இந்திய சட்டசபைப் பொதுத் தொகுதியின் பொது ஓட்டர் தொகுதியில் ஒரு கிருஸ்தவர் வெற்றி பெற்றுவிட்டதற்காகப் பார்ப்பனர்கள் வகுப்புவாரி ஓட்டர் தொகுதி இனி வேண்டியதில்லை என்றும், பொதுத் தொகுதியே போதும் என்றும், அதிலும் கிருஸ்தவர்களுக்கு என்று ஸ்தானம் ஒதுக்கி வைக்கக்கூட வேண்டியதில்லை என்றும் இப்போது முன்னிலும் அதிகமாக கூப்பாடு போடுகிறார்கள்.

ஆனால் எப்படிப்பட்ட கிருஸ்தவர் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்றால் அவர்கள் சமூக முடிவுக்கு விரோதமான கருத்துடைய கிருஸ்தவர்தான் பொதுத் தொகுதியில் வெற்றி பெற்றிருக்கிறாரே தவிர, கிருஸ்தவ சமூக நலனுக்கு ஏற்பட்ட கருத்தை நிலைநிறுத்தப் பாடுபடும் கிருஸ்தவர் வெற்றி பெறவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.periyar 680வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வேண்டாம் என்பதும், வெள்ளை அறிக்கையை பகிஷ்கரிக்க வேண்டும் என்பதும், காங்கிரசினுடன் கூட்டுறவு கொள்ளவேண்டும் என்பதும், காங்கிரசு கிருஸ்தவ சமூகத்துக்கும் பிரதிநிதித்துவம் உடையது என்பதும், பெரும்பான்மையான அல்லது 100 க்கு 99 பேர்களான கிருஸ்தவர் களுடைய எண்ணமா? அவர்களுடைய சமூக சங்கத்தினுடைய முடிவா? என்பதை உணர்ந்து பார்த்தால் தங்கள் சமூக மக்களில் 100 க்கு 99 பேர்களுக்கு விரோதமான அபிப்பிராயம் உடையவரும், சமூக சங்க முடிவுக்கு எதிரிடையான அபிப்பிராயம் உடையவருமான ஒருவர் எதிரிகளின் கையாளாகி அவர்களுடைய இஷ்டப்படி சம்மதித்த ஒருவர்தான் அல்லது தமது சமூக உரிமைகள் கோரிக்கைகள் என்பதற்கு துரோகம் செய்ய சக்தி வாய்ந்த ஒருவர்தான் பொதுத்தொகுதியில் தெரிந்தெடுக்கப்பட முடிகின்றது. ஆகவே இதுதான் இன்று பொதுத் தொகுதியாய் கருதப்படுகின்றது.

எனவே இந்த பொதுத் தொகுதியை கிருஸ்தவ சமூகம் ஒப்புக் கொள்ளுகின்றதா என்று கேட்கின்றோம்.

(பகுத்தறிவு கட்டுரை 02.12.1934)

***

முடிந்து போன விஷயமாம்

கும்பகோணத்தில் தேர்தல் கொண்டாட்டம் கொண்டாட வந்த தோழர் ராஜகோபாலாச்சாரியார் அவர்களை கூட்டத்தில் ஒரு கேள்வி கேட்டார்கள்.

அதாவது "இந்திய சட்டசபை மெம்பர் ஆகிவிட்டதற்காக இவ்வளவு பிரமாதமான வெற்றிக் கொண்டாட்டம் கொண்டாடுகின்றீர்களே! நீங்கள் எல்லோரும் அங்கு போய் என்ன செய்யப் போகிறீர்கள்?" என்று கேட்டார்கள். அதற்க ராஜகோபாலாச்சாரியார் ஒரே வார்த்தையில் பதில் சொல்லி விட்டார்.

அதாவது "இது முடிந்து போன விஷயம். எப்படியோ ஒரு விதத்தில் நாங்கள் ஜெயித்து விட்டோமாகையால் முடிந்து போன விஷயத்துக்கு இனி கேள்வி கேட்கவோ பதிலளிக்கவோ இடமில்லை" என்று சொல்லிவிட்டாராம். எந்த விதத்திலோ காரியம் கைகூடின பிறகு வெற்றி பெற்றவர்கள் சொல்ல வேண்டிய பதில் இதுதான். அவர்களது தைரியத்தைக் கண்டு நாம் அதிசயிக்காமல் இருக்க முடியவில்லை.

(பகுத்தறிவு செய்தி விளக்கக் குறிப்பு 02.12.1934)