பகுத்தறிவு என்னும் பேரால் ஒரு மாதப் பத்திரிகை பகுத்தறிவு நூற்பதிப்புக்கழக ஆதரவில் குடி அரசு பதிப்பகத்தில் இருந்து வெளியிடப் படும். பொறுப்பாசிரியர் ஈ.வெ. கிருஷ்ணசாமி, அதன் பிரதான ஆசிரியர் பண்டிதர் சாமி சிதம்பரனார். மற்றும் தோழர்கள் ஈ.வெ. கிருஷ்ணசாமி, ஈ.வெ. ராமசாமி, கைவல்ய சாமியார், M. சிங்காரவேலு B.A.B.L., P. சிதம்பரம் B.A.B.L., S. லட்சிமிரதன் பாரதி M.A.B.L., K.M. பாலசுப்பிரமணியம் B.A.B.L., S. குருசாமி, S. குஞ்சிதம் அம்மாள், நீலாவதி அம்மாள், இந்திராணியம்மாள், K.A.P. விஸ்வநாதம், அ. இராகவன், C. சுப்பையா B.A., பிரமச்சாரி M.A.L.T., பாரதிதாசன், ஜீவானந்தம், "சித்திரபுத்திரன்" முதலிய 50 அறிஞர்கள் சந்தர்ப்பம்போல் கட்டுரைகள் எழுதுவார்கள். அனேக சர்க்கார் உத்தியோகஸ்தர்களும், மதத் தலைவர்களும், புனைப்பெயருடன் எழுதுவார்கள்.periyar and maniammai 558அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, ரஷ்யா முதலிய தேசங்கள், பகுத்தறிவு முதலிய சங்கத்தார்களின் வெளியீடுகளுடையவும், அபிப்பிராயங் களினுடையவும், மொழிபெயர்ப்புகளும், சுகாதாரம், வைத்தியம், சட்டம் முதலியவைகளும், சிறுகதைகளும், ஹாஸ்யங்களும், வாக்குவாதங்களும், பாட்டுகளும், நாடகங்களும், உலக அதிசய சேதிகளும் வரும். ஆரம்பத்தில் 64 பக்கமாக இருந்தாலும் சீக்கிரத்தில் 100 பக்கங்களுடன் வெளிவந்தாலும் வரும்.

டிம்மி 1க்கு 8ல் 64 பக்கம் கொண்டது.

வருட சந்தா ரூ.1.

தனிப்பிரதி அணா 1. பைசா 6.

தயவுசெய்து ஒவ்வொரு தோழரும் சந்தாதாரர்களாக ஆகி பகுத்தறிவுக்கு ஆதரவளித்து மக்களைப் பகுத்தறிவு மயமாக்க வேண்டும் என்பதே முக்கிய வேண்டுகோள்.

(குடி அரசு அறிவிப்பு 27.01.1935)

***

இந்தியா சட்டசபைக்கு ஒரு பாரபக்ஷமற்ற சுயேச்சையுள்ள தலைவர்

சர். அப்துர் ரஹிம் அவர்களை இந்தியா சட்டசபைக்குத் தலைவராகத் தேர்ந்தெடுத்த அங்கத்தினர்களை நாம் மனமாறப் பாராட்டுகிறோம். சர். அப்துர் ரஹிம் அவர்கள் பாரபக்ஷமற்ற ஒரு திறமை வாய்ந்த சுயேச்சையான நீதிபதியாக நமது சென்னையில் இருந்து வந்தவர் என்பது யாவரும் அறிந்ததாகும். அத்தகையார் தற்போது இந்தியா சட்டசபைக்கு ஏற்பட்டுள்ள சந்தர்ப்பத்துக்குத் தகுதியான முறையில் நீதிவழங்கத் தலைமைப் பதவி ஏற்றுக் கொண்டிருக்கிறார். இவருக்கு þ பதவி கிடைக்காமல் இருக்க வேண்டுமென்று தேசபக்தப் பெருமையில் மிகுதி யடைந்ததாகச் சொல்லிக் கொள்ளுபவர்களால் சில இடையூறுகளும் சூழ்ச்சிகளும் நேரிலிருந்து செய்யப்பட்டிருந்தாலும்கூட மற்ற அங்கத்தினர்கள் அவைகளையெல்லாம் பொருட்படுத்தாமல் தங்கள் கடமையை நிறைவேற்றினமைக்கு நாம் மகிழ்ச்சிப் பெருக்கடைகிறோம்.

(குடி அரசு துணைத் தலையங்கம் 27.01.1935)