சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்
வெறும் தண்ணீருக்கோ வரப்போகுது பஞ்சம்!

நாடு மிகப் பெரும் தண்ணீர்ச் சிக்கலை எதிர் கொள்ளப் போகிறது. இதுவரை காணாத அவலத்தை தமிழகமும் சந்திக்கவிருக்கிறது. கோடை காலம் இன்னும் ஒரு சில வாரங்களில் தொடங்கவிருக்கும் நிலையில், தமிழகத்தைச் சூழும் தண்ணீர் ஆபத்து பல்வேறு விதமான சமூகப் பிரச்சனைகளுக்கு வித்திடப் போகும் ஆபத்தும் நெருங்கி வருகிறது. நீரின் அவசியத்தை உணர்ந்து அதனை பல்வேறு சடங்குகளிலும், பண்பாட்டிலும் முக்கியமான ஒன்றாக ஏற்றிப் போற்றிய தமிழர் மரபு இன்று பெரும் கேள்விக்குறியாக மாறிவிட்டது. 'நீரின்றமையாது உலகு' என்று பாடிய வள்ளுவப் பெருந்தகையின் வழியைப் பின்பற்றாது விலகிச் சென்று வாழ்கின்ற தமிழ்ப்பெருங்குடி இன்றைக்கு நீர்நிலைகளையெல்லாம் இழந்து கடுமையான வாழ்வியல் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளது. காலங்காலமாய் தமிழ் நிலத்திற்குள் ஓடி, இந்த மண்ணை வளப்படுத்திய ஆறுகள் எல்லாம் அண்டை மாநிலங்களில் சிறை வைக்கப்பட்டிருக்கின்றன. எஞ்சிய நீரை மட்டுமே தமிழகத்திற்குப் பிச்சையிடும் 'திராவிட' இனங்களின் சகோதரப் பாசம் வேறு புல்லரிக்கச் செய்கிறது. தமிழகத்திற்கு உரிமையான நீரை நடுவணரசு அண்டை மாநிலங்களிலிருந்து பெற்றுத் தரும் என்று நம்புவதற்கில்லை. தமிழகத்தின் பக்கமிருக்கும் நியாயத்தை ஓரளவேனும் உணர்ந்து பொறுப்புடன் நீதியை வழங்க நீதிமன்றங்கள் முயற்சி செய்தாலும், அதனை அந்த மாநிலங்கள் சற்றும் மதிக்காத போக்கே நிலவுகிறது. இந்நிலையில் தனக்கான தண்ணீர்த் தேவைக்கு தனது முயற்சி ஒன்றையே முழுவதும் நம்பத் தலைப்பட்டுள்ளான் தமிழன்.

cauvery_413

'உலக நாடுகள் பலவற்றில் தண்ணீர்ப் பஞ்சம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அத்தகைய நாடுகளில், இந்தியாவும் ஒன்று. எனவே, தண்ணீர்ப் பஞ்சத்திலிருந்து தப்பிக்க, மாற்று வழிகள் குறித்து இப்போதே முடிவெடுக்க வேண்டும். குறிப்பாக, கடல் நீரை குடிநீராக மாற்றுவது, மழை நீரை, குடிநீராகப் பயன்படுத்துவது, தண்ணீர் எங்கே இருக்கிறது என்பதை ஆராய்வது, இருக்கும் நீரை சிக்கனமாக செலவிடுவது போன்ற நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும். இது குறித்த நவீன தொழில் நுட்பங்களையும் பின்பற்ற வேண்டும்' என்று இந்திய விண்வெளி ஆய்வு நிறுவன (இஸ்ரோ) முன்னாள் தலைவரும், திட்ட கமிஷனின் தற்போதைய உறுப்பினருமான, கே.கஸ்தூரிரங்கன் கூறியுள்ளார். இந்திய நாட்டின் தண்ணீர் எதிர்காலம் குறித்து விடப்பட்ட எச்சரிக்கையாக இருந்தாலும், எழுத்து மாறாமல் இது தமிழகத்திற்கும் அப்படியே பொருந்தும்.

தமிழகத்தின் சராசரி மழையளவு 925 மி.மீ. பெரும்பாலான ஆண்டுகளில் தமிழகம் இச்சராசரியை எட்டிப்பிடிப்பதே மிகவும் அதிசயம். கடந்தாண்டு, சராசரியில் பாதிக்கும் குறைவான அளவே மழை பெய்துள்ள நிலையில், அணைகளின் நீர் இருப்பு கவலைக்குரிய வகையில் குறைந்து விட்டது. புதர்மண்டி தூர்ந்து கிடக்கும் நீராதாரங்களுக்கு நடுவில், நீரைத் தேக்கி வைப்பதற்காக இருந்த சில ஆயிரக்கணக்கான நீர்நிலைகளும் தற்போது நீரின்றி முற்றுமாக வறண்டு கிடக்கின்றன. சங்கிலித் தொடராய் நீர்நிலைகளை இணைத்த கால்வாய்களும் வன்கைப்பற்றலால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன. மழையின்மையின் பக்க விளைவுகளாய் விளைச்சலின்மை, விலைவாசி உயர்வு, உணவுப் பற்றாக்குறை, இடப்பெயர்வு, நகர்ப்புற மக்கள் தொகைப் பெருக்கம், நிலத்தடிநீர்ச்சுரண்டல், ஏக போக தண்ணீர் வணிகம், சுற்றுச்சூழல் கேடு, இறையாண்மைக்குக் குந்தகம் ஆகிய தொடர் சிக்கல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் வருமாண்டில் உண்டு என்பதையும் மறுப்பதற்கில்லை.

தமிழகத்தில் 365 நாட்களில் சராசரியாக 35 நாட்கள் மட்டுமே 30 மணித்துளிகளில் 13 மி.ஹெக்டேரில் 923 மில்லி மீட்டர் மழை பெய்கிறது. இது 120000 கனகோடி மீட்டராகும். இதில் தென்மேற்கு பருவக்காற்று மூலம் 32 விழுக்காடு மழையும் வடகிழக்கு பருவக்காற்று மூலம் 48 விழுக்காடு மழையும் கிடைக்கிறது. மீதி கோடை மழையாகப் பெய்வதன் மூலம் கிடைக்கிறது. இது இந்தியாவில் கிடைக்கும் நீரில் 3 விழுக்காடே ஆகும். கங்கையில் ஒரு ஆண்டுக்கு 5 நாள் ஓடும் வெள்ள நீரின் அளவு தமிழகத்தின் ஓர் ஆண்டு தேவையாகும். தமிழ்நாட்டில் நபர் ஒருவருக்கு நாளொன்றுக்கு 800 கன மீட்டர் தண்ணீர் கிடைக்கிறது. ஏற்கனவே குறிப்பிட்டபடி நபர் ஒருவருக்கு கிடைக்கும் அளவு 1000 கன மீட்டருக்குக் குறைந்தால், அது நீர் தட்டுப்பாடான பகுதி என்பதை இங்கு மீண்டும் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். இந்த கணக்குப்படி இந்தியா 2025ல் நீர் தட்டுப்பாடான பகுதியாக மாறும் என்றால் தமிழ்நாடு இப்போதே மிகவும் தண்ணீர் தட்டுப்பாடான மாநிலமாக மாறும் அபாயம் உள்ளது. இன்னும் 20லிருந்து 25 ஆண்டுக்குள் இது மிகவும் மோசமடைந்து நீர் கிடைக்காமல் போக வாய்ப்பு உள்ளது (நன்றி: திரு.சேதுராமலிங்கம், கட்டுரையாளர்)

உலகத்தில் நிலவும் தண்ணீர்ப்பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு அய்.நா.அவை, 'வாழ்விற்கான தண்ணீர்' எனும் முழக்கத்தை முன் வைத்து கடந்த 2005ஆம் ஆண்டிலிருந்து 2015 வரை உலக நாடுகள் அனைத்திலும் பல்வேறு பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை கூடும் உலக தண்ணீர்ப் பேரவையும் கடந்தாண்டு மார்ச் மாதம் பிரான்ஸ் நாட்டில் கூடியது. நீரியல் சார்ந்து பணியாற்றும் உலக வல்லுநர்கள் 800 பேருடன், உலக நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள் 140 பேரும் இதில் பங்கேற்று கலந்துரையாடினர். இதன்போது அய்.நா.அவை வெளியிட்ட அறிக்கையில், 'உலகில் இன்னும் ஐம்பது ஆண்டுகளில் சுத்தமான குடிநீரைப் பெறுவது மிகுந்த சவால் நிறைந்த விசயமாக இருக்கும். 2050ம் ஆண்டளவில் உலகின் மக்கள் தொகை 900 கோடியாக உயரும். எனவே உணவுப் பொருள்களின் தேவை, கழிவறை வசதிகளின் தேவை அதிகரிக்கும். இதனால் தண்ணீரின் தேவையும் அதிகரிக்கும். தற்போது 250 கோடிக்கு மேற்பட்ட மக்களுக்கு கழிவறை வசதிகள் இல்லை. அத்துடன், பத்தில் ஒருவருக்கு நல்ல குடிநீருக்கான வாய்ப்பும் கிடையாது. உலகில் ஏழு நாடுகளுக்கு ஒரு நாடு வீதம், தனது நாட்டின் தண்ணீர்த் தேவையில் 50 விழுக்காட்டுக்கு அண்டை நாட்டைச் சார்ந்துள்ளன. எடுத்துக்காட்டாக, சுவிட்சர்லாந்து நாடு வெளியிட்ட அறிக்கையின்படி, அந்நாட்டில் ஒவ்வொருவரும் ஒரு நாளில் 4,200 லிட்டர் தண்ணீரைப் பயன்படுத்துகின்றனர். இதில் 82 விழுக்காட்டுத் தண்ணீர் வெளிநாடுகளிலிருந்து கொண்டு வரப்படுகின்றது. ஐரோப்பிய நாடுகளில் சுவிட்சர்லாந்தில்தான் தண்ணீர் அதிகம் பயன்படுத்தப்படுகின்றது. மேலும், உலகில் நிலத்தடி நீர்மட்டமும் கடந்த 50 ஆண்டுகளில் மும்மடங்கு வேகத்தில் குறைந்துள்ளது' என எச்சரித்துள்ளது.

இனி வரும் ஆண்டுகளில் தூய்மையான குடிநீர் கிடைப்பதும் கூட அரிதிலும் அரிதான விசயமாகும் ஆபத்தும் நெருங்கி வருகிறது. தூய்மையான தண்ணீர் என்பதை மனிதனின் அடிப்படை உரிமையாக அய்.நா. அவை அறிவித்திருந்தாலும், உலக நடப்பு அதற்கு மாறாகவே உள்ளது. ஜெர்மன் நாட்டின் தூதுவர் விட்டிங், 'ஆண்டுதோறும் சுத்தமான குடிநீர் கிடைக்காத காரணத்தால் 2 மில்லியன் மக்கள் இறக்க நேரிடுகிறது. அதில் பெரும்பாலானோர் குழந்தைகளாக உள்ளனர். உலக அளவில் வாழும் 884 மில்லியன் மக்கள் நல்ல குடிநீரைப் பெறும் நிலையில் உள்ளனர். சுகாதாரக்கேடுகளால் 2.6 பில்லியன் மக்கள் பாதிக்கப்படுவோராக இருக்கின்றனர்' என்கிறார். உலகிலுள்ள மொத்த நீர்வளமான 130 கோடி கனமீட்டரில் 97 விழுக்காடு, உவர் நீர். வடக்கு மற்றும் தெற்கு துருவப் பகுதிகளில் உறைந்து கிடக்கும் பனிக்கட்டிகள் இரண்டு விழுக்காடாக உள்ளன. மீதியுள்ள ஒரு விழுக்காட்டு நீரைத்தான் மனிதர்கள் உட்பட உலகிலுள்ள அனைத்து உயிரினங்களும் பயன்படுத்த வேண்டும். கடந்த 1998ஆம் ஆண்டு கடுமையான நீர்ப்பஞ்சத்தை எதிர்கொண்ட நாடுகள் 28. இந்த எண்ணிக்கை வருகின்ற 2050இல் 56ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 1990ஆம் ஆண்டிலிருந்து எதிர்வரும் 2025ஆம் ஆண்டு வரை போதிய அளவு நீரில்லாத நாடுகளில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கை 131 மில்லியனிலிருந்து 817 மில்லியனாக அதிகரிக்கும் என புள்ளிவிபரங்கள் சொல்கின்றன. விரைவில் இந்தப் பட்டியலில் இந்தியாவும் சேரக்கூடும்.

தண்ணீர் குறித்த அச்சம் உலகளவில் கடுமையாக இருக்கும் சூழலில், இந்தியாவில் வாழ்கின்ற ஒவ்வொரு தனிநபருக்கும் கிடைக்கும் சராசரி நீரின் அளவு சற்றேறக்குறைய இரண்டாயிரம் கன மீட்டர். கிடைக்கும் மொத்த நீரிலிருந்து மக்கள் தொகையால் வகுத்தால் அதுதான் தனிநபரின் சராசரி. தமிழ்நாட்டையும் கணக்கிலெடுத்துக் கொண்டு பார்த்தால், சராசரியாக வெறும் 650 கனமீட்டர் நீரே கிடைக்கிறது. நீர்த்தட்டுப்பாடுள்ள இந்திய மாநிலங்களில் தமிழகமும் மிக முக்கிய ஒன்றாகும். அதனால்தான் இங்கு தண்ணீருக்கான மோதல்களும், சண்டைகளும் அடிக்கடி நிகழ்கின்றன. காவிரியிலிருந்து முல்லைப் பெரியாறு வரை போராடிப் போராடியே தமிழகம் தனக்கான தண்ணீர் உரிமையை நிலைநாட்ட வேண்டியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆந்திரா 4 ஆயிரம் டி.எம்.சி, கர்நாடகம் 2 ஆயிரம் டி.எம்.சி, கேரளம் ஆயிரம் டி.எம்.சி தண்ணீரை குடிமைப் பயன்பாட்டிற்கன்றி கடலில் கலக்கின்றன.

குடிநீருக்கே மக்கள் தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில், வேளாண்மை குறித்துச் சொல்லவே வேண்டியதில்லை. நெல் சாகுபடிக்குத் தேவையான உயிர்நீர் இன்மையால், சரக்குந்துகளில் தண்ணீர் எடுத்துச் சென்று, கருகும் பயிர்களைக் காப்பாற்ற உழவர்கள் எடுத்த முயற்சிகளெல்லாம் இப்போது நாளேடுகளில் மிகச் சாதாரணமாக நிழற்படத்துடன் செய்திகள் வெளியாகின்றன. தமிழ்நாட்டின் மொத்த நிலப்பரப்பு 130 லட்சம் ஹெக்டேர்கள். இதில் பாதியில் அதாவது ஏறக்குறைய 65 லட்சம் ஹெக்டேர்களில் விவசாயம் நடைபெறுகிறது. அதில் பாதி மானாவாரி விவசாயம். மிச்சம் பாதி பாசன விவசாயம். பாசனத்திற்கு வேண்டிய நீர் மூன்று வகைகளில் கிடைக்கிறது. ஆற்றுப்பாசனம், குளத்துப்பாசனம், கிணற்றுப்பாசனம் ஆகியவையே அந்த மூன்று வகைகள். மூன்றும் சம பங்கு பரப்பு நிலங்களுக்கு நீர் வழங்குகின்றன. இப்படியாக கிணற்றுப்பாசனம் மொத்தம் 12 லட்சம் ஹெக்டேர்களுக்கு பாசனம் வழங்குகின்றது. தற்போதைய நிலவரப்படி மொத்த கிணறுகளின் எண்ணிக்கை 18 லட்சம். அதாவது ஒரு கிணறு 2/3 ஹெக்டேர் நிலத்தைத்தான் பாசனம் செய்கிறது. ஏறக்குறைய ஒண்ணேமுக்கால் ஏக்கர். இது ஒரு சராசரி கணக்கு. சில கிணறுகள் அதிக நிலத்தைப் பாசனம் செய்யலாம். அதே மாதிரி சில கிணறுகள் குறைவான நிலத்தைப் பாசனம் செய்யலாம். கடந்த 20 ஆண்டுகளில் கிணறுகளின் எண்ணிக்கை கூடியிருக்கிறதே தவிர, அவற்றால் பாசனம் பெறும் நிலத்தின் அளவு கூடவில்லை. இதே நிலை இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களிலும் நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது (நன்றி கட்டுரை: அருகி வரும் நிலத்தடி நீரால் சந்திக்கவிருக்கும் சிக்கல்களும் அறிவியல் தீர்வும் - பழனியப்பன் கந்தசாமி)

தமிழகத்தில் மட்டும் 40 ஆயிரத்திற்கும் சற்றே குறைவான நீர்நிலைகள் உள்ளன. இதில் 26 ஆயிரத்து 300 நீர்நிலைகள் 100 ஏக்கருக்கும் குறைவான பாசன வசதியைக் கொண்டவை. பதின்மூன்றாயிரத்து 702 கண்மாய்கள், குளங்கள் 100 ஏக்கருக்கும் அதிகமான பாசன வசதியைக் கொண்டவையாகும். முன்னது ஊராட்சி அமைப்புகளின் கண்காணிப்பிலும், பின்னது பொதுப்பணித்துறையின் கண்காணிப்பின் கீழும் உள்ளன. பெரும்பாலான நீராதாரங்கள் ஏதேனும் ஒரு வகையில் வன்கைப்பற்றலுக்கு ஆளாகியுள்ளன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் நீர்நிலை வன்கைப்பற்றலைக் கண்டித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிமான்கள் எம்.யூசுப் இக்பால், டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் அளித்த தீர்ப்பு சூழல் வரலாற்றில் மகத்தான ஒன்றாகும். வன்கைப்பற்றலுக்கு ஆளாகியுள்ள நீர்நிலைகளைக் கணக்கெடுத்து அதனை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுப்பதுடன் அந்நீர்நிலைகள் அனைத்தும் பழைய நிலைக்கே கொண்டு வரப்பட வேண்டும் என்றும் இதனைப் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்வது அவசியம் என்றும் தீர்ப்பளித்திருந்தனர். நமது நீர்நிலைகளைக் காக்கும்பொருட்டு அந்நீதிமான்கள் அளித்த தீர்ப்பு இன்று எந்த நிலையில் உள்ளது என்பதை தொடர்புள்ள அனைவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டிய நேரமிது.

சோழர் காலத்தில் உருவாக்கப் பெற்ற வீரநாராயணம் (இன்றைய வீராணம்) ஏரி தமிழகத்தின் புகழ்பெற்ற நீர்நிலைகளுள் ஒன்று. 1923ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட அளவீட்டின்படி இவ்வேரியின் கொள்ளளவு 41 மில்லியன் கனமீட்டர். 1991ஆம் ஆண்டு 28 மில்லியன் கனமீட்டராகக் குறைந்து போயிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வரலாற்றுப் பெருமை மிக்க வீரநாராயணம் ஏரிக்கே இந்நிலையென்றால், தமிழகத்திலுள்ள பிற கண்மாய்கள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் குறித்து சொல்லத் தேவையில்லை. தற்போது பொதுப்பணித்துறையால் கணக்கெடுக்கப்பட்டுள்ள 39,202 கண்மாய்/ஏரி/குளங்களின் மொத்தக் கொள்ளளவு 390 ஆயிரம் மில்லியன் கன அடி. நீர்த்தேக்கங்களின் கொள்ளளவோ 248 ஆயிரம் மில்லியன் கன அடி. இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ளவேண்டியது யாதெனில், நீர்த்தேக்கங்களைக் காட்டிலும் நீர்நிலைகளின் பராமரிப்பு தமிழகத்தைப் பொறுத்தவரை மிகவும் அவசியம் என்பதுதான். கடந்த இருபது ஆண்டுகளில் சில நூறு எண்ணிக்கையில் மட்டுமே நம்மால் நீர்நிலைகளை பழுது பார்க்க முடிந்துள்ளதென்பதை அறியும்போது, நீர்நிலைப் பராமரிப்பில் நாம் காட்ட வேண்டிய அக்கறை இன்னும் கூடுதலாக்கப்பட வேண்டும் என்பதுதான் உண்மை. இனி வருங்காலங்களில் புதிதாக நீர்நிலைகளை நம்மால் உருவாக்க முடியாது. ஆனால் எஞ்சியிருக்கின்ற நீர்நிலைகளைக் காக்கவும், அவற்றைத் தொடர்ந்து பேணவும் உறுதியான கொள்கை முடிவுகளை நடுவண்-மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.

உறுதியற்ற விலை, போதுமான மழையின்மை, கூலியாட்கள் பற்றாக்குறை ஆகியவற்றால் இந்திய வேளாண்மை கடுமையான நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. இதன் காரணமாக தரிசாய்க் கிடக்கும் தங்கள் நிலங்களை அடிமாட்டு விலைக்கு விற்றுவிட்டு நகர்ப்புறங்களுக்கு விவசாயக் குடும்பங்கள் இடம் பெயர்கின்றன. விற்கப்பட்ட நிலங்கள் அனைத்தும் வீட்டடி மனைகளாக மாற்றம் செய்யப்பட்டு, அவ்விடத்திலெல்லாம் அடுக்குமாடிக் குடியிருப்புகளும், மாபெரும் மாளிகைகளும் முளைத்து வருகின்றன. ஆண்டொன்றுக்கு ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட நிலங்கள் வீட்டடி மனைகளாக மாற்றம் செய்யப்படுகின்றன. அரசும் தனது பல்வேறு தேவைகளுக்காக நிலங்களைத் தொடர்ந்து கையகப்படுத்தி வரும் நிலையில், 2010ஆம் ஆண்டு நிலவரப்படி நாடு முழுவதும் 580 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்படுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு 150 பொருளாதார மண்டலங்களுக்கு உடனடி அனுமதியும் வழங்கப்பட்டிருக்கிறது. இதற்காக கையகப்படுத்தப்படும் இடங்களில் வேளாண் நிலங்களும் உட்படும். இவற்றில் எத்தனை நீர்நிலைகளும், விளைநிலங்களும் உட்படப்போகின்றனவோ தெரியவில்லை.

வரைமுறையின்றி உறிஞ்சப்படும் நிலத்தடி நீரின் அளவு வருமாண்டுகளில் மிக வேகமாகக் கீழே செல்லும் நிலை ஏற்படும். தேசிய புவியியல் ஆய்வு நிறுவனம் அளித்துள்ள புள்ளிவிபரங்கள் அதிர்ச்சியளிப்பதாக உள்ளன. கடந்தாண்டு டிசம்பர் மாதம் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையின்படி, இந்தியாவில் ஐதராபாத் நகரமும், சென்னையும் வறண்ட நகரங்களாகி வருகின்றன. இன்னும் மூன்று ஆண்டுகளில் இந்த நகரங்களின் நிலத்தடி நீர் அதலபாதாளத்திற்குப் போய்விடும். நிலத்தடி நீர் வெகுவாக உறிஞ்சப்படுவதால் சாக்கடை கழிவுகள் நிலத்தடிக்குள் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சென்னையில் உள்ள நிலத்தடி நீர் குடிப்பதற்கு ஏற்றதல்ல என்றும் இதனால் நோய் பரப்பும் தன்மை அதிகரித்துள்ளது என்றும் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. மேலும் அவ்வறிக்கையில், ஹைதராபாத், சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட பெரு நகரங்களில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. வரும் 3 ஆண்டுகளில் ஆந்திர பிரதேசத்தில் நிலத்தடி நீரே இல்லாமல் வறண்டு விடும். மழை பெய்யும்போது 16 சதவீத நீராவது நிலத்துக்குள் சென்றால் தான் நிலத்தடி நீர் மட்டம் சரியாக இருக்கும். ஆனால் மேற்சொன்ன பெருநகரங்களில் 8 சதவீத நீர் கூட நிலத்தடிக்குச் செல்லவில்லை. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தேர்வு செய்யப்பட்ட 451 நகரங்களில் தண்ணீர் மாதிரி எடுத்து சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் 247 மாதிரிகளில் உயர்ந்த அளவில் குளோரைடு, புளோரைடு, நைட்ரேட் கலந்திருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

தென் தமிழகத்தின் முக்கிய நகரங்களுள் ஒன்றான மதுரையில் பொதுப்பணித்துறையின் மூலமாக மேற்கொள்ளப்பட்ட நிலத்தடி நீர் ஆய்வில் கடந்த 2012ஆம் ஆண்டு சனவரியில் 69 ஆழ்குழாய்க் கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் 3.5 மீட்டருக்குள் இருந்ததெனவும், இந்தாண்டு சனவரியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 9.2 மீட்டர் ஆழத்திற்கு நிலத்தடி நீர் மேலும் கீழிறங்கியுள்ளதென்றும், வரும் மாதங்களில் பெய்ய வேண்டிய மழையும் பொய்த்துப் போகும் பட்சத்தில் நிலைமை இன்னும் கவலைக்குரியதாக மாறுமென்றும் தெரியவந்துள்ளது. இதே நிலைதான் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் நிலவுகிறது. தமிழகத்திற்கு மழை தருகின்ற வடகிழக்குப் பருவ மழையும், தென்மேற்குப் பருவ மழையும் பொய்த்து விட்டது. இதனால் தமிழகத்தின் அனைத்து நீர்த்தேக்கங்களிலும் நீர்க்கொள்ளளவு மிகவும் குறைந்தே காணப்படுகிறது. அணைகளில் எஞ்சியிருக்கும் நீர் கோடைக்காலத்தின் குடிநீர்த் தேவைக்கே போதுமானதாக இல்லாத நிலையில், வேளாண் பணிகளுக்கு கொஞ்சமும் வாய்ப்பில்லை. நிலத்தடி நீர் போட்டி போட்டு சுரண்டப்படுவதால், பல்வேறு நோய்களுக்கு மக்கள் ஆளாகும் நிலையும் இனி சாத்தியமாகும். நிலத்தடியில் குறிப்பிட்ட அடிக்கு மேல் தண்ணீரில் ஆர்சனிக் என்றழைக்கப்படுகின்ற நச்சு வேதிப் பொருட்கள் அதிகளவில் கலந்திருக்கும். இதனால் எலும்புத் தேய்மானம், வயிற்றுக் கோளாறுகள், பல் நோய்கள், சிறுநீரகம் மற்றும் கண்கள் ஆகிய உறுப்புகள் பழுதடையும் வாய்ப்பு அதிகமாகும்.

cauvery_farmer_376

தமிழகத்தின் ஓராண்டு தேவைக்கான நீரின் அளவு 54 ஆயிரத்து 395 மி.க.மீட்டர். இதே அளவுடன் பெருகும் மக்கள் தொகையோடு கணக்கிட்டால் வரும் 2050ஆம் ஆண்டில் தமிழகத்தின் நீர்த்தேவை 57 ஆயிரத்து 725 மில்லியன் கன மீட்டராக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதலாகத் தேவைப்படும் 3 மில்லியன் கன மீட்டர் நீருக்கும், பருவமழை பொய்த்துப் போகும் காலங்களில் தேவைப்படும் நீருக்கும் இனிமேல் தமிழகம் என்ன செய்யப்போகிறது என்பது பெரும் கேள்விக்குறியாக உள்ளது. மழை குறைவாகப் பெறப்படும் இஸ்ரேல் நாடு நீர்மேலாண்மைக்கு எடுத்துக்காட்டாய்த் திகழ்கிறது. தமிழகத்தின் சராசரியை விட ஆண்டிற்கு 425 மி.மீட்டர் மழையை மட்டுமே இந்நாடு பெறுகிறது. ஆனால், அங்கு தண்ணீர்ப் பிரச்சனைகள் எழவில்லை. காரணம், அங்கு பின்பற்றப்படும் நீர்மேலாண்மை உத்திகள். நீரை மேலாண்மை செய்கின்ற முறைகள் குறித்து நம் சங்க இலக்கியங்கள் பலவும் சிறப்புடன் பதிவு செய்துள்ளன. திருக்குறளில் வள்ளுவரும் நீர்ப் பயன்பாடு குறித்து விளக்கியுள்ளார். அவற்றைப் பின்பற்றி வாழத் தொடங்கினாலே எப்பேர்ப்பட்ட தண்ணீர்ச்சிக்கலையும் நம்மால் சரி செய்து கொள்ள முடியும். ஆனால் தண்ணீர் குறித்த பார்வையில் நமது மக்களுக்கு இன்னமும் 'அந்தக்கால' நினைப்பே உள்ளது. தண்ணீர்ச்சிக்கனம் இனி வருங்காலத்தில் கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய அடிப்படை பண்புக்கூறாக மாற்றம் பெற வேண்டும். எரிபொருளுக்கு இணையாக நீரைப் பயன்படுத்த வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளதால், தண்ணீரை வீணாக்கும் எவரும் மனித குலத்தின் முதல் எதிரியாகப் பார்க்கப்படுவர். நீராதாரங்களை வாழ்வியலுக்கான அடிப்படை ஆதாரங்களாகப் பார்த்தல் மிகவும் அவசியம்.

அரசுக்கு சில ஆலோசனைகள்

 தமிழகத்திலுள்ள நீர்நிலைகள் மற்றும் அவற்றால் பாசனம் பெறும் நிலங்கள், அந்நீர்நிலைகளின் வாயிலாகப் பயன் பெறும் குடும்பங்கள் குறித்து தனித்தனியாக புள்ளிவிபரம் ஒன்றைத் தயாரிக்க வேண்டும்.

 ஒவ்வொரு நீர்நிலைகளையும் பொதுச்சொத்தாக அறிவித்து, அதனால் பயன்பெறும் பயனாளிகளைக் கொண்ட உள்ளூர்க் குழுக்களை அமைப்பதுடன், ஊராட்சி நிர்வாகக் குழுவையும் அதனோடு இணைக்க வேண்டும்.

 நீர்நிலைகளில் மேற்கொள்ளப்பட்ட வன்கைப்பற்றல்களைக் கண்டறிந்து, அவற்றை உடனடியாக அப்புறப்படுத்த அதிகாரமிக்க ஒருங்கிணைந்த குழுவொன்று அரசால் உருவாக்கப்படுதல் வேண்டும்.

 அரசால் மேற்கொள்ளப்படும் மேம்பாட்டுப் பணிகளில் எந்தவிதத்திலும் நீர்நிலைகளோ, விளைநிலங்களோ இல்லாதிருப்பதை உறுதி செய்ய வேண்டும். அதனைக் கண்காணிப்பதும் அவசியம்.

 வேளாண் பணிகள் நடைபெறாமல் புதர் மண்டியோ அல்லது தரிசாய்க் கிடக்கும் நிலங்களையோ அரசு கையப்படுத்தும் என்ற ஆணையினைப் பிறப்பிக்க வேண்டும்.

 தமிழகத்தின் நீர்த்தேக்கங்களில் நடத்தப்பெற்ற ஆய்வொன்றில் 8 அணைகளில் 30 விழுக்காடும், இரண்டு அணைகளில் 50 விழுக்காடும், 4 அணைகளில் ஒரு விழுக்காடும் வண்டல் படிந்து நீர்க் கொள்ளளவு குறைந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. இவ்வண்டல் மண்ணை எடுப்பதற்கான திட்டத்தை வகுப்பதுடன், அணையின் நீர்க்கொள்ளளவை அதிகரிக்கவும் முயற்சி மேற்கொள்வது அவசியம்.

 அதேபோன்று நூறு ஏக்கருக்கும் மேல் பாசன வசதி கொண்ட பொதுப்பணித்துறைக் கண்மாய்கள் அனைத்தையும் தூர்வாரி செப்பனிடுதல் வேண்டும். அதிலுள்ள வண்டல் மண்ணை உள்ளூர் உழவர்கள் எடுத்துச் செல்வதற்குரிய நடைமுறைகளை அரசு எளிதாக்க வேண்டும்.

 சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் அரைப்பங்கு நீர்நிலை மேம்பாட்டுப் பணிகளுக்குப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை ஆணையாக்க வேண்டும்.

 தமிழகத்தில் ஓடும் அனைத்து ஆறுகளிலும் ஆய்வு மேற்கொண்டு, வாய்ப்புள்ள இடங்களில் சிறிய அளவில் தடுப்பணைகள் கட்டி நீரைத் தேக்குவதற்கு போர்க்கால அடிப்படையில் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

 காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள உழவர்களின் நலன் கருதி பண்ணைக்குட்டைகள் அமைக்கும் தமிழக அரசின் முடிவு வரவேற்கத்தக்கது. அதே போன்று தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ள உழவர்களுக்கும் பண்ணைக்குட்டைகள் அமைத்துத் தர தமிழக அரசு முன் வருதல் வேண்டும்.

 வீட்டுக்கு வீடு மழைநீர் சேகரிப்பிற்கான திட்டத்திற்கு மிகுந்த முனைப்பு காட்டுவது மிகவும் அவசியம். அதற்குத் தமிழக அரசு கால வரையறையுடன் கூடிய அறிவிப்பினைச் செய்வது காலத்தின் கட்டாயம்.

tamilnadu_water_640

- இரா.சிவக்குமார் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It