ஆர்ப்பாட்டத்தில் ஆனூரார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

தில்லை நடராசர் கோயிலுக்குரிய சொத்துகள் அனைத்தும் தீட்சதப் பார்ப்பனர்களின் பெயரிலேயே இன்னும் இருக்கின்றன என்று சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கழகத் துணைத்தலைவர் ஆனூர் ஜெகதீசன் தெரிவித்தார்.

தில்லை கோயிலுக்குள் பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விடும் பார்ப்பன - பயங்கர வாதத்தை தடுத்து நிறுத்து, தில்லை நடராசர் கோயிலை அறநிலையத் துறையின் கீழ் ஏற்று நடத்து என்ற முழக்கத்துடன், கடந்த மார்ச் 4 ஆம் தேதி மாலை 4.30 மணியளவில் சென்னை மெமோரியல் அரங்கு அருகே - கழக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கழகத் தலைவர் ஆனூர் ஜெகதீசன் தலைமையில், பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கழகத் தோழர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் கழக துணைத் தலைவர் ஆனூர் ஜெகதீசன் பேசுகையில், தில்லை நடராசன் கோயில் சொத்துக்கள் அனைத்தும் தீட்சதப் பார்ப்பனர்களின் பெயர்களிலே உள்ளன. நடராசன் கோயில் பெயரில் எந்த சொத்தும் கிடையாது என்ற அதிர்ச்சியான தகவலை வெளியிட்டார். தில்லை நடராசனுக்கு சொந்தமான நகைகள், நடராசனுக்கு கட்டப்படும் ஆடை கூட நடராசன் கோயில் பெயரில் கிடையாது. கோயில்களை அறநிலையத் துறையின் கீழ் கொண்டு வரப்பட்டபோது - தில்லை நடராஜன் கோயில் பெயரில் எந்த சொத்தும் இல்லை என்பதால், அறநிலையத் துறையின் கீழ் கொண்டு வரப்படவில்லை என்றும், ஆனூர் ஜெகதீசன் தெரிவித்தார்.

பார்ப்பன தீட்சதர்களின் குடும்பங்கள் பெயரில் சுமார் 1700 ஏக்கர் நிலம் எழுதப்பட்டு, பரம்பரை பரம்பரையாக அவர்களால் அனுபவிக்கப்பட்டு வருகிறது. அது மட்டுமல்ல, இதே தில்லை நடராசன் கோயிலுக்குள் கோவிந்தராஜ பெருமாள் என்ற விஷ்ணு கோயிலும் சிறிய அளவில் உள்ளது. சிவன் கோயிலுக்குள்ளே விஷ்ணு கோயிலும் இருப்பது சிதம்பரத்தில் தான். இந்த பெருமாள் கோயிலுக்கு, வைணவப் பார்ப்பனர்களே அர்ச்சனை செய்கிறார்கள். ஆனால், தில்லை நடராசன் கோயிலுக்குள்ளேயே இருக்கும் இந்த சிறிய பெருமாள் கோயில், அறநிலையத்துறையின் கீழ் இருக்கிறது. அப்படியானால் நடராசன் கோயிலை அறநிலையத் துறையின் கீழ் கொண்டு வர முடியாதா என்று ஆனூர் ஜெகதீசன் கேட்டார்.

கோயிலுக்குள் - திருச்சிற்றம்பல மேடையில் தேவாரம் பாடலாம் என்று அறநிலையத்துறை முதலில் அறிக்கை வெளியிட்டது. அதை எதிர்த்து, தீட்சதப் பார்ப்பனர்கள் உயர்நீதிமன்றம் சென்ற பிறகு, நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் - தேவாரம் பாடும் உரிமை, அரசின் ஆணையாகவே வெளிவந்தது. அரசின் ஆணைக்கே கீழ்ப்படிய மறுக்கும் தீட்சதப் பார்ப்பனர்களை, அரசு சட்டப்படி தண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

சைவர்களின் பக்தி நூலாகிய - சேக்கிழார் எழுதிய பெரிய புராணத்தை இரண்டாம் குலோத்துங்கன் யானை மீது அமர்த்தி ஊர்வலமாக அழைத்து வந்து, இதே தில்லை நடராசன் கோயிலிலே தான் அரங்கேற்றம் செய்தான். குலோத்துங்கன் ஆட்சியில் சேக்கிழார் அமைச்சர். அந்தத் தில்லையிலே தேவாரம் ஓதுவதற்கு தடை போடுகிறார்கள், தீட்சதப் பார்ப்பனர்கள். தேவாரம் ஓதியதால் தீட்டாகிவிட்டது என்று தீட்சதப் பார்ப்பனர்கள், தீட்டுக் கழிக்கிறார்கள் என்றால், இந்தப் பார்ப்பனத் திமிரை, ஆணவத்தை, ஒழிக்க வேண்டாமா? என்றும் ஆவேசத்துடன் கேட்டார்.

ஆர்ப்பாட்டத்தில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், மக்கள் கலை இலக்கிய கழக மாநில பொருளாளர் சீனிவாசன், அம்பேத்கர் விடுதலை முன்னணியைச் சார்ந்த தமிழினியன், தமிழக மக்கள் உரிமைக் கழகத்தைச் சார்ந்த திருமதி வடிவு ஆகியோர் உரையாற்றினர். கழகப் பொறுப்பாளர்கள் வழக்கறிஞர் சு. குமாரதேசன், எ. கேசவன், தபசி குமரன், இரா. உமாபதி, கரு. அண்ணாமலை, அன்பு தனசேகர், டேவிட் பெரியார், சைதை மனோகரன், தமிழ்ச் செல்வன், ந. அய்யனார், உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் பங்கேற்றனர். சொ. அன்பு நன்றி கூறினார். மாலை 6 மணியளவில் ஆர்ப்பாட்டம் முடிந்தது.

Pin It