iit madrasவாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கும் வாய்ப்பளிக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து நடைபெற்ற நீண்ட போராட்டங்களின் விளைவாகவே கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு முறை அமலாக்கப்பட்டு வருகிறது.

பிற்படுத்தப்பட்ட மக்கள், பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினர் சமூகம் என ஒவ்வொருவருக்கும், ஒரு குறிப்பிட்ட சதவீத எண்ணிக்கையில் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டுமென முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

ஆனால் இடஒதுக்கீடு என்பது முறையாக அமலாகிறதா என்றால் இல்லை எனும் ஏமாற்றமே மிஞ்சுகிறது. உயர்கல்வி நிறுவனமான அய்.அய்.டி.களில் இடஒதுக்கீடு முறை என்பது காற்றில் பறக்க விடப்படுவதோடு, பின் தங்கிய மாணவர்களின் உயர் கல்வியும் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது என்பதை தகவல் அறியும் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட பின்வரும் விபரங்களிலிருந்து எளிதாக அறிந்து கொள்ளலாம்.

தில்லி, மும்பை, சென்னை, கான்பூர், கரக்பூர் ஆகிய ஐந்து அய்.அய்.டி. நிறுவனங்களில் 2015 முதல் 2019ஆம் ஆண்டு வரையிலான நான்காண்டு காலத்தில், சிவில், எலக்ட்ரிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ், மெக்கானிக்கல் ஆகிய நான்கு பாடப் பிரிவுகளில் மொத்தம் விண்ணப்பித்த 95,445 மாணவர்களில் 3279 பேருக்கு இடம் அளிக்கப்பட்டிருக்கிறது.

இவற்றில், பொது பிரிவு - 2363; பிற்படுத்தப்பட்ட பிரிவு - 638; பட்டியல் சாதிகள் - 238; பழங்குடியினர் - 40 - என்ற அடிப்படையில் மாணவர்களுக்கு இடம் அளிக்கப்பட் டுள்ளது. ஆனால் இட ஒதுக்கீடு முறையின்படி பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27%, பட்டியல் சாதிகளுக்கு 15%, பழங்குடியினருக்கு 7.5% எனும்அடிப்படையில் மாணவர்களுக்கு இடங்கள் அளிக்கப்படவில்லை.

மேற்கண்ட அடிப்படையில் இடஒதுக்கீடு முறை அமலாக்கப்பட்டிருந்தால் பிற்படுத்தப்பட்ட பிரிவில் - 885; பட்டியல் சாதிகள் பிரிவில் - 492; பழங்குடியினருக்கு - 246 எனும் எண்ணிக்கையில் மாணவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும். இடஒதுக்கீடு முறை அமலாகாததால் மொத்தம் 1623 மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய இடங்கள் வெறும் 916 ஆக குறைக்கப்பட்டதோடு, இடஒதுக்கீட்டின்படி பயனடைய வேண்டிய 707 மாணவர்கள் தங்களுக்கான வாய்ப்பையும் இழந்திருக்கிறார்கள்.

இது மிகப் பெரும் சமூக அநீதியாகும். இடஒதுக்கீட்டு அடிப்படையில் மொத்தம் விண்ணப்பித்திருந்த 23,629 மாணவர்களில் இடம் கிடைத்தவர்களின் எண்ணிக்கை 849 என்பதை ஒப்பிடும் போது 3.5% மாணவர்களுக்கு மட்டுமே இடம் கிடைத்திருக்கிறது. அதுவும் பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினருக்கு கிடைத்த இடங்கள் வெறும் 2.8% மட்டுமே.

சென்னை அய்.அய்.டிஇல் ஆராய்ச்சி பாடத்தில் உள்ள 15 பாடப்பிரிவுகளில், 11 பிரிவுகளில் பட்டியல் சாதிகள் மாணவர்களுக்கான இடங்களும் 14 பாடப்பிரிவுகளில் பழங்குடியின மாணவர்களுக்கான இடங்களும், 4 பாடப் பிரிவுகளில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடங்களும் முழுமையாக பூர்த்தி செய்யப்படவில்லை.

அந்த இடங்களெல்லாம் பொது பிரிவு மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி பாடங்களில் பின் தங்கிய மாணவர்களுக்கான வாய்ப்பு எவ்வாறு தொடர்ச்சியாக மறுக்கப்பட்டு வருகிறது என்பதை இந்த விபரங்கள் மூலம் உணர முடியும்.

சென்னை அய்.அய்.டி.இல் கடந்த 2015 முதல் 2019ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் முனைவர் பட்டத்திற்கான 15 பாடப் பிரிவு களில் சேர்க்கப்பட்ட 2195 மாணவர்களில், பிற்படுத்தப்பட்ட, பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு 849 இடங்கள் மட்டுமே அளிக்கப்பட்டிருக்கிறது இட ஒதுக்கீடு முறையாக அமலாகியிருந்தால் கூடுதலான இடங்கள் பின் தங்கிய பிரிவிலுள்ள மாணவர்களுக்கு கிடைத்திருக்கும்.

மும்பை அய்.அய்.டி.இல் மொத்தமுள்ள 26 ஆராய்ச்சிப் பாடங்களுக்கான பிரிவுகளில் 26-லும் பழங்குடி மாணவர்களுக்கான இடங்கள் முழுமையாக பூர்த்தி செய்யப்படாமலும், 25 பிரிவுகளில் பட்டியலின சாதிகளுக்கான இடங்கள் முழுமையாக பூர்த்தி செய்யப்படாமலும் இருக்கிறது.

26 பாடப்பிரிவுகளில் 16 பிரிவுகளில் முழுமையாக பொதுப் பிரிவினருக்கும், மீதமுள்ள 10 பாட பிரிவுகளிலும் 75% இடங்கள் அதாவது நான்கில் மூன்றுஇடங்கள் பொது பிரிவினருக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இட ஒதுக்கீடு முறையை அமலாக்காமல் இருப்பது, பிறகு காலியாக உள்ள அந்த இடங்களை பொதுப் பிரிவினருக்காக எடுத்துக் கொள்வதுமான நடைமுறை அங்கு நீண்ட காலமாக இருந்து வருகிறது. இத்தோடு, விண்ணப்பிக்கும் மாணவர்களை நேர்காணல் செய்யும் போதே,சேர்த்துக் கொள்ளாமல் நிராகரிக்கும் நடைமுறையையும் மும்பை அய்.அய்.டி பின்பற்றுகிறது.

நேர்காணலுக்காக அழைக்கப்பட்ட 25,300 பிற்படுத்தப்பட்ட, பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியின மாணவர்களில் வெறும் 815 மாணவர்கள் மட்டுமே சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள் என்கிற விபரத்தின் மூலம் அவர்களின் அணுகுமுறை எத்தகையது என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது.

கிடைத்துள்ள இத்தகைய விபரங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது அநேகமாக நாட்டில் உள்ள மிகப் பெரும்பாலான உயர்கல்வி நிறுவனங்களில் இத்தகைய நடைமுறைதான் அமலில் இருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

- விடுதலை இராசேந்திரன்

 

Pin It