தமிழ்நாட்டில் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் திமுகவுக்கும், காங்கிரசுக்கும் தான் வாக்களி க்கிறார்கள், தனது நாம் தமிழர் கட்சிக்கு அவர்கள் வாக்களிப்பதில்லை, அவர்கள் சாத்தானின் பிள்ளைகளாக மாறிவிட்டார்கள், அவர்களை சிறுபான்மையினர் என்று ஒரு போதும் அழைக்கக்கூடாது அப்படி அழைத்தால் அவர்களை நான் செருப்பால் அடிப்பேன், அவர்கள் தமிழர்கள் தான். மொழி, இன அடிப்படையில் தான் ஐரோப்பிய தேசங்கள் பிரிந்திருக்கின்றன. எனவே அவர்களை தமிழர்களாகத் தான் கருத வேண்டுமே தவிர சிறுபான்மை யினராக கருதக்கூடாது என்று சீமான் பேசியிருக்கிறார்.

இஸ்லாமியர்களும் கிறிஸ்துவர்களும் யார்? இந்து பார்ப்பனிய வர்ணாசிரம கட்டமைப்பு நிலைநிறுத்திய சாதிய ஒடுக்கு முறைக்கு பலியாகி அதிலிருந்து விடுபடுவதற்காக பல தலைமுறை களுக்கு முன்பே தங்களுடைய கடவுளையும் மதத்தையும் மாற்றிக் கொண்டவர்கள் தான் கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும். ஆக அவர்களுடைய மதமாற்றத்திற்கு காரணமே இந்து பார்ப்பனிய சமூகக் கட்டமைப்பு தான். இதற்குக் காரணமாக இருப்பது பார்ப்பன சிறுபான்மையினக் கூட்டம்.

பார்ப்பன சிறுபான்மையை விமர்சிக்காத சீமான் ஏன் கிறிஸ்தவ இஸ்லாமிய சிறுபான்மையை மட்டும் பாய்ந்து எதிர்க்கிறார். அங்கேதான் அவர் ஆர்எஸ்எஸ் பி டீமாக செயல்படுகிறார் என்ற முடிவுக்கு நாம் வர வேண்டி இருக்கிறது.

சீமான் தமிழர் என்ற அடையாளத்திற்காக மொழி இனத்தை மட்டும் அடிப்படையாக வைத்திருக்கிறாரா? அதுவுமில்லை, நீங்கள் பிறந்த ஜாதிப் பெருமையை ஆதரித்து பேசுங்கள் என்று சில நாட்களுக்கு முன்பு அவர் பேசினார், தமிழர்களுடைய அடையாளம் முருகன் என்று கூறிக்கொண்டு பழனிக்கு காவடி தூக்கினார். தனது மகனுக்கு குருவாயூர் கோயிலில் மொட்டை போட்டு துலாபாரம் கொடுத்தார், கிருஷ்ண ஜெயந்தி தமிழர்களின் பண்பாட்டு விழா என்று பேசுகிறார். நெற்றியில் விபூதியோடு தமிழர்களின் அடையாளத்தை மேடையில் பேசி வருகிறார். கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் தமிழர்களாகிவிட்டால் அவர்களும் பழனிக்கு காவடி தூக்க வேண்டும், கிருஷ்ணனுக்கு துலாபாரம் கொடுக்க வேண்டும், நெற்றியில் விபூதி பூசிக்கொள்ள வேண்டும் என்பதையும் அவர்கள் மீது திணிக்க விரும்புகிறார், இதைத்தான் ஆர்.எஸ்.எஸ் கூறுகிறது “இங்கே வாழுகிற கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் பிற மதத்தைச் சேர்ந்தவர்கள், நமது மதத்துக்கு சொந்தக்காரர்கள் அல்ல, அவர்கள் இந்துக்களோடு தங்களை கரைத்துக் கொள்ள வேண்டும்” என்று ஆர்.எஸ்.எஸ் கூறுகிறது. அதே குரலை தான் இப்போது சீமானும் கூறுகிறார்.

சரி, சிறுபான்மையினர் என்ற சொல்லை சொன்னாலே செருப்பால் அடிப்பேன் என்று சொன்ன சீமான், அவர் செருப்பை தூக்கிக் கொண்டு பல இடங்களுக்கு போக வேண்டும். முதலில் டெல்லிக்கு போக வேண்டும், ஒன்றிய அரசு முஸ்லிம், சீக்கியர், புத்திஸ்ட், கிறிஸ்தவ, ஜெயின், பார்சி ஆகியவரை சிறுபான்மையினர் என்று அங்கீகரித்து வைத்திருக்கிறது. எனவே அங்கே போய் அங்கீகரித்தவர்களை முதலில் செருப்பால் அடிக்க வேண்டும்.

டிசம்பர் 18-ஆம் தேதி உலக சிறுபான்மையினர் தினம் என்று ஐநா அறிவித்திருக்கிறது. எனவே ஐநா சபைக்கு போய் ஐநாவின் தலைமை அதிகாரியை செருப்பால் அடிக்க வேண்டும். 1992 ஆம் ஆண்டு இந்திய தேசிய சிறுபான்மையினர் ஆணையச் சட்டம் வந்திருக்கிறது. இதற்கும் அவர் செருப்படி தந்தாக வேண்டும். சிறுபான்மையினரின் நிலைமை பற்றிய ஆராய்வதற்காக நீதிபதி ராஜேந்திர சச்சார் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டு அனைத்து பிரச்சினைகளிலும், கல்வி, வேலை வாய்ப்புகளிலும் இஸ்லாமியர்கள் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள், சிறைச்சாலைகளில் மட்டும் தான் இஸ்லாமியர்கள் தங்களது விகிதாச்சாரத்திற்கும் அதிகமாக இருக்கிறார்கள் என்று நீதிபதி ராஜேந்திர சச்சார் குழு கூறியது. எனவே ராஜேந்திர சச்சாரையும் இவர் செருப்பால் அடித்து விட்டு வர வேண்டும். ஆக செருப்பால் அடிப்பதற்கே இவருக்கு காலம் முழுவதும் இந்தியாவையும், உலகையும் சுற்றிவருவதற்கு நேரம் சரியாக இருக்கும் போல. இப்படிப்பட்ட மனிதர்கள் இந்த நாட்டில் அதிகாரத்திற்கு வந்தால் தன்னை எதிர்த்து பேசுகிற, தன்னுடைய கருத்துக்கு மாறாக இருப்பவர்களை செருப்பால அடிப்பேன் காலில் போட்டு மிதிப்பேன் என்று சொல்வார்,  மிஞ்சிப்போனால் துப்பாக்கியால் சுடுவேன் என்று சொன்னாலும் சொல்வார்கள். கேட்டால் இது தமிழர் பண்பாடு என்று சொல்வதற்கும் வியப்பில்லை.

விடுதலை இராசேந்திரன்

Pin It