“இனி எதிர்காலத்தில்,

ஒவ்வொருவரின் சட்டைப் பையிலும்

ஒரு தந்திக் கருவி இருக்கும்.”

1930 களில், இத்தகைய புரட்சிக் கருத்தை வெளிப்படுத்தியவர் யார் தெரியுமா?

ஏதோ ஒரு ஐரோப்பிய நாட்டு அறிஞர் என்று கருதி விடாதீர்கள்.

இது நமது தமிழ் மண்ணின் சிந்தனைதான்; தந்தை பெரியார் எனும் தத்துவமேதை, தொலைநோக்குப் பார்வையோடு, இயல்பாக வெளிப்படுத்திய கருத்து இது.

ஏறத்தாழ, எண்பது ஆண்டுகளுக்கு முன்பு, யாரும் சிந்திக்க முடியாத கோணத்தில் சிந்தித்து, அவர் குறிப்பிட்ட அந்தத் தந்திக் கருவிதான், இன்று உங்கள் கைகளில் தவழ்ந்து கொண்டு இருக்கின்ற அலைபேசி.

அவர் எந்த ஆங்கில நூலையும் படித்து விட்டு இந்தக் கருத்தைச் சொல்லவில்லை. தமக்குச் சரி என்று பட்டதையெல்லாம் பேசினார். அவரது உரைகளைப் படித்துப் பார்த்தால், அதை உணரலாம். 

இன்று, இந்திய மக்கள் தொகையை விட இரண்டு மடங்கு அலைபேசிகள், இந்தியாவில் புழக்கத்தில் இருக்கின்றனவாம். இருபத்து ஒன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், முதல் பத்து ஆண்டுகளில், அலைபேசிகள் ஏற்படுத்தி இருக்கின்ற மாற்றங்கள், இனி இந்த நூற்றாண்டு எத்தகைய புரட்சிகளைக் காண இருக்கின்றது என்பதற்குக் கட்டியம் கூறுகின்றது.

mobile_phones_380‘செல்போன், மொபைல் என்ற ஆங்கிலச் சொற்களுக்கு, ‘செல்,பேசி, செல்பேசி, செல்லிடபேசி அலைபேசி’ என, தமிழில் பல சொற்களைச் சொல்லுகிறார்கள். வான் அலைகளின் வழியாகப் பேசுவதால், ‘அலைபேசி’ என்பதுதான் ஓரளவு பொருத்தமாகத் தெரிகின்றது. மேலும் ஆய்வு செய்ய வேண்டும். இந்தக் கட்டுரையில், ‘அலைபேசி’ என்றே குறிப்பிட்டு உள்ளேன்.

அலைபேசிகளை முறையாகப் பயன்படுத்தினால், அது நம்மை முன்னேற்றும்;  வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும்; தவறாகப் பயன்படுத்தினால், சிறைக்கூடத்துக்கு உள்ளே கொண்டு போய்ப் பூட்டி விடும். அன்றாடம் நாளிதழ்களில் நாம் படிக்கின்ற செய்திகள் அதை உணர்த்துகின்றன.

அலைபேசிகளால் கிடைக்கின்ற நன்மைகள் அதிகம். தீமை என்று சொன்னால், உயிரை இழக்க நேரிடும். அவ்வளவுதான்.

நம் கண்முன்னேயே சிட்டுக்குருவிகள் காணாமல் மறைந்து போனதற்கு, அலைபேசி கோபுரங்களின் மின்காந்த அலைவீச்சுதான் காரணம் என்று ஆய்வு அறிக்கைகள் கூறுகின்றன. நமது உடல்நலத்துக்கும், மனநலத்துக்கும் அலைபேசிகள் ஏற்படுத்துகின்ற கேடுகள் கொஞ்சநஞ்சம் அல்ல.

எனவே, அலைபேசிகளை முறையாகப் பயன்படுத்துவதற்கு உதவியாக, சில கருத்துகளை, உங்கள் கவனத்துக்கு முன்வைக்கின்றேன்.

1. அலைபேசிகளை எப்போதும் கைகளிலேயே வைத்துக் கொண்டு இருக்காதீர்கள். அவை, வானொலி மற்றும் மின்காந்த அலைகளை, உங்களை நோக்கி ஈர்க்கின்றன. அதனால், கை விரல் கைநரம்புகள் கடுமையாகப் பாதிக்கப்படும். சில ஆண்டுகளில் கை நடுக்கம் ஏற்பட்டு விடும். எதையும் உறுதியாகப் பற்றிப் பிடிக்க முடியாமற் போய்விடும். அலைபேசியை  இயக்கும்போதும், அணைத்து வைக்கும்போதும், அதற்கான பொத்தானை அழுத்தியபின்பு, உடனே கீழே வைத்து விடுங்கள். அந்த வேளையில்தான், கதிர் வீச்சு கூடுதலாக இருக்கும். இணைப்பு கிடைத்தபிறகு, கையில் எடுத்துப் பேசுங்கள்.

அலுவலகத்திலும், வீட்டிலும் இருக்கும்போது, கூடியவரையிலும், கைக்கு எட்டுகின்ற தொலைவில், இரண்டு அடிகள் தள்ளியே  வைத்து இருங்கள். பேசும்போது மட்டும் உங்கள் கைகளில் இருந்தால் போதும்.

2. ஒரு எண்ணைச் சுழற்றிவிட்டு, எதிர்முனைக்கு சத்தம் போகிறதா? என்று கேட்டுக் கொண்டே இருப்பது தவறு. ஏனெனில், அடுத்த தொலைபேசிக்கு அழைப்பு செல்லும்போதுதான், கதிர்வீச்சு, மற்றும் மின்காந்த அதிர்வுகள் கூடுதலாக இருக்கும். அது உங்கள் காதுகளையும், மூளையையும் கடுமையாகப் பாதிக்கும். எனவே, எண்களைச் சுழற்றியபின், அலைபேசியை உங்கள் கண்ணுக்கு முன்னே கொண்டு வந்து, இணைப்பு கிடைக்கிறதா என்பதைத் திரையில் பார்த்துவிட்டு, அதன்பிறகு உரையாடலைத் தொடங்குங்கள்.

3. இணையத்தைப் பயன்படுத்துபவர்களுக்குத் தெரிந்து இருக்கும். இந்தச் செய்தியைப் படித்து இருப்பார்கள்; படத்தைப் பார்த்து இருப்பார்கள். ஒரு சோதனை: இரண்டு அலைபேசிகளை மின்னூட்டம் செய்யும்போதும், பேசும்போதும், அவற்றுக்கு இடையில் ஒரு முட்டையை வைத்துக் கொள்ளுங்கள். ஒரு மணி நேரத்தில், அந்த முட்டை வெந்து விடும்; நீங்கள் எடுத்துச் சாப்பிடலாம். அந்த அளவுக்கு அதில் அதிர்வும், வெப்பமும் உண்டாகிறது.

4. எனவே, சுருக்கமாக உரையாடுங்கள். ‘என்ன? ஏது?’ என்று கேட்டு, இரண்டு நிமிடங்களுக்குள் உரையாடலை முடித்துக் கொள்ளுங்கள்.  ஆகக்கூடுதலாக, ஒரு அழைப்பில், ஐந்து நிமிடங்களுக்கு மேல் பேசாதீர்கள். அதிலும் கூடுதலாக, கட்டாயத் தேவை என்றால், தொடர்ச்சியாக 17 நிமிடங்களுக்கு மேல் பேசாதீர்கள்.  மேலும் தேவை என்றால், 15 நிமிடங்கள் இடைவெளி விட்டுப் பேசுங்கள். பேசும்போது, அலைபேசி உங்கள் காதுகளிலேயே ஒட்டிக் கொண்டு இருக்க வேண்டியது இல்லை. அதில் உள்ள ஒலிபெருக்கியை இயக்கி, சற்றுத் தள்ளி வைத்துக் கொண்டே கேளுங்கள்; பதில் சொல்லுங்கள்.

5. வீண் பேச்சு,வினையாகி விடும். உங்கள் நேரத்தைச் சேமியுங்கள்.

6. உங்கள் நண்பர், வேறு ஒரு நண்பருடைய அலைபேசி, தொலைபேசி எண்களைக் கேட்டால், ஆங்கிலத்தில் சொல்லாதீர்கள். அது உடனே புரியாது. தமிழில் சொல்லிப் பாருங்கள். எதிர்முனையில் கேட்பவர்களுக்குச் சட்டெனப் புரிந்து விடும்.  எண்களைச் சொல்லும்போது, “நீங்கள் சொல்வது கேட்கவில்லை; சத்தமாக இருக்கிறது , ஒரே இரைச்சலாக இருக்கின்றது; திரும்பச் சொல்லுங்கள்” என்றெல்லாம் மாறிமாறிக் கேட்பார்கள். எரிச்சலாக இருக்கும். எனவே,  எண்களைச் சொல்லிக் கொண்டே இருப்பதைவிட, தொலைபேசி எண்கள் மற்றும் மின் அஞ்சல் முகவரிகளை, குறுஞ்செய்திகளாகவே எழுதி, சரிபார்த்து அனுப்பி விடுங்கள். பிரச்சினை வராது.  நான் யாருக்கும் தொலைபேசி எண்களைச் சொல்லுவது இல்லை. எல்லாமே குறுஞ்செய்திதான்.

7. அலைபேசியில் ஏதேனும் பிரச்சினை என்றால், அதுவரை நீங்கள் சேமித்து வைத்து இருந்த நூற்றுக்கணக்கான எண்களையும் இழக்க நேரிடும். எனவே, உங்களுடைய தொடர்பு எண்களை, ஒரு குறிப்பு ஏட்டில் தனியாக எழுதி வைத்துக் கொள்ளுங்கள். சிறிய குறிப்பு ஏடுகளில் அல்ல; அதுவும் தொலைந்து விடக்கூடும்; எனவே பெரிய டைரியில் பதிவு செய்து, அதை வீட்டில் ஒரு இடத்தில் வைத்து விடுங்கள். அதில் தொடர்ந்து புதிய எண்களையும் பதிவு செய்து கொண்டே வாருங்கள். வெளியே எடுத்துக் கொண்டு போக வேண்டுமானால், அதற்கெனத் தனியாக இன்னொரு கையேட்டை உருவாக்கிக் கொள்ளுங்கள்.

8. ‘வண்டி ஓட்டும்போது, அலைபேசி அழைப்புக்குப் பதில் சொல்ல முனையாதீர்கள். அழைப்பது எமனாகவும் இருக்கலாம்.’ சென்னை மாநகரின் பொது இடங்களில் ஆங்காங்கே காணப்படுகின்ற போக்குவரத்து காவல்துறையினரின் விளம்பர வரிகள் இவை. ஆம்; ஒரு மாதத்துக்கு முன்பு, தமிழக அமைச்சர் ஒருவரின் மகன், சென்னை உயர்நீதிமன்றத்துக்கு அருகில், அலைபேசியில் பேசிக்கொண்டே, 500 சிசி ரேஸ் பைக் ஓட்டிக்கொண்டு வேகமாக வந்தபோது, வேகத்தடையில் மோதி விழுந்தார்; மண்டை உடைந்து, உயிர் இழந்தார். அமைச்சரின் வேதனையில் நாமும் பங்கு கொள்கிறோம். ஒரு எடுத்துக்காட்டுக்காகத்தான், இதைக் குறிப்பிட்டேன்.

இதுமட்டும் அல்ல; கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும், சென்னை மாநகரில், அலைபேசியில் பேசிக்கொண்டே, பாட்டு கேட்டுக் கொண்டே தண்டவாளத்தைக் கடந்தவர்கள், சாலையைக் கடந்தவர்கள் என 750 பேர்களுக்கும் மேற்பட்டவர்கள், மின்தொடர்வண்டியிலும், பேருந்துகளிலும் அடிபட்டு, உடல் சிதறி உருத்தெரியாமல் போய்விட்டார்கள் என, காவல்துறை அறிக்கை எச்சரிக்கின்றது. அதுமட்டும் அல்ல, நிறைய இளைஞர்கள், வண்டி ஓட்டிக் கொண்டே பேசிச் சென்றதால், விபத்தில் சிக்கி எலும்பு முறிவு சிகிச்சை பெற்றுக் கொண்டு இருக்கின்றார்கள். காரணம், பின்னால் வந்த வண்டிகள் எழுப்புகின்ற ஒலியைக் கேட்க முடியாமல் போய்விட்டது. மருத்துவமனைக்குச் சென்று பாருங்கள். இலட்சக்கணக்கில் செலவு; உடல் நலத்துக்கும் பெருங்கேடு. இவர்களுக்கு உயிரைவிட, பாட்டுதான் பெரிதாகத் தெரிகிறது. அந்த அளவுக்கு உழைத்துக் களைத்து விட்டார்கள்.

அலைபேசிகளில் நீண்ட நேரம் பாடல்களையும், வானொலி நிகழ்ச்சிகளையும் கேட்பவர்கள், தாமாக சிந்திக்கும் திறனை இழந்து விடுகின்றார்கள்.

“தஞ்சை மாவட்டத்தில் அலைபேசியில் பேசிக்கொண்டே பள்ளி வேனை ஓட்டியவர், குளத்துக்குள் வண்டியை விட்டார். ஒன்பது குழந்தைகள் சாவு; சில குழந்தைகளைக் காப்பாற்றிய ஆசிரியையும் தண்ணீருக்குள் மூழ்கிச் சாவு;

அரசுப் பேருந்து ஓட்டுநர், சென்னை அண்ணா சாலை, அண்ணா மேம்பாலத்தில், அலைபேசியில் பேசிக்கொண்டே வண்டியை ஓட்டியதால், சுற்றுச்சுவரை உடைத்துக்கொண்டு பேருந்து கீழே விழுந்தது.”

இந்தச் செய்திகளை தொலைக்காட்சியில் பார்த்து வேதனைப்பட்டோம். இறந்த குழந்தைகளுக்காக இரங்கல் தெரிவித்தோம்; கண்ணீர் சிந்தினோம் கவலைப்பட்டோம். காயப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினோம்.  இதுபோல, உங்கள் ஊரில் அலைபேசிகளால் பல விபத்துகள் ஏற்பட்டு  இருப்பதையும், உங்களுக்கு வேண்டிய நண்பர்கள், உறவினர்கள் இறந்து போயிருப்பதையும் நீங்கள் அறிவீர்கள். அந்த வலியையும் உணர்வீர்கள்.

இவையெல்லாம், சில செய்தித்துளிகள்தாம். தமிழகத்தில் அலைபேசிகளால் இறந்தவர்கள் எத்தனை பேர்? எப்படி? என்று யாரேனும் ஒருவர், பல்கலைக்கழக முனைவர் பட்டத்துக்காக ஆய்வுகளை மேற்கொண்டு, அதை நூலாகத் தொகுத்து வெளியிட்டால், அது இந்த சமுதாயத்துக்குச் செய்யும் பேருதவி ஆகும். 

9.வண்டி ஓட்டும்போது, நமக்கு வருகின்ற அழைப்பைத் தவிர்ப்பது மட்டும் போதாது. நீங்கள் ஒருவரை அழைக்கும்போது, அவர் உங்களோடு பேசத் தொடங்கும்போது, காற்று மோதுவதால் ஏற்படுகின்ற இரைச்சல் சத்தம் கேட்டால், ‘வண்டி ஓட்டிக் கொண்டு இருக்கின்றீர்களா?’ என்று கேளுங்கள்.‘பரவாயில்லை, சொல்லுங்கள்’ என்று அவர் சொன்னால், ‘நான் பிறகு பேசுகிறேன்’ என்று சொல்லிவிட்டு, உடனே தொடர்பைத் துண்டித்து விடுங்கள். நீங்கள் அவருக்கு எமனாக மாறி விடாதீர்கள்.

நீங்கள் வண்டி ஓட்டத் தொடங்குவதற்கு முன்பு, அலைபேசியை பெட்டிக்குள் போட்டுப் பூட்டி விடுங்கள். இல்லையேல், கண்டிப்பாக எடுத்துப் பேசத் தூண்டும். கவனம் சிதறாமல், சாலையைக் கவனித்து ஓட்டுங்கள். உயிருக்கு உத்தரவாதம் கிடைக்கும்.

சென்னையில், போக்குவரத்துக் காவலர்கள், வண்டிகளை நிறுத்தி, ‘குடித்து இருக்கின்றார்களா? ஓட்டுநர் உரிமம் வைத்து இருக்கின்றார்களா?’ என்று மட்டும்தான் சரி பார்க்கின்றார்களே தவிர, இரண்டு காதுகளிலும் ஒலிபெருக்கிகளைப் பொருத்திக் கொண்டு, அலைபேகளில் இருந்து பாடல்களைக் கேட்டுக் கொண்டே செல்பவர்களைக் கண்டு கொள்வதே இல்லை; எச்சரிப்பதும் இல்லை; தண்டம் விதித்ததும் இல்லை. அது ஏன் என்றும் புரியவில்லை. விழுந்து சாகட்டும் என்று நினைக்கின்றார்களா?

11. அலைபேசிகளை மின்னூட்டம் செய்யும்போது பேசக் கூடாது. எச்சரிக்கை. உங்கள் காதுச் சவ்வு, மிகமிக மிகமிக மென்மையானது. கிழிந்து விட்டால், கடைசி வரை கேட்க முடியாது. பாதுகாத்துக் கொள்வது உங்கள் பொறுப்பு.

12. கால்சட்டையின் முன்புறம் உள்ள பையில் அலைபேசிகளை வைப்பதால், ஆண்களுக்கு விந்தணுப் பைகளைப் பாதிக்கும்.

13. உங்கள் உடல் வளர்ந்த, முதிர்ந்த உடம்பு. ஓரளவுக்குத் தாக்குப் பிடிக்கும். ஆனால், ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் உடல் பட்டுப் போன்றது. அதைப் பாதுகாக்க வேண்டும். அலைபேசிகளின் மின்காந்த, வானொலி, மற்றும் நுண்ணலை கதிர்வீச்சுகள் குழந்தைகளைக் கடுமையாகப் பாதிக்கும். அதிலும் குறிப்பாக, மூளையையும், காது சவ்வுகளையும் கடுமையாகப் பாதிக்கும். மூளை வளர்ச்சியைத் தடுத்து விடும். நினைவு ஆற்றல் குறைந்து விடும். எனவே, குழந்தைகள் கையில் அலைபேசிகளைக் கொடுக்காதீர்கள். அதில் பல மணி நேரம் விளையாட விடுவது பெருங்கேடு. அதேபோல கர்ப்பிணிப் பெண்களும் செல்போன் பயன்படுத்துவதைக் குறைக்க வேண்டும்.

14. உறங்கச் செல்வதற்கு முன்பு நீண்ட நேரம் பேசினால், நீங்கள் முழுமையாக உறங்க முடியாது. அந்தப் பேச்சு தொடர்பாகவே உங்கள் மூளை சிந்தித்துக் கொண்டே இருக்கும். எனவே, இரவு ஒன்பது மணிக்கு மேல் பேசாதீர்கள். கண்டிப்பாக மூளைக்கு 6 மணி நேரம் முழுமையான ஓய்வு தேவை. எப்போது போன் வரும் என்று எதிர்பார்த்து, தலைக்கு அருகிலேயே வைத்துக் கொண்டு இருப்பது மிகமிகத் தவறு.

15. இருதய அறுவை மருத்துவம் செய்து, இதயத்துடிப்புக் கருவி பொருத்தி இருப்பவர்கள் அலைபேசியில் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இதயத் துடிப்புக் கருவியின் இயக்கத்துக்கு, அலைபேசி இடையூறு செய்யும்.

16. அலைபேசி கோபுரங்கள் உள்ள இடங்களில், 400 மீட்டர் சுற்றளவுக்குள் இருக்கின்ற உள்ள வீடுகளில் வசிப்பவர்களுக்கு, கேன்சர் நோய் வருவதற்கான வாய்ப்புகள் மூன்று மடங்கு அதிகம். அவர்களுக்கு மன அழுத்தம், உணவு செரிமானக் கோளாறுகள் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன. ஐரோப்பிய நாடுகளில் அலைபேசிகளால் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றங்களில் விரிவாக விவாதிக்கப்பட்டு உள்ளன. அதுகுறித்த விரிவான அறிக்கைகள், இணையதளத்தில் காணக் கிடைக்கின்றன. படித்துப் பாருங்கள்.

17. அமெரிக்காவில், ஒரே ஆண்டில், கார் ஓட்டும்போதே அலைபேசியில் பேசி, விபத்தில் சிக்கிச் செத்தவர்களின் எண்ணிக்கை 17,000.

18. லண்டன் நகரில், பொது இடங்களில் ஐந்து இலட்சம் கண்காணிப்புப் படக்கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளன. அங்கே நீங்கள் ஒரு மணி நேரம் சாலையில் இறங்கி நடந்தால், ஏழு இடங்களில் உங்கள் உருவம் பதிவாகி விடும். அதுபோல, பெட்ரோல் நிலையம் ஒன்றில் ஒருவர் அலைபேசி அழைப்புக்குப் பதில் சொல்ல இயக்கியபோது, அங்கே தீப்பிழம்பு உருவாகி அவர் உடல் கருகிச் சாகின்ற படக் காட்சிகள், இணையத்தில் உள்ளன. மற்றொருவர், துணியைத் தேய்த்துக் கொண்டு இருக்கும்போது மணி அடிக்க, ஏதோ ஒரு சிந்தனையில், எடை குறைந்த இஸ்திரிப் பெட்டியை எடுத்துக் காதில் வைத்துக் கொள்வதையும் பார்க்கலாம்.

19. உங்கள் கைகளில் உள்ள அலைபேசியை, ஆபத்தான இடங்களில் இயக்கும்போது, அது ஒரு தானியங்கியாகச் செயல்பட்டு, குண்டுகளை வெடிக்க வைத்து விடும்.

20. பெருமழை பெய்யும்போதும், பலத்த இடிச் சத்தம் கேட்கும்போதும், மின்னல் வெட்டும்போதும் பேசக்கூடாது. அந்த வேளைகளில், அலைபேசி ஒரு இடிதாங்கி போலச் செயல்பட்டு, இடி,மின்னலை உங்களை நோக்கி ஈர்த்துவிடும்.

அலைபேசிகளைத் தொலைத்தவர்கள்

அலைபேசிகள் அறிமுகம் ஆகி, பத்து ஆண்டுகள் கூட ஆகவில்லை. ஆனால், பத்துக்கும் மேற்பட்ட அலைபேசிகளைத் தொலைத்தவர்களை நான் அறிவேன்.

“அழகாக இருக்கிறதே, நண்பர் வைத்து இருக்கின்றாரே” என்பதற்காக, அதேபோன்ற, விலை உயர்ந்த அலைபேசியை வாங்காதீர்கள். என்னுடைய நண்பர் ஒருவர்,  தம்முடைய ஒரே மகனுக்காக, சென்னையில் இருந்து, 20,000 ரூபாய் விலையில் ஒரு போன் வாங்கிக் கொண்டு போனார். ஒரு வாரம்தான் ஆனது. கல்லூரி விடுதியில் தங்கிப் படிக்கின்ற மகன், வீட்டுக்கு வருவதற்கு முன்பு தொலைந்து போய்விட்டது. ஒருமுறைகூடப் பேசவில்லை.

நிறையப் பேர் கீழே தவற விட்டு உடைத்து இருப்பார்கள்;குனிந்து பார்க்கும்போது தண்ணீருக்குள் விழுந்து இருக்கும். மழையில் நனைந்து, ஒரு சொட்டுத் தண்ணீர் உள்ளே இறங்கினாலும் அவ்வளவுதான். வீணாகிப் போகும். கவனம் இல்லாவிட்டால், கவலைதான்.

வீண் பெருமைக்காக, விலை உயர்ந்த அலைபேசியை வாங்காதீர்கள். உங்கள் தேவைக்கு ஏற்ப, குறைந்த விலையில் வாங்கிப் பேசுங்கள். தொலைந்து போனாலும் பரவாயில்லை என்ற மனநிலைக்கு முதலிலேயே உங்களை ஆயத்தப்படுத்திக் கொள்ளுங்கள்.

தவறான அழைப்புகள்

தவறான அழைப்புகளைத் தவிர்த்து விடுங்கள். அது நமக்கான அழைப்பு இல்லை என்று தெரிந்தால், மேற்கொண்டு பேச்சை வளர்க்காமல், உடனே துண்டித்து விடுங்கள். முகம் அறியாத, எதிர்பாலினருடன் தேவை இல்லாமல் பேசுவதும் தீமையே.

நன்மைகள்

கொலைகாரர்கள், குற்றவாளிகள், கள்ளத் தொடர்புகள் வைத்துக் கொண்டு இருப்பவர்கள், அலைபேசிகளால் எளிதாக மாட்டிக் கொள்கின்றார்கள். இன்றைக்கு எந்த ஒரு குற்ற இயல் வழக்கு என்றாலும், ஒருவருடைய அலைபேசி உரையாடல்களை, ஓராண்டு ஆய்வு செய்தாலே போதும்; ஆவணங்கள் எளிதாகக் கிடைத்துவிடும். அப்படித்தான் காவல்துறை செயல்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டு நாளிதழ் செய்திகளைப் படித்துப் பாருங்கள். தமிழகத்தில் நடைபெற்ற கொலை வழக்குகளில் கைதான குற்றவாளிகள் அனைவருமே, அலைபேசியால்தான் மாட்டிக் கொண்டார்கள் என்பது புரியும். ஒருவர், தான் திருடிய அலைபேசியை, ஓராண்டு கழித்துப் பயன்படுத்தும்போது மாட்டிக் கொண்டார்.

கடந்த மாதம் சென்னையில் தன் மனைவியைக் கொலை செய்த கல்லூரிப் பேராசிரியர், அதற்கு முதல்நாள், கள்ளக்காதலியோடு, ஒரே நாளில் அலைபேசியில் ஆறு மணி நேரம் பேசி இருக்கின்றார். அப்படி என்னதான் பேசினார்களோ தெரியவில்லை. ஆனால், அந்த உரையாடலுக்குப் பிறகுதான், அவர் கொலை செய்து இருக்கின்றார். அந்த உரையாடல்தான், அவரைக் குற்றவாளியாக ஆக்கி இருக்கின்றது. இப்போது இருவரும் சிறையில் இருக்கின்றார்கள்.

எண்பதுகளில்...

1984 ஆம் ஆண்டு, என்னுடைய அம்மா வழிப் பாட்டி, உடல்நலக் குறைவுற்று, சென்னையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ள செய்தி, சங்கரன்கோவிலுக்கு, தந்தி வழியாகக் கிடைத்தது. என்ன நிலைமை என்று அறிய, தொலைபேசியில் அவசர இணைப்புக்காகப் பதிவு செய்தோம். ஒன்றரை நாள் கழித்துத்தான் இணைப்பு கிடைத்தது. சென்னைக்குப் புறப்பட்டு வந்த இரண்டு நாளில் பாட்டி இறந்து போனார்.

1960 களில் தொடங்கி, 1990 வரையிலும், வளைகுடா நாடுகளுக்கு வேலைக்குச் சென்றவர்கள், அங்கே விபத்தில் சிக்கி இறந்துவிட்டால், அவர்களுடைய உடலை, உடனே பெற்றுவிட முடியாது.

90 களில், அப்படி இறந்த பலரது உடல்களைக் கொண்டு வர மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகளை நான் அறிவேன். அப்போதெல்லாம், ஓராண்டுக்கும் மேல் ஆனது. ஏன், ஒன்றேமுக்கால் ஆண்டு கழித்து ஒருவருடைய உடல் வந்தது. ஆனால், கடந்த சில மாதங்களில் இறந்த இருவரது உடல்களை, பத்துப் பதினைந்து நாள்களுக்குள் கொண்டு வந்து சேர்க்க முடிந்தது. காரணம், அலைiபேசிகள்தாம். உடனுக்குடன் தொடர்புகொண்டு, தேவையான ஆவணங்களைத் தாக்கல் செய்ய முடிந்தது.

எண்பதுகளில், பூடான் நாட்டில் நான் இரண்டு ஆண்டுகள் பணி ஆற்றியபோது, அந்த நாட்டில் தொலைபேசிகளே கிடையாது. நான் பணிபுரிந்த டாடா சுரங்க அலுவலகத்திலும், அங்கே இருந்த வீடுகளுக்கும் என 25 உள் இணைப்புகள் மட்டுமே இருந்தன. அவ்வளவுதான். எனவே, இரண்டு ஆண்டுகளாக நான் பெற்றோரோடு, உறவினர்களோடு பேசியதே இல்லை. 

1986 ஆம் ஆண்டு, என் தந்தையார் தேர்தலில் வெற்றி பெற்று, சங்கரன்கோவில் நகர்மன்றத் தலைவராக ஆன செய்தியை, 40 நாள்கள் கழித்து வந்த கடிதத்தின் வழியாகத்தான் அறிந்து கொண்டேன். நான் ஊருக்குத் திரும்பி வந்தபிறகுதான், என் சகோதரிக்கு ஒரு குழந்தை பிறந்து ஓராண்டு ஆகி இருப்பதை அறிந்தேன்.  முன்பு அமெரிக்காவுக்குச் சென்றவர்கள், போனால் போனதுதான். அவர்களைப் பார்க்கவே முடியாது. ஐந்து, பத்து ஆண்டுகள் கழித்து ஊருக்கு வந்தாலும்,  ஒருவருக்கும் தெரியாமல் வந்து போய் விடுவார்கள்.

ஆனால் இன்றைக்கு, அமெரிக்காவில் மட்டும் அல்ல, உலகின் எந்த மூலையில் இருப்பவரையும் அலைபேசித் திரையில் பார்த்துக்கொண்டே உரையாட முடிகின்றது.  அயல்நாடுகளில் நடைபெறுகின்ற தமிழ் அமைப்புகளின் கூட்டங்களில், அலைபேசி வழியாக தலைவர் வைகோ அவர்களுடைய உரைகள், ஒலிபரப்பாகின்றன. உங்கள் கையில் இருக்கின்ற அலைபேசியை வைத்துக் கொண்டு, உலகின் எந்த மூலையில் இருப்பவரோடும், அடுத்த நொடியிலேயே தொடர்பு கொண்டு கருத்துகளைப் பரிமாறிக் கொள்ள முடிகின்றது.

“25 ஆண்டுகளுக்கு பிறகு கல்லூரி நண்பர்கள் ஒன்றுகூடல்” என்ற மகிழ்ச்சியான செய்தியைப் பார்க்கின்றோம். அவர்களை ஒன்றாக இணைத்தது அலைiபேசிககள்தாம். எனவே, தொலைந்து போன நட்பையும் மீட்டுக் கொள்ள அலைபேசிகள் உதவுகின்றன.

இப்படி, அலைபேசிகளின் நன்மை, தீமைகள் என எவ்வளவோ சொல்லிக் கொண்டே போகலாம்.

சுருக்கமாகச் சொல்வது என்றால், அலைபேசிகளை முறையாகப் பயன்படுத்தினால் நன்மை; தவறாகப் பயன்படுத்தினால் தீமை.

இந்த முகவரிகள், அலைபேசி மற்றும் தொலைபேசி எண்கள் கையேடு, உங்கள் முன்னேற்றத்துக்கு உறுதுணையாக இருக்கும் என உறுதியாக நம்புகிறேன்!

- அருணகிரி

Pin It