‘திராவிட மாடல்’ ஆட்சி என்பது ஓர் அரசியல் தத்துவம். அது எல்லாத் தரப்பு மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சியைக் குறிக்கோளாகக் கொண்டது. இலக்கு நிர்ணயிக்கப்பட்ட சமூகத் தலையீடுகள் (Targeted Social Interventions) என்றழைக்கப் படுபவை அக்குறிக்கோளுக்கு வழிகாட்டுவதாக அமைந்துள்ளன.

சமமின்மை (Inequality) என்பது இந்தியா வின் மிகப்பெரிய பிரச்சினைகளில் ஒன்று என்கிறார் புகழ்பெற்ற பொருளாதார நிபுணர் தாமஸ் பிக்கட். அப்பிரச்சினையை எதிர் கொள்வதில் சமூகத் தலையீடுகளின் பங்கு முக்கியமானது.

சமவாய்ப்புக்கான செயல்பாடுகள் தமிழ் நாட்டில் நீதிக்கட்சியின் ஆட்சியிலேயே தொடங்கி விட்டன. சென்னை மாநகராட்சியால் பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவு வழங்கும் திட்டம் நவம்பர் 17, 1920இல் தொடங்கப்பட்டது. 1956ஆம் ஆண்டு இத்திட்டம் காமராஜரால் விரிவுபடுத்தப்பட்டது. அதனை அடுத்து, ஆட்சியில் இருந்த திராவிடக் கட்சிகள் நலிந்தோருக்கான நலத் திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றன.

சம வாய்ப்புக்கான சமூக நீதித் திட்டங்கள் திராவிட மாடலின் முக்கிய அம்சமாகும். இத் திட்டங்கள் ஏழை, எளியவர்களின் கைகளில் நேரடியாகப் பணத்தைக் கொண்டு போய்ச் சேர்க்கின்றன. முதல்வர் ஸ்டாலினால் தொடங்கப்பட்ட மகளிருக்கான இலவசப் பேருந்துப் பயணம் இதன் அண்மைக்கால எடுத்துக்காட்டு. இலவசப் பேருந்துப் பயணத் திட்டமானது பெண்கள் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதை 40ரூ-இல் இருந்து 61ரூ-ஆக உயர்த்தியிருக்கிறது என்பது மட்டுமன்று. இத்திட்டம் பெண்களுக்கு மாதம் 1000 ரூபாயை மிச்சப்படுத்திக் கொடுக்கிறது. கெய்ன்சியப் பொருளாதார விதிகளின்படி (Keynesian economics), ஏழைகளுக்குப் பணம் நேரடியாக வழங்கப்படும் போது, அது பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஒரு ரூபாய் பணம் மூன்று ரூபாய் அளவிற்குத் தாக்கத்தை ஏற்படுத்து கிறது. பொருளாதாரத்தை உயர்த்துவதோடு, பெண் களின் வாங்கும் திறனை இது அதிகரிக்கின்றது. பெண்களிம் கையில் சேமிப்பாகும் இத் தொகையை, அவர்கள் குடும்பத்தின் சத்துணவு சார்ந்த செலவு களுக்காகப் பயன்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது பாலினச் சமத்துவத்தில் இந்தியா மிகவும் பின்தங்கியுள்ளது. இந்தியாவின் பெண் தொழிலாளர்கள் விழுக்காடு 18% ஆகும் (Labour force participation). ஆனால் தமிழ்நாட்டில் இது 30%-ஐ எட்டியுள்ளது. தமிழ்நாட்டின் முற்போக்கான திட்டங்கள் மூலம் இது சாத்தியமாகியுள்ளது. கல்லூரிக்குச் செல்லும் பெண்களுக்கு மாதம் ரூ. 1000/- உதவித்தொகை, பெண் பட்டதாரிகளின் திருமணத்திற்குத் தங்கம் வழங்கும் திட்டம், மதிய உணவுத் திட்டம், இலவச மிதிவண்டித் திட்டம் ஆகியவை பெண்களை முன்னேற்றும் திட்டங்களில் சில. இது போன்ற திட்டங்கள் தமிழ்நாட்டின் பள்ளிச் சேர்க்கை விழுக்காட் டினை (Enrolment ratio) 52% ஆக உயர்த்தி யுள்ளது. இது இந்திய சராசரியைவிட இரண்டு மடங்கு அதிகமாகும்.

திராவிட மாடல் வளர்ச்சி என்பது தனித்துவம் வாய்ந்தது. கேரளா, இமாச்சல பிரதேசம் போன்ற மாநிலங்கள் சமூக-பொருளாதாரக் குறியீடுகளில் வளர்ச்சி அடைந்துள்ளன. அதே நேரம், மகாராஷ்டிரம், குஜராத் போன்ற மாநிலங்கள் தொழில்துறையில் நல்ல முன்னேற்றத்தைக் கண்டுள்ளன. ஆனால், தமிழ்நாடு மட்டுமே சமூக-பொருளாதார வளர்ச்சி மட்டும் அல்லாது, தொழில் துறையிலும் சாதனை படைத்துள்ளது.

திராவிட மாடலைச் சார்ந்து இயங்கும் அரசியல், சமூகச் சிந்தனைகளிலும் மிகப்பெரும் மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. அந்த அரசியலே ஒடுக்கப்பட்டோரின் முன்னேற்றத்திற்கு வழிகோலியுள்ளது. இந்தியாவின் நான்கு தலித் தொழில் முனைவோர்களில் ஒருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக இருக்கிறார் என்பதே இதற்குச் சான்று.

இந்தியாவில் தனிநபர் வருமானம் அதிகம் உள்ள மாநிலம் தமிழ்நாடு. ஆனாலும், எளிய வருக்கும் எட்டும் வகையில் இருக்கும் பொதுப் போக்குவரத்து, சிறந்த சாலை உள்கட்டமைப்புகள் ஆகியவை காரணமாக, கார் வைத்திருப் போர் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இத்தகைய போக்குவரத்து மற்றும் வலுவான பொது விநியோகத் திட்டம் காரணமாக, மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டின் பணவீக்க விகிதம் குறைவாகவே உள்ளது.

சமூக நீதி திட்டங்களால், தமிழ்நாட்டின் வளர்ச்சி வேகம் அதிகரித்துள்ளது. 1980-களின் பிற்பகுதி வரை, இந்திய சராசரியை ஒட்டியதாக இருந்தாலும், உலகமயமாக்கலுக்குப் பிறகு, தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் இந்திய சராசரியைவிட இரண்டரை மடங்கு அதிகரித் துள்ளது. கல்வியை மட்டுமல்லாது, முதலீட்டை யும் ஜனநாயகப்படுத்தியதே இதற்குக் காரண மாகும்.

பிரதமர் நரேந்திர மோடியின் இலக்குப்படி அடுத்த 25 ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னேறிய நாடாக ஆக வேண்டுமென்றால், அந்த இலக்கை அடைய உதவும் ஒரே மாடல், திராவிட மாடல்தான். திராவிட மாடல் வளர்ச்சி மட்டுமே ஒவ்வொரு குடிமகனுக்கும் சமமான, நிலைத்திருக்கக்கூடிய வளர்ச்சியை வழங்கு வதாகும்.

(நன்றி : டைம்ஸ் ஆஃப் இந்தியா, 30.08.2022)

மொழிபெயர்ப்பு: வெற்றிச்செல்வன், திராவிட இயக்கத் தமிழர் பேரவை

Pin It