ஆய்வாளர் ரெமியா தாப்பர் கூறுகிறார்:

“இராமனைக் கும்பிடுகிறவர்கள் வால்மீகி இராமாயணத்தை அல்லது வேறெந்த இராமாயணத்தை வேண்டுமானாலும் நம்பட்டும். அது அவர்கள் நம்பிக்கை. ஆனால் தங்கள் நம்பிக்கையை நியாயப்படுத்துவதற்காக, வரலாற்றைத் திரித்திடக்கூடாது” என்று வரலாற்று அறிஞர் பேரா. ரொமிலா தாப்பர் கூறினார். “அயோத்தி: நம்பிக்கையாளர்களின் நகரம், நம்பிக்கையற்றவர்களின் நகரம்” (Ayodhya:City of Faith, City of Discord) என்ற தலைப்பில் அயோத்தி நகரத்தின் வரலாறு, வலைசிங் என்பவரால் புத்தகமாக வெளியிடப்பட்டிருக்கிறது. 

இப்புத்தகத்தின் வெளியீட்டு விழா, இந்தியக் கலாச்சார மன்றத்தின் (Indian Cultural Forum) சார்பில் புதுதில்லியில் வெள்ளிக்கிழமையன்று நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டு பேரா.ரொமிலா தாப்பர் பேசியதாவது: அயோத்தி கடந்த ஆயிரமாயிரம் ஆண்டுகளில் பலவிதமான கடவுள் நம்பிக்கையாளர்கள் வணங்கும் இடமாக இருந்து வந்திருக்கிறது. ஆனால் அதே சமயத்தில் அது வன்முறை வெறியாட்டங்கள் நடைபெற்ற இடமாகவும் இருந்து வந்திருக்கிறது.

வலைசிங் தன்னுடைய இந்நூலில் சுமார் 3,300 ஆண்டு கால அயோத்தியின் வரலாற்றை விவரித்திருக்கிறார். இந்த 3,300 ஆண்டுகளில் எண்ணற்ற அரசர்கள், முஸ்லீம் மன்னர்கள், துறவிகள் மற்றும் சீர்திருத்தவாதிகள் வாழ்ந்த இடமுமாக அயோத்தி இருந்திருக்கிறது. அத்தகைய அயோத்தி இன்றைய தினம் இந்திய அரசியல் மற்றும் அரசியல் கற்பனையின் மையமாகவும் மாறியிருக்கிறது. அயோத்தியில் பிறந்ததாகக் கூறப்படும் ராமனின் வரலாறு என்ன? வரலாறு வேறு, கடவுள் நம்பிக்கை வேறு. இரண்டையும் போட்டுக் குழப்பிக்கொள்ளக் கூடாது.

இரண்டுக்கும் இடையேயுள்ள வேறுபாட்டை அறிந்துகொள்வது அவசியமாகும். வலைசிங் இந்தப் புத்தகத்தில் அயோத்தி பற்றி கடவுள் நம்பிக்கையில் உருவாகியுள்ள கதையிலிருந்து, உண்மையான வரலாற்றை மிகவும் சிறப்பான முறையில் பிரித்துக் காண்பித்திருக்கிறார்.  அதற்காக அவரை மிகவும் பாராட்டுகிறேன். ஒரு வரலாற்றாசிரியர் என்ற முறையில் ராமன் இங்கே பிறந்தான் என்பதற்கான வரலாற்றுச் சான்று எதுவும் கிடையாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வால்மீகி இராமாயணத்தை பல சமூகத்தினரும் தமதாக்கிக் கொண்டிருக்கிறார்கள் கேரளாவில் மாப்பிள்ளை இராமாயணம் என்பது முஸ்லிம்களின் இராமாயணமாகும். அதேபோல் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒருவித இராமாயணம் மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. புத்தமதத்தின் ஜாதகக் கதைகள் பல, வால்மீகி இராமாயணத்தில் இடம் பெற்றிருக்கின்றன. இப்படி பல இராமாயணங்கள் உள்ளன. அதில் ஒரு இராமாயணத்தில், இராவணனை லட்சுமணன்தான் கொல்கிறான். பல இராமாயணங்களில் இராவணன் அரக்கன் அல்ல.

மாறாக அவனை மனிதனாகத்தான் சித்தரித்திருக்கிறார்கள். இவ்வாறு இராமனைக் குறித்து உள்ள இராமாயணங்களில் இராமனைக் கும்பிடுகிறவர்கள் தாங்கள் விரும்பும் எந்த இராமாயணத்தை வேண்டுமானாலும் நம்பிவிட்டுப் போகட்டும். இது அவர்களின் கடவுள் நம்பிக்கை சம்பந்தப்பட்ட விஷயம். ஆனால் அதற்காக அவர்கள் எப்போதும் வரலாற்றைப் பயன்படுத்தக் கூடாது. இவ்வாறு பேரா. ரொமிலா தாப்பர் கூறினார்.            

Pin It