வாழ்வதிலும் நலம் சூழ்வதிலும் புவி
மக்களெல்லாம் ஒப்புடையார்!
ஏழ்மையில் மக்களைத் தள்ளுவதோ? - இதை
இன்பமெனச் சிலர் கொள்ளுவதோ? (வா)
கூழுக்குப் பற்பலர் வாடவும் சிற்சிலர்
கொள்ளையடிப்பதும் நீதியோ - புவி
வாழ்வதுதான் எந்தத் தேதியோ? (வா)
சிற்சிலர் வாழ்ந்திடப் பற்பலர் உழைத்துத்
தீர்கஎனும் இந்த லோகமே - உரு
அற்றொழிந் தாலும்நன் றாகுமே! (வா)
காண்பதெலாம் தொழிலாளி செய்தான் அவன்
காணத்தகுந்தது வறுமையாம் - அவன்
பூணத் தகுந்ததும் பொறுமையாம்! (வா)
அன்பெனச் சொல்லியிங் காதிமுதற் பேத
வன்மை வளர்த்தனர் பாரிலே - அதன்
பின்புகண் டோம்இதை நேரிலே (வா)
மக்கள் பசிக்க மடத்தலைவர்க் கெனில்
வாழை யிலைமுற்றும் நறுநெய்யாயம் - இது
மிக்குயிர் மேல்வைத்த கருணையாம் (வா)
கோயிலிலே பொருள் கூட்டும் குருக்களும்
கோதையர் தோளினிற் சாய்கின்றார் - இங்கு
நோயினிலே மக்கள் மாய்கின்றார் (வா)
கோரும் துரைத்தனத்தாரும் பெரும் பொருள்
கொண்டவர்க்கே நலம் கூட்டுவார் - உழைப்
போரிடமே கத்திதீட்டுவார் (வா)
மக்களெல்லாம் சமமாக அடைந்திட
மாநிலம் தந்ததில் வஞ்சமோ? - பசி
மிக்கவரின் தொகை கொஞ்சமோ? (வா)
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- எங்களுக்கு வேலை இருக்கிறது
- காங்கிரஸ்காரர்களின் தேர்தல் பிரசார யோக்கியதை
- பெரியார் முழக்கம் மார்ச் 28, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- தமிழிசையை புனிதத்தில் ஒளித்து வைத்த பார்ப்பனக் கூட்டம்
- பெரும்பான்மைவாதம் பேராபத்து
- அமைச்சரானார் பொன்முடி! அவமானப்பட்டார் ஆளுநர்!!
- விரல்கள் தோற்கடிக்கும்!
- இந்தியா முழுவதும் காவியா?
- மதம் ஏன் ஒழிய வேண்டும்?
- கருஞ்சட்டைத் தமிழர் மார்ச் 23, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- விவரங்கள்
- பாரதிதாசன்
- பிரிவு: பாரதிதாசன்