periyar 432“குடி அரசு” பத்திரிகை சந்தாதாரர்களால் தங்களுக்குப் பத்திரிகை சரியாய் வருவதில்லை என்பதாக தினம் ஏராளமான ஆவலாதிகள் வந்து கொண்டிருக்கின்றன. அவைகளில் பல பத்திரிகையின் மீதுள்ள வெறியினாலும் (சில பணத்தை உத்தேசித்ததாகவும் இருக்கலாம்) பலவாராக பொருமை இழந்து எழுதப்பட்டவைகளாக காணப்படுகின்றன.

பத்திரிகை சென்னைக்கு மாற்றப்பட்டதாலும் சென்னையில் ஏற்பட்ட பலவிதத் தொல்லையாலும் நாம் மலாய் நாட்டுக்கு போய் இருந்த காலையில் பத்திரிகை நிருவாகத்தை ஏற்றுக் கொண்டவர்களின் நடத்தையாலும் பத்திரிகைகள் 3 வாரம் சந்தாதாரர்களுக்கு அனுப்பப்படவில்லை என்பதை நாம் ஒப்புக் கொள்ளுகின்றோம்.

ஆனால் நாம் சரியாய் அனுப்பிய காலங்களில் கூட தங்களுக்கு சரியாய் பத்திரிகை கிடைக்கவில்லை என்பதாக வரும் ஆவலாதிகளே அநேகமாய் காணப்படுவதால் நாம் அவற்றிற்கு ஒரே பதில் தான் சொல்லக்கூடிய நிலையில் இருக்கின்றதற்கு வருந்துகின்றோம்.

அதாவது, நாம் வாரம் 9000 காப்பிகள் அச்சடித்ததற்கு காகித செலவும், அச்சடித்தவைகளை தபாலில் அனுப்பியதற்கு ஸ்டாம்பு செலவும், ரயிலில் பார்சலாய் 47 பார்சல்கள் அனுப்பியதற்கு பார்சல் செலவும், இரசீதுகளும் நமது சந்தாதாரர்களுக்கு மெய்ப்பிக்க தயாராயிருக்கிறோம். மற்றபடி அது சந்தாதாரர்களுக்குப் போய்ச் சேராததற்கு நம்மால் காரணம் சொல்லி முடியாது.

வருஷ சந்தா 3ரூ. க்கு பதிலாக 4 ரூபாயாகவும் வெளிநாட்டுக்காரர்கள் 4ரூபாயுக்குப் பதிலாக 5 ரூபாயாகவும் அனுப்பினால் அப்பேர்ப்பட்ட சந்தாதாரர்களுக்கு பத்திரிகையை நாம் தபாலாபீசில் போட்டதற்காக தபாலாபீசில் ஒரு அத்தாட்சி வாங்கி ஒப்புவிக்க ஏற்பாடு செய்யப்படும். இதைத் தவிர மற்றபடி நம்மால் வேறு ஒன்றும் செய்யமுடியாது என்பதை வணக்கமாய் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

ஏனெனில் குடி அரசு ஆபீசுக்கு வாரம் ஒன்றுக்கு சராசரி 150 ரூபாய் வீதம் மாதம் 600 ரூபாய்க்கு மேற்பட்டு ஸ்டாம்பு விற்கும் தபால் இலா காவும் வாரம் 47 பார்சல் வீதம் குடி அரசுக்கு பார்சல் சார்ஜ் வாங்கும் ரயில் இலாக்காவும் குடி அரசு விஷயத்தில் நடந்து கொள்ளும் மாதிரியைப் பார்த்தால் நாம் இவ்வளவு பொருப்பு தான் ஏற்றுக் கொள்ள முடியும் என்று கண்டிப்பாய் சொல்ல வேண்டி இருக்கின்றது.

ஏனெனில் நமது பத்திரிகையின் தொண்டு அப்படிப்பட்டதாய் ஏற்பட்டுவிட்டது. ஆகையால் இந்த நிபந்தனைக்குக் கட்டுப்பட்டவர்களே சந்தாதாரர்களாய்ச் சேர்ந்தால் போதுமானது.

(குடி அரசு - அறிவிப்பு - 16.02.1930)

Pin It