நம் நாட்டில் நாளுக்கு நாள் மேல் நாடுகளைப்போல் பத்திரிகைகள் பெருகி வருகின்றன. ஆனால், அவ்வாறு தோன்றும் பத்திரிகைகளில் நாட்டின் நலங்கருதி உண்மையான தொண்டாற்றி வருவதுதான் வழக்கமில்லாமலிருந்து வருகிறது. காரணமென்னவெனில் பத்திரிகைகள் ஆரம்பிக்கும்போது அதன் ஆசிரியர்கள் எவ்வளவு உண்மையான நோக்கத்தோடு ஆரம்பித்தாலும் ஆரம்பித்த பின்னர் பத்திரிகை வளர்ச்சியின் அவசியத்தை பத்திராதிபர் கருதவேண்டி வந்துவிடுகிறது. பத்திரிகை வளர்ச்சியையும் அதனால் தமது கால க்ஷமத்தையும் எதிர்பார்க்கும் பத்திராதிபர்கள் பத்திரிகையின் கொள்கைகளை தங்கள் மனச்சாட்சிப்படி நடத்திக்கொண்டு போக முடிகிறதில்லை. அப்படிப்பட்ட பத்திரிகைகள் பொது ஜனங்களை சீர்திருத்தத் தமது கொள்கைகளை ஜனங்கள் பின்பற்றும்படி செய்ய முடியாமல் எந்த சமயத்தில் எப்படி நடந்தால் தனக்குப் பெரும்பான்மையான ஜனங்களின் ஆதரவும் செல்வாக்குள்ள ஜாதியாரின் தயவும் கிடைக்குமோ அப்படி நடந்துகொண்டு தனது மனச்சாக்ஷியை விற்றுவிட வேண்டிவருகிறது. இது நம் நாட்டின் துரதிஷ்டமே. தமிழர்களின் நலங்கருதி உண்மையாக உழைக்கும் பத்திரிகைகள் நாட்டிற்சொற்பமாயினும் ரங்கூனில் நடைபெற்றுவரும் “தேசோபகாரி” என்னும் வாராந்திரத் தமிழ்ப்பத்திரிகையானது ஆரம்ப நிலையில் எவ்வாறிருப்பினும் நாளுக்கு நாள் நமக்கு அவசியமான சமத்துவத்தையும் சம உரிமையையும் ஆதரித்து வருவது பற்றி நாம் பெரிதும் மகிழ்வெய்துகிறோம். அதன் ஆசிரியர் ஒத்துழையாமைக் காலத்தில் சிறை சென்றவர். இன்றும் சிறையில் வதிகிறார். நல்ல தியாகம் செய்தவர். “தேசோ பகாரி” வாரம் ஒரு முறையாயிருந்து வாரம் இருமுறையானதினாலேயே பத்திரிகையின் வளர்ச்சி நமக்குப் புலப்படுகிறது. ஆகையால் மேற்படி பத்திரிகையை பொது ஜனங்கள் ஆதரிக்கக் கோருகிறோம்.

குடி அரசு - அறிக்கை - 18.04.1926

Pin It