13.1.2013 அன்று சென்னை மாவட்டக் கழக சார்பில் நடந்த தமிழர் திருநாள் விழா கொண்டாட்டத்தில் பங்கேற்ற தி.மு.க. இளைஞரணித் தலைவர் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விளையாட்டுப் போட்டியில் வெற்றியடைந்தவர்களுக்கு பரிசுகளை வழங்கியதோடு பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் எழுதிய ‘அதிகார வரம்புகளை மீறும் ஆளுநர்கள்’ நூலை வெளியிட்டார். அவர் நிகழ்த்திய உரை:

“நான் இங்கு வெள்ளை சட்டை அணிந்து வந்துள்ளேன். ஆனால், எனக்கு கருப்பு சட்டை அணிவது தான் மிகவும் பிடித்த ஒன்று. நான் நிறத்திற்காகக் கூறவில்லை; கருத்திற்காக கூறுகிறேன். அதை உணர்ந்து தான் அன்போடு என்னை உரிமையோடு இந்த தமிழர் திருநாள் நிகழ்ச்சிக்கு அண்ணன் கொளத்தூர் மணி அவர்கள் அழைத்திருந் தார்கள். நானும் அதே எண்ணத்தோடு தான் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று உங்களோடு இந்த பொங்கல் திருநாளை கொண்டாடு வதற்காக இங்கு வந்திருக்கிறேன். அதுவும் திராவிடர் விடுதலைக் கழக மேடையில் நான் பங்குபெறும் முதல் நிகழ்ச்சியே தமிழர் திருநாள் விழா நிகழ்ச்சியாக இருப்பதும் அதில் இன்னும் சிறப்பு என்னவென்றால் நம்முடைய சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியிலும் இது நடப்பதால் கூடுதல் மகிழ்ச்சியாக இருக்கிறது.

பொங்கல் திருவிழாவோடு சேர்ந்து இந்த நேரத்திற்கு மிகவும் தேவைப்படுகின்ற ஒரு புத்தகம் “அதிகார வரம்புகளை மீறும் ஆளுநர்கள்” என்கிற இந்த புத்தக வெளியீடு நடைபெற்றுள்ளது. அண்ணன் விடுதலை இராசேந்திரன் எழுதியிருக்கிறார்கள். கண்டிப்பாக நீங்கள் இந்தப் புத்தகத்தை வாங்க வேண்டும். காலத்திற்கு ஏற்ற ஒரு புத்தகம். நான் மணி அண்ணனிடம் கேட்டேன், “எப்படி இந்த புத்தகத்தை அதற்குள் ஏற்பாடு செய்தீர்கள் ?” என்று அதற்கு அவர், “முன்பே இதற்கான திட்டம் இருந்தது இப்பொழுது சரியான தருணம் என்பதால் வெளியிட்டோம்” என பதிலளித்தார். புத்தகத்திற்கு மிகச் சிறப்பான ஒரு அட்டைப்படம் “ஆட்டுத் தாடியோடு”. பேரறிஞர் அண்ணா அவர்கள் கேட்டார் “ஆட்டுக்கு எதற்கு தாடி ? நாட்டுக்கு எதற்கு ஆளுநர் ?” என்று அதை நினைவுபடுத்தும் வகையில் ஒரு தரமான புத்தகத்தை வெளியிட்டிருக்கிறீர்கள். அதற்கு இந்த நேரத்திலே கழகத்தின் சார்பாக, இளைஞரணி சார்பாக நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.kolathoor mani and udayanithi and viduthalai rajendranதமிழர் திருநாள், கடந்த 23 ஆண்டுகளாக இங்கு பொங்கல் நிகழ்ச்சி சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. அதற்கும் இந்த விழாக் குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துகள். தமிழர் திருநாளான பொங்கல் சாதி, மத ஏற்றத்தாழ்வுகள் எதுவுமில்லாத ஒரு சமத்துவ திருவிழா. இது உழவர்களின் திருவிழா; இன்னும் சொல்லப்போனால் இது உழைக்கும் மக்களின் திருவிழா. நம்முடைய திராவிடத்தினுடைய திருவிழா. நம்மிடையே சில சடங்குகளை, மூடநம்பிக்கை பழக்கங்களை, கற்பனைகளைத் திணித்திருக்கிறார்கள், திணித்துக் கொண்டிருக்கிறார்கள். நம்முடைய பழக்க வழக்கங்கள் அவர்களுக்கு ஏற்ற வகையில் மாற்றி, அவர்களுடையதாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்களிடமிருந்து தப்பித்திருப்பது இந்த பொங்கல் விழா மட்டும் தான். அதற்கு காரணமும் நம் திராவிட இயக்கத் தலைவர்களும், தமிழறிஞர்களும் தான். அத்தகையப் பொங்கல் விழாவில், குறிப்பாக திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் நடக்கும் இந்த பொங்கல் விழாவில் அண்ணன் கொளத்தூர் மணி, அண்ணன் விடுதலை இராசேந்திரன் ஆகியோருடன் கலந்துகொள்வது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது.

நாங்களெல்லாம், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தேர்தல் அரசியலில் களத்தில் நின்று பெரியார் கொள்கைகளுக்கு செயல் வடிவம் கொடுக்க, சட்ட அங்கீகாரம் பெற்றுத்தர பாடுபட்டு செயல்பட்டு வந்து கொண்டிருக்கிறோம். ஆனால் கொளத்தூர் மணி, விடுதலை இராசேந்திரன் போன் றோர்கள் எல்லாம் திவிக சார்பில் அய்யா பெரியாரின் கொள்கைகளை வீதி தோறும் மக்களிடம் கொண்டு சென்று சமூக தளத்தில் மாற்றங்களை ஏற்படுத்த அயராது உழைத்துக் கொண்டே இருக்கிறார்கள். திராவிடர் இயக்கத்தின் உரிமைகளை காக்கவும், தொடர்ந்து போராடி கொள்கைகளை பரப்பி வரும் அண்ணனைப் போன்ற பெரியாரிய தோழர்களின் உழைப்பை மிக முக்கியமானதாக நான் கருதுகிறேன்.

சமூக நீதித் திட்டங்கள்

நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் எண்ணற்ற பல சமூக நீதித் திட்டங்களையும், சமூக நீதி தலைவர்களுடைய கொள்கை களையும் கொண்டு சேர்க்கும் முன்னெடுப்பு களையும் தொடர்ந்து செய்து கொண்டிருக் கிறார். புரட்சியாளர் அம்பேத்கருடைய பிறந்த நாளை சமத்துவ நாளாக அறிவித்தார். திராவிட இயக்க கொள்கைகளின் ஆசான் அய்யா பெரியார் அவர்களுடைய பிறந்த நாளை சமூக நீதி நாளாக அறிவித்து தமிழகமெங்கும் அரசு அலுவலகங்களில் சமூக நீதி நாள் உறுதிமொழி எடுக்க வேண்டும் என கட்டளையிட்டுள்ளார். முத்தமிழ் அறிஞர் கொண்டு வந்து கடந்த பத்து ஆண்டுகளாக பராமரிப்பின்றி பாழாய்ப் போன பெரியார் நினைவு சமத்துவபுரங்களை எல்லாம் தமிழ்நாடு முழுவதும் மீண்டும் சீரமைத்து புனரமைப்பு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

நான் சமீபத்தில் கூட சிவகங்கை மாவட்டத்திற்கு என் துறை சார்பாக ஆய்வு செய்வதற்கு சுற்றுப் பயணம் சென்றிருந்தேன். அப்போது சிவகங்கை மாவட்டத்தில் குமாரப்பேட்டை ஊராட்சி, சிறுகூடல்பட்டி கிராமத்தில் உள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்திற்கு சென்று அங்குள்ள குடியிருப்புவாசிகளில் 100 குடும்பங்களுக்கு பட்டா வழங்கினோம். அன்று பெரியாருடைய நினைவுநாள் என்பது எதேச்சையாக நடந்த ஒரு ஒற்றுமை. சமத்துவபுர நுழைவு வாயிலில் இருந்த பெரியார் சிலைக்கு மாலை போட்ட போது எனது மனதில் வார்த்தைகளில் விவரிக்க முடியாத அளவிற்கு ஒரு பரவசத்தை நான் அடைந்தேன். இன்னும் பெருமையாக சொல்ல வேண்டும் என்றால் அங்கே வசிக்கின்ற ஜெசிகா, ஹாசினி என்ற இரண்டு குழந்தைகள் என் கையைப் பிடித்துக் கொண்டு “மாமா, நீங்கள் எங்க வீட்டுக்கு வர வேண்டும்” என்று சொல்லி, வீட்டிற்கு அழைத்துச் சென்று உணவளித் தார்கள். அப்போது நான் “உங்களுக்கு இங்கே எல்லா வசதிகளும் இருக்கிறதா? எதாவாது தேவையா?” என்று கேட்டதற்கு அக் குழந்தைகள் “நாங்கள் எங்களுக்காக எதுவும் கேட்கவில்லை, இங்குள்ள சிறுவர்கள் அனைவரும் விளையாடுவதற்கு ஒரு பூங்கா வேண்டும்” என்று சொன்னார்கள். அப்போது நான் உடனே அந்த மாவட்ட ஆட்சியரை அழைத்து, அங்குள்ள பொறுப்பு அமைச்சரை அழைத்து அந்த பூங்கா அமைப்பதற்கு உடனே உத்தரவை பெற்றுக் கொடுத்தேன். என்பதை இந்த நேரத்தில் தெறிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

அதே போல், அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கி பெரியாரின் நெஞ்சிலும், முத்தமிழறிஞர் கலைஞர் நெஞ்சிலும் தைத்த முள்ளை நீக்கியிருக்கிறார் நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள். அதே போல், அன்னைத் தமிழில் அர்ச்சனை திட்டம் மூலம் தமிழர் வழிபாட்டு உரிமைகளை பெற்றுத் தந்துள்ளார். இன்னும் ஏராளமான சமூக நீதித் திட்டங்களை வழங்கி வருகிறார் நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள். இந்த அரசினுடைய பெயரே திராவிட மாடல் அரசு என்பது தான். எனவே இந்த அரசுக்கு துணை நின்று நாம் ஆற்ற வேண்டிய பணி என்பது நம் கொள்கைகளையும், போராட்ட வரலாறுகளையும், அரசின் சாதனைகளையும் மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பது தான்.

நாங்கள் இளைஞரணி சார்பாக சென்ற வருடம் ஜூன் 3ம் தேதி கலைஞருடைய பிறந்தநாளில் தலைவர் எங்களுக்கு ஆணையிட்டிருந்தார் திராவிட மாடல் பயிற்சி பாசறையை தமிழகம் முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் நடத்த வேண்டும் என்று. அதன்படி 250 கூட்டங்களை கடந்த ஆறு மாதங்களில் வெற்றிகரமாக நடத்தி முடித்தோம். இளைஞர்களை இயக்கத்தில் இணைப்பதும், அவர்களுக்கு கொள்கையை கற்றுக் கொடுப்பதும், அவர்களை வழிப்படுத்துவதும் என்பது அவ்வப்போது நடத்தப்படுவது அல்ல. அது ஒரு continues process. அது எப்பொழுதுமே நடந்து கொண்டிருக்க வேண்டும் என்பது தலைவர் அவர்கள் எங்களுக்கு எப்போதும் அறிவுரை வழங்கியுள்ளார்கள். அண்ணன் கொளத்தூர் மணி அவர்கள் கூட இந்த 250 கூட்டங்களில் 13 கூட்டங்களில் கலந்து கொண்டு திராவிட இயக்க வரலாற்றையும், மாநில சுயாட்சிக்கான போராட்டங்கள் அதன் அவசியத்தையும் எடுத்துக் கூறி அருமையாக உரையாற்றினார்கள். அதற்காக இந்த கூட்டத்தில் இளைஞரணி சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்ற கொள்கை பரப்பும் பணிகளை இன்னும் அதிகமாக மேற்கொள்ள வேண்டும் என இந்த தமிழர் திருநாள் பொங்கல் நிகழ்ச்சியின் வாயிலாக உங்களை எல்லாம் நான் கேட்டுக் கொள்கிறேன். சாதி, மத வேறுபாடுகள் இல்லாத, சடங்குகள் புகுத்தப்படாத இந்த பொங்கல் விழா குறித்தும், இந்த விழாவை ஏன் நாம் அனைவரும் கொண்டாட வேண்டும் என்பது குறித்தும் தந்தை பெரியார் அவர்கள் பல நேரங்களில் குறிப்பிட்டு பேசியுள்ளார்” என்றார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

Pin It