ஆதிக்க வர்க்கத்தார் ஆன அரசர்கள் மற்றும் ஆண்டைகளின் பாலியல் வக்கிரங்கள் மற்றும் அக்கிரமங்கள் குறித்துச் சங்க இலக்கியங்கள் விரிவாகக் கூறுகின்றன. அரசர்களும் ஆண்டைகளும் பல மனைவியருடன் வாழ்ந்துள்ளார்கள். அவர்களுக்கு மனைவியர் மட்டுமல்லாது, இற்பரத்தையர், காதற்பரத்தையர், கணிகையர் என ஆசை நாயகியர் பலர் இருந்துள்ளனர். புகார் நகரத்தில் அரசனின் அரண்மனை அமைந்திருந்த பட்டினப்பாக்கத்தில் அரண்மனையை அடுத்து சாந்திக் கூத்தர், காமக்கிழத்தியர், பதியிலாளர், பரிசம் கொள்வார் என்ற பெயர் களில் பரத்தையரின் இல்லங்கள் அமைந்திருந்தன. இது குறித்து,

“காவற் கணிகையர் ஆடற் கூத்தியர்

பூவிலை மடந்தையர் ஏவற்சிலதியர்

பயில் தொழிற்குயிலுவர் பன்முறைக் கருவியர்

நகை வேழம்பரொடு வகை தெரி இருக்கையார்”

என்று சிலம்பு செப்புகிறது.

சுட்ட ஓடுகளால் வேயாது பொன் தகடுகளால் வேயப்பட்டனவும் குற்றம் நீங்கிய சிறப்பை உடையனவும் முடி மன்னர்கள் பிறர் அறியாமல் வந்து தங்கிச் செல்வதற்கு ஏற்ற தன்மை உடையனவும் ஆன காவல் மிக்க மனைகளில் அரங்கக் கூத்தியர் வாழ்ந்தனர். இம்மனைகள் அரசர்கள் அவர்களுக்கு அமைத்துக் கொடுத்தவை ஆகும். அவர்கள் அரசனது அவையில் வேத்தில் பொதுவியல் என்னும் இரு வகைக் கூத்தும் நிகழ்த்தி மன்னர்களை மகிழ்விக்கும் இயல்பினர் ஆவர். இதனை,

“சுடுமண் ஏறா வடு நீங்கு சிறப்பின்

முடியரசு ஒடுங்கும் கடிமனை வாழ்க்கை” என்று சிலப்பதிகாரம் கூறுகிறது.

அரசர்களின் காதற்கணிகையரான இம்மங்கையர்க்கு அவர்கள் மூடுவண்டியும் பல்லக்கும் மணிகள் பதித்த கால்களை யுடைய கட்டி லும் சாமரையாகிய கவரியும் பொன்னாலான வெற்றிலைப் பெட்டியும் கூரிய முனை பொருந்திய வாளும் பரிசிலாகக் கொடுத் தனர். அரசருடன் சேர்ந்து அக்கணிகையர் விளையாடி மகிழ்வதற்குரிய விளையாட்டுப் பொழிலும் அமைத்துக் கொடுத்தனர். இதனை,

“வையமும் சிவிகையும் மணிக்கால் அமளியும்

உய்யானத்தின் உறுதுணை மகிழ்ச்சியும்

சாமரைக் கவரியும் தமனிய அடைப்பையும்

கூர்நுனை வாளும் கோமகன் கொடுப்பப்

 பெற்ற செல்வம் பிறழா வாழ்க்கைப்

பொற்றொடி மடந்தையர்”

- என்று இளங்கோவடிகள் கூறினார்.

சிலம்பு கூறும் செய்தி இது எனில், சுரண்டும் வர்க்கத்தார் ஆன அரசர் மற்றும் ஆண்டைகளின் ஆசைநாயகியரின் எண்ணிக்கை குறித்துக் கலித்தொகை கூறும் செய்தி அதிர்ச்சித் தகவலாக உள்ளது. மருத நிலத் தலைவனான அரசனின் காமக்கிழத்தியரின் மிகுதி குறித்துக் கலித்தொகை (68) ஓர் ஊர தொக்கு இருந்த நின் பெண்டிர்” என்று கூறுகிறது. அவர்களை மொத்தமாகத் தொகுத்து ஓரிடத்தில் குடி அமர்த்தினால், அது தனியானதோர் ஊராக அமையும். அந்த அளவுக்கு அவனது காதற் பரத்தையரின் தொகை இருந்தது. என்று அந்நூல் கூறுகிறது.

அரசர்கள் தம் அமைச்சர் மற்றும் படைத் தலைவர்களுள் சிறந்தவர்களுக்கு “ஏனாதி” என்ற பட்டம் அளித்துப் பெருமைப்படுத்தும் வழக்கம் சங்க காலத்தில் இருந்தது. அமைச்சர்களும் படைத்தலைவர்களும் அரசர்களுக்கு நிகரான செல்வச் செருக்குடன் திகழ்ந்தனர். செல்வத்தில் மட்டுமல்லாது காமக்கிழத்தியரின் எண்ணிக்கை யிலும் அரசர்களுக்கு நிகராக அவர்கள் விளங்கினார்கள்.

ஏனாதி என்ற பட்டம் பெற்ற அவர்கள் எண்ணற்ற பரத்தையருடன் தொடர்பு கொண்டிருந் தார்கள். தம் ஆசை நாயகியரான அவர்களுக்கு குடியிருக்க வளமனைகளை அமைத்துக் கொடுத்து அவர்களை ஒரே இடத்தில் குடியமர்த்தி வைத் திருந்தார்கள். ஏனாதிப் பட்டம் பெற்ற அரச அதிகாரிகளின் ஆமையால் அவர்களுக்காக அணைக்கப்பட்ட பரத்தையர் சேரி “ஏனாதி”ப் பாடியம் என்று அழைக்கப்பட்டது. என்ற செய்தியையும் கலித்தொகை (81) கூறுகிறது.

ஆசை நாயகியராகக் கொண்ட மகளிர்க்குத் தனி ஊர்களையும் வளமனைகளையும் அமைத்துக் கொடுத்து அவர்களை அங்கு குடியமர்த்திய அவர் கள் நாளுக்கு ஒருத்தியின் வீடு வீதம் சென்று கூடி மகிழ்ந்தனர். இதனை, “உ.யர்ந்த போரின் ஒலி நல் ஊரன் புதுவோர்ப் புணர்தல் வெய்யோன் கலித் தொகை 75 (தலைவன் நாள் தோறும் புதிய பரத்தையரை விரும்பும் இயல்புடையவன்) என்றும்,

முன்பகல் தலைக்கூடி நண்பகல் அவள் நீத்துப் பின்பகல் பிறர்தேறும் நெஞ்சம் (முற்பகலில் ஒருத்தியுடன் கூடியிருந்தும் நண்பகலில் அவளை விட்டு வேறு ஒருத்தியிடம் சென்றும் பிற்பகலில் மற்றொருத்தியுடன் கூடியும் மகிழும் மனம் உடையவன் தலைவன்) என்றும் கலித்தொகை (74) கூறுகிறது.

 இவர்களையல்லாது பருவம் எய்தாத சிறுமியருடனும் அவர்கள் பாலியல் ரீதியான வல்லுறவு கொண்டனர். இச்செய்தியை காமஞ் சாலா இளமை யோள் வயின் ஏமஞ்சாலா இடும்பை எய்தி, என்ற தொல்காப்பியத் தொடர் உணர்த்துகிறது.

அரசர் மற்றும் ஆண்டைகளின் ஆசை நாயகியரது எண்ணிக்கை குறித்துக் கலித்தொகை கூறும் செய்திகல் புனைத்துரையாக மிகையான கூற்றாக இருக்கும் என்று கருதுதல் கூடும். ஆனால் அரசர்களின் அந்தப்புரங்கள் குறித்து வரலாற்று. ஆவணங்களில் பதிவாகியுள்ள செய்திகள் கலித் தொகை கூறும் செய்திகளின் உண்மைத் தன்மை யினை உணர்த்துகின்றன.

இராமநாதபுரத்தை ஆண்ட கிழவன் சேதுபதி இறந்தபோது அவரது மனைவியர் நாற்பத்தைந்து பேர் உடன் கட்டை ஏறினர் என்ற செய்தி வரலாற்று ஆவணங்களில் பதிவாகியுள்ளது.

மதுரையை ஆண்ட திருமலைக் நாயக்கர் இறந்த பொழுது அவரது மனைவியர் இருநூறு பேர் அவரோடு உடன்கட்டை ஏறினர். அந் நிகழ்வை நேரில் கண்ட மதுரை ஏசுசபை பாதிரி யார்கள் இந்நிகழ்வு குறித்து ஐரோப்பாவில் இருந்த கிறிஸ்தவ சபையார்க்குக் கடிதம் எழுதித் தெரிவித்தனர். அக்கடிதங்களின் வாயிலாக திருமலைநாயக்கரின் மனைவியரது எண்ணிக்கை குறித்த செய்தி நமக்குத் தெரிய வருகிறது.

தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர்கள் தம் ஆசை நாயகியர்க்குத் திருவையாற்றில் தனியானதொரு மாளிகை அமைத்து அதில் அவர்களை குடியமர்த்தி வைத்தனர். அம்மாளிகை மங்கள விலாசம் எனப்பட்டது. அம்மாளிகையில் குடிய மர்த்தப்பட்ட மகளிர் மங்கள விலாச மாதர் எனப் பட்டனர். அம்மன்னர்கள் இருபது முதல் நாற்பது வரையிலான பெண்களை அம்மாளிகையில் குடியமர்த்தி வைத்திருந்தார்கள். இச்செய்திகள் தஞ்சை மராட்டிய மன்னர்கள் குறித்த ஆவணங் களில் பதிவாகியுள்ளன என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

வரலாறு கூறும் இச்செய்திகள் “ஓர் ஊர தொக்கு இருந்த நின் பெண்டிர் என்று “ஏனாதி”ப் பாடியம் என்றும் கலித்தொகை கூறுகின்ற செய்தி களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துகின்றன.

தனி ஊர்கள் அமைத்துக் குடியமர்த்தத் தக்க அளவுக்கு அரசர்களுக்கும் அமைச்சர் மற்றும் படைத்தலைவர்களுக்கும் இளம்பெண்கள் எங்கிருந்து கிடைத்தார்கள் என்ற வினா இயல்பாக எழுகிறது. “கொண்டி மகளிர்” என்ற சங்க இலக்கியத் தொடருக்கு “பகைவர்” மனையோராய்ப் பிடித்து வரப்பட்ட மகளிர் என்று உரையா சிரியர் நச்சினார்க்கினியர் பொருள் கூறினார்.

ஆட்சி எல்லையையும் அதிகாரப் பரப்பையும் விரிவுபடுத்துவதற்காக அசர்கள் அண்டைப் புலங்களில் இனக்குழுவாக வாழ்ந்த மக்களின் ஊர்களின் மேல் படையெடுத்துச் சென்று போரிட்டார்கள். போர்களில் தோற்ற அம்மக்களின் ஆநிரைகளையும் செல்வங்களையும் கவர்ந்து சென்றதுடன் அம்மக்கள் அனைவரையும் கைதிகளாக்கித் தம் ஊருக்குக் கொண்டு சென்றனர். அவர்களில் ஆடவர் களை அடிமைகளாக்கி உடல் உழைப்பில் ஈடுபடுத் தினார்கள்.

காடு கொன்று நாடாக்கிக் குளந்தொட்டு வளம் பெருக்கும் பணிகளையும் அரண்கள் அகழிகள் முதலியவற்றையும் அரண்மனைகளையும் வளமனைகளையும் அமைக்கும் பணிகளையும் அவர்கள் செய்தார்கள்.

மகளிரில் அழகும் இளமையும் உடையவர் களைத் தம் ஆசை நாயகியர் ஆக்கிக் கொண்டனர். பிற மகளிரைச் சமையல்காரிகளாகவும் சலவைக் காரிகளாகவும் நெல் குற்றுவோராகவும் பணிய மர்த்திக் கொண்டார்கள். போரில் தோற்றவர்களைச் சிறைப்பிடித்து வந்த அரசர்கள் அவர்களில் ஆடவரை உற்பத்திப் பெருக்கத்துக்கான பணிகளில் ஈடுபடுத்தினர். மகளிரைத் தம் காமக்களியாட்டங் களுக்கு உட்படுத்தினர் என்ற உண்மையைச் சங்க இலக்கியங்கள் நமக்குக் கூறுகின்றன.

“அநாகரிக நிலையின் கடைக்கட்டத்தில் அடிமைகள் எதற்கும் பிரயோஜனம் இல்லை இந்தக் காரணத்துக்காக அமெரிக்க இந்தியர்கள் தாம் தோற்கடித்த எதிரிகளை அதற்கும் மேலான கட்டத்தில் நடத்தியதற்கு முற்றிலும் வேறாக நடத்தினார்கள். ஒன்று, ஆண்கள் கொல்லப் பட்டார்கள் அல்லது வெற்றி பெற்ற குலம் தோற்றவர்களைச் சகோதரர்களாக சுவீகரித்துக் கொண்டது. பெண்களை மணம் புரிந்து கொண்டார்கள் அல்லது உயிர் பிழைத்த அவர்களையும் அவர்களின் குழந்தைகளையும் அதே போல் சுவீகரித்துக் கொண்டார்கள்.

கால்நடை வளர்ப்பு, உலோகங்களைப் பண்படுத்துதல், துணி நெய்தல், கடைசியில் நிலத்தில் வேளாண்மை செய்தல் ஆகியவை புகுத்தப்பட்ட பின் இது மாறியது. கால்நடைகளை கவனித்துக் கொள்ள அதிக ஆட்கள் தேவைப் பட்டார்கள். போரில் சிறைப்படுத்தப்பட்ட கைதி கள் இந்தக்காரியத்துக்குப் பயன்பட்டார்கள். மேலும் அவர்களைக் கால்நடைகளைப் போலப் பெருகச் செய்ய முடிந்தது “என்று அமெரிக்க செவ் விந்தியர்களைப் பற்றி தோழர் எங்கல்ஸ் அவர்கள் கூறியுள்ளார் தமிழகத்துக்கும் பொருந்தும் எனல் மிகையன்று.

(செம்ம‌லர் ஜனவரி 2011 இதழில் வெளியானது)

Pin It