கழிவுகளில் வெறும் 20 சதவீதம் மட்டுமே கப்பல்கள், கடல் சார்ந்த நடவடிக்கைகளில் இருந்து வெளியேற்றப்பட்டவை. 10 சதவீதம் ஞெகிழி உற்பத்தி நிறுவனங்களில் இருந்து வெளியாகும் பிளாஸ்டிக் பெல்லெட் எனப்படும் ஞெகிழி உருண்டைகள். எஞ்சிய 70 சதவீதம் நிலப்பகுதியில் இருந்து விட்டெறிந்தவைதான். இப்படி உலகெங்கும் வீசிய ஞெகிழிக் கழிவுகள் கலிபோர்னியாவுக்கு மேற்கேயும், ஹவாய் தீவுகளில் இருந்து வடக்கேயும் 1,000 மைல் தொலைவில் பசிபிக் பெருங்கடலில் மிகப் பெரிய கழிவுக் குவியலாக சுழன்று கொண்டிருக்கிறது. இதற்கு "பசிபிக் பெருங்கடல் கழிவுக் குவியல்" என்று பெயர். இதன் பரப்பு 1,392,400 சதுர கிலோமீட்டர், அதாவது அமெரிக்காவிலுள்ள டெக்சாஸ் மாகாணத்தைப் போல இரண்டு மடங்கு. 30 லட்சம் டன் எடை கொண்ட இது, கடல் மேற்பரப்பில் இருந்து 300 அடி ஆழத்துக்கு நீளமாக உள்ளது.
சார்லஸ் மூர் என்ற நீர் கண்காணிப்பாளர் மற்றும் ஆராய்ச்சியாளர் 1997ஆம் ஆண்டு கலிஃபோர்னியாவில் இருந்து ஹவாய் தீவுகளுக்கு பயணம் மேற்கொண்டிருந்தபோது இந்த பெருங்கடல் குழிவுக் குவியலை முதன்முதலில் பார்த்துள்ளார். "பெருங்கடலின் நடுவில் நிற்கும்போது உலகின் அனைத்து வகை ஞெகிழிக் கழிவுகளையும் நான் அங்கு கண்டதை நினைத்து" அவர் விக்கித்துப் போனார். 1994ஆம் ஆண்டு இவர் நிறுவிய அலகாலிதா கடல் ஆராய்ச்சி அறக்கட்டளை, இந்த கழிவுக் குவியல் பற்றி தொடர்ந்து ஆராய்ச்சி நடத்தி வருகிறது. கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளாக கடல்களிலேயே சுற்றிக் கொண்டிருந்த ஞெகிழிக் கழிவுகள் கடல் நீரோட்டங்களின் காரணமாக உருவெடுத்த இந்தக் குவியல், கடல் கழிவுக் குவியல்களில் மிகப் பெரியது. இதைப் போல மேலும் எட்டு கழிவுக் குவியல்கள் கடலில் மிதந்து கொண்டிருக்கின்றன. வந்து இப்படி குவியலாக உருவெடுத்து இருக்கின்றன.
இப்படியாக உலகில் இதுவரை உற்பத்தி செய்யப்பட்ட பிளாஸ்டிக் அனைத்தும் ஏதோ ஒரு வகையில் நம்மைச் சுற்றி சுழன்று கொண்டே இருக்கிறது. எந்த ஒரு பயன்படுத்தப்படாத பொருளும், உயிரிழந்த பொருளும், கொஞ்சம் கொஞ்சமாகச் சிதைந்து மக்கிப் போய்விடும், வேறொன்றாக மாறிவிடும், அடிப்படை நிலையை அடைந்துவிடும். தாவரங்கள், விலங்குகள், அவற்றை மூலப்பொருள்களாகக் கொண்ட இயற்கையான பொருள்கள் இப்படி மக்கிச் சிதைகின்றன. வேதிப் பொருள்களின் கூட்டால் உருவாக்கப்படும் ஞெகிழி அப்படிச் சிதைவதில்லை.
நிலத்தில் கழிவாகக் கொட்டப்படும் ஞெகிழி துகள்களாகச் சிதற (மக்கிப் போவதற்கு அல்ல) 300 ஆண்டுகள் ஆகும். கடலில் இது விரைவாக நிகழ்ந்து விடுகிறது. கடலில் மிதந்து கொண்டிருக்கும் ஞெகிழிக் கழிவுகளின் மீது தொடர்ந்து சூரியஓளி படும்போது அது சிறுசிறு துகள்களாகச் சிதைகிறது (போட்டோ டீகிரேட்). இவை மீன் முட்டைகளைப் போல தோற்றமளிப்பதால், பல கடல் உயிரினங்கள் தவறாக இவற்றைச் சாப்பிட்டு விடுகின்றன.
"ஒரு மில்லிமீட்டருக்கும் குறைவான சுற்றளவு கொண்ட ஞெகிழி நுண்ஞெகிழி எனப்படுகிறது. அப்படிப்பட்ட ஞெகிழி துகள்கள் மணல் துகள்களைப் போலவும், பிளாங்கடன் போலவும் தோற்றமளிப்பதால் பல மெல்லுடலிகள் இவற்றை உண்டு இறக்கின்றன" என்கிறார் சிட்னி பல்கலைக்கழக விஞ்ஞானி மார்க் பிரவுனி. இந்த பிளாஸ்டிக் துகள்கள் மற்ற உயிரினங்களின் திசுவுக்கும் கடத்தப்பட அதிக வாய்ப்புள்ளது.
கடலில் மிதக்கும் ஞெகிழிப் பைகள் இழுது மீன் (ஜெல்லி மீன்) போலவும், கணவாய் மீன்கள் போலவும் தோற்றமளிக்கும். கடல் மீன்கள், டால்பின், கடலாமைகள், கடல்பறவைகள் உள்ளிட்டவை ஏதோ ஒரு வகையில் இந்த ஞெகிழியை உட்கொள்கின்றன. அது அவற்றின் தொண்டை, வயிறு, குடல் என முக்கியமான ஜீரண உறுப்புகளில் சிக்கிக் கொள்ள, அவை பரிதாபமாய் செத்து மடிகின்றன. இது எவ்வளவு தூரம் உண்மை என்று கேட்பவர்களுக்கு, 2007ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஃபல்மார்ஸ் என்ற கடல்காக்கை வகை பறவையின் வயிற்றைக் கிழித்து சோதனை செய்து பார்த்ததில் என்ன கிடைத்தது என்று படத்தை பார்க்கவும். அதன் குடலில் 30 வகை ஞெகிழிப் பொருள்கள் இருந்தன. அதேபோல உலகின் மிகப்பெரிய கடல்பறவையும், நீண்டதூரம் பறக்கும் திறன் படைத்ததுமான அல்பட்ராஸ் பறவைகளின் இறப்புக்குக் காரணமாகவும் ஞெகிழி இருக்கிறது.
கடல் ஞெகிழிக் கழிவால் ஓராண்டுக்கு 10 லட்சம் பறவைகள், ஒரு லட்சம் பாலூட்டிகள் - கடல் ஆமைகள் இறந்து போகின்றன என்று ஐ.நா. சபை தெரிவிக்கிறது. இது தவிர பிறந்த சிறிது காலத்தில் "சிக்ஸ் பேக்ஸ் ரிங்க்ஸ்" எனப்படும் பிளாஸ்டிக் ஓட்டைகளில் உயிரினங்கள் சிக்கிக் கொள்வதால், இயல்பாக வளர முடியாமல், வளரும்போதே அவை உடல்கோளாறுகளுடன் வளர ஆரம்பிக்கின்றன. ஏற்கெனவே அதிகரித்து வரும் கடல் வெப்பநிலை காரணமாக அவதிப்பட்டு வரும் உயிரினங்கள், மேற்கண்ட காரணங்களால் இனப்பெருக்கம் குறைந்து, அவற்றின் எண்ணிக்கை வேகமாகச் சரிந்து வருகிறது. வணிக முக்கியத்துவம் வாய்ந்த மீன்கள் அழிவுக்கும் இங்கே குறிப்பிடப்பட்ட அம்சங்களே காரணம்.
மீன்கள், கடல் உயிரினங்கள் அழிவதால், அல்லது பாதிக்கப்படுவதால் நமக்கு என்ன கேடு என்று நினைக்கலாம். சமீபத்தில் நடத்திய ஆராய்ச்சி ஒன்று கடல் உணவு சுழற்சியின் முக்கிய கண்ணியான பிளாங்க்டன் என்ற நுண்ணிய உயிரினத்தின் உடலிலும் நுணுக்கமான பிளாஸ்டிக் துகள்கள் கலந்திருப்பதை உறுதி செய்கிறது. இறால் போன்ற கடல் உயிரினமான கிரில், சூபிளாங்டன் மூலமாக கடல் உணவு சுழற்சியில் உட்புகும் ஞெகிழிக் கழிவுகள் நமது உணவு மேசைக்கும் வந்து கொண்டுதான் இருக்கின்றன. "தன் வினை தன்னைச் சுடும்" என்பது போல, அந்தக் கழிவுகளை உருவாக்கிய நம்மிடமே மீண்டும் அவை வந்தடைந்து விடுகின்றன.
பல்வேறு கடல் உயிரினங்களின் அடிப்படை உணவு பிளாங்க்டன் என்று நுணுக்கமான உயிரிகள். பைட்டோபிளாங்கடன் போன்ற கடல் நுண்ணுயிர்களில் ஞெகிழி கழிவுத் துகள்களின் அளவு 2.85 ( கன அளவில் 100 கோடியில் ஒரு பங்கு). சூபிளாங்கடன் இதை உண்ணும்போது, அதன் உடல் 1.56 பி.பி.பி ஞெகிழி கழிவை கிரகித்துக் கொள்கிறது. ஆனால் மீன்கள் பல சூபிளாங்க்டன்களை உண்பதால், அவற்றின் உடலில் ஞெகிழிக் கழிவு 6 - 45 பி.பி.பியாக அதிகரிக்கிறது. இந்த மீன்களை உண்ணும் கடல்பறவைகளின் முட்டையில் 3200-3560 பி.பி.பி ஞெகிழிக் கழிவும், ஓங்கில்கள் எனப்படும் டால்பின்களின் உடலில் 11400-17300 பி.பி.பி ஞெகிழிக் கழிவும் இருக்கின்றன. ஞெகிழிக் கழிவின் அளவு இப்படி ஒவ்வொரு உயிரினத்தின் உடலிலும் படிப்படியாக அதிகரிப்பதை உயிர் உருப்பெருக்கம் (பயோ மேக்னிஃபிகேஷன்) என்பார்கள். இப்படி ஞெகிழிக் கழிவை உட்கொண்ட பல கடல் உயிரினங்களை நாம் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். நாம் விட்டெறிந்த விஷம் சுற்றிச் சுழன்று மீண்டும் நம்மையே வந்தடைந்து விடுகிறது.
"மேலும் கடலில் மிதக்கும் ஞெகிழிக் கழிவு டி.டி.டி, பி.சி.பி (பாலி குளோரினேடட் பைபினைல்) போன்ற வேதி விஷங்களை கிரகித்துக் கொள்வதால் பெரும் ஆபத்து நேரிடுகிறது. இப்படியாக ஞெகிழிக் கழிவுகள் வேதிப் பொருள்களை கிரகித்துக் கொள்பவையாகவும், நிரந்தர வேதி மாசுபாடுகளாகவும் மாறுகின்றன. இவை புற்றுநோயை உருவாக்கும் தன்மை படைத்தவை" என்கிறார், இதைக் கண்டறிந்த டோக்கியோ பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் புவிவேதியியலாளர் ஹைட்சிகே தகாடா.
ஞெகிழிக் கழிவுகள் உயிரினங்களின் ஹார்மோன் சுரப்பிலும் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும். குழந்தைகளுக்கான பால்புட்டி, தண்ணீர் குடுவைகள், மருத்துவ கருவிகள் போன்றவற்றைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பாலிகார்பனேட் பிளாஸ்டிக்கில் "பிஸ்பீனால் ஏ" என்ற வேதிப்பொருள் கலக்கப்படுகிறது. ஞெகிழியை மிருதுவாக்குவதற்காக இது கலக்கப்படுகிறது. ஆனால் இது எண்டோகிரைன் என்ற ஹார்மோனை தொந்தரவு செய்யும் தன்மை கொண்டது. இந்த "பிஸ்பீனால் ஏ" ஹார்மோன்களின் செயல்பாடுகளை பிரதி செய்யும் தன்மை படைத்தது. விலங்குகளின் இனப்பெருக்கத்தை பாதிக்கும் இந்த வேதிப்பொருள், மனிதர்களின் உடல்பெருக்கக் காரணமாக இருப்பதாக அமெரிக்க ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இத்தனைக்குப் பிறகும் ஞெகிழி ஆபத்தானது என்பதை நிரூபிக்க புதிய ஆராய்ச்சிகள் தேவையில்லை. நல்ல ஞெகிழி என்ற ஒன்று கிடையவே கிடையாது.
ஞெகிழிக் கழிவை உருவாக்குவதில் நாம் பெரும் பங்காற்றுகிறோம். எனவே, இந்த சுற்றுச்சூழல் சீரழிவை நம்மால் தடுக்கவும் குறைக்கவும் முடியும். தீர்வு நம் கைகளில்தான் இருக்கிறது. ஞெகிழிக் கழிவை தூக்கி எறிவதற்கு முன் "அது எப்படி உருவாகிறது, என்ன பாதிப்புகளை ஏற்படுத்துகிறது" என்பதை ஒரு கணம் சிந்தித்துப் பார்ப்பதில்தான், அந்தக் கழிவை தடுப்பதற்கான தீர்வு அடங்கி இருக்கிறது. சிந்திப்போம், பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும்.
(பூவுலகு மார்ச் 2010 இதழில் வெளியானது)
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: சுற்றுச்சூழல்
ஒரு புதிய மடிக்கணினி வாங்கிவிட்டோம். பழைய மேசைக்கணினியை என்ன செய்யலாம்? பிளாஸ்டிக், அலுமினியக் குப்பிகளைப்போல மறுசுழற்சிக்கு தள்ளிவிடலாமா? வீசியெறியப்பட்ட மின்னணு சாதனங்களில் இருக்கும் பிளாஸ்டிக் பாகங்களையும, உலோக பாகங்களையும் ஏன் உருக்கி எடுத்து மீண்டும் பயன்படுத்தக்கூடாது? எலக்ட்ரானிக் சாதனங்களில் மறுசுழற்சி என்பது நாம் நினைப்பதுபோன்று அவ்வளவு எளிதாக இல்லை. வளர்ந்த நாடுகளில் பயன்படுத்தப்பட்ட கணினி போன்ற மின்சாதனங்கள் பெரும்பாலும் இந்தோனேசியா, சீனா, இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கே தள்ளிவிடப்படுகின்றன. இங்கெல்லாம் ஆட்கூலி குறைவு; சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த கெடுபிடிகள் இல்லை. மறுசுழற்சி செய்யப்பட்ட மின்னணு சாதனங்களுக்கு அதிக தேவை இருப்பதும் இந்த நாடுகளில்தான். இதன்காரணமாக மறுசுழற்சி தொழிலில் கிடைக்கும் இலாபமும் அதிகமாக இருக்கிறது.
மறுசுழற்சி தொழிலில் நன்மை தீமை இரண்டுமே இருக்கின்றன. ஏராளமானோர் வேலை வாய்ப்பு பெறுவதும், கட்டுபடியான விலையில் மின்னணு சாதனங்களை வாங்கமுடிவதும் நன்மைகள். அதே சமயம் தொழிலாளர்களின் உடல்நலனுக்கு எந்த பாதுகாப்புமின்றி இயங்கும் போலி தொழிற்சாலைகள் இங்கு இயங்குவதையும் கவனிக்கவேண்டும். மின்சுற்று பலகைகளில் உள்ள விலை உயர்ந்த உலோகங்களை அமிலங்களைக் கொண்டு உருக்கிப் பிரிக்கும்போது டையாக்சின், ஈயம் போன்ற ஆபத்தான வேதிப்பொருட்கள் கையாளப்படுகின்றன. செப்புக்கம்பிகளை பிரித்தெடுப்பதற்காக பிளாஸ்டிக் மேலுறை தீயிட்டு எரிக்கப்படும்போது வெளிப்படும் டாக்சின்கள் புற்றுநோயை ஏற்படுத்த வல்லவை.
அமெரிக்க ஐக்கிய நாடுகள் போன்ற வளர்ந்த நாடுகளில் கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. ஈயம், பாதரசம் போன்ற பொருட்களை உருக்கிப் பிரிக்கும் நடைமுறை இந்த நாடுகளில் இல்லை. மாறாக, மின்னணுக்கழிவுகள் பூமிக்குள் இட்டு புதைக்கப்படுகின்றன. விளைவு நிலத்தடிநீர் மாசுபடுகிறது. மின்னணுக் கழிவுகளினால் ஏற்படும் தீங்குகளைத் தவிர்க்க அவற்றின் ஆயுட்காலத்தை அதிகரிப்பது சிறந்த வழி. ஒரு மடிக்கணினி வாங்கியவர் தன்னுடைய மேசைக்கணினியை தேவைப்படுவோருக்கு கொடுக்கலாம். இதன்மூலம் ஒரு புதிய கணினி உற்பத்தியாவதை ஒத்திப்போடலாம். ஒரு கணினியைத் தயாரிக்க அதன் எடையைக் காட்டிலும் 12 மடங்கு எடையுள்ள படிம எரிபொருள் தேவைப்படுகிறது. பள்ளிகளுக்கும், தேவைப்படுவோருக்கும் இவற்றைப் பெற்றுவழங்கும் தன்னார்வ நிறுவனங்களும் இயங்குவது ஆறுதலான செய்தி.
தகவல்: மு.குருமூர்த்தி (
இன்னும் படிக்க: http://news.discovery.com/tech/dont-recycle-your-computer.html
- விவரங்கள்
- பூவுலகின் நண்பர்கள்
- பிரிவு: சுற்றுச்சூழல்
புவி வெப்பமடைந்து வருவதைத் தடுக்க டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் கூட்டப்பட்ட சர்வதேச மாநாட்டில் எந்த உறுதியான முடிவும் எட்டப்படாமல் அரைகுறையாக முடிந்துள்ளது. கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்தாத நிலையில் பூமியின் சராசரி வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் உயரும் என்று விஞ்ஞானிகள் கணக்கிட்டுள்ளனர். அதனால் ஏற்படும் காலநிலை மாற்றத்தின் பயங்கரமான விளைவுகள் எப்படியிருக்கும். சில எடுத்துக்காட்டுகள்:
- இந்தியா முழுவதும் 1 செ.மீ. கடல்மட்டம் சராசரியாக உயர்ந்து வருகிறது. கடல்மட்டம் ஒரு மீட்டர் உயர்ந்தால் இந்திய கடற்கரைப் பகுதியில் 1,700 சதுர கி.மீ. மூழ்கிவிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
-மேற்குவங்கம் சுந்தரவனக் காடு பகுதியில் கடல்மட்ட உயர்வால் ஒரு தீவு முற்றிலும் மூழ்கிவிட்டது. 6000 குடும்பங்கள் வாழ்விழந்துள்ளன, 40 லட்சம் மக்கள் பாதிக்கப்படுவார்கள். கடல்மட்டம் உயரும் நகரங்கள் பட்டியலில் சென்னை, நாகப்பட்டினம் உள்ளன.
- இந்திய விவசாயம் 65 சதவீத பாதிப்பை சந்திக்கலாம். ஏற்கனவே இந்த ஆண்டு பருவமழை பொய்த்தது.
ஒவ்வொரு 0.5 டிகிரி செல்சியஸ் வெப்ப உயர்வுக்கும் 17 முதல் 30 சதவீத அரிசி, கோதுமை விளைச்சல் பாதிக்கப்படும். ஒரு டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயர்ந்தால், 40-50 லட்சம் டன் கோதுமை விளைச்சல் குறையும்.
- 50 சதவீத இந்தியக் காடுகள் பாதிக்கப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளதால், நமது பருவநிலை, காடுகளைச் சார்ந்து வாழும் மக்கள் பாதிக்கப்படுவார்கள்.
- 2035 ஆம் ஆண்டுக்குள் வடக்கில் ஓடும் ஜீவநதிகளின் தாயான இமயமலை பனிச்சிகரங்கள் முற்றிலும் மறைந்துவிட வாய்ப்புள்ளது.
- இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி) 27 சதவீதம் பாதிக்கப்படலாம்.
- கொசுக்களால் பரவும் மலேரியா, டெங்கு, சிக்குன் குன்யா போன்ற நோய்களின் தாக்குதல் அதிகரிக்கும்.
- இதுவரை 1998ஆம் ஆண்டுதான் மிக வெப்பமான ஆண்டு. உலகின் மிக வெப்பமான 20 ஆண்டுகளில் 19 ஆண்டுகள், 1980க்குப் பிறகே வந்துள்ளன. 2009 மிக வெப்பமான ஐந்தாவது ஆண்டு.
- 20ஆம் நூற்றாண்டில் பூமியின் சராசரி வெப்பநிலை 0.6 டிகிரி அதிகரித்திருக்கிறது. இந்தியாவில் 2050க்குள் குளிர்கால சராசரி வெப்பநிலை 3.2 டிகிரி வரை, கோடைகாலத்தில் சராசரி வெப்பநிலை 2.2 டிகிரி வரை உயர்ந்துவிடும்.
(பூவுலகு ஜனவரி 2010 இதழில் வெளியான கட்டுரை)
- மனிதனை மட்டுமல்ல சுற்றுச்சூழலையும் அழிக்கும் புகையிலை
- கைகாவில் கதிரியக்க கசிவு-அணுசக்தியின் ஆபத்து நிரூபணம்
- மழைக்காடுகளின் மரணம் - அழிவின் வாசலைப் பற்றி ஒரு நேரடி சாட்சியம்
- தமிழகம்-கர்நாடக தண்ணீர் பிரச்சினைக்கு பசுமைப் புரட்சியின் வன்முறைதான் காரணம்
- அவசரக் கத்தரியும் அறிவியல் அநீதியும்
- வற்றிப் போகும் காவிரி
- கடலின் மீது ஒரு சுமை
- கார்பன் டை ஆக்சைடை கைப்பற்ற....
- பச்சை நிழல்
- நியூட்ரினோ ஆய்வகம் - வரமா? சாபமா?
- பட்டாசு வெடிக்கலாமா?
- சமையல் அறையிலும் சூழலை காக்கலாம்
- அணுக்கூடத்தை எதிர்த்து தேவாரத்தில் போராட்டம்
- அவசரக் கத்திரி - அறிவியல் அநீதி
- அழிவின் விளிம்பில் பவளப் பாறைகள்
- BPA என்னும் நஞ்சு
- பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள்
- உண்டி கொடுத்து உயிர் பறிப்போரே!
- ஆல்கா பெட்ரோல்
- வளிமண்டலத்தை தூய்மைப்படுத்தும் மழைக் காடுகள்