periyar 322நமது நாட்டில் ஒரு மனிதனுக்கு எப்படி பிறவியின் காரணமாகவே, ஜாதி கற்பிக்கப்பட்டு, அந்த ஜாதியின் பேரால் அவன் அழைக்கவும் பட்டு அந்த மனிதனும் அதை ஒப்புக் கொண்டு தன்னை இன்ன ஜாதியான் என்று எண்ணிக் கொள்கின்றானோ, அதுபோலவே மதமும் ஒரு மனிதனுக்கும் பிறவி காரணமாகவே கற்பிக்கப்பட்டு, அவனும் அந்த மதத்தின் பேரால் அழைக்கப்பட்டு தானும் அதை ஒப்புக் கொண்டு தன்னை இன்ன மதத்தான் என்றே எண்ணிக்கொண்டு வருகின்றான்.

ஆனால், ஜாதியானது பிறவியின் காரணமாக ஏற்படுகின்றதென்று, ஜாதியைக் கற்பிக்கும் சாஸ்திரங்கள் என்பவைகளால் சொல்லப்பட்டு வருவ தால், பிறவியின் காரணமாக ஜாதி நிர்ணயிக்கிறவர்களுக்கு மேல்கண்ட ஆதாரங்களை சொல்லிக் கொள்ள இடமுண்டு.

ஆனால் மதமானது பிறவியின் காரணமாக ஏற்படுவதாக இன்றுவரை எந்த மதமும் அது சம்பந்தப்பட்ட சாஸ்திரமும் சொல்லவே இல்லை. மதம் என்பது கொள்கை என்றும், அந்தக் கொள்கையானது எந்த மனிதனாலும், எப்பொழுது வேண்டுமானாலும் ஏற்றுக் கொள்ளவும், தள்ளவும் உரிமையுடையது என்றுமே தான் சொல்லப்பட்டு வருவதுடன், அந்தப்படியே அநேக மனிதர்கள் அடிக்கடி மதம் மாறிக் கொண்டும் வருகிறார்கள்.

அதாவது இந்துக்கள் என்பவர்கள் கிறிஸ்தவர்களா கவோ, மகமதியர்களாகவோ, பௌத்தர்களாகவோ, பிரம்ம சமாஜிகளாகவோ, நாஸ்திகராகவோ மாறுவதும்; ஒரு கிறிஸ்தவர் மகமதியராகவோ, இந்துவாகவோ, பௌத்தராகவோ, நாஸ்திகராகவோ மாறுவதும், ஒரு மகமதியர் கிறிஸ்துவ ராகவோ, இந்துவாகவோ, பௌத்தராகவோ, நாஸ்திகராகவோ மாறுவதும், ஒரு பௌத்தர் இந்துவாகவோ, மகமதியராகவோ, கிறிஸ்துவராகவோ, நாஸ்திக ராகவோ மாறுவதும்; ஒரு நாஸ்திகர் இந்துவாகவோ, மகமதியராகவோ, கிறிஸ்து வராகவோ, பௌத்தராகவோ மாறுவதும் இவர்கள் அடிக்கடி உள்பிரிவு மதக்காரர்களாக அதாவது சைவன் வைணவனாகவும், வேளாளன் சைவனாகவும், சைவன் சமணனாகவும், சமணன் சைவனாகவும், மற்றும் இது போலவே அடிக்கடி மாறுவதும், சர்வ சாதாரணமாக பார்த்து வருகின்றோம்.

இந்த முறையில்தான் இன்றைய தினம், உலகத்தில் சுமார் 2000 வருஷத்திற்கு முன் ஏற்பட்டதான பௌத்தமதத்தில் 55 கோடி மக்களும், 2000 வருஷத்திற்கு முன் ஏற்பட்ட கிறிஸ்தவ மதத்திற்கு 50 கோடி மக்களும், 1300 வருஷத்திற்கு முன் ஏற்பட்ட மகமதிய மதத்திற்கு 23 கோடி மக்களும் காலமே குறிப்பிட முடியாததான அவ்வளவு பழைய இந்து மதத்திற்கு 20 கோடி மக்களும் பௌத்த, கிறிஸ்தவ, மகமதிய ஆகிய மதங்களுக்கு முன்னால் இருந்து வந்த யூத மதத்திற்கு ஒரே ஒரு கோடி மக்களும், மதம் குறிப்பிட இயலாத மக்கள் 17 கோடியுமாக இருந்து வருகின்றார்கள்.

இவர்கள் இந்தப்படி எப்படி உண்டாயிருக்க முடியும்? அநேக மாக இவ்வளவு ஜனங்களும் ஏதோ ஒரு மதத்திலிருந்தோ, அல்லது மதமே இல்லாதவர்களாயிருந்தோ தான் புதிதாக ஏற்பட்ட மதப்பிரசாரங்களின் மூலமாக, அந்தந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இன்றைய தினம் இருக்க வேண்டும்.

இந்தக் கொள்கைப்படி பார்த்தாலே, மக்களுக்கு மதம் பிறவியின் காரணம் அல்ல வென்றும், அவரவர்கள் மனப்பான்மையும், மற்றவர்கள் பிரசாரமும் காரணமென்றும் விளங்கும்.

அன்றியும் இந்தக் கொள்கைப்படியே இனியும் உலகத்தில் எத்தனை மதம் வேண்டுமானாலும் உற்பத்தியாகலாம் என்பதும் அவைகளுக்கெல்லாம் இப்போதிருக்கும் மக்களே தான் பெரும்பகுதியும் போய் அப்புது மதங்களில், சேர்ந்தாக வேண்டுமென்பதும் நன்றாய் விளங்கும்.

எனவே, மதத்தையும் ஜாதியையும் இரண்டையும் பார்க்கும் போது மதத்தைவிட ஜாதியே அதிக பலமுடையதாகும். ஏனெனில் ஜாதி பிறவியில் உண்டாவது, அது மாற்ற முடியாதது என்று சொல்லப்படுவது. ஆனால் மதமோ கொள்கை யின் மூலம் ஏற்படுவது; அது மன உணர்ச்சிக்கும், அறிவு உணர்ச்சிக்கும் தக்கபடி அடிக்கடி மாற்றிக் கொள்ள உரிமை உடையது என்பதாகும்.

ஆகவே, பிறவியினால் ஏற்படுகின்றது என்று சொல்லும்படியான ஜாதியை அடியோடு அழித்து எல்லா மக்களையும் ஒன்று சேர்த்து, ஒற்றுமையையும் சகோதரத் தன்மையையும் உண்டாக்க வேண்டுமென்பதாகக் கூறப்படும் மக்களின் முயற்சியை ஒப்புக் கொண்டு ஆதரவளிக்கச் சம்மதிப்பதாகச் சொல்லும் மக்கள், கேவலம் கொள்கையாலும் அறிவு உணர்ச்சியாலும் இருக்கும் மதத்தை அழித்து, மக்களை ஒன்று சேர்க்க முயற்சிப்பதில் என்ன ஆட்சேபணை இருக்கக் கூடும் என்பது நமக்கு விளங்கவில்லை.

மனிதன் அறிவு வளர்ச்சியின் மூலமும் ஆராய்ச்சித் தெளிவின் மூலமும், அசௌகரியத்தின் மூலமும், சுயநலத்தின் மூலமும் அடிக்கடி மாற்றிக் கொள்ள சுதந்திரம் இருக்கும் மதத்தைப் பற்றி பிடிவாதம் காட்டுவதற்கு யாருக்கு உரிமை உண்டு என்பதும் நமக்கு விளங்கவில்லை.

அநேகமாக மதங்களை இன்றைய தினம் வலியுறுத்து பவர்களில் அநேகர் தங்கள் மதத்திற்குச் சொல்லும் ஆதாரங்கள் எல்லாம், மதத்தை உண்டாக்கின மதத் தலைவர் பெரியார் என்றும், அவர்கள் அநேக அற்புதங்கள் செய்த பெரியார்கள் என்றும், தங்கள் தங்கள் மதம் இன்ன இன்ன பரீட்சைக்கு நின்று வெற்றிபெற்றது என்றும் சொல்வதன் மூலம் அவைகளைப் பெருமைப்படுத்திப் பேசுகின்றார்களே அன்றி, அவைகளில் ஏதாவது ஒன்று இன்றைய தினம் நடைபெற முடியுமா? என்பதைப் பற்றி கேட்போமானால், கோபித்துக் கொள்ளுகின்றார்களே ஒழிய வேறு சமாதானம் கிடையாது.

அதுதான் போகட்டும் என்றாலோ, அம்மதக் கொள்கைகளைப் பற்றியும் அதே மாதிரி மதத்திற்காக கொள்கைகள் என்று சொல்லப்படுவதல்லாமல் கொள்கைக்காக மதமென்றோ, சௌகரியத்திற்காகக் கொள்கைகள் என்றோ, பகுத்தறிவுக்கு ஒப்புகின்றதா என்றோ ஒருக்காலமும் சொல்ல முடியாதவைகளாகவே இருக்கின்றது.

இந்த நிலையில் மதத்திற்காக கொலைகளும், கொள்ளைகளும், யுத்தங்களும், உயிர்விடத்தக்க வீரங்களும், நாட்டில் மலிந்து கிடக்கின்றன. அதுதான் போகட்டுமென்றாலோ, மதத்திற்காக செலவாகும் பணங்களும், நேரங்களும், அறிவுகளும், ஊக்கங்களும், கணக்குக் கடங்காதவைகளாகவே இருக்கின்றன.

இந்துமதம் என்பதைப் பொறுத்தவரை ஏற்படும் செலவுகள் சகிக்க முடியாததாயிருப்பதோடு அதனால் நாட்டிற்கு ஏற்படும் தொல்லைகள் அளவிடமுடியாததாகவும் இருக்கின்றன.

மற்ற மதக்காரர்கள் எல்லாம் மதத்தின் பேரால் பணங்களை வசூல் செய்து, மதத்தில் உள்ள மக்களுக்கு ஒற்றுமை, கல்வி, தொழில், ஒழுக்கம், ஆகியவைகளை உண்டாக்குவதற்கும், மேற்கொண்டு அன்னிய மதத்தில் இருக்கும் மக்களை தங்கள் மதத்தில் சேர்ப்பதற்கும் உபயோகப்படுத்துகின்றார்கள்.

ஆனால் இந்து மதக்காரர்கள் என்பவர்களோ, மற்ற மதக்காரர்கள் எல்லோரையும் விட அதிகமான பணம் சம்பாதித்து ஒற்றுமையில்லாமலும், கல்வியில்லாமலும், தொழில் இல்லாமலும், ஒழுக்கமில்லாமலும் செய்து வந்திருப்பதுடன், அன்னிய மதத்தில் போய் சேரவும் தாராளமாய் நிர்ப்பந்தமும் இடமும் தந்து வந்திருக்கிறார்கள்.

உதாரணமாக இன்றைக்கு 50 வருஷ ஜனகணிதப்படி இந்துக்கள் 50 வருஷத்திற்கு முன்னுள்ள ஜனத் தொகைப்படி 100க்கு 10 பேர்கள் வீதம் ஜனத் தொகையில் குறைந்திருக்கிறார்கள். மற்ற மதக்காரர்களோ நூற்றுக்கு 25 முதல் 40 வரை உயர்ந்திருக்கிறார்கள்.

இவர்கள் எல்லோரும் யாரென்று பார்த்தால், “தெய்வீகத் தன்மை பொருந்தியதும், ஆத்மார்த்தம் நிரம்பியதும், தெய்வத்தன்மை பொருந்திய ரிஷிகளாலும், முனிவர்களாலும், ஆச்சாரியர்களாலும், சமய குரவர்களாலும், அவதார புருஷர்களாலும், கடவுள் அவதாரங்களாலும் உண்டாக்கப்பட்ட ஒப்புயர்வற்ற சனாதன வேத இந்து மதத்திலிருந்து இதர மக்களால் இழைக்கப்பட்ட தங்களுடைய கொடுமைகளிலிருந்து தப்புவிப்பதற்காக என்றே ஓடிப் போனவர் களாவார்கள்”.

எந்த மத ஆச்சாரியனும், மத பக்தனும், இது விஷயத்தைப் பற்றி கிஞ்சிற்றாவது ஆலோசித்து கடுகளவு கண்ணீராவது கொட்டினவன் இல்லை. இப்படிப்பட்ட தானாகவே தேய்ந்து போய்க்கொண்டிருக்கும் மதத்திற்காக ஏற்படும் செலவுகளையும், மேனிக் கேட்டையும், அறிவுத் தடையையும் நீக்கவோ, கடுகளவாவது குறைக்கவோ எவனும் வெளிவந்தவனுமல்ல.

ஆனால், இப்படிப்பட்ட, இந்து மதத்திலிருந்து இப்படிப் பட்ட இந்துக்களின் கல்நெஞ்சம் படைத்த ஒழுக்க ஈனங்களிலிருந்து விலகிக் கொள்ளக் கருதி, சென்ற காலத்தில் சிலர் மகமதியர்களாகி விட்டதாலும், கிறிஸ்தவர்களாகிவிட்ட தாலும் அவற்றை நாம் பாராட்டியதாலும் சில நண்பர்களுக்கு மிக்க மனத்தாங்கல் ஏற்பட்டு நம் மீது காய்ந்து விழுந்து சுமார் 15 -ம் கடிதம் வரையில் எழுதியிருக் கின்றார்கள்.

அவைகள் மலேசியா நாட்டிலிருந்தும், பர்மா தேசத்திலிருந்தும், கொழும்புச் சீமையிலிருந்தும், இந்திய உள்நாட்டிலிருந்தும் வந்தவைகளாகும். அப்படி எழுதியிருப்பவர்களில் அநேகம் பேர், “நீர்தான் மதம் வேண்டியதில்லை என்று பேசவும் எழுதவும் செய்கின்றீரே? அப்படியிருக்க மகமதிய மதத்தை ஏன் ஆதரிக்கிறீர்? அதில் போய்ச் சேர்ந்தவர்களை ஏன் பாராட்டுகிறீர்?” என்று எழுதியிருக்கிறார்கள்.

ஆனால் இப்படி எழுதியவர்கள் எல்லோரும் மதமே வேண்டாம் என்கின்ற கொள்கையை ஒப்புக் கொண்டு, நமக்குப் புத்திமதி கூறினவர்களா? அல்லது இந்து மதத்தை விட்டு மக்கள் வேறு மதத்திற்குப் போகின்றார்களா என்கின்ற மதப்பித்துக் கொண்டு எழுதினவர்களா? என்று பார்ப்போமானால் ஏறக்குறைய அதிகம் பேர் மதப் பித்துக் கொண்டு இந்துமதம் போய்விடுமே என்றோ அல்லது மகமதிய மதம் மாத்திரம் என்ன உயர்ந்தமதம் என்றோ, கருதித்தான் எழுதியிருக்க வேண்டும் என்பதாகவே நினைக்கின்றோம்.

அவர்களுக்கு ஒரு பதில் சொல்ல விரும்புகின்றோம். அதாவது இந்து மதத்தைவிட மகமதிய மதம் மேலானதே. ஏனென்றால், அதில் ஒற்றுமை, சமத்துவம், விக்கிரக ஆராதனை மறுப்பு ஆகியவைகள் இருக்கின்றது. அந்த மதம் இன்று துருக்கி, ஆப்கானிஸ்தானம், ஈஜிப்டு முதலிய நாடுகளை ஆட்சி கொண்டு வருகின்றது.

துணிகரமான சீர்திருத்தத்திற்கு முனைந்து நின்று வெற்றி பெற்று வருகின்றது. இவைகளை எல்லாம் ஒருபுறம் ஒதுக்கித் தள்ளுவதானாலும், இந்துவாக இருப்பதின் காரணத்தால் தீண்டப்படாதவராகவும், காணப்படாதவராகவும், தெருவில் நடக்கப்படாதவராகவும் “கடவுள் சன்னிதானத்தில்” நிற்கப்படாதவராகவும், இருக்கின்ற ஆறறிவு படைத்து “ஆண்டவனுடைய தூய திருக்கோயிலாக உடைய” சரீரத்தைத் தாங்கி நிற்கும் ஒரு மனிதன் இந்து மதத்தைவிட்டு மகம்மதியமதம் புகுந்தானானால் அப்போதே சூரியனைக் கண்ட குமரி இருட்டுப் பறந்தோடுவதைப் போல் மறைந்து போகின்ற தென்பது மட்டும் உறுதி! உறுதி!! உறுதி!!!

இதை யாராவது மறுக்கின்றார்களா என்று கேட்கின்றோம். மற்றபடி ‘மேல் லோகமும்’ ‘ஆண்டவன் சன்னிதானமும்’, ‘பாவமன்னிப்பும்’ இந்து மதத்தைவிட, மகமதிய மதத்தில் மிக்க சமீபமென்றோ, மிக்க சுலபமென்றோ நாம் ஒரு சிறிதும் ஒப்புக்கொள்ளுவதில்லை.

தவிர இந்து மதத்திலிருக்கின்ற ஒரு ‘சக்கிலியோ’ ‘பறையனோ’ ‘பள்ளனோ’ இன்றைய தினம் இந்து மதத்தை விட்டுவிட்டேன் என்று சொல்லுவானானால் அவனை ஒருக்காலமும் தொட்டுக் கொள்ளவோ, தெருவில் நடக்கவிடவோ, பக்கத்தில் வர சம்மதிக்கவோ எவரும் ஒப்புக் கொள்ளுவதில்லை.

இந்த நிலையில் உள்ள மக்களிடம் தாழ்த்தப்பட்டவர்கள் மதத்தைவிட்டு விடுவதினால் மாத்திரம் எப்படி சுதந்தர மடையக் கூடியவர்களாகி விடுவார்கள்? ஆனால் மகமதியர்களாகவோ, கிறிஸ்தவர்களாகவோ ஆகிவிடாமல் கண்டிப்பாக சட்டத்தில் ஆட்சேபணை இல்லை என்பதுடன் சிறப்பாக மகமதியர்களாகிவிட்டால் சட்டத்தில் ஆட்சே பனை இல்லாததோடு, அனுபவத்திலும் ஆட்சேபணை இல்லாமல் போய் விடுகின்றது.

பொதுவாக நமது லட்சியம் ஜாதிமத, வித்தியாசம் ஆகிய இரண்டும் ஒழிந்து அவைகளால் ஏற்படும் மூட நம்பிக்கைகளும் ஒழிய வேண்டுமென் பதாகும்.

மத வித்தியாசம் ஒழிகின்ற வரையிலும், ஜாதி வித்தியாசம் காத்துக் கொண்டிருக்க முடியாது. ஆதலால், மத வித்தியாசம் ஒழியப் பாடுபட்டுக் கொண்டிருப்பதுடன், ஜாதி வித்தியாசம் ஒழியச் செய்ய வேண்டிய காரியங்களையும் கூடச் செய்து கொண்டுதான் இருக்க வேண்டி இருக்கின்றது.

ஆகவே அம்முயற்சியிலொன்று தான், நாம் இப்போது மகமதிய மதத்தைத் தழுவியவர் களை ஆதரிப்பதும், பாராட்டுவதுமே ஒழிய வேறில்லை. பார்ப்பனர்கள் சமீபகாலமாய்ச் செய்துவரும் சூழ்ச்சிகளை உணர்ந்தவர்கள், இந்து மதத்திற் காகவோ, இந்துக்கள் பிறமதம் புகுவதற்காகவோ, சிறிதும் அதிருப்தி அடைய முடியாதென்பதே நமது நம்பிக்கை.

குழந்தை மணங்களைத் தடுக்கும் மசோதாவிற்கு இந்து மதத்தின் பேரால் ஆட்சேபணையும், சாஸ்திரத்தின் பேரால் சத்தியாக்கிரகமும் செய்வதற்கு புதிய ஸ்தாபனங்களை ஏற்படுத்திக் கொண்டு, பிரசாரமும் பத்திரிகையும் நடத்த பணமும் சேகரித்து வருகின்றார்கள்.

இதுமாத்திரமல்லாமல் இந்துக்களுக்கு சிறப்பாக பார்ப்பனர்களுக்கு (தங்கள் ஆதிக்கத்திற்கு ஆதாரமான ( ப-ர்.) மதத்தைக் காப்பாற்ற காங்கிரசே நல்ல சாதனம் என்று திரு.எஸ். சத்தியமூர்த்தி அய்யரவர்கள் பார்ப்பனர்களுக்குச் செய்தி விடுத்து எல்லோரையும் காங்கிரசில் சேரும்படி அழைக்கிறார்.

அதாவது, அவர் சர்க்காரை மத சம்பந்தமான காரியங்களில் பிரவேசிக்க வொட்டாமல் செய்யவேண்டுமானால் காங்கிரசைக் கைப்பற்றியாக வேண்டும் என்று வியாக்கியானமும் செய்திருக்கிறார். இதிலிருந்து என்ன விளங்குகின்றது என்று பார்த்தால் மதத்தின் பேரால் உள்ள கொடுமைகளை ஒழிக்க சமூகத் துறையிலும், சம்மதிக்க மாட்டோம்; அரசியல் துறையிலும் சம்மதிக்க மாட்டோம் என்று பார்ப்பனர்கள் வைதீக கோலத்துடனும், தேசீயக் கோலத்துடனும் சொல்லுவதாக ஏற்படுகின்றதா இல்லையா என்று கேட்கின்றோம்.

தவிரவும், நாமும் இந்த ஜாதி வித்தியாசத்தைப் போக்க பிறமதம் புகுவது என்பதையே பிரதானமாகக் கொண்டிருக்கவில்லை. அப்படிச் செய்பவர்களை ஆதரிப்பது ஒருபக்கமும், கோயில் பிரவேசம் ஒரு பக்கமும், கோர்ட்டுகளில் விவகாரம் இன்னொரு பக்கமும், சமபந்தி ஒருபக்கமும், கலப்பு மணம் மற்றொருபக்கமும், பிரசாரம் இன்னொரு பக்கமும், சட்டம் செய்ய முயற்சி இனி ஒரு பக்கமும், தாழ்த்தப்பட்டவர்களுக்கு சமஉரிமையும், சமசந்தர்ப்பமும் கிடைக்க வேறொரு பக்கமும் இப்படிப் பல வழிகளிலும் முயற்சி எடுத்துக் கொண்டுதான் இருக்கின்றோம்.

இவைகளுக்கு இடையூறாக ஏற்பட்டுள்ள எதிர்ப்புகள், தொல்லைகள், விஷமப் பிரசாரங்கள், பழிசுமத்தல்கள், மிரட்டல்கள், ஆபத்துக்கள், மொட்டைக் காகிதங்கள் முதலாகிய தடைகளின் பக்கத்திலிருந்து கவனித்துப் பார்க்கின்றவர்களுக்குத் தெரியுமே ஒழிய, தூரத்திலிருந்து கொண்டு பத்திரிகைகளை மேல் வாரியாய் பார்த்துக்கொண்டு குற்றம் சொல்லப் புறப்படுபவர்களுக்கு அவ்வளவு நன்றாய் உண்மை முழுவதும் விளங்கி விட முடியாதென்றே சொல்லுவோம். தவிர, கடைசியாக ஒன்று சொல்லி இதை முடிக்கின்றோம்.

இனி சமீப காலத்திற்குள், அதாவது கால் நூற்றாண்டுகளுக்குப் பின், இப்போது இந்துக்களாயிருக்கின்றவர்கள், கண்டிப்பாய் இந்துக்களாக இருக்க முடியவே முடியாதென்பதை ஒவ்வொருவரும் மனதில் தீர்மானம் செய்து கொள்ள வேண்டும்.

வேண்டுமானால் சூழ்ச்சிக்காரர்களும் சோம்பேறிகளும் இதை ஒப்புக் கொள்ளாமல் வெறும் வாய் வேதாந்தம் பேசக் கூடும். அதாவது “புத்தரால் அழிக்க முடியாத இந்துமதம், மகமதியரால் அழிக்க முடியாத இந்துமதம், வெள்ளைக்காரர்களால் அழிக்க முடியாத இந்துமதம், எத்தனையோ ஆயிரம் வருடங்களாக எத்தனையோ ஆபத்துகளுக்கு தப்பி வந்த இந்துமதம் இனிதானா அழியப் போகின்றது?” என்று பஞ்ச கச்சத்தையும், உச்சிக் குடுமியையும், தொந்தி வயிற்றையும் கொண்ட ஊரார் உழைப்பில் வயிறு வளர்க்கும் சோம்பேறிகள், கால் மேல் கால் போட்டுக் கொண்டு வயிற்றைத் தடவிக் கொண்டு பேசலாம்.

ஆனால் அதில் சிறிதும் உண்மை இருக்க முடியாது. ஏனெனில் அந்தக் காலம் வேறு இந்தக் காலம் வேறு; என்னவென்றால் அப்போதைய சவுகரியம் வேறு, இப்போதைய சவுகரியம்வேறு என்பதையும், அது மூடநம்பிக்கைக்காலம் இது அறிவு ஆராய்ச்சிக்காலம் என்பதையும் கவனித்தால் விளங்கும்.

அவ்வளவிற்கு கூட நாம் போக வேண்டியதில்லை. நம்மில் அநேகர் இன்றைக்கு ஐந்து வருஷங்களுக்கு முன் 70, 50, 20 வருஷங்களாக என்ன மனப்பான்மையில் இருந்தோம்: படிப்படியாக 5,6 வருஷத்திற்குள் இன்றைக்கு என்ன மனப்பான்மையில் இருக்கின்றோம்? இந்த வீதாசாரத்தை இன்னும் ஒரு இருபத்தைந்து வயதுக்குப் பின் வட்டியுடன் வட்டிக்கு வட்டியுடன் சேர்த்துப் பங்கிட்டுக் கொடுத்தால் என்ன பலன் ஏற்படும் என்பதை யோசித்துப் பாருங்கள்.

ஆகவே மதத்தை நேர்முகமாகக் கட்டிக் கொண்டழுதாலும், மறைமுகமாகக் கட்டிக் கொண்டழுதாலும், விளையும் பலன் ஒன்றே யாகும். இதற்காக யாரும் கவலைப்பட வேண்டியதில்லை. இதன் பின்னால் ஏற்படப்போகும் லாபத்தைப் பார்க்கச் சம்பளம் வாய்ந்தவர்கள் தாங்களும் முயற்சி செய்யாததற்கு வருந்துவார்கள் என்றே நம்புகிறோம்.

(குடி அரசு - தலையங்கம் - 03.11.1929)

Pin It