தென்னாட்டில், அரசியலிலாகட்டும், சமூக இயலிலாகட்டும், பொருளாதார இயலிலாகட்டும் நமது பார்ப்பனர்களுடைய சூட்சிகள் அளவிட முடியாத அளவு தொல்லை விளைவித்து வருவது யாவரும் அறிந்ததேயாகும்.
இந்த நாட்டில் பார்ப்பனர்களுக்கு மத விஷயமாக கிடைத்துவிட்ட உயர்வே அவர்கள் மற்ற சமூகங்களுக்கு இவ்வளவு தொல்லைகளை விளைவித்து வர ஏதுவாயிருப்பதினாலே அவர்களுக்கு மத விஷயமாய் உள்ள ஆதிக்கத்தை முதலில் ஒழித்தாக வேண்டுமென்று இந்த பத்து வருஷ காலமாகச் சுயமரியாதை இயக்கம் உழைத்து வருகிறது.
இதுவரையில் பார்ப்பனத் தொல்லையிலும், கட்டுப்பாட்டிலும் இருந்து விலக எத்தனையோ பேர் எத்தனையோ காலமாக முயன்று வந்தும் அதற்கு முக்கிய ஆதாரமாய் இருந்து வந்த மதச் சலுகையை அசைக்க எவரும் துணிவு கொள்ளாததாலேயே "பார்ப்பன ஆதிக்கத்தை அசைக்க யாராலும் முடியாது" என்கின்ற பெருமையைப் பார்ப்பனர்கள் பெற்று வந்திருக்கிறார்கள்.
ஆனால், சுயமரியாதை இயக்க பிரசாரத்தின் பயனாய் ஒரு அளவுக்கு மக்கள் தெளிவு பெற்று மத ஆதிக்கத்திலும் கை வைக்க ஆரம்பித்த பிறகே பார்ப்பனர்கள் பயந்து தங்கள் ஆதிக்கத்தைக் காப்பாற்றிக் கொள்ள புதிய புதிய வழிகள் கண்டு பிடித்து பூமிக்கும் வானத்துக்குமாகத் தாவிக் குதிக்கும்படியான அளவு முயற்சியோடு பாடுபட வேண்டியவர்களாய் இருந்து வருகிறார்கள்.
பார்ப்பனர்க்குள்ளாகவே தங்களை மூன்று பிரிவுகளாகப் பிரித்துக் கொண்டு "அரசாங்கத்தை எதிர்க்கும்" தேசீயம் என்னும் பேரால் ஒரு பிரிவும், "சர்க்காரை ஆதரிக்கும் உத்தியோகம் பார்ப்பது" என்னும் பேரால் ஒரு பிரிவும், "மதங்களைக் காப்பாற்றும் வைதீகம்" என்னும் பேரால் ஒரு பிரிவுமாகப் பிரிந்து மூன்று துறைகளையும் சுவாதீனப்படுத்திக் கொண்டு அவைகளுக்குத் தாங்களே கர்த்தாக்களாய் இருந்து கொண்டு மற்ற மக்களை எந்தத் துறையிலும் முன்னேறாதபடி தொல்லை விளைவித்து வருகிறார்கள்.
ஜஸ்டிஸ் கட்சி ஏற்பட்டது பார்ப்பனரல்லாத மக்கள், பார்ப்பன ஆதிக்கத்தில் இருந்து விடுவிப்பதற்காகவே அதாவது பார்ப்பனர்களின் எதிர்ப்பிலும், தகர்ப்பிலும் சிக்கிக் கொண்டு வெகுபாடுபட வேண்டியதாய் இருந்து வருகிறது.
பார்ப்பனர்கள் ஆண் பெண் அடங்கலும் எல்லோரும் படித்தவர்கள் சூட்ச்சி தெரிந்திருக்கிறவர்கள், சகல துறைகளிலும் ஏற்கனவே ஆதிக்கம் பெற்று மக்களை அடக்கி மிரட்டி ஆண்டு வருகிறவர்கள்.
பார்ப்பனரல்லாதார்களோ 100க்கு 90 பேருக்கு மேல்பட்டு கல்வியறிவு இல்லாதவர்கள், அரசியலிலும், சமூக இயலிலும், மத இயலிலும் தலைமுறை தலைமுறையாயடிமைப்படுத்தப்பட்டுக் கிடந்ததின் பயனாய் உலக வாழ்க்கையே அடிமைத்தனமானது என்று கருதி நுகத்தடிக்குக் கழுத்தை நீட்டிக் கொண்டே இருந்து வந்தவர்கள். ஆதலினாலேயே பார்ப்பனர்கள் எல்லோரும் பார்ப்பனரல்லாதார் சுதந்திர முயற்சி எதிரிகளாகவும், விரோதிகளாகவும் இருக்கவும், பார்ப்பனரல்லாதாரில் மாத்திரம் பல பார்ப்பனரல்லாதார் பார்ப்பனர்களுக்கு அடிமையாகவும், ஒற்றர்களாகவும் இருந்துவரவுமான காரியம் நடைபெற இடமேற்பட்டு விடுகிறது.
இந்தக் காரணங்களாலேயும், பார்ப்பனரல்லாதார் முயற்சிக்கு வெற்றி பெற முடியாமல் இருந்து வருகிறது என்ற போதிலும், ஏதோ பல தோழர்கள் உண்மை முயற்சியால் ஒரு அளவுக்கு பார்ப்பனரல்லாதார் சமூகம் வெற்றி பெற்று அரசியலில் சிறிது ஆதிக்கம் பெற்று முழு விடுதலைக்குப் பாடுபட்டு வருகிறார்கள் என்றாலும் உத்தியோகம் முதலிய காரியங்களால் பார்ப்பனரல்லாதார்க்குள்ளும் ஒருவருக்கொருவர் கட்சிகளும், மனக்கசப்புகளும் ஏற்பட்டு கொஞ்ச நஞ்சம் ஏற்பட்ட வெற்றியும் மேல் நோக்காமல் கீழே நோக்கும்படியான நிலையிருக்கிறது.
பார்ப்பனரல்லாதார் கட்சி இயக்கம் என்பதை பார்ப்பனரல்லாதார் மக்கள் எல்லோரும் சேர்ந்து ஒற்றுமையாய் ஆதரிக்க முன் வராமல் அலட்சியமாயிருந்து வந்ததால் இயக்கம் முன்னேற்றமடைய இடமில்லாமல் எப்படியாவது உயிருடன் இருந்தால் போதும் என்கின்ற நிலையில் உயிருக்குப் போராட வேண்டிய நிலைமையிலிருக்கிறது.
இதைப் பார்ப்பனர்கள் நன்றாய்ப் பயன்படுத்திக் கொண்டு இது சமயம் பார்ப்பனரல்லாதார் இயக்கத்தை யடியோடு நசுக்கப் பார்க்கிறார்கள்.
இன்று எல்லா பார்ப்பனர்களும் ஒன்று சேர்ந்து கொண்டதோடு, எல்லாப் பார்ப்பனப் பத்திரிகைகளும் ஒன்று சேர்ந்து கொண்டு ஜஸ்டிஸ் கட்சியையும், அதன் பிரமுகர்களையும் பழிப்பதும், இழிப்பதும், பொய்யும், புளுகும், புரட்டும், பித்தலாட்டமும் கொண்டு சதா நிந்திப்பதும், விஷமப் பிரசாரம் செய்வதுமே தொழிலாகக்கொண்டு வேலை செய்தும் வருகின்றன. புதிய சீர்திருத்தம் வரப் போகின்றது என்பதை உணர்ந்த உடனும் அதில் ஏராளமாக ஆதிக்கம் செலுத்த தாராளமாய் இடம் இருக்கிறது என்பதை அறிந்ததும் இப்போது முன்னிலும் அதிகமான ஆத்திரமும் வேகமும் கொண்டு வேலை செய்கிறார்கள்.
ஆகவே இப்போது ஜஸ்டிஸ் கக்ஷியைப் பற்றிப் பார்ப்பனர்கள் சொல்லி வரும் குற்றங்கள் குறைகள் என்ன என்பதை யாருமே அறிவார்கள். தோழர் காந்தியார் முதல் சத்தியமூர்த்தி வரை பார்ப்பனரல்லாதார் கட்சி நடவடிக்கைகளில் எதையாவது ஒன்றைக் குறித்தோ, கக்ஷிப் பிரமுகர்களின் நடத்தைகளில் எதையாவது ஒன்றைக் குறித்தோ விளக்கிச் சொல்லி யோக்கியமான முறையில் குறை கூறியவர்களுமல்ல.
பாமர மக்களின் முட்டாள்தனத்தை ஆதாரமாக வைத்துக் கொண்டு,
ஜஸ்டிஸ் கட்சியார் பெண் பிள்ளையின் தாலியை அறுத்தார்கள் என்றும்;
தொண்டர்களை போலீசார் தடியாலடித்ததை ஆதரித்தார்கள் என்றும்;
கைதிகளுக்கு மோர் கொடுக்கவில்லை என்றும்;
சர்க்கார் கிஸ்து குறைக்கவில்லை என்றும்;
ஏராளமான சம்பளம் வாங்குகிறார்கள் என்றும்,
ராஜினாமா செய்யவில்லை என்றும்,
மற்றும் இதுபோன்ற அர்த்தமற்றதும், அறிவற்றதுமான வார்த்தைகளைச் சொல்லி மக்களை ஏமாற்றப் பார்க்கிறார்கள். இவைகளை நமது மக்கள் பகுத்தறிவைக் கொண்டு ஆராய்ந்து பார்ப்பதில்லை என்பதோடு, வயிற்றுப் பிழைப்பின் மூலமும், சுயநலத்தின் மூலமும், பார்ப்பனர்களுக்கு அடிமையாக வேண்டிய நிலையில் இருக்கும் சில பார்ப்பனரல்லாதார்களும் இப்படிப்பட்ட நாணயமும், பொருப்புமற்ற பிரசாரத்துக்கு உதவிகளாகவும், கூலிகளாகவும் இருந்து அதைப் பரவ இடம் கொடுத்து வருகிறார்கள்.
யாரோ ஒரு பெண்ணை ஏதோ ஒரு மேஜிஸ்ட்ரேட் தண்டித்துவிட்டு தாலியைப் பற்றி அலக்ஷியமாய் பேசினார் என்றால் அதற்கு ஜஸ்டிஸ் கட்சியார் எப்படி ஜவாப்தாரி என்பதை சிறிதும் யோசிக்காமல் அதை ஜஸ்டிஸ் கட்சி மீது பழி சுமத்தி விஷம பிரசாரம் செய்வது என்பது எவ்வளவு இழிவான காரியம் என்பதையும் அரசியல் துறையில் இருக்கிறவர்கள் எவ்வளவு அயோக்கியத்தனத்துக்கு துணிகிறார்கள் என்பதையும் பொது மக்கள் யோசிக்க வேண்டும்.
அதுபோலவே தொண்டர்களை போலீசார் அடித்தார்கள் என்பதும் இந்தியா பூராவும் நிகழ்ந்த விஷயமே தவிர இங்கு மாத்திரம் நடந்ததல்ல என்பதோடு சத்தியாக்கிரகத்தை அடக்க சர்க்கார் எடுத்துக் கொண்ட முயற்சிகளில் போலீசாரை விட்டு அடக்கச் சொன்னதும் ஒன்றாகும்.
இதற்கு ஜஸ்டிஸ் கட்சியார் என்ன செய்ய முடியும்? ஜஸ்டிஸ் கட்சியார் காங்கிரஸ் சத்தியாக்கிரகத்தை ஒப்புக் கொண்டவர்கள் அல்ல என்பதோடு ஜஸ்டிஸ் கட்சி மந்திரிகள் கையில் போலீஸ் நிர்வாகம் இல்லை என்பது யாவரும் அறிந்ததாகும்.
கைதிகளுக்கு மோர் கொடுக்கவில்லை என்பதும், ஜெயில் ஆரம்பமான காலம் முதல் இருந்து வரும் முறையீடாகும். இதற்காகப் பல தடவை முயற்சி செய்தும் அரசாங்கத்தார் ஒப்புக் கொள்ளவில்லை என்பதோடு ஜெயில் நிர்வாகம் ஜஸ்டிஸ் மந்திரிகள் கையில் இல்லை என்பதும் யாவரும் அறிந்ததாகும்.
சர்க்கார் பூமி வரியைக் குறைக்கவில்லை என்பதிலும் கொஞ்சமும் அர்த்தமில்லை. பூமி வரி விதிக்கும் அதிகாரம் ஜஸ்டிஸ் மந்திரிகள் கையில் இல்லை. சர்க்கார் மந்திரிகளைச் சேர்ந்தது என்பதோடு வரவு சிலவு இலாக்கா மந்திரியின் கையில் இருப்பதாகும்.
செலவைக் குறைக்காமல் வரியைக் குறைப்பதால் அரசாங்கம் நடைபெறாது என்கின்ற வாதம் பொருளாதார மந்திரியுடையதாகும். செலவைக் குறைப்பதில் பெருஞ் சம்பள விஷயமும் சில இலாக்காக்கள் சென்னை அரசாங்கத்தின் கையில்கூட இல்லாமல் இந்திய அரசாங்கத் தினிடமும், இந்தியா மந்திரியிடமும் இருந்து வருவதாகும். காங்கிரஸ் பார்ப்பனர்களுடையதாதலாலும், பார்ப்பனர்களே பெரிய உத்தியோகங் களில் இருப்பதாலும், சர்க்கார் உத்தியோகஸ்தர்கள், சம்பள விஷயத்தில் பார்ப்பனர்களோ, காங்கிரசோ வாயைத் திறப்பதே இல்லை.
இந்த நிலையில்கூட வரி குறைப்பு விஷயத்தில் ஜஸ்டிஸ் மந்திரிகள் ஒரு அளவுக்கு சிபார்சும் செய்திருக்கிறார்கள். அதில் வெற்றியையும் பெற்றிருக்கிறார்கள்.
ஏராளமான சம்பளம் வாங்குகிறார்கள் என்பதிலும் அறிவுடைமை இருப்பதாகக் காணவில்லை. மந்திரிகள் சம்பளம் 5000 ரூ. என்பது சட்டப்படி ஏற்பட்ட சம்பளமாகும் என்றாலும் ஜஸ்டிஸ் மந்திரிகள் அதிலிருந்தும் 1000 ரூ. குறைத்துக் கொண்டு 4000 ரூ. தான் வாங்குகிறார்கள்.
இந்த நாலாயிர ரூபாயில் பெரும்பாகம் கட்சிப் பிரசாரத்திற்கும், கட்சிப் பத்திரிகைகளுக்கும், கட்சி சம்பந்தமான மற்றச் செலவுகளுக்கும் செலவு செய்து வருகிறார்கள்.
கேவலம் படி விஷயங்களில் ஒரு சிறு பாகம்கூட கட்சி நன்மைக்குக் கொடுக்க சவுகரியமில்லையென்றும் தினம் 20 ரூபாய் ஒரு நபருக்குச் சாப்பாட்டுச் செலவுக்கு வேண்டியிருக்கிறதென்றும் காங்கிரஸ் இந்திய சட்டசபை பிரதிநிதிகள் சொல்லும்போது கிட்டத்தட்ட வாங்கும் சம்பளங்களில் சரி பகுதிக்கு மேலாகவே கட்சி நன்மைக்கு செலவு செய்யும் மந்திரிகளை அதிகச் சம்பளம் வாங்குகிறார்கள் என்று சொல்லுவது எப்படிப் பொருந்தும் என்பது நமக்குப் புரியவில்லை. மொத்தத்தில் சம்பளங்களைச் சட்டப்படி குறைத்துவிட்டால் அப்போது அதிகச் சம்பளமென்கின்ற பேச்சே இருக்காது. அதற்கு காங்கிரசுக்காரர் உண்மையாய் முயர்ச்சிப்பது கிடையாது.
கடைசியாக, "இந்த காரியங்கள் செய்ய முடியவில்லையானால் ஏன் ராஜினாமா செய்யவில்லை?" என்று பார்ப்பனர்கள் கேட்கிறார்கள். ராஜினாமா செய்துவிட்டதினால் என்ன காரியம் ஆகிவிடும் என்பதை நன்றாய் யோசித்துப் பார்க்க வேண்டும். ராஜினாமா செய்த ஸ்தானம் அப்படியே யெப்போதும் காலியாக இருக்குமா? இதுவரை காங்கிரசுக்காரர்களோ மற்றவர்களோ ராஜினாமா செய்த ஸ்தானங்கள், உத்தியோகங்கள் என்பவை ஏதாவது இருக்குமானால் அது காலியாகவே இருக்கிறதா? அல்லது காங்கிரஸ்காரர்களாவது மறுபடியும் அதில் பிரவேசிக்காமல் இருந்திருக் கிறார்களா? அப்படியே ராஜினாமா செய்து அந்த ஸ்தானங்களும் காலியாக இருந்தால் மிதவாதிகள், முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள், ஆதி திராவிடர்கள், வர்ணாச்சிரமக்காரர்கள் எந்தக் கட்சியும் சேராதவர்கள் ராஜ விசுவாசிகள் ஆகிய கூட்டத்தார்கள் அந்த ஸ்தானங்களை ஏற்றுக் கொள்ள மாட்டார்களா?
அவர்களும் ஏற்றுக்கொள்வதில்லையென்றே வைத்துக் கொண்டாலும் சர்க்காரார் தங்கள் உத்தியோகஸ்தர்களைக் கொண்டு அந்த ஸ்தானங்களைப் பூர்த்தி செய்து காரியங்கள் நடத்த மாட்டார்களா என்பவைகளையெல்லாம் யோசித்துப் பார்த்தால் ராஜினாமா செய்வது எவ்வளவு பயனற்றதும், முட்டாள்தனமானதுமான காரியம் என்பது விளங்காமல் போகாது.
மேல் குறிப்பிட்ட 4, 5 காரியங்களுக்காகவும், மற்றும் தொட்டதற் கெல்லாமும் "ஏன் ராஜினாமா செய்யவில்லை" "ஏன் ராஜினாமா செய்யவில்லை" என்று கேட்கும் காங்கிரஸ்காரர்கள் தாங்கள் ஏன் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்யவில்லை என்று கேட்டால் அதற்கு என்ன பதில் சொல்லுவார்கள்? கேட்ட உடனே திருடனைத் தேள் கொட்டியது போல் தலையைக் கவிழ்ந்து கொண்டு ஓடப் பார்க்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.
உதாரணமாக சென்னை சட்டசபையில் காங்கிரஸ்காரர்களுக்கு நூற்றுக்கணக்கான தோல்விகள் ஏற்பட்டன. ஏன் ராஜினாமா செய்யவில்லை?
அதுபோல இந்திய சட்டசபையிலும் பல தோல்விகள் ஏற்பட்டன. இவர்கள் வெற்றி பெற்றதாகச் சொல்லி பெருமை பேசும் காரியங்கள் ஒவ்வொன்றையும் சர்க்காரார் நிராகரித்து அவமானப்படுத்தி இருக்கிறார்கள் என்று அவர்களே சொல்லிக் கொள்ளுகிறார்கள். அப்படி இருக்க ஏன் காங்கிரஸ்காரர்கள் ராஜினாமா செய்யவில்லை.
காங்கிரசுக்காரர்கள் இந்தச் சர்க்காராருடைய யோக்கியதைகள் பூராவும் தெரிந்தும் இந்தியாவில் அவர்களுடைய ஆட்சியை ஒழித்துப் பூரண சுதந்திரமுள்ள நாடாக இந்தியாவை ஆக்குகிறோம் என்று காங்கிரசில் தீர்மானித்துக் கொண்டும், சுயமரியாதையைப் பற்றி பிரமாதமாய்ப் பேசிக் கொண்டும் இருக்கும் காங்கிரஸ்காரர்கள், "இந்திய அரசருக்கும், சட்டப்படி ஏற்பட்ட அவரது அரசாங்கத்துக்கும், மற்றும் அரசர் பெருமானின் சந்ததி யார்களுக்கும், பக்தி விசுவாசத்துடன் இருந்து நடந்து கொள்ளுகிறேன்" என்று "கடவுளை" வேண்டி சத்தியம் செய்து கொடுத்து, "ஒரு காரியமும் செய்ய முடியாத" சட்டசபையிலும், கமிட்டியிலும் தொங்கிக் கொண்டும் நத்திக் கொண்டும் தினம் 20ரூ. படி வாங்கிக் கொண்டும் இருக்கும்போது அதைவிடப் பெரிய பதவியில் இருந்து கொண்டு "பொது ஜனங்களுக்கு ஒரு அளவுக்காவது தாங்கள் எண்ணுகின்றபடி நன்மை செய்ய இடம் இருக்கிறது" என்று கருதிக் கொண்டிருக்கும் கூட்டத்தார் எப்படி ராஜினாமா செய்வார்கள் என்றும், இப்படிப்பட்டவர்கள் அவர்களை ராஜினாமா செய்யும்படி கேட்பது யோக்கியப் பொருப்பும், நாணையமும் அறிவுடை யவுமான காரியமா என்றும் கேட்கின்றோம்.
ஆகவே இன்று தோழர் ராஜகோபாலாச்சாரி முதல் சத்தியமூர்த்தி ஈறாக, "ஜஸ்டிஸ் மந்திரிகள் ராஜினாமா செய்ய வேண்டும், ஜஸ்டிஸ் மந்திரிகள் ராஜினாமா செய்ய வேண்டும்" என்கின்ற ஒரே பல்லவியைப் பாடிக் கொண்டு திரிவதும், அவர்களது கூலிகளும், அடிமைகளுமான சில பார்ப்பனரல்லாதாரும் அதையே சொல்லிக் கொண்டு திரிவதும் எவ்வளவு விஷமத்தனமானதும், போக்கிரித்தனமான காரியம் என்பது இப்போதாவது விளங்குகின்றதா? என்றுதான் கேட்கின்றோம்.
சுமார் 15 வருஷ காலமாகவே பார்ப்பனர்கள் ஜஸ்டிஸ் கட்சி மந்திரி சபையை அழிக்க என்னென்னமோ முயற்சி செய்து பார்த்தார்கள். 1927ல் காங்கிரஸ் "கட்டளைக்கு" விரோதமாய் மந்திரிகளை ஏற்படுத்தினார்கள்; ஆதரித்தார்கள். மந்திரிகளுக்குச் சிபார்சாய் இருந்தார்கள். மந்திரிகளிடம் பேச வக்காலத்துப் பெற்று பணமும் சம்பாதித்தார்கள். இதற்கெல்லாம் காரணம் என்ன சொன்னார்கள் என்றால், "நாங்கள் இந்த மாதிரி எல்லாம் செய்யாவிட்டால் தேசத் துரோகிகள், அந்த ஸ்தானங்களில் அமர்ந்து கொள்ளுவார்கள்" என்று சமாதானங்கள் சொன்னார்கள்.
இதை வெளி மாகாண காங்கிரசுக்காரர்களே ஒப்புக் கொள்ளவில்லை.
அப்படி இருக்க இப்போதுள்ள இந்த மந்திரிகளும், மந்திரி கட்சியார்களும் மந்திரி ஸ்தானத்தை "ராஜினாமா செய்து விட்டால் சமூகத் துரோகிகளும், ஜாதி அகம்பாவக்காரர்களும், பார்ப்பனக் கூலிகளும், அடிமைகளும், அந்த ஸ்தானத்தில் அமர்ந்து கொண்டு பொது ஜனங்களின் சுயமரியாதைக்கும் சுதந்திரத்துக்கும் கேடு செய்வார்கள் என்பதோடு பார்ப்பனரல்லாதார் சமூகத்துக்கும் துரோகம் செய்து வருவார்கள்" என்று கண்ணியமாய் கருதினால் அவர்கள் எப்படி ராஜினாமா செய்ய முடியும்?
தோழர் சத்தியமூர்த்தி தான் மந்திரி வேலைக்கு ஆசைப்படுவதில்லை என்று எப்போதாவது சொன்னாரா? அல்லது எந்த மந்திரியையும் ஆதரிப்ப தில்லை என்று எங்காவது பொய் சத்தியமாவது செய்து கொடுத்தாரா? ஒன்றும் இல்லாமல் "நீ மந்திரியாய் இருப்பது தேச துரோகம்; நான் மந்திரியாய் இருப்பதே தேசபக்தி" என்று சொன்னால் இதை எந்த முட்டாள் தான் கேட்க முடியும் என்று கேட்கின்றோம்.
டாக்டர் சுப்பராயன் மந்திரிசபையை ஏற்படுத்தினவர்கள், காங்கிரசுக் காரர்கள் என்பதும், அதை ஆதரித்தவர்கள் காங்கிரஸ்காரர்கள் என்பதும் கடைசியாக டாக்டர் சுப்பராயன் தீண்டப்படாதவர்களுக்குத் தனிப் பிரதிநிதித்துவம் கொடுத்தவுடன் அவரையே ஒழிக்க முயற்சி செய்தும் எப்படியாவது டாக்டர் சுப்பராயன் வராமல் இருக்க வேண்டும் என்பதற்காக ஜஸ்டிஸ் மந்திரிசபையை ஏற்படுத்த 1930ல் இவர்கள் பாடுபட்டதும் காங்கிரஸ் தேசீயப் பத்திரிகைகள் இந்து, சுதேசமித்திரன் உள்பட எல்லாம் ஜஸ்டிஸ் கட்சியை ஆதரித்து நிற்கின்றதும் யாரும் அறியாததா என்று கேட்கின்றோம்.
ஆகவே காங்கிரஸ்காரர்கள் (பார்ப்பனர்கள்) என்பவர்களுக்கு எப்படியாவது எந்தக் காரியம் செய்தாவது பதவி அடைய வேண்டும் என்பதைத் தவிர வேறு ஒரு லட்சியமும் இல்லை என்பதையும் இதற்காக எவ்வளவு பொய்யும், புழுகும், அக்கிரமமும், அயோக்கியத்தனமும் செய்யலாம் என்று அவர்கள் கருதி இருக்கிறார்கள் என்பதையும் அதையே அவர்களது லட்சியமாய்க் கொண்டு இருந்து வருகின்றார்கள் என்பதையும் தெரிவிக்கவே இதை எழுதுகிறோம்.
(குடி அரசு தலையங்கம் 14.07.1935)