புதுமணத் தம்பதிகள் தேன் நிலவு கொண்டாட, அவரவர் வசதிக்குத் தக்கபடி வெளியூருக்கும், கோடை வாசஸ்தலத்திற்கும் செல்வது வழக்கம். அது என்ன தேன் நிலவு? இந்தச் சொல் வழக்கு எப்படி வந்தது?

முற்காலத்தில் சில இடங்களில், திருமணம் முடிந்து, முதலிரவுக்குப் பின் ஒரு மாத காலத்திற்கு தினமும் தம்பதியர்க்கு தேன் கலந்த பானம் தரப்பட்டதாகத் தெரிகிறது. தேனில் உள்ள Levulose, Dextrose என்ற சர்க்கரைப் பொருள் குடலிலிருந்து இரத்தத்தில் விரைவாகக் கலந்து உடலுக்கு விரைந்து சக்தியைத் தருகிறது. இதில் புரதச்சத்து, வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள் உள்ளன. தேனில் இருக்கும் Nitric oxide உடலிலுள்ள இரத்தக் குழாய்களை விரிவடையச் செய்து, தாம்பத்தியம் சிறக்கவும் ஏதுவாகிறது.

ஆனால் தேன் நிலவு (Honeymoon) என்ற சொல் ஆங்கில அகராதியில் 16 ஆம் நூற்றாண்டு இடைப் பகுதியில்தான் புழக்கத்திற்கு வந்தது. இதற்கு ஆதாரமாக Richard Huloet ன் Abecedarium Anglico Latinum of 1552 லிருந்து  'தேன் நிலவு என்பது, புது மணத் தம்பதியர்க்கு முதலில் அன்பில் குறைவில்லாமலும், ஒருவருக்கு ஒருவர் மிகுந்த அன்புடனும், புரிந்து கொண்டும், பின் வரும் நாட்களில் எல்லையில்லாக் காதல் சம நிலைப்பட்டும் தங்கள் நிதர்சனத்திற்கு வருகிறார்கள்' என்று ஒரு குறிப்பு இருக்கிறது.

இன்னும் சுருக்கமாகச் சொன்னால், திருமணத்திற்குப் பின் ஏற்படும் அன்பு கவர்ச்சியின் காரணமாக தேன் போல இனித்தாலும், நிலவு முழு நிலவுக்குப் பின் தேய்வது போல கவர்ச்சியின் முக்கியத்துவம் குறைந்து அன்பே நிலைக்கும் என்பதைச் சொல்லாமல் சொல்லுகிறது.

இதைத்தான் நம் முன்னோர்கள், "மோகம் முப்பது நாள், ஆசை அறுபது நாள்" என்றார்கள். எனவே புதுமணத் தம்பதிகள் காதல் கொண்டு, ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, இன்பம் தோய்த்து 'தேன் நிலவு' முடித்து தங்கள் பணிக்குத் திரும்பி நலம் பெற வேண்டும்.

வ.க.கன்னியப்பன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It