சென்னை கார்பொரேஷன் தேர்தலின்போது சென்னை கார்பொரேஷனை பிராமணக் கார்பொரேஷனாக்க ஸ்ரீமான்கள் சக்கரை செட்டியாரும், ஆதிகேசவ நாயக்கரும், பிராமணரல்லாதார் பலரும் அரும்பாடுபட்டார்கள்; தங்கள் வகுப்பாரை வைதார்கள்; தேசத்துரோகி என்றார்கள்; சமூகத் துரோகி என்றார்கள்; இன்னும் ஒரு மயிர்க்காலுக்கு ஒரு பொய்யும் சொல்லி பாமர ஜனங்களை ஏமாற்றி பிராமண கார்பொரேஷன் ஆக்கினார்கள். பிறகு, இவர்கள் கதி என்ன ஆயிற்று? ஸ்ரீமான் ஆதிகேசவ நாயக்கரைப்பற்றி எங்கு தேடிப்பார்த்தாலும் ஆசாமி இருக்கிற இடமே தெரியாமல் ஒழித்து விட்டார்கள். ஸ்ரீமான் சக்கரை செட்டியாரைப் பற்றியோவென்றால் நினைப்பதற்கே மயிர் கூச்சல் எடுக்கிறது. அதாவது, சென்ற வாரம் கார்பொரேஷன் மீட்டிங்கில் ஸ்ரீமான் சக்கரை செட்டியார் தனது அருகில் இருந்த ஒரு பிராமண நண்பரிடம் தனது நண்பர் என்கிற முறையில், ஏதோ சில வார்த்தைகள் பேசிக்கொண்டிருந்தாராம். அதை ஒண்டிக் கேட்டுக் கொண்டிருந்த மற்றொரு பிராமண மெம்பர் உடனே அதை கார்பொரேஷன் பிரசிடெண்ட் இடம் சாடி சொன்னாராம். பிரசிடெண்ட் அப்படி சொன்னது தப்பு என்றாராம். அவ்வார்த்தைகள் மீட்டிங்கில் டீககiஉயைட ஆய் மீட்டிங்குக்காக பேசவில்லை; நான் என் நண்பராகிய ஸ்ரீமான் புர்றா சத்தியநாராயணாவிடம் தனிப்பட்ட ஓதாவில் பேசினேன். அதற்கும் மீட்டிங்குக்கும் சம்பந்தமில்லை என்றாராம். உடனே ஸ்ரீமான் புர்றா சத்திய நாராயணா என்னும் பிராமண மெம்பர் எழுந்து “சக்கரை செட்டியார் என் நண்பனல்ல” என்றாராம். விவாதத்தின் தன்மை எப்படியோ இருக்கட்டும், அதைப்பற்றி நாம் இங்கு ஒன்றும் பேச வரவில்லை. ஆனால் இச்சம்பவத்தை நினைக்கும்போது னுச. நாயர் பெருமான் தமிழ்நாட்டுக்காக - தமிழுக்காக லண்டனில் உயிர் துறந்த காலத்தில் அங்கிருந்த தமிழ்நாட்டுப் பிராமணர்கள் நடந்துக் கொண்ட நடவடிக்கை நமது ஞாபகத்துக்கு வந்ததோடு நமது இரு கண்களிலும் கண்ணீர்வந்து காகிதத்தை நனைத்தது.

இந்த ஸ்ரீமான் புர்றாவின் எலெக்ஷனுக்கு ஸ்ரீமான் சக்கரை பிராமணரல்லாதாருக்கு விரோதமாய் எவ்வளவு பாடுபட்டார்; இந்த சக்கரையை இந்த பிராமணர்கள் எத்தனைக் கூட்டங்களுக்கு கூட்டிக் கொண்டு போய் நமது நண்பர், நமது தலைவர் சக்கரை செட்டியார் என்று அக்கிராசனம் வகிக்கச்செய்து ஜேய் போட்டார்கள். தங்கள் காரியம் முடிந்த உடன் இத்தனையும் மறந்து ஒரு நல்ல சந்தர்ப்பத்தில் சக்கரை என் நண்பனல்ல என்று ஒரு பிராமணர் சொல்லுவாரானால் சக்கரை தனியாய் சமுத்திரக்கரை ஓரத்தில் நின்றிருந்தால், சமுத்திரத்தில் தள்ளுவதற்கு அஞ்சுவார்களா? இவ்வளவையும் செய்து விட்டு “சக்கரை செட்டியாரின் அடங்காத்தனம்” என்று பிராமணப் பத்திரிகைகள் தலையங்கம் போட்டு சக்கரை செட்டியாரையே கண்டித்தெழுதுகின்றன. சக்கரை முதலிய சக்கரை போன்றவர்கள் கதியே இப்படி இருக்குமானால் குழந்தை போன்ற குழந்தைகளின் கதி என்னாகுமென்பதற்கு யாரும் ஜோசியம் கூறத் தேவை இல்லை. ஸ்ரீமான் புர்றா சக்கரை செட்டியாரைக் காட்டிக்கொடுக்க ஆசையிருக்கும் பக்ஷம் ஸ்ரீமான் புர்றா தனது நன்றிகெட்ட தன்மையைக் காட்டாமலே நடந்துக் கொள்ள வழியில்லாமல் போகவில்லை. கண்ணியமாய் எழுந்து ஸ்ரீமான் சக்கரை என்னிடம் மெம்பர் என்கிற ஓதாவில்தான் பேசினார்; இவ்வார்த்தைகள் சபைக்குச் சொந்தமானதுதான்; எங்கள் சுய காரியத்தைச் சேர்ந்ததல்ல என்று சொல்லியிருந்தால் நாம் அதில் குற்றம் சொல்ல நியாயமில்லை.

அப்படிக்கில்லாமல் “சக்கரை என் நண்பனல்ல” என்று சொல்வது எவ்வளவு நன்றி கெட்டத்தனம், கொலை பாதகத்தனம் என்பதை வாசகர்களே யோசிக்க வேண்டும். இந்த பிராமணர்கள் கண்ணுக்கு, ஸ்ரீமான் கலியாணசுந்தர முதலியார், சுயராஜ்யக்கக்ஷி வகுப்புப் பூசலை உண்டாக்குகிறது என்று சொன்னவுடன் மாரீசனாய்த் தோன்றிவிட்டார் . ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடு பிராமணக் குழந்தை சாப்பிடுவதை பிராமணரல்லாத குழந்தை பார்த்தால்கூட குற்றமா என்று கேட்டதற்கு தென்னாட்டுத் திலகர் கூட மாறிவிட்டது போலத்தோன்றிவிட்டார்; ஸ்ரீமான் ராமசாமி நாயக்கர் மக்கள் பிறவியில் உயர்வு தாழ்வு இல்லை என்று சொன்னதற்கும் வகுப்புவாரி உரிமை கேட்டதற்கும் காங்கிரஸ் துரோகி ஆய்விட்டதோடு  பிராமணர்களுக்கு இம்மூவரையும் காங்கிரஸிலிருந்து விலக்க வேண்டியிருந்தது ; ஸ்ரீமான் ஆரியாவை அடிக்க வேண்டியிருந்தது; சீமான் சக்கரை செட்டியாரை நண்பரல்லாதவராக்க வேண்டியதாய் விட்டது. செய்நன்றி கொன்றார்க்கு உய்வில்லை என்பதை அடியோடு மறந்து விட்டார்கள். அல்லாமலும் இப்போது ஸ்ரீமான்கள் முதலியாரும், நாயுடுவும் சுயராஜ்யக்கக்ஷி வகுப்புப் பூசலை உண்டாக்கும் என்று சொன்னது தப்பு; அதை மன்னிக்க வேண்டும். நாங்கள் முன் வேண்டுமென்று சொல்லிக் கொண்டிருந்த வகுப்பு உரிமை கேழ்ப்பதுதான் வகுப்புப்பூசலை உண்டாக்கும்;

சுயராஜ்யக் கக்ஷிதான் சத்தியமான கக்ஷி என்று சொன்ன இந்த பிராமணர்கள் கண்ணுக்கு அவ்விருவர்களும் சுக்கிரீவன், அங்கதன் போல காணப்படுகிறார்கள். மற்றவர்கள் இன்னமும் மாறாததால் காங்கிரஸை விட்டு விலக்க மதுரையில் சட்டம் செய்ய வேண்டியதாய்ப் போய்விட்டது. பிராமண தர்மத்தின் பழங்கதை படித்தவர்களுக்கும் அவர்களோடு பழகினவர்களுக்கும் இதில் ஒன்றும் ஆச்சரியம் இருப்பதாய்த் தோன்றவில்லை. ஆனால், இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டு அநுபவித்துக் கொண்டு இருக்கும், பிராமணரல்லாதாரில் சிலர் இன்னமும் இம்மாதிரி பிராமணர்கள் பின்னால் கவிபாடிக்கொண்டு, தங்கள் மனச்சாக்ஷிக்கு விரோதமாய் அவர்களைத் தலைவர், தலைவர் என்று சொல்லிக் கொண்டு அவர்களுக்கு ஆக்கம் தேடிக்கொடுத்து வயிறு வளர்க்கிறார்களே, இதை நினைக்கும் போதுதான் வெட்கம் உண்டாகிறது. இந்த பிராமணர்களின் காலைக் கழுவித் தண்ணீரைத் தீர்த்தமாகக் குடித்துக் கொண்டிருக்கும் வரையில்தான்; தங்கள் கூடத்திரியும் பிராமணரல்லாதாரை ஆதரிப்பார்கள். அது முடிந்தவுடன் அல்லது கொஞ்சம் மாறினவுடன் பிராமணத் துவேஷி, காங்கிரஸ் துவேஷி என்கிற பட்டமும் முன்னவர்களுக்கு நடந்த கதியும்தான் நமக்கும் கிடைக்கும் என்கிற எண்ணம் பிராமணரல்லாத தலைவர் என்போர்களுக்கும் தொண்டர்கள் என்போர்களுக்கும் உண்மையாகவே தோன்றவில்லையா? அல்லது நடக்கிறவரையில் நடக்கட்டும் நமது காலத்தைக் கழிப்போம் என்கிற பேராசையா என்பதுதான் நமக்குப் புலப்படவில்லை.

(குடி அரசு - கட்டுரை - 07.03.1926)

 

Pin It