periyar 668செங்கற்பட்டில் மாகாண சுயமரியாதை மாநாடு நடந்த பிறகு சில பார்ப்பன தாசர்களுக்கு அடியோடு செல்வாக்குப் போய்விட்டபடியால் அதை மறுபடியும் சம்பாதிப்பதற்கென்று சமீபத்தில் காங்கிரசின் பேரால் ஒரு மகாநாடு கூட்டினார்கள். அம்மகாநாடு கூட்டுவதற்கு சில நாளைக்கு முன்பிருந்தே திரு.இராஜ கோபாலாச்சாரியாரைக் கொண்டு அவர் தனது தாசர்களுடன் அச்சில்லாவில் பல பாகங்களிலும் மதுவிலக்கின் பேரால் சுயமரியாதை இயக்கத்தையும் ஜஸ்டிஸ் கட்சியையும் நினைத்தபடிக்கெல்லாம் தூஷித்தும் பழி சுமத்தியும் விஷமப் பிரசாரம் செய்தும் பார்த்தார்கள்.

என்ன செய்தும் வழி வழியாக வந்த பார்ப்பனதாசர்களைத் தவிர வேறுயாரும் அம்மகாநாட்டிற்கு செல்லவில்லை என்றே தெரிய வருகின்றது. சென்னையில் இருந்து திரு. எஸ். சீனிவாசய்யங்கார் மாத்திரம் தன் சொந்த செலவில் ஒரு கூலிப் படையைத் திரட்டிக் கொண்டு போனார். மற்றபடி அம்மகாநாட்டில் நடந்த பிரசங்கங்களும் தீர்மானங்களும் பெரிதும் ஜஸ்டிஸ் கட்சியையும் சுயமரியாதை இயக்கத்தையும் செங்கற்பட்டு ஜில்லா போர்டு பிரசிடெண்ட் திரு. ராவ்பகதூர் எம்.கே. ரெட்டியையும் அய்யங்கார் மெச்சும்படி வைததைத் தவிர வேறு ஒன்றும் செய்ததாக அவர்களாலேயே சொல்ல முடியாது என்று நினைக்கின்றோம்.

பரிசுத்த பார்ப்பன தாசராகிய திரு.முத்துரங்க முதலியார் சுயமரியாதை மகாநாட்டைப் பற்றி நூற்றுக்கணக்கான கேள்விகள் சட்ட சபையில் கேட்டு நல்ல நல்ல பூசை வாங்கித் தோளின் மேல் போட்டுக் கொண்டது யாவருக்கும் தெரியும். தோளின் மேல் தொண்ணூறு அடி அடித்தாலும் துடைத்து விட்டால் ஒன்றுமில்லை என்கின்ற பழமொழிக்கு இணங்க அவ்வளவையும் மறந்துவிட்டு மறுபடியும் அதே பாடம் படித்து இருக்கின்றார்.

திரு. முத்துரங்க முதலியாருக்கு இந்த உலகத்தில் ஆக வேண்டிய காரியமெல்லாம் ஒன்றே ஒன்று என்று தான் சொல்ல வேண்டும். அதுவே தான் அவரது மோக்ஷமும் சுயராஜ்யமும் பூரண சுயேச்சையுமாகும். அது என்னவென்றால் எப்படியாவது திரு.எம்.கே. ரெட்டியாருக்கு ஜில்லாபோர்டு பிரசிடெண்டு பதவி இல்லாமல் செய்து யாராவது ஒரு பார்ப்பன தாசருக்குக் கிடைக்கும்படி அதை செய்வித்து அவருக்கு இவர் சிஷ்யராய் இருந்து பாத தீர்த்தம் சாப்பிட்டால் அதுவே போதுமானதாகும்.

ஐயோ பாவம் ஒரு தாலூகா போர்டு மெம்பர் ஸ்தானம் பெறுவதற்குக் கூடச் சக்தியில்லாமல் போன அவ்வளவு ‘செல்வாக்கு’டைய இப்பெரியார் மேற்கண்ட காரியத்தைத் தமது முடிவான லக்ஷியமாய் வைத்திருப்பதில் ஒன்றும் அதிசயமில்லை என்றே சொல்லுவோம். ஆனால், அதற்கு ஆக திரு. ரெட்டியார் மீது சொல்லும் புகார்கள் என்னவென்று பார்ப்போமானால் அதுவும் ஒரே காரியம் தான்.

அதென்னவென்றால் திரு.எம்.கே. ரெட்டியார் ஆட்சி எல்லையில் உள்ள ஒரு ஆற்றிற்கு அதாவது ஊத்துக் கோட்டை ஆற்றிற்கு பாலம் கட்டியதில் அது கட்டி முடிந்த சில நாட்களில் பழுதாய்ப் போய்விட்டதாம். இதனால் அனேக ரூபாய்கள் நஷ்டமாய் விட்டதாம். இது வேண்மென்றே செய்யும் விஷமப் பிரசாரம் என்றும் அப்பாலம் பழுதுபட்டதற்கு திரு. ரெட்டியாரோ அவரது ஜில்லா போர்டாரோ பொறுப்பாளிகள் அல்லவென்றும் சர்க்காரே அதற்கு பொறுப்பாளிகள் என்றும் பல தடவை எடுத்துக் காட்டப் பட்டிருக்கின்றது.

அப்படி இருக்க அதைச் சற்றும் கவனிக்காமல் திரும்பத் திரும்ப அதையே சொல்லுவதால் திரு. ரெட்டியார் மீது சுமத்துவதற்கு உண்மையான குற்றம் வேறு ஒன்றும் இல்லை என்பது நன்றாய் விளங்கும்.

இந்த பாலம் பழுதுபட்டதற்குயார் பொறுப்பாளி என்பதை வெளியிட சர்க்கார் இன்னமும் விழிப்பதைப் பார்த்தாலே அதன் உண்மை விளங்கி விடும். பிரஸ்தாப பாலம் கட்டுவதற்காக ஜில்லா போர்டாரால் போடப்பட்ட ஒரு பிளானையும் எஸ்டிமேட்டையும் சர்க்காரார் அப்படியே ஒப்புக் கொள்ளாமல் பிளானைத் திருத்தியதுடன் எஸ்டிமேட்டிலும் சுமார் 35000 ரூ. வரை குறைத்து விட்டார்கள். இதைப்பற்றி ஜில்லா போர்டார் எவ்வளவு வாதாடியும் சர்க்கார் இஞ்சினீர் இலாக்காதாரர்கள் பிடிவாதமாய் இருந்து விட்டதால் சர்க்கார் உத்திரவுப்படி கட்ட வேண்டியதாயிற்று.

அப்படிக் கட்டிய பாலம் எதிர்பாராத வெள்ளம் வந்து விட்டதால் சிறிது பழுதாக வேண்டியதாய் விட்டது. இவற்றிற்குத்தக்க ஆதாரங்கள் சர்க்காரிலும் ஜில்லா போர்டிலும் இருக்கின்றன. இப்போது வேண்டுமானாலும் உண்மை உணர வேண்டுமென்கின்ற யோக்கியமான எண்ணமுடையவர்கள் யாரும் போய்ப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

ஜில்லா போர்டாருடைய பழைய பிளான் படியும் எஸ்டிமேட்டின்படியும் இப்போதும் வேலை செய்ய சௌகரியமிருக்கின்றது. அந்தப்படி செய்யவும் தீர்மானிக்கப்பட்டு இருக்கிறதாக தெரிய வருகின்றது. புதிதாக கட்டுவதில் பழைய கட்டிடத்தையும் அடியோடு உபயோகித்து கொள்ளலாம்.

எனவே அப்படிச் செய்வதில் எந்தக் காரணத்தை முன்னிட்டும் இரண்டு செலவும் சேர்ந்து முன்னைய எஸ்டிமேட் செலவுக்கு உள்ளாகவே தான் வேலை முடிவடையக்கூடும். ஆகவே, அந்தப் பால விஷயமாய்ப் பணம் போச்சு, பணம் போச்சு என்று நீலிக்கண்ணீர் விடுவதெல்லாம் பாமார மக்களை ஏமாற்றச் செய்யும் சூழ்ச்சியே அல்லாமல் அதில் ஏதும் நாணயப் பொறுப்பு இருப்பதாய்ச் சொல்வதற்கில்லை.

சென்ற வருஷத்திலும் இதே மாதியாகவே ஒரு அபாண்டமான பழியை இக் கூட்டத்தார்களே திரு.எம்.கே. ரெட்டியார் மீது சுமத்தி விஷமப் பிரசாரம் செய்தார்கள். அதாவது ஒரு மோட்டார் பஸ்ஸானது மற்ற ஒரு ஆற்றுப் பாலத்தின் மீது செல்லுகையில் தவறி ஆற்றில் விழுந்து விட்டதற்கு அந்த பாலத்திற்குச் சரியானபடி அடைப்பு அடைக்கவில்லை என்றும் அதற்கு ஜவாப்தாரி திரு. ரெட்டி யாரென்றும் இந்து சுதேசமித்திரன் முதலிய பார்ப்பனப் பத்திரிகைகளும் பார்ப்பன தாசர்களும் போலிக் கூச்சலிட்டார்கள்.

பிறகு உண்மையை விசாரித்த போது அந்தப் பாலமும், ரோட்டும் ஜில்லா போர்டிற்கு சம்மந்தப்பட்டதல்லவென்றும் அதற்கு செங்கற்பட்டு ஜில்லா போர்ட்டும் சிறிதும் பொறுப்பாளிகள் அல்லவென்றும் ஏற்பட்டுவிட்டதுடன். எதிரிகள் வெட்கப்படும் படியாகவும் ஆகிவிட்டது. ஆகவே, இக்கூட்டத்தார்கள் இது போலவே திரு.ரெட்டியார் மீது இம் மாதிரியாகவே வீண்பழி சுமத்தி அவரை ஒழிக்க வேண்டுமென்பதில் கவலை எடுத்துக் கொள்ளுகின்றார்களே தவிர மற்று பொது ஜனங்களுக்கு ஏதாவது நன்மை செய்து அவர்களில் செல்வாக்குப் பெறும் விஷயத்தில் சற்றும் கவலை எடுத்துக்கொள்வதே கிடையாது.

இந்த முறையிலேயே பார்ப்பனர்கள் இது வரை நம் பாமர ஜனங்களை ஏமாற்றிக் கொண்டு வந்திருப்பதால் இனியும் இது போலவே நடத்தலாம் என்கின்ற ஆசையின் பேரில் இம்மாதிரி தங்கள் தாசர்களைவிட்டு விஷமப் பிரசாரம் செய்கின்றார்கள்.

ஆனால் இனி அந்த வித்தை பலிக்கும் என்று எதிர்பார்ப்பது வீண்கனவேயாகும். நிற்க, திரு.எம்.கே. ரெட்டியார் ஜில்லா போர்டு நிர்வாக விஷயத்தில் இம்மாகாண ஸ்தல ஸ்தாபன நிர்வாகத்திற்கு ஒரு வழிகாட்டியாக இருப்பது போல் கிராம சீர்திருத்தங்களும், பாதை போக்கு வரவு சாதனம் முதலிய சீர்திருத்தங்களும் மற்றும் ஜில்லா நன்மையை உத்தேசித்து சர்க்காரிடம் மற்ற ஜில்லா போர்டுகளைவிட அதிகமான உதவித் தொகை பெற்று அநேக முன்னேற்ற வசதிகளும் செய்திருப்பதுடன் மேல் நாட்டு முறைகளை அனுசரித்து ஸ்தலஸ்தாபன நிர்வாகிகள் சங்கம் ஒன்று ஏற்படுத்த வேண்டிய முயற்சி எடுத்து பாடுபட்டு வருவது யாவரும் அறிந்த தொன்றாகும்.

கடைசியாக திரு. எம்.கே. ரெட்டி மாகாண சுயமரியாதை மகாநாடு கூட்டி அதை இது வரை இந்த மாகாணத்தில் எந்த மகாநாடும் இது போல் நடத்தப்பட்டதில்லை என்று சொல்லும் படியான மாதிரியில் வெற்றி பெற நடத்தினதினால் பார்ப்பனர்களுக்கு ஏற்பட்ட பொறாமையானது அவருடைய நன்மைகளையெல்லாம் வேண்டுமென்றே மறைத்துவிட்டு தப்பான காரியங்களைக் கற்பனை செய்து தங்கள் தாசர்களை பிடித்து இம்மாதிரி விஷமப் பிரசாரம் செய்ய வேண்டியதாய் விட்டது. என்றாலும் பொது மக்கள் இந்த புரட்டுகளை அறிந்து கொள்வார்கள் என்றே சொல்லுவோம்.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 04.08.1929)

Pin It