குன்னூர் நீதித்துறை நடுவராக இருந்த தங்கராஜ் மீது கற்பழிப்பு மற்றும் கொலை மிரட்டல் போன்ற புகார்களை ஒரு பெண் உதவி ஆய்வாளர் கொடுத்ததும், நடுவரை கைது செய்து உடனடியாக சிறைப்படுத்தியது பல்லடம் அனைத்து மகளீர் காவல்துறை. சனிக்கிழமை மாலை கைது செய்தால் ஒரு நாள் கட்டாயம் சிறை வைக்க முடியும் என போலீஸ் மூளை முடிவு செய்துள்ளது. இருபது ஆண்டுகளாக வழக்குரைஞர் பணி புரிந்து வருகின்றேன். பல தரப்பு வழக்குகளை சந்தித்து வருகின்றேன். எத்தனையோ அபலை பெண்களுக்கு கடைசி நிமிடத்தில் கூட காவல் துறை அலட்சியம் செய்து உதவ முன் வராத பல கதைகள் தெரியும்.

நீதித்துறை நடுவருக்கும், பெண் உதவி ஆய்வாளருக்கும் நடுவே இருந்த காதல் உள்ளிட்ட விசயங்களை பேசுவதல்ல என் நோக்கம் . ஆனால் நபர்களைப் பொருத்து சட்டங்கள் வளைக்கப்படுவதை காண முடிகிறது. ஒரு பெண் ஒருவருடன் மனைவியாக வாழ்ந்து பின், அவரை அந்த ஆண் திருமணம் செய்ய மறுத்தால் அந்த செயலுக்கு உச்சபட்ச தண்டனை 417 இந்திய சட்டப் பிரிவு மட்டுமே. இது போன்று பாதிக்கப்பட்ட சில பெண்களுக்காக நான் போராடி சில ஆண்களுக்கு தண்டனை வாங்கியும் தந்துள்ளேன். அது பிணையில் விடக்கூடிய ஒரு குறைந்த தண்டனை தரும் சட்டம். கற்பழிப்பு என்பது விருப்பமின்றி கட்டாயமாக அல்லது கொலை செய்து விடும் பயத்தை ஏற்படுத்தி உறவு கொள்வது - இதுவே என் புரிதல்.

ஆனால் விருப்பப்பட்டு உறவு கொண்டாலும் அது நபரின் பதவி, காவல் துறை செல்வாக்கைப் பொருத்து கற்பழிப்பு என கருதப்படும் என்ற புது விளக்கத்தை தற்போது பல்லடம் காவல்துறை நிரூபித்துள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த புகாரையும் ஒரு நீதிபதி படித்துவிட்டு மற்றொரு நீதிபதியை அடைப்பு காவல் செய்ததுதான்.

என் அனுபவத்தில் பல நீதிபதிகள் சட்டத்தில் உள்ளதை செய்வதை விட போலீஸ்காரர்களின் மனம் கோணாமல் நடப்பதற்கும், முதல் தகவல் அறிக்கை எழுதி காவல் துறையினர் கைது செய்து அழைத்து வரும் எல்லோரையும் 'நமக்கென்ன' என்று இயந்திர கதியில் கண்னை மூடிக்கொண்டு சிறைப்படுத்துவதும் நடக்கிறது. கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு ஓர் அரசு ஊழியரை மோசடி வழக்கில் கைது சிறையில் அடைத்தது காவல்துறை. அந்த தினம் ஒரு நண்பன் கேட்டுக்கொண்டதற்காக நான் வாதிட்டேன், காங்கிரஸ் கட்சித் தலைவன் ஒருவரின் கடையில் தவணையில் வாங்கிய கம்பியூட்டருக்கு சில தவணைகள் பாக்கி வைத்து இருந்ததுதான் அந்த அரசு ஊழியர் செய்த மாபெரும் குற்றம். அதற்காக மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தார். அரசு ஊழியர்கள் 24 மணி நேரத்துக்கு மேல் சிறைபடுத்தப்பட்டால் தற்காலிக பணி நீக்கம் செய்யப்படலாம்.

நீதிபதியிடம் இது மோசடி குற்றமில்லை என்றும் கொடுக்கல், வாங்கல் சிவில் நீதிமன்ற பிரச்சனையென்றும் வாதிட்டேன். நீதிபதி என் கருத்தை கேட்பதாக இல்லை. சரி இடைக்காலமாக பெயில் கொடுங்கள் இல்லாவிட்டால் வேலை போய்விடும் என்றேன். மதியம் வந்து சொல்வதாக கூறிச்சென்றார் நீதிபதி. மதியம் வந்ததும் மீண்டும் வாதிட்டேன். நீதிபதியோ அவரின் செல்போனை எடுத்து, வந்த ஒரு குறுஞ்செய்தியைப் பார்த்தார். பின் அடுத்த கணமே என் பெயிலை டிஸ்மிஸ் செய்வதாகக் கூறி தள்ளுபடி செய்துவிட்டார். அரசியல்வாதி கடையில் தவணைக்கு பொருள் வாங்கியதற்காக என் கட்சிகாரனுக்கு அரசு வேலை போனதுதான் மிச்சம். அந்த நீதிபதி ஊழல் பேர்வழியல்ல. ஆனால் ஒரு கோழை. நியாயத்தைக் கூட நியாயமாகப் பார்த்தால் போலீஸ் கோபத்துக்கு ஆளாகவேண்டி வரும் என கருதியிருக்கக் கூடும்.

அதே சமயம் இன்னொரு நிகழ்வினையும் நான் பகிர்ந்தாக வேண்டும். கருணாநிதி முதல்வராக இருந்த சமயம் 2009ல் ஈழப்போர் நடந்தபோது அவரை தினமணி கேலிச்சித்திரம் வரைந்திருந்தது. அந்த ஓவியத்தை பிளக்ஸ் போர்டு வைத்தற்காக அனுமதியின்றி தட்டி வைத்தல் உள்ளிட்ட சில பிரிவுகளுடன் 153 A IPC என்ற பிரிவில் வழக்கு தாக்கல் செய்து ஈழ ஆதரவு நண்பர்களை சிறைப்படுத்த திருச்செங்கோட்டு நீதிமன்றத்தில் நிறுத்தியது காவல்துறை. ஒரு பெண் நீதிபதி அங்கிருந்தார். அந்த சமயம் நான் கருத்துரிமையின் முக்கியத்துவம் குறித்தும் அரசியல் தலைவரை விமர்சிப்பது சனநாயக உரிமை என்றும் பேசினேன், அடுத்த நிமிடமே அந்த நீதிபதி 153 A என்ற Non baillable offence தவிர மற்ற பிரிவுகளின் கீழ் சிறைப்படுத்த உத்திரவிட்டார். மற்ற பிரிவுகளோ சிறு குற்றப்பிரிவுகள். அடுத்த நிமிடமே தோழர்கள் விடுதலை ஆனார்கள். சட்டத்தையும் நியாயங்களையும் புரிந்து பரிகாரம் செய்த அந்த நீதிபதி அம்மா இன்னமும் என் நினைவில் மதிப்புடன் உள்ளார்.

ஆக இயந்திர கதியில் சிறைப்படுத்தல், நமக்கு ஏன் வம்பு?, நம் வேலையினை தக்கவைத்தால் போதும், சிறைபடுபவனின் உரிமைகளைப் பற்றி என்ன கவலை, இந்த கருத்தாக்கம் நீதிபதிகள் மத்தியில் உள்ளது. ஒரு பாதுகாப்பற்ற மனநிலையிலேயே பலர் பணி புரிகின்றனர். எனவே சட்டத்தின் அதிகாரங்களைப் பார்க்க அவர்கள் தயாராக இல்லை.

நீதித்துறை நடுவர் தங்கராஜுக்கு நற்சான்றிதழ் தருவதல்ல நம் நோக்கம். ஆனால் அந்த குறிப்பிட்ட நீதிபதியின் தீண்டத்தாகாத சாதி, ஏழ்மை, பின் புலம் போன்றவை இந்த காதல், திருமண மறுப்பு உள்ளிட்ட தொடர் நிகழ்வில் மிகப்பெரிய பங்காற்றி உள்ளதை புறக்கணிக்க முடியாது. அதே சமயம் வேறொரு வழக்கில் போலீஸ் உயர் அதிகாரியாக ஐ.பி.எஸ் தேர்வு பெற்ற ஒருவர் ஒரு பெண்னை காதலித்து பழகி பின் திருமணம் செய்யாது தவிர்த்த சில வழக்குகள் ஊடகங்களில் அறிய முடிகிறது. அதில் ஒருவரையும் காவல் துறை கைது செய்யவில்லை.

கோவையில் ஆனந்தீஸ்வரன் என்ற வழக்குரைஞரை துடியலூர் காவல்நிலையத்தில் வைத்து கொலை வெறியுடன் தாக்கினர். சம்மந்தப்பட்ட காவலர்கள் மீது 307 IPC பிரிவில் கொலை முயற்சி வழக்கு போட்டனர். அவர்களை கைது செய்யக்கோரி வழக்குரைஞர்கள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தை 15 நாட்கள் இரவு பகலாக முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். காவல்துறையினரின் சுண்டு விரலைக்கூட அசைக்க முடியவில்லை. காவல் துறையினர் சட்டத்திற்க்கு அப்பாற்பட்டவர்கள், அவர்களுக்கு வானளாவிய அதிகாரம் உள்ளதாக நிரூபித்துள்ளனர். "நீ செய்தால் கொலை நான் செய்தால் என்கவுண்டர்" என்று வெக்கங்கெட்டு சினிமா வசனம் பேசும் மாநிலம் இது.

திருமணம் செய்ததாக்கூறி நம்ம செய்து காதலித்த பெண்னுடன் உறவு கொண்டு பின் திருமணம் செய்யாமல் போவது இந்திய தண்டனை சட்டத்தில் பிரிவு 417 ல் மோசடி குற்றம் . ஆனால் புகார்தாரர் காவல்துறையினை சார்ந்தவர் என்பதற்காக அது கற்பழிப்பு குற்றமாக மாறியது மகா ஆச்சர்யம். அதைவிட ஆச்சர்யம் எந்த கவலையுமின்றி சட்டமாவது, விட்டமாவது என்ற பாணியில் சக நீதிபதியையே இயந்திரகதியில் சிறைபடுத்திய மற்றொரு நீதிபதி.

கடந்த 1989 ஆம் வருடம் இதே போன்று நீதிபதி கைது செய்யப்பட்ட சமயம் நமது உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் (Delhi judicial service association Tis Hazari court Delhi vs state of Gujarath and others 1989 SC ) என்ற வழக்கில் உச்சநீதிமன்றம் நீதிபதிகளை கைது செய்யவேண்டிய சூழலில் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என அறிவுறுத்தி அதன் படி நீதிபதிகளை பேருக்கு கைது செய்யலாமே தவிர சிறைபடுத்தக்கூடாது. மேலும் மாவட்ட நீதிபதியின் உத்தரவின்றி காவல்நிலையம் கொண்டு போகக்கூடாது என்று உத்தரவிட்டது. இவை எதையும் பின்பற்றியதாகத் தெரியவில்லை. நமது நீதித்துறையினர் சிறைபடுத்தலில் உள்ள தங்களின் சட்டம் சார்ந்த சீர்தூக்கிப் பார்த்து முடிவு செய்யும் அதிகாரத்தை (discretionary power) இழந்து விட்டார்கள் என்பதன் வெளிப்பாடு இது.

1994 ஆம் வருடம் ஜோகீந்தர் குமார் என்ற இளம் வழக்குரைஞர் கைது செய்யப்பட்ட வழக்கில் (Joginda kumar Vs state of U.P, crlj 1994 page 1981) உச்சநீதிமன்றம் தேவையற்ற கைதுகளை தவிர்க்க உத்திரவிட்டது. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த உடன் சம்மந்தப்பட்ட ஆட்களை கைது செய்யவேண்டிய அவசியமில்லை எனக் கூறியது. நமது சிறையில் உள்ள ரிமாண்டு கைதிகளில் பாதிக்கும் மேற்பட்டோர் தேவையற்ற கைதுகளால் சிறைபடுத்தப்பட்டவர்கள். ஒரு கைது என்பதன் தேவை குற்றம் கொடியதாகவோ அல்லது சாட்சியத்தை கலைப்பதாகவோ, புலனாய்வுக்கு இடையூறாக இருந்தால் மட்டுமே செய்யப்படவேண்டும். ஆனால் எப்.ஐ.ஆர் என்ற பெயரில் வெள்ளைத்தாளை காவல்துறை கருப்பாக்கினாலே, கைது, சிறை என்பதுதான் தற்போதைய நடைமுறை.

ஒரு நீதிபதியை கைது செய்ததன் மூலம் நமது சமூகத்தில் காவல்துறை எவ்வாறு தனது அதிகார துர்பிரயோகத்தை செய்து வருகின்றது என்பது வெளிச்சமாகி உள்ளது. என் கவலையெல்லாம் கீழமை நீதித்துறை சட்டம் சார்ந்து சுதந்திரமாக இயங்க வேண்டும் என்பதுதான்.

- ச.பாலமுருகன்

Pin It