இந்த பிரபஞ்சத்தில் பூமியன்றி, வேறு கோள்களில், உயிர்கள் இருக்கின்றனவா அல்லது நாம் மட்டும் இந்த பிரமாண்டத்தில் தனிமையில் இருக்கிறோமா என்ற கேள்வி அனைவரையும் கவர்ந்த ஒன்று.
பிரபஞ்சத்தில் உயிர்கள் இருக்கின்றன, அதுவும் பல கோள்களில் இருக்க வாய்ப்பு உள்ளது என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.
சில நூறு ஆண்டுகளுக்கு முன் ஒரு கண்டத்தில் இருக்கும் மனிதன், மற்ற கண்டங்களில் மனிதர்கள் வாழ்வது தெரியாமல் இருந்தான். அதுபோல நாமும் இப்பொழுது மற்ற கோள்களில் வாழும் உயிர்களைப் பற்றி அறியாமல் வாழ்கிறோமோ?
நம் பூமியில் மட்டுமில்லாது மற்ற கோள்களிலும் உயிர்கள் இருக்கின்றன என்பதற்கு, அறிவியலாளர்கள் மிக எளிமையான ஒரு வாதத்தை முன் வைக்கின்றனர். "மாவெடிப்பு (BIG BANG) நடந்தபோது இந்த பிரபஞ்சத்தில் ஒன்றுமே இல்லை. இந்த பூமியே இல்லை. ஹைட்ரோஜென் மற்றும் ஹீலியம் என்ற இரண்டு தனிமங்கள் மட்டும் தான் முதலில் தோன்றின. இந்த பிரபஞ்சத்தில் நாம் காணும் சகல நட்சத்திரங்களும், கோள்களும், அந்த ஹைட்ரோஜென் மற்றும் ஹீலியம் ஆகிய அடிப்படை தனிமங்கள் பல ரசாயன மாற்றங்கள் அடைந்து உண்டானவை. அப்படி அந்த இரண்டு தனிமங்களிளிருந்து உண்டான கோடான கோடி கோள்கள் அனைத்திலும் உயிர் உண்டாகி பரிணாம வளர்ச்சி அடைய முடியாமல், அவைகளில் ஒன்றான நம் கோளில் மட்டும் தான் அது சாத்தியமானது என்று கூறுவது தவறு" என்பதுதான் அந்த வாதம்.
நம் சூரிய மண்டலத்திலேயே, குறிப்பாக செவ்வாயிலும் மற்றும் சில கோள்களின் நிலவுகளிலுமே உயிரினங்கள் இருக்க அதிக வாய்ப்புண்டு என்ற முடிவுக்கு வருகின்றனர் அறிவியலாளர்கள். நம்முடைய சூரிய குடும்பத்திலேயே உயிர் இருக்க வாய்ப்பு உள்ளபோது பிரபஞ்சத்தின் மற்ற கோடான கோடி கோள்களில் சிலவற்றில் அது சாத்தியமாகாதா?
பல கோள்கள், அது சுற்றிவரும் நட்சத்திரங்களுக்கு அருகாமையில் இருந்தால் அதிக வெப்பத்தின் காரணமாகவும், நட்சதிரங்களிலிருந்து அதிக தொலைவில் இருந்தால் வெப்பம் இன்மை காரணமாகவும், உயிர் தோன்ற ஏதுவாக இல்லாமல் இருந்திருக்கலாம். சூரியனுக்கு அருகிலுள்ள புதன் சுமார் 450 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் வாடிக்கொண்டிருக்கின்றது. சூரியனிலிருந்து தொலைவில் உள்ள கோள்களும் அதன் நிலவுகளும் வெப்பமே இல்லாமல் இருக்கின்றன. அல்லது கோள்கள், வியாழன் போல வாயுக்கோள்களாகவும், பல, செவ்வாய் போல காந்தப் புலன் இன்மை, காற்று மண்டலம் இன்மை போன்ற பல காரணங்களினால் உயிர் தோன்றி வளர்ச்சி அடையாமல் போயிருக்கலாம். அவை போக இன்னும் பல்லாயிரக்கணக்கான கோடி கோள்கள் இருக்கின்றனவே... உயிர் தோன்றி வளர, அவை ஏதுவானதல்லவா?
நம் சூரிய குடும்பத்தில் ரவுடிகள் போல சுற்றிவரும் பாறைகளிலும் (asteroid), வால் நட்சத்திரங்களிலும் (comets) உயிர் உண்டாவதற்கான அடிப்படை ரசாயன மூலக்கூறுகள் காணப்படுவது பிரபஞ்சத்தில் உயிர் இருப்பதற்கு ஒரு சான்று எனக் கொள்ளலாம். நம் கோளுக்கு பிரபஞ்சத்திலிருந்து, இந்த வகையான சூரிய குடும்பத்தைச் சுற்றிவரும் பாறைகளின் மூலமும், உயிர்கள் வந்திருக்க வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன என்று அறிவியலாளர்கள் கருதுகின்றனர்.
நம்பவே முடியாத இடத்தில் உயிர்கள்
1977 இல் கடலுக்கு அடியில் சுமார் 7000 அடி ஆழத்தில் வெப்ப நீர் உற்றுக்களை கண்டுபிடித்தனர். 400 டிகிரி C என்ற வெப்பநிலை கொண்ட அந்த நீரூற்றுக்கள் கடலின் தரை மட்டத்தில், பூமிக்குள்ளே உள்ள எரிமலை குழம்புகளினால் சூடாக்கப்பட்டு வெளியே வேகமாக வருகின்றன. பல நச்சு ரசாயனங்கள் நிறைந்த இந்த நீரூற்றை ஆய்ந்த ஆய்வாளர்கள், ஒரு மிகப் பெரிய அதிசயத்தைக் கண்டனர். அங்கே பல உயிர்கள் அந்த ரசாயன பொருட்களையே உணவாக உண்டு, சூரிய வெளிச்சம் சற்றும் இல்லாத அந்த இடத்தில் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
உயிர்கள் வாழ முடியவே முடியாது என்று நினைத்த இடத்தில், உயிர்களைக் கண்ட அறிவியலாளர்கள் அப்போதுதான் உணர்ந்தார்கள், பிரபஞ்சத்தின் எந்த மோசமான இடத்திலும் உயிர்கள் வளர சாத்தியம் உண்டு என்று.
அதுமாத்திரமல்ல, உறைநிலைக்கு மிகக்குறைவான ஆர்க்டிக் துருவப் பிரதேசங்களிலும், மிக அமிலத்தன்மை கொண்ட இடங்களிலும், உயிர்கள் வாழ்வதைக் கண்ட அறிவியலாளர்கள், பிரபஞ்சத்தில் உயிர்கள் வேறு கோள்களில் இருக்கின்றனவா என்ற கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டனர். ஆதாரம் கிடைப்பதுதான் இனி நடக்க வேண்டியது.
பிரபஞ்சத்தில் உயிர்களைத் தேடலாமா?
பிரபஞ்சத்தில் உயிர்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம். முதலாவது, பரிணாம வளர்ச்சி அடையாத பாக்டீரியா போன்ற உயிரினங்கள். இரண்டாவது, மனிதனைப் போன்ற அறிவுஜீவிகள். மூன்றாவது மனிதனை விட அதிக அறிவியல் வளர்ச்சி கண்ட உயிர்கள். அவர்களுக்கு நாம் 'சூப்பர் மனிதர்கள்" என்று பெயர் கொடுப்போம். இரண்டாவது வகை, மூன்றாவது வகை உயிர்கள் உருவத்தில் மனிதர்களைப்போல இருப்பார்கள் என்று கற்பனை செய்து கொள்ள வேண்டாம். சில திரைப்படங்களில் அவர்களது உருவங்களை கற்பனை செய்து சித்தரித்திருப்பார்கள். அதை விட மோசமான உருவமாக இருந்தாலும் ஆச்சரியப் பட வேண்டாம்.
கதாநாயகர்கள் போல நல்ல அழகான உருவத்தையே எதிர்பார்க்கும் மனிதர்கள், உருவத்தில் மோசமாகவும், அறிவில் சிறந்தவர்களான அவர்களைக் காண நேர்ந்தால், திரும்பிக் கூட பார்க்காமல் சென்று விடுவார்களோ?
முதலாவது வகையான பாக்டீரியா போன்ற ஆரம்ப கட்ட உயிரினங்கள் பல கோள்களிலும் இருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயப்பாடு இல்லை. நம் கேள்வியெல்லாம் மனிதன் போன்று வளர்ச்சியடைந்த உயிர்களும், அதனிலும் அதிக வளர்ச்சி கண்ட சூப்பர் மனிதர்களும் உள்ளனரா? உண்டு என்றால் அவர்கள் நம்மை ஏன் நம்மை தொடர்பு கொள்ளவில்லை என்பதுதான். அதற்க்கான காரணத்தை விவாதிக்கத்தான் இந்த கட்டுரை.
அண்டத்தில் அறிவுஜீவிகளை தேடும் பணியானது, 'செட்டி' ( SETI --SEARCH FOR EXTRA TERRESTRIAL INTELLIGENCE ) என்ற அமைப்பினால் பிரபஞ்சத்தில் எங்கிருந்தாவது செயற்கை ரேடியோ கதிரலைகள் பூமிக்கு வருகின்றனவா என்று கவனிப்பதுதான். செயற்கை ரேடியோ அலைகள் அறிவுஜீவிகளால் தான் உருவாக்க முடியும். பிரபஞ்சத்திலிருந்து பல காரணங்களினால் இயற்கையாக ரேடியோ கதிரலைகள் பூமிக்கு வரும். ஆனால் வேற்று கோள் அறிவுஜீவிகள் செயற்கையாக உண்டாக்கிடும் கதிரலைகளை அறிவியலாளர்கள் பிரித்து அறிய முடியும். அவ்வாறு செய்திகள் வந்தால் அதுதான் வேற்று கோளில் நம்மைப் போன்ற அறிவுஜீவிகள் வாழ்வதற்கு அடையாளமாகும். இதற்காக அதிநவீன ரேடியோ தொலைநோக்கிகளை உபயோகித்து இரவு பகல் என்று பாராமல் வருடம் முழுவதும் வானத்தை ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர்.
இதுவரை ஏன் நம்மை தொடர்பு கொள்ளவில்லை?
1930 ஆம் ஆண்டுகளில் நாம் பூமியில் உபயோகிக்க ஆரம்பித்த ரேடியோ அலைகள், நம் பூமியில் பயணிப்பது போன்று, நம் பூமியை விட்டு பிரபஞ்சத்திலும் பயணம் செய்ய ஆரம்பித்துள்ளன. நாம் அந்த அலைகளை வேற்று கிரக மனிதர்களைச் சென்றடையும் நோக்கத்துடன் அனுப்பவில்லை. நம் தேவைக்குத்தான் ஒலிபரப்பானது. 1930லிருந்து 2012 வரை, சுமார் எண்பது ஆண்டுகள், இவை நம்மை விட்டு ஒளியின் வேகத்தில் அதாவது வினாடிக்கு மூன்று லட்சம் கிலோ மீட்டர் என்ற வேகத்தில் பயணம் செய்துள்ளன. வேற்று கோளில் வாழும் அறிவுஜீவிகள் சுமார் 80 ஒளியாண்டுகள் என்ற தொலைவுக்குள் இருந்தால், அன்று நம்மிடமிருந்து சென்ற அந்த அலைகள், இப்போது அவர்களை சென்றடைந்திருக்கும். அவர்களால் இப்போது நம் ஒலிபரப்பை கேட்க முடியும் . 'இப்போதுதான்' கேட்க முடியும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
நம்மிடமிருந்து சென்ற அலைகள், நாம் அண்டத்தின் இந்தப் பகுதியில் உள்ள பூமியில் இருப்பதை அவர்களுக்கு அடையாளம் காட்டி கொடுக்கும். இந்த பூமியில் அறிவுஜீவிகள் இருப்பதைப் புரிந்துகொண்டு அவர்கள் ரேடியோ அலைகள் மூலம் உடனே செய்தி அனுப்பினால் அது நம்மை வந்தடைய இன்னும் எண்பது வருடங்களாகும்.
அவர்கள் வாழும் கோள் ஒருக்கால் 200 ஒளியாண்டுகள் தொலைவில் இருந்தால் நம்மிடமிருந்து சென்ற கதிரலைகள் அவர்களைப் போய்ச்சேர இன்னும் 120 வருடங்களாகும் . (ஏற்கனவே எண்பது ஆண்டுகள் அலைகள் பயணம் செய்தாயிற்று அல்லவா). அதை வாங்கிய பின் அவர்கள் நமக்குப் பதில் அனுப்பினால் அது நம்மை வந்து சேர மீண்டும் 200 ஆண்டுகளாகும்.
ஆயிரம் ஓளி ஆண்டுகள் தொலைவில் இருந்தால் நமக்குப் பதில் வர சுமார் இன்னும் இரண்டாயிரம் ஆண்டுகளாகும்.
நாம் வேற்று கோள் வாசிகளை தொடர்பு செய்ய முடியாமல் போனதற்கு, நம் கோளுக்கும் மற்ற கோள்களுக்கும் உள்ள பென்னம் பெரும் தொலைவுகள் தான் முக்கிய காரணம் ஆகும்.
நூறு ஆண்டுகளுக்கு முன்பு, பூமியில் இருக்கும் நமக்கு, பிரபஞ்சத்திலிருந்து வரும் அலைகளை வாங்கி பதில் அனுப்பும் தொழில் நுட்பம் தெரியாது. அந்தக் காலத்தில் நமக்கு ஒரு செய்தி வந்திருந்தால் நாம் அதை தவறவிட்டிருக்கவும் வாய்ப்புண்டு.
அதேபோல , ஒருக்கால் நம்மிடமிருந்து சென்ற அந்த அலைகளைப் பெற்று அதைப் புரிந்துகொள்ளும் அறிவியல் தெரியவில்லை என்றால், அவர்களுக்கு நாம் இங்கிருப்பது தெரியாமல் போய்விடும்.
எப்போது வேண்டுமானாலும் செய்தி வந்து சேரலாம்
நாற்பது ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள ஒரு கோளில் அறிவுஜீவிகள் இருக்கிறார்கள் எனக் கொள்வோம். நம்மிடமிருந்து எண்பது ஆண்டுகளுக்கு முன் சென்ற அலைகள் நாற்பது ஆண்டுகளுக்கு முன் அவர்களைச் சென்று அடைந்திருக்கும். அவர்கள் அதைக் கேட்டு பதில் அனுப்பியிருந்தால் நாற்பது ஆண்டுகள் பயணம் செய்து பூமிக்கு அது வந்து சேரும் நேரமாகிவிட்டது. எப்போது வேண்டுமானாலும் செய்தி வரலாம்.
அல்லது ஆயிரம் ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள, நமக்கு முன்னரே விஞ்ஞானம் வளர்ச்சியடைந்த, ஒரு கோளிலிருந்து புறப்பட்ட அலைகள் ஆயிரம் ஆண்டுகள் பயணித்து, இப்போது நம்மை வந்தடைய சாத்தியக் கூறுகளும் உள்ளன.
வாவ் (WOW)
1977 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16 ஆம் தேதி, தேடுதல் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த குழு, பிரபஞ்சத்தின் ஒரு திசையிலிருந்து ஒரு செய்தியைப் பெற்றது. 'வாவ்' (wow) என்ற அந்த செய்தி சுமார் 70 நொடிகள் நீடித்தது. பரவசமடைந்த விஞ்ஞானிகள் அந்த செய்தி சுமார் 200 ஒளி ஆண்டுகள் தொலைவிலிருந்து வந்ததை அறிந்துகொண்டனர். உடனே பதில் கொடுத்தனர். உலகமெங்கும் பரபரப்பு நிலவியது. ஆனால் அந்த செய்தி தொடர்ந்து வராமல் நின்று விட்டது. அதற்கு நாம் கொடுத்த பதில் போய்ச் சேர 200 ஆண்டுகளாகுமே. அதற்குப் பிறகுதானே அவர்கள் நாம் இருப்பதை அறிந்துகொள்ள முடியும்.
தேடுதல் பணியை 'செட்டி' சுமார் 40-50 ஆண்டுகளாக செய்துவருகிறது. பிரபஞ்சத்தைப் பொருத்தவரை இது மிக மிக குறுகிய காலம். தேட ஆரம்பித்து சில ஆண்டுகளே ஆவதற்குள் பிரபஞ்சத்தில் அறிவுஜீவிகள் இல்லை என்ற முடிவுக்கு வரமுடியாது. நம் பால் வெளி மண்டலத்திலேயே பல கோள்களில் அறிவுஜீவிகள் இருப்பதற்கான வாய்ப்புண்டு என்று விஞ்ஞானிகள் உறுதியாக நம்புகின்றனர். ஏனென்றால் நம் பால்வெளி மண்டலத்திலேயே பல ஆயிரம் கோடி நட்சத்திரங்களும், அதைச் சுற்றி பல கோள்களும் உள்ளன .
கெடுவாய்ப்பு
பிரபஞ்சத்தில் ஒவ்வொரு நட்சத்திரமும் ஒன்றை விட்டு ஒன்று மிகுந்த தொலைவில் உள்ளதால், ஒரு கோளில் இருந்து அனுப்பப்பட்ட செய்தி மற்ற கோளை அடையும் முன்னரே, செய்தி அனுப்பிய கோள், துரதிஷ்டவசமாக அழிந்து போவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளன் என்பது மிகவும் கசப்பான, மறுக்க முடியாத உண்மை. சில கோள்கள் ஆயிரம் ஒளிவருடங்கள் தொலைவிலும், சில லட்சம் அல்லது கோடிக்கணக்கான ஒளிவருடங்கள் தொலைவிலும் உள்ளபோது அங்கிருந்து வரும் செய்திகள் இங்கு வந்து சேருவதற்குள் அந்த கோள் அல்லது அதில் வாழும் உயிர்கள் அழிந்து போக வாய்ப்புள்ளது.
ஒரு நம்ப முடியாத உண்மை என்னவென்றால், இந்த பூமியில் இதுவரை உயிர்கள் தோன்றி மனிதன் எனும் ஓர் அற்புத பிறப்பு பரிணாமம் அடைந்தது மிக மிக ஆச்சரியமும் அதிசயமுமாகும் என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர். ஏனென்றால் இந்த பிரபஞ்சம் நம்மில் பல பேர் நினைப்பதுபோல அமைதியானது அல்ல. வானத்தை பார்த்துக் கொண்டிருக்கும் நமக்கு வானத்தில் பெரிய விபத்துக்கள் தெரியாததால் அப்படி தோன்றுகிறது.
உண்மை என்னவென்றால் பிரபஞ்சத்தில் பல அழிவுகள் அவ்வப்போது நடந்து கொண்டிருக்கின்றன. நம் பூமியும் இதற்கு விதிவிலக்கில்லை. நம்மில் பலர் இந்த பூமி எப்போதும் பாதுகாப்பாக இருக்கும் என்ற ஒரு நம்பிக்கையுடன் இருக்கின்றனர். பூமிக்கு பல பாதுகாப்புகள் இருந்தாலும் பற்பல ஆபத்துகளும் காத்துக் கொண்டிருக்கின்றன என்பதுவும் மறுக்க முடியாத உண்மை. இந்த பூமி இதற்கு முன் பல முறை பெரும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. ஆறு கோடி ஆண்டுகளுக்கு முன், அண்ட வெளியில் இருந்து சுமார் மணிக்கு 30,0000 கிலோ மீட்டர் வேகத்தில் வந்த ஒரு விண்வெளிப் பாறையினால் (ASTEROID) பூமி தாக்கப்பட்டது என்றும் அந்த தாக்குதலினால்தான் 'டைனோசர்' (dynosaur) என்ற, அப்போது பூமியை ஆண்டுவந்த மிருகங்களை பூமி இழந்தது என்று விஞ்ஞானிகள் கூறினர். அப்போதைய அரசியல்வாதிகள் அதை நம்பவில்லை. விஞ்ஞானிகளும், சிந்தனையாளர்களும் சொன்னதை ஆட்சியாளர்கள் கேட்டிருந்தால் மனித குலம் நல்ல வளர்ச்சி கண்டிருக்குமே. அவர்கள்தானே விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிக்கு பணம் கொடுப்பது!!
அண்டவியல் வளர்ச்சி அடைந்த பின் நம் கண்ணாலேயே அந்த மாதிரி தாக்குதலைப் பார்க்க நமக்கு ஒரு சந்தர்ப்பம் 1994 இல் கிடைக்கப் போவதாக கூறினர் விஞ்ஞானிகள். அதிர்ந்து போன அரசியல் வட்டாரம் அதைப் பார்க்கத் தயாரானது. நல்லவேளை தாக்குதல் வியாழன் மேல்தான். நம் மேல் வரும் பல தாக்குதல்கள் வியாழனின் ஈர்ப்புவிசையினால் வியாழனைத் தாக்கியுள்ளன. வியாழன் இல்லாவிட்டால், பூமிக்கு 'சங்கு' முன்பேயே ஊதப்பட்டிருக்கும்.
விஞ்ஞானிகள் சொன்ன நாளில், அந்தத் தாக்குதல் எல்லோரும் பார்க்க வியாழனின் மேல் நடந்தது. வியாழன் பூமியை விட பல மடங்கு பெரிது. தாக்குதல் நடந்தபின் பூமி அளவு பெரிய நெருப்பு வியாழனில் எரிவதை, மனித வரலாற்றில் முதன் முறையாக விஞ்ஞானிகளும் அரசியல்வாதிகளும் தொலைநோக்கியின் மூலமாக 'லைவ்' ஆக கண்டனர். அறிவியலாளர்கள் கூறியது போல நடந்ததைக் கண்டபின் தான் அரசியல்வாதிகளுக்கு அறிவியல் உண்மைகளைத்தான் கூறுகிறது என்று புரிந்தது . அதன்பின்னர் அண்டவியல் ஆராய்சிகளுக்கு உதவி கொடுக்கப்பட்டது.
இதுபோல பல தாக்குதல்களில் இருந்து தப்பிய பூமி ஒரு 'ஜாக்பாட்' அதிர்ஷ்டசாலி என்று கூறுகின்றனர் அறிவியலாளர்கள். மூன்று சீட்டு விளையாடும் போது மூன்று சீட்டும் 'ஏஸ்' ஆக ஒருமுறையல்ல இரண்டு, மூன்று முறை வந்தால் எவ்வளவு அதிர்ஷ்டமோ அவ்வளவு அதிர்ஷ்டம் பெற்றது பூமி என்று கூறுகின்றனர்.
அழகான பெண்ணை வர்ணிக்க நிலவை உதாரணத்திற்கு சொல்வார்கள். ஆனால் நிலவை நேரில் பார்த்தாலோ அல்லது அதன் 'க்ளோஸ் அப்' புகைப்படத்தையோ பார்த்தார்களேயானால், அதன் பிறகு பெண்ணை வர்ணிப்பதற்குப் பதிலாக, வசை பாடுவதற்குத் தான் நிலவை பயன்படுத்துவர். ஏனென்றால் நிலவில் அவ்வளவு குழிகள். அம்மைத் தழும்பு முகம் போல இருக்கும். எல்லாம் வாங்கிய தாக்குதலின் அடையாளங்கள். பூமிக்கும் இந்த தாக்குதல் நிகழ்ந்திருக்கிறது. ஆனால் மழை, பூகம்பம், எரிமலை, கண்ட அசைவுகள், கடலரிப்பு போன்றவற்றால் அவை பெரும்பாலும் மறைந்து போய்விட்டன. சைபீரியாவிலும், அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்திலும் மற்றும் பூமியின் சில பகுதிகளிலும் இந்தத் தழும்புகளைக் காணலாம்.
புதன் கோளும் ஒரு பலத்த தாக்குதலுக்கு உள்ளாயிருக்கின்றது.
பிரபஞ்சம் வயது அடைந்து கொண்டே இருக்கின்றது. நமது சூரிய குடும்பமும் விதிவிலக்கல்ல. நமது செவ்வாய் கோள் ஒரு காலத்தில் பூமியைப் போலவே காந்தப் புலன் உள்ள கோளாகவும், தண்ணீர், வளிமண்டலம் உள்ள கோளாகவும் இருந்தது. அங்கே ஆரம்பகட்ட உயிரினங்கள் இருந்ததற்கான வாய்ப்புகள் உள்ளன என்று பல அறிவியலாளர்கள் நம்புகின்றனர். மேலும் செவ்வாயிலிருந்து உயிர் பூமிக்கு வந்திருக்க வாய்ப்புண்டு என்றும் கூறுகின்றனர். ஆனால் தற்போது அதற்கு காந்தப் புலன் இல்லை. நீர் வற்றிவிட்டது. துருவப் பிரதேசங்களிலும், நிலத்திற்கு அடியில் சில இடங்களிலும் தான் நீர் இருப்பதாகத் தெரிகிறது. வளிமண்டலம் அடர்த்தி குறைந்ததாக மாறிவிட்டது.
இந்தப் பரிணாம மாற்றம் அடையக் காரணம், செவ்வாய் பூமியை விட சிறியதாய் இருப்பதால் செவ்வாயின் உள்ளே உள்ள உருகிய இரும்பு காலப்போக்கில் குளிர்ந்து கெட்டியாகி விட்டது. பூமியின் உள்ளே கெட்டியான இரும்பும், அதைச் சுற்றி உருகிய இரும்பும் சுழல்வதால் காந்தப் புலன் உருவாகிறது. செவ்வாயில் அந்த உருகிய இரும்பு குளிர்ந்து கெட்டியாகி விட்டதால் காந்தப் புலன் இல்லாமல் போய்விட்டது. இந்த காந்தப் புலன் இல்லாவிட்டால், சூரிய காந்தப் புயல்களினால் பூமி தாக்கப்பட்டு உயிர்கள் இல்லாத ஒரு வறண்ட பிரதேசமாக மாறிவிடும். அதுதான் செவ்வாயில் நடந்தது. ஒரு காலத்தில் உயிர் வளர்ச்சிக்கு சாதகமாக இருந்த செவ்வாயின் வளிமண்டலம், நம்மில் பலரும் வணங்கும் சூரியனின் நாசகரமான கதிர் வீச்சுகளினாலேயே தகர்க்கப்பட்டது. அதனால் நீர் வற்றி, வறண்ட குளிர்ந்த பிரதேசமாக மாறிவிட்டது.
குழந்தை பிறக்கும்போதே இறப்பது போல, பிரபஞ்சத்தில் ஒரு கோளில் உயிர்கள் தோன்ற ஆரம்பிக்கும் சமயம், அந்தக் கோள் பிரபஞ்சத்தின் அழிவு சக்தியால் ஒரு உபயோகமில்லாத இடமாய் மாறிவிடுகிறது.
பூமியில் இந்த காந்தப்புலன் வடக்கிலிருந்து தெற்காக வந்து கொண்டிருக்கின்றது. அப்படி தொடர்ந்து எப்பொழுதுமே நடந்து கொண்டிருக்காது. சில காலத்திற்குப் பிறகு அது தடம் மாறி தெற்கிலிருந்து வடக்காக செல்ல ஆரம்பிக்கும். அதிர்ச்சியான செய்தி என்னவென்றால் அந்த மாற்றம் பூமியில் ஆரம்பித்துவிட்டது என்று சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தால் பூமியில் உள்ள உயிரினங்கள் எல்லாம் அழிந்து போகும் வாய்ப்புண்டு. இது போன்ற பல அழிவுகள் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்பதனால்தான், மனிதனை வேறு ஒரு கோளில் குடியமர்த்துவதற்கு அறிவியலாளர்கள் முயற்சிகள் ஆரம்பித்துள்ளனர்.
நமது சகோதரி என்று அழைக்கப்பட்ட வெள்ளி, பித்தளை ஆனாலும் பரவாயில்லை. பழைய துருப்பிடித்த தகரம் ஆகிவிட்டது. எல்லோராலும் ரசிக்கப்படும், ஒருகாலத்தில் பூமியைப் போன்று இருந்த வெள்ளி, அதிபயங்கர புயல்களையும், கந்தக அமில மழையையும், நச்சு வாயுக்களை கொண்டதுமான, உயிர்கள் பரிணமிக்க முடியாத ஒரு நரகமாக மாறிவிட்டது.
'சொர்க்கமாக நாம் நினைத்தது வெறும் நரகமாக மாறிவிட்டது'. வெள்ளி மற்றும் செவ்வாயின் பரிணாம வளர்ச்சியைக் காணும் நாம், நம் பூமிக்கும் வயதாகிக் கொண்டிருக்கின்றது என்ற உண்மையை மனிதில் கொள்ள வேண்டும்.
நமக்கெல்லாம் ஆதாரமாயிருக்கும் சூரியனுக்கும் வயதாகிக் கொண்டிருக்கிறது. அது தன் பாதி வயதை எட்டிவிட்டது.
ஏராளமான குழந்தைகள் பிறக்கும் போது இறப்பது, ஐந்து வயதை கடப்பதற்குள் போதிய உணவின்றி இறப்பது, வாலிபப் பருவம் அடைவதற்குள் இன்னும் ஏராளமானவர் இறப்பது போல, பிரபஞ்சத்திலும் உயிர் தோன்றும் போதே அழிந்து போகும் கோள்கள், உயிர் தோன்றிய சில காலத்திலேயே அழிந்து போகும் கோள்கள், உயிர் தோன்றி மனிதனைப் போன்ற பரிணாம வளர்ச்சி அடைவதற்குள் அழிந்து போகும் பல கோள்கள் உள்ளன. ஆகவே பிரபஞ்சத்தில் பலப் பல நிலைகளில் உயிர்கள் பரிணாம வளர்ச்சியடைந்தக் கோள்களை காண வாய்ப்புண்டு.
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய்விடுமோ?
சரி, ஒரு கோளிலிருந்து செய்தி வந்து விட்டது. அதற்கு நாமும் பதில் அனுப்பிவிட்டோம். இருவருக்கும் மற்றவர்கள் பிரபஞ்சத்தில் எங்கிருக்கின்றனர் என்று அறிந்துவிட்டது. மேலே என்ன செய்வது? ஒன்றும் செய்யமுடியாது. அவர்கள் அங்கேயும் நாம் இங்கேயும் இருந்து கொள்ள வேண்டியதுதான். எப்படி அவர்களைப் போய் சேர முடியும்?
மேலை நாடுகளில் நடந்த விஞ்ஞான வளர்ச்சி நம்மை ஆச்சரியப்பட வைக்கின்றன. பாராட்டப்படவேண்டிய பல முன்னேற்றங்கள். நிலவுக்கு மனிதன் சென்றுவிட்டான். ஆனால் பிரபஞ்ச தொலைவுகளை கணக்கில் எடுக்கும் போது மிக மிக அருகில் உள்ள நிலவு வரைக்கும்தான் மனிதன் சென்றுள்ளான் என்பதுதான் உண்மை. இன்னும் சில வருடங்களுக்குப் பிறகு சூரியனின் மற்ற கோள்களுக்கும் செல்ல முடியலாம். ஆனால் பல நட்சத்திரக் கூட்டங்களைக் கடந்து, வேறு எங்கோ உள்ள ஒரு கோளுக்குச் செல்ல இப்போதைய விஞ்ஞானத்தில் வழியில்லை. ஏனென்றால் நட்சத்திரங்களைக் கடந்துசெல்வது என்பது மிக மிகக் கடினம்.
நமக்கு மிக அருகில் இருக்கும் நட்சத்திரம் சுமார் நான்கு ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கின்றது. ஒளியாண்டு என்பது சுமார் ஒன்பதரை லட்சம் கோடி கிலோ மீட்டர்களாகும். அதாவது அருகிலுள்ள நட்சத்திரமே சுமார் நாற்பது லட்சம் கோடி கிலோ மீட்டர்கள் தொலைவில் உள்ளது. சில புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கோள்கள் ஆயிரம் ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளன.
மீண்டும் நினைவில் கொள்ளவேண்டியது வினாடிக்கு மூன்று லட்சம் கிலோ மீட்டர்கள் செல்லக் கூடிய வாகனத்தில் பயணித்தால் அந்த நட்சத்திரத்தை சென்றடைய நான்கு ஆண்டுகள் ஆகும். வேண்டிய வேகம் வினாடிக்கு மூன்று லட்சம் கிலோ மீட்டர். நாம் நம் விஞ்ஞான வளர்ச்சியில் அடைந்துள்ள வேகம் மிகக் குறைவு. விண்மீன்களை போய்ச்சேர, இப்போது நம்மிடமுள்ள வாகனத்தில் சென்றால் பல நூறு ஆண்டுகள் பிடிக்கும்.
பல நூறு ஆண்டுகள் விண்வெளியில் பயணம் செய்வது மிக மிகக் கடினம். அத்தனை காலத்தில் அண்டவெளியின் கதிர்வீச்சு மனிதனைக் கொல்ல நிறைய வாய்ப்புகள் உள்ளன. வெகு காலம் பூமியை விட்டு பயணிக்கும்போது நிச்சயமாக மனிதன் மனதளவில் பாதிக்கப்படுவான். அவன் உடலுறுப்புக்கள் பல பாதிக்கப்படும். எல்லாவற்றிற்கும் மேலாக, மனிதனின் ஆயுள் காலம் அதற்கு இடம் கொடுக்காது .
ஒரு நீண்ட அண்டவெளி பயணத்தில் மனிதனுக்கு ஏற்படும் பல பிரச்சனைகளைத் தீர்க்க கடும் ஆராய்ச்சியில் இறங்கியுள்ளனர் அறிவியலாளர்கள். உதாரணத்திற்கு ஒன்றே ஒன்றை எடுத்துகொள்வோம். முக்கியமானது மனிதனின் ஆயுட்காலம். அதை மரபணு மாற்றம் மூலமாக நீட்டிக்க வழி வகைகளை ஆராய்ந்து , அந்த ஆய்வின் விடையை சில பிராணிகளில் செலுத்தி அதன் வாழும் காலத்தை அதிகரித்து ஆரம்ப வெற்றியும் பெற்றுள்ளனர் என்பது மிகவும் முக்கியமான செய்தியாகும்.
துருவக்கரடிகள் வருடத்தில் பல மாதங்கள் கடும் குளிர் காரணமாக, உண்ணாமல் உறங்கிக்கொண்டே இருக்கும். மாதக்கணக்கான இந்த தொடர் உறக்கத்தை ஆங்கிலத்தில் ஹைபெர்நேசன் (HYBERNATION) என்று கூறுவார்கள்). அந்த மிருகத்தில் இதற்குக் காரணமான் மரபணுக்களை கண்டுபிடித்து அதை மனிதனின் உடலில் செலுத்தி, பயண நேரத்தை தூங்கிக் கழிக்க வழி செய்யும் உத்தியை விஞ்ஞானிகள் பயன்படுத்த முயற்சி செய்கின்றனர்.
ஆண், பெண் இணையாகத்தான் அனுப்ப முடியும். குழந்தை பிறப்பு, வளர்ப்பு உள்பட நீண்ட பயணத்தின்போது விண்வெளி வீரர்கள் சந்திக்கும் இதுபோன்ற பிரச்சனைகள் ஏராளம். அவை ஒவ்வொன்றையும் தீர்க்க விஞ்ஞான உலகம் கடினமான, ஆச்சிரியப்பட வைக்கும் ஆராய்ச்சிகளை செய்து கொண்டிருக்கின்றது. இந்த வகையான ஆராய்ச்சிகளில் வெற்றி கிடைக்குமா என்பதெல்லாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டியதுதான்.
அதனால் வேறு ஒரு கோளில் அறிவுஜீவிகள் இருப்பது தெரிந்தும் கூட, கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பது போல நாமும் அவர்களும் அவரவர் இடத்தில் இருந்துகொள்ள வேண்டியதுதான். சந்திப்பதற்கு இப்போது வழியே இல்லை.
வருங்காலத்தில் என்ன நடக்கும்?
வருங்காலத்தில் அறிவியல் மேலும் வளர்ச்சி அடையும்போது, ஒளியின் வேகத்தில் செல்லும் வாகனத்தைக் கண்டுபிடித்து, அதில் பயணம் செய்யும் சிரமங்களையும் நிவர்த்தி செய்தபின் அல்லது வேறு சில உத்திகளின் மூலம் நட்சத்திரப் பயணத்தை எளிதாக்கி, பூமியை விட்டுச் சென்று மனிதன் வெகு தொலைவில் உள்ள பல கோள்களில் வசிக்கத் துவங்குவான். அப்போது விசித்திரமான, வினோதமான, எதிர்பார்க்காத ஒரு பரிணாம வளர்ச்சி அந்த கோள்களில் உள்ள மனிதர்களுக்கு நடக்கும்.
விண்வெளி ஆராய்ச்சியின் ஆரம்ப கட்ட நாட்களில் விண்வெளியில் சில நாட்கள் இருந்து விட்டு வந்த விண்வெளி வீரர்கள், இங்கே பூமியில் இறங்கும் போது, அவர்களால் நிற்க முடியாது. அவர்களை தூக்கிக்கொண்டு தான் செல்வார்கள். ஏனென்றால் 'வெளி' யில் ஈர்ப்பு விசை இல்லை. நம் கைகளைக் காட்டிலும் கால்கள் பலமானதாக இருக்கக் காரணம், நாம் நடக்கும்போது நம் கால்கள் தான் ஈர்ப்பு விசையை எதிர்த்து நம் உடலை தூக்கிக்கொண்டு செல்கின்றது. அதனால் கால்கள் வலுப்பெறுகின்றன. ஈர்ப்பு விசை இல்லையென்றால் கால்கள் கைகளைப் போலத்தான் இருக்கும். அதனால் தான் விண்வெளி வீரர்கள் சில மாதங்கள் கழித்து திரும்பி வரும்போது, அவர்களால் நிற்க இயலவில்லை
ஈர்ப்பு விசை குறைவாக உள்ள ஒரு கோளில் மனிதன் பல ஆண்டுகளாக வசிக்க ஆரம்பித்தால், அவனுடைய கால்கள் தட்டுக் குச்சி போல ஆகும். பூமியில் வாழும் மனிதனுக்கும் அவனுக்கும் முதல் உடல் வேற்றுமை வரும். ஒருக்கால், அந்த கோள் ஈர்ப்பு விசை பூமியை விட அதிகமாக இருந்தால், அவனது கால்கள் நம் கால்களை விட மிக வலிமையாக இருக்கும். அந்தக் கோளின் ஈர்ப்பு பலமடங்கு அதிகமாக இருந்தால் , அங்கே நடப்பதே மிகக்கடினமாக இருக்கும். ஊர்வது தான் எளிதாயிருக்கும். அங்கே உள்ள மனிதர்கள் அதைத்தான் செய்ய ஆரம்பிப்பார்கள். நமக்கும் அவர்களுக்கும், இது போன்ற பல உடலமைப்பு வேறுபாடுகள் தோன்றும். காலப்போக்கில் அவர்களுக்கு ஒரு மனிதனைப் போன்ற தோற்றம் கூட இல்லாமல் போய்விடும். அவர்கள் பூமிக்குத் திரும்ப வந்தால், நாம் அவர்களைப் பார்த்து நம் உறவினர்கள் என்று சொல்ல மறுப்போம். சிம்பன்சி குரங்குகளை நம் உறவினர் என்று ஒத்துக்கொள்ள இப்போது நாம் மறுப்பது போல. சிம்பன்சி குரங்குகளுக்கும் நமக்கும் 98 சதவீதம் மரபு ஒற்றுமைகள் இருந்தாலும் நாம் விசேஷ பிறவி என்று பெருமையாகப் பிதற்றுகிறோமே, அதுபோல.
இப்போது உலகில் உள்ள வெவேறு நாடுகளில் மனிதர்கள் வெள்ளை, கருப்பு, சப்பை மூக்கு போன்ற வேறுபாடுகளுடன் இருப்பது போல, ஒவ்வொரு கோளிலும் மனிதர்கள் ஒவ்வொரு விதமான நூதனமான மாற்றம் அடைவார்கள். ஆனால் அனைவரும் மனிதர்கள் தான். அவன் ஜப்பானிலிருந்து வந்தவன், இவன் ஆபிரிக்காவிலிருந்து வந்தவன் என்று நாம் இப்போது கூறுவது போல, அப்போது இவன் அந்தக் கோளிலிருந்து வந்தவன், இந்த கோளிலிருந்து வந்தவன் என்று அவர்களை அடையாளம் சொல்லும் நிலை வரும்.
வாயஜெர் விண்கலம் (voyager)
1977 இல் 'வாயஜெர் ஒன்று' மற்றும் 'வாயஜெர் இரண்டு' என்ற இரண்டு விண்கலங்கள் அனுப்பபட்டன. வியாழன், சனி, யூரேனஸ், நெப்டியுன் ஆகிய கோள்களை ஆய்வு செய்யவும், நமது சூரிய குடும்ப எல்லையைத் தாண்டி, விண்மீன்களுக்கு இடையேயான 'வெளியில்' பயணம் செய்து ஆய்வு நடத்தவும் இவை அனுப்பப்பட்டன.
இவை இரண்டிலும் தங்க முலாம் பூசப்பட்ட ஒளி, ஒலி தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. அதில் மனிதன் மற்றும் இங்குள்ள பல உயிர்களின் உருவங்கள், பல்வேறு மொழிகள், கலாச்சாரம், அறிவியல் வளர்ச்சி, இசை ஆகிய பூமியைப் பற்றிய பல செய்திகள் பதியப்பட்டுள்ளன. இந்த விண்கலம் பயணம் செய்யும்போது , வேற்றுக்கோள் அறிவுஜீவிகள் இந்த தகட்டை காண்பார்களேயானால், நம்மைப் பற்றி எல்லா விவரங்களையும் தெரிந்து கொள்வார்கள் என்று எண்ணத்தில் அப்படி செய்தார்கள்.
சூரியனை விட்டு சுமார் 1800 கோடி கிலோமீட்டர்கள் பயணம் செய்து, மேலும் தன் நட்சத்திரப் பயணத்தை வெற்றிகரமாகத் தொடரும் அந்த விண்கலம் வேற்றுக்கோள் அறிவுஜீவிகளுக்கு நம்மைப் பற்றிய விவரத்தை என்றாவது ஒருநாள் நிச்சயமாகக் கொடுக்க உதவும் என்று நம்புகிறார்கள்.
சூப்பர் மனிதர்கள்
சரி, நாம் சூப்பர் மனிதர்களைத் தேடுவோம். நமக்கு பழங்கால குகைவாசிகள் எப்படியோ அதுபோலத்தான் அவர்களுக்கு நாம். விஞ்ஞானத்தில் அவர்கள் நம்மை விட பல மடங்கு முன்னேறியவர்கள். அவர்களை நாம் தேட வேண்டிய அவசியம் இல்லை. நம்முடைய சிக்னல் கிடைத்தால் போதும். சூப்பர் மனிதர்கள் இருந்தார்களேயானால், அவர்களே நம்மைத் தேடி வந்துவிடுவார்கள்.
வேற்றுக்கோள் சூப்பர் மனிதர்கள் இங்கு வந்ததாக பல சுவையான திரைப்படங்கள் வந்துள்ளன. அவர்கள் நம்மில் பலரைக் கடத்திச் சென்றதாகவும், கடத்திச் சென்ற மனிதர்களின் உடலில் சில ஆராய்ச்சிகளுக்குப் பிறகு அவர்களைத் திரும்ப பூமியில் மீண்டும் கொண்டு வந்து விட்டுவிட்டதாகவும் வெகு சுவாரசியமான, திகிலூட்டும் கதைகள், குறிப்பாக மேலை நாடுகளில் பல உண்டு. பலரும் அவர்களைப் பார்த்ததாகவும் கூறுகின்றனர் . ஆனால் அவர்கள் கூற்றை ஆய்ந்த விஞ்ஞானிகளும், மேலை நாட்டு அரசாங்கங்களும் அப்படி ஒரு கடத்தலோ அல்லது மற்ற சம்பவங்களோ நடக்கவில்லை என்று கூறுகின்றனர். அரசாங்கம் உண்மையை மூடி மறைக்கின்றது என்று பலர் வாதிக்கின்றனர்.
வாதங்களும் எதிர்வாதங்களும் மேலை நாடுகளில் அனல் பறக்க விவாதிக்கப்பட்டு வருகின்றன. நம் நாட்டில் அது இல்லை. நமக்கு இங்கே வேறு பல பிரச்சனைகள் நிறைய இருக்கின்றனவே.
சூப்பர் மனிதர்கள் இங்கே வருவதற்கு, அவர்களுக்கு நாம் முன்பு விவாதித்த, நட்சத்திரப் பயணத் தடைகள் இருக்காது. அவைகள் அனைத்திற்கும் விஞ்ஞான விடைகள் கண்டுபிடித்து, வெற்றிகரமாக அவர்களால் இங்கு வந்து சேர முடியும். நட்சத்திரப் பயணம் செய்யும் அளவுக்கு வளர்ச்சி கண்டவர்கள் ஒரு கோளில் தொடந்து இருக்க மாட்டார்கள். நாடோடி மன்னர்களாகத்தான் இருப்பார்கள் என்று அறிவியலாளர்கள் கருதுகின்றனர். இந்தப் பூமியில் கிடைக்கும் நிலக்கரி, பெட்ரோல் போன்ற சக்தியின் ஆதாரங்கள் தீரத் தொடங்கி நாம் முழிப்பது போல, அவர்களது கோளில் இவை எல்லாம் தீர்ந்து விட்டால், அதைப் பற்றி கவலைப்படாமல், 'ஒளி வேக' வாகனத்தை எடுத்துக்கொண்டு அடுத்த கோள் நோக்கிச் சென்றுவிடுவார்கள். அணு சக்தியினால் பிரச்சனைகள் வருவதால், அதையும் தவிர்த்து, நட்சத்திரங்களின அருகே ஆயிரக்கணக்கான 'ரோபோ'களை அனுப்பி, நட்சத்திரத்தின் சக்தியையே உறிஞ்சக்கூடிய அளவு வல்லமை பெற்றவர்களாக இருக்கக்கூடும்.
சரி வந்துவிட்டார்கள். என்ன நடக்கும்?
நமது காட்டுப்பகுதிகளில் இன்னும் வேட்டையாடி உணவு உண்டு கொண்டு இருக்கும் மிகவும் பின்தங்கிய சமூகத்தினரை நம்முடைய இந்த கால தொழில்நுட்ப அறிஞர்கள் சந்திக்க நேர்ந்தால் என்ன செய்வார்கள்? இந்த பாமரர்களால் தமக்கு எந்த பிரயோஜனம் இருக்காது என்று கண்டுகொள்ளாமல் சென்று விடுவாகள் அல்லவா? அதுபோல நம் நாடுகளுக்குள் நடக்கும் போர் மற்றும் மதம், இனம், மொழி என்ற பெயரால் நடக்கும் படுகொலைகளையும் காணும் சூப்பர் மனிதர்கள் பூமியில் வாழும் இவர்கள் 'மனிதன் என்னும் போர்வையில் வாழும் மிருகங்கள்' என்று அறிந்து, இனி இந்தப் பக்கம் தலைவைத்துக்கூட படுக்காமல் இருக்கவும் வாய்ப்புண்டு.
சூப்பர் மனிதர்கள் பூமிக்கு வந்து, நம் நிலைமையைக் கண்டபின், இவர்களால் உபயோகமில்லை என்று தொடர்பு கொள்ளாமல் சென்று விட்டிருக்கலாம் என பலர் உறுதியாக நம்புகின்றனர். சிலரை பிடித்துக் கொண்டுபோய், மனித உடலைப் பற்றி சில ஆராய்ச்சிகளை நடத்திவிட்டுச் சென்றிருக்கலாம்.
மேற்கத்திய நாடுகளில் வாழ்ந்தவர்கள், ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து மக்களைக் கொண்டுபோய் அடிமைகளாக வைத்துக் கொண்டது போல, நம்மைப் பிடித்துக் கொண்டு சென்று நம் உழைப்பை இனிமேல் அவர்கள் உறிஞ்ச ஆரம்பித்துவிடுவார்கள் என்று பலர் நம்புகின்றனர். மாபெரும் விஞ்ஞானியான ஸ்டீபன் ஹாகிங் அவர்களே இதனை ஒத்துக்கொள்கிறார். அவர்கள் நம்மைக் காணாத வரை நல்லதுதான். நாம் 'வாயேஜர்' மூலமாக பிரபஞ்சத்திற்கு அனுப்பிய செய்தி தவறு எனவும் கூறுகிறார்.
பலர், சூப்பர் மனிதர்கள் அறிவியலில் மேம்பட்டிருப்பதைப் போல , மனித நேயத்திலும் உயர்ந்திருப்பார்கள் என்றும், இங்கே வந்து நம் நிலைமையைக் கண்டு, மனமிரங்கி, நம் பிரச்சனைகளைத் தீர்க்க வழி சொல்லி, பூமியில் பஞ்சமும் பட்டினியும், நோயும், கூடங்குளம் போன்ற பிரச்சனைகள் இன்றி மக்கள் ஆனந்தமாக வாழ வழி வகுப்பார்கள் என்றும் கருதுகிறார்கள்.
நம் பூமியிலயே அறிவியல் வளர்ந்த அளவுக்கு, மனித நேயம் வளரவில்லை. அதுபோல அவர்களும் அறியலில் முன்னேறியிருந்தாலும் மனித நேயம் கொண்டவர்களாக இருப்பார்கள் என்று கனவு காணக்கூடாது என்பதைச் சுட்டிக்காட்டி அவர்கள் நமக்கு உதவ மாட்டார்கள் என்று எதிர்க்கட்சியினர் வாதிடுகிறார்கள்.
'அவள் வருவாளா' என்ற திரைப்படப் பாடல் போல , 'அவர்கள் வருவார்களா' என பலர் மேலை நாடுகளில் காத்திருக்கின்றனர். சூப்பர் மனிதர்கள் மேல் நம்பிக்கை கொண்டவர்கள் மனம் தளராது, செட்டி அமைப்புக்கு தங்கள் கையிலிருந்து பணம் கொடுத்து 'தேடுதலைத்' தொடர, செட்டியை ஊக்குவிக்கின்றனர்.
உங்கள் பொன்னான வாக்குகள், 'தேவர்கள் போன்ற அவர்கள் வரவேண்டும்' எனும் கோஷ்டிக்கா அல்லது அவர்கள் வந்தால் 'இந்தியாவுக்குள் நுழைந்த வெள்ளையனைப் போலதான்' எனும் மாற்று கோஷ்டிக்கா? உங்கள் வாக்குகளை பின்னூட்டமாக கீழே பதிவு செய்யுங்கள்.
- ஜெயச்சந்திரன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
மனிதர்கள் மதங்களின் பெயரால் அழியக்கூடியகாலம ் வெகுதொலைவில் இல்லை. வேற்றுக்கிரக வாசிகள் வந்து நம் கால பெட்டகத்தைத் தோண்டி எடுத்து பார்த்தாலும் நாம் எப்படி அழிந்தோம் என்பதை அவர்கள் கண்டுபிடிக்கமுட ியாமல் திகைக்கத்தான் போகிறார்கள்.
மேலும் சூரியனைப்பற்றிய வையை எனது தயவு செய்து அனுப்பி விடுஙகள்.
E-MAIL ID : [email protected]
எனது அறிவுப் பசிக்குத் தீனி போட்டுள்ளீகள் இது ரெம்பவும் பயன் உள்ள கட்டுரை. இந்தப் பரந்து விரிந்த பிரபஞ்சத்தில் உயிரினங்கள் உள்ளன என்று உறுதியாக நம்பமுடியும்.
கடற்கரை மணலில் ஒரு கைபிடி மணல் எடுத்தால் அதில் உள்ள ஒரு மண் பருக்கை போன்றது தான் நமது இந்தப் பூமிப் பந்து, அப்படியாயின் எத்தனையோ கோடான கோடி கோள்கள் இந்தப் பிரபஞ்சத்தில் உள்ளன, அவைகளில் தூசு போன்று உள்ள இந்தப் பூமியில் மட்டும் ஏன் உயிரினங்கள் தோன்ற வேண்டும்?!
உண்மையிலே கடவுள் என்ற சொல்லுக்குரிய அந்த மகாசக்தி ஆச்சரியமானது தான். கண்களால் பார்க்க முடியாத அணுக்களால் மனிதனை உருவாக்கி, மனிதனால் அளவிட முடியாத பிரமாண்டமான வாண வெளியும் கோள்களும் படைத்தது அதிசயம் தான்.
Thanks for an excellent article on the ‘Aliens are out there?!’ From this I could see your meticulous collection of data and the presentation with photographs of the so called Aliens which we know as portrayed in the movies.
The various terms and information like Light years, Solar system, Stars, Asteroids, Comets, information of life in the Deep Ocean at 7000 feet, note on hibernation of Polar Bears, why Venus has no life, Radio waves in 1930, the travel time of radio waves like 40 years and 120 years due to massive Light years distance, information on SETI --SEARCH FOR EXTRA TERRESTRIAL INTELLIGENCE are very informative. Although certain information are known to many people your article had made to take time off from the mundane work and study and probe more these.
Hope you will keep expanding your interesting views like the Universe :-). Thanks and All the best!
உங்களுடைய சந்தேகம் ' மில்லியன் டாலர் கேள்வி ' என்பார்களே அதுதான் . உங்களுடைய இந்த கேள்விக்கு விடை தேடிக்கொண்டு பலர் அலைகின்றனர். இதுவரை 'பிரபஞ்சம் எப்படி தோன்றியது ' என்ற முதல் கேள்விக்கு தான் விடை தேடித்தான் விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக மிகச்சிரமப்பட்ட ு பாடு பட்டனர் . அதற்க்கு பலனாக ஆச்சரியமூட்டும் பெரும் உண்மைகளை கண்டறிந்துள்ளனர ்.சில வருடங்களுக்கு முன்னாள் வரை விஞ்ஞானிகளே நினைக்காத பற்பல உண்மைகள் நிரூபிக்க பட்டுள்ளன. (கீற்றுவில் நான் எழுதியுள்ள மாவெடிப்பு பற்றிய கட்டுரையை தயவுசெய்து படிக்கவும் ) அடுத்த கேள்விதான் பிரபஞ்சம் எதுக்காக உருவானது என்ற நீங்கள் கேட்க்கும் கேள்வி. இதற்கும் விஞ்ஞானிகள் பதில் கிடைக்க ஆராய்ச்சியில் இறங்கி உள்ளனர். நம் வாழ்வில் சந்திக்கும் பற்பல சிக்கல்களுக்கு விடை கொடுத்துள்ள விஞ்ஞானிகள் உங்கள் கேள்விக்கும் விடை கண்டுபிடிப்பார் கள் என்பது பல அறிவாளிகளின் உறுதியான நம்பிக்கை. பள்ளி படிப்பில் வெற்றி கண்ட மாணவன் கல்லூரி படிப்பை ஆரம்பிப்பது போல்தான் இந்த முயற்ச்சி . வேற்று கிரக வாசிகள் என்ற இந்த கட்டுரைக்கு வாசகர்களிடம் இருந்து குற்றம் குறை, பாராட்டுதலை எதிர்பார்த்த எனக்கு நீங்கள் அதை பற்றி கருத்து கூறாதது சற்று ஏமாற்றமளிக்கிறத ு. விரைவில் உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறே ன். நன்றி
நன்றி
வாழ்த்துக்கள்.
RSS feed for comments to this post